Sunday, December 19, 2010

மாறு அல்லது மாண்டுபோ!

இன்றைய தினம் சமுதாய இழிவு ஒழிப்பு சம்பந்தமாக, சென்னையில் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கவே இந்தப் பொதுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்கள். நான் இந்தத் தியாகராயர் நகருக்குக வந்து சுமார் 10 ஆண்டு களுக்கு மேலாகிறது. இதன் காரணமாக எனது புதிய கருத்துகள் இந்தப் பகுதி மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லாமலும் போயிருக்கலாம். நான் பேச்சுத் துவக்குவதற்கு முன்பாக நண்பர் வீரமணி அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தைக் கூறினார்கள். கடவுள் இல்லை - கடவுள் இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் -கடவுளை பரப்பியவன் அயோக்கியன் - கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி ! இதன் தன்மைகளைப்பிறகு விளக்கு கிறேன்.
பழக்கத்தில் நம்மை ஈன ஜாதி, கோயிலுக்குள் வர வேண்டாம்; கல்லைத் தொட்டால் சாமி தீட்டாகிவிடும் என்கிறான்; சூத்திரனுக்குத் திருமணம் கிடையாது என்கிறான்; சுயராஜ்யம் என்கிறான்; அந்த சுயராஜ்யத் திலும் நாம் சூத்திர்கள், தேவடியாள் மக்கள் என்கிறான்.
இந்து என்றால் என்ன?
எதன்படி என்றால் சாஸ்திரப்படி, மதப்படி மட்டுமல்லாமல், இன்றைய அரசியல் சட்டப்படியும்கூட. இந்தச் சாஸ்திரம் என்றைக்கு எழுதினான்? இதுபோல் அயோக்கியத்தனம் உலகில் உண்டா? என்றைக்கோ, எவனோ பேர் தெரியாத அனாமதேயம், அவன் சொல்லுவான் வசிஷ்டன், நாரதன், எக்கியவல்கியன், அவன் இவன் எழுதினான் என்றெல்லாம் சொல்லு வான். இவன்களுக்கு வயது என்ன? நாரதன் 5 கோடி வருஷத்துக்கு மேல் இருந்திருக்கிறான். ஒரு கர்ப்பம் என்றால் 5 கோடி, 10 கோடி வருடம் என்பார்கள். 2,3 கர்ப்பம் முன்பு இருந்திருக்கிறான் நாரதன். அப்படி ஒருத்தன் இருந்தானா? இருக்கமுடியுமா? அதை வைத்துத் தீர்ப்பு சொல்லுகிறானே கோர்ட்டிலே; இதனுடைய அர்த்தம் என்ன? ஆளுகிறவர்கள் அயோக்கியர்கள், ஆளப்படுகிறவர்கள் இத்தனை மானங்கெட்ட பக்தர்கள். இதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்?
வீரமணி இப்போது சொன்னாரே, இந்து லா என்கிறானே; யார் இந்து? இந்து என்றால் என்ன அர்த்தம்? என்றைக்கு முதற்கொண்டு இந்து வந்தான்? எவ்வளவு இலக்கியம் இருக்கிறது. ராமாயணம், பாரதம், விஷ்ணு புராணம், கந்த புராணம் என்று பார்ப்பானுக்கு எவ்வளவோ இலக்கியங்கள் இருக்கின்றன. நம்ம புலவர்களுக்கும் ஏராளமாக இருக்கிறது; பஞ்சகாவியம், அய்ந்து இலக்கணம், அது இது என்று ஏராளமாக இருக்கிறது. எதிலாவது இந்து என்ற வார்த்தை இருக்கிறதா? எந்தப் புத்தகத்திலாவது இருக்கிறதா? இந்து என்பவன் எப்படி வந்தான் என்பது அவர்கள் சொல்லுவதிலே அசிங்கமாக இருக்குதே. சிந்துநதி காரணமாகச் சிந்துவாகி பிறகு இந்து என்ற அழைக் கப்பட்டான் என்கிறான். சிந்து நதிக்கும் நமக்கு என்ன சம்பந்தம்? ஆரியன் வந்தபோதுதானே சிந்துநதி இங்கே வந்தது?
சிந்திக்க நாதி இல்லை!
இந்து என்றால், இரண்டு ஜாதி. அதிலே ஒன்று பார்ப்பான்; மற்றவன் சூத்திரன் . பார்ப்பான் என்றால் மேல் ஜாதி; சூத்திரன் என்றால் கீழ் ஜாதி. சூத்திரன் மனைவி என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி. இது சட்டத்திலே, சாத்திரத்திலே இருக்கிறது என்று சொன்னால், பிறகு நாம் விடியறது தான் எப்போது? ஒரு மனிதனிடம், ஏண்டா உன் பொண்டாட்டி இப்படி.... என்று சொன்னால், கத்தியை எடுத்துக்கிறான். இத்தனை பேரையும் தேவடியாள் மகன் என்று சொன்னால் ஒருவனுக்கும் மானம் இல்லை என்றால், என்ன அர்த்தம்?
நமக்கு மானமிருந்தால், இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? எவனாவது பூணூல் போட்டுக் கொண்டு நம்முன் வருவானா? பூணூல் போட்டிருந்தால் என்ன அர்த்தம்? போடு செருப்பாலே, அப்படி என்று கிளம்ப மாட்டானா? உன்னை இன்னொருத்தன் பெண்டாட்டி என்ற சொன்னால், எவ்வளவு ஆத்திரம் வரும்? அதைவிட மேலாக அல்லவா சூத்திரன் என்றால் ஆத்திரம் வரும்? இதைப்பற்றிச் சிந்திக்கவே ஆள் இல்லையே; நாதி இல்லையே!
உலகம் எவ்வளவு முன்னேறுகிறது?
பெரிய சமுதாயம், எவ்வளவு முன்னுக்கு வர வேண்டியவர்கள்? நாதியற்ற காட்டுமிராண்டியாக அல்லவா வாழுகிறோம்? வெள்ளைக்காரளைப் பாரய்யா; எவ்வளவு முன்னுக்கு வந்துவிட்டான்! மிகவும் காட்டு மிராண்டியாக இருந்தவர்கள் வெள்ளைக்காரர்கள். இன்றைய தினம் , ஆகாயத்திற்கு, சந்திரனுக்கு அல்லவா பறக்கிறார்கள்?
அமெரிக்காவைப் பார்!
அமெரிக்காவில் ஆண் இந்திரியம் கொண்டுவந்து சீனாவிலே போய் பெண் இந்திரியம் கொண்டுவந்து இரண்டையும் சேர்த்துப் பிள்ளை உண்டாக்குகிறானே. இப்ப நேற்று, முந்தாநாள் வந்த விஷயத்திலே இரண்டு பேர் இந்திரியத்தையும் டப்பியில் வாங்கி வைத்து 10 வருடம் கழித்துப் பிள்ளையை உண்டாக்கலாம். இங்கிருந்து அமெரிக்காவுக்கு டெலிபோனில் பேசுகிறோம். நம்ம முட்டாள் பசங்களுக்கு 100, 200 கடவுள்! ஒரு காரியமும் செய்யமுடியவில்லை இவன்களாலே! இதற்கு எவ்வளவு செலவு? கல்யாணம், கருமாதி, உற்சவம் என்று எவ்வளவு செலவு? வேளைக்கு வேளை சோறு, உற்சவம்! அரசாங்கம் வரி போடுகிறது என்று சொல்லுகிறானே தவிர, இதை எவன் எதிர்க்கிறான்?
கோயிலுக்குப் போகிறான், குளிக்கிறான், முழுகு கிறான். கடவுள் சாமிகிட்ட போன உடனே டக் என்ற வெளியே நிற்கிறானே! ஏண்டா வெளியிலே நிற்கிறே என்றால், சூத்திரன் உள்ளே போகலாமா என்கிறான். எப்போ? 1973 -இல்! நமக்கு ஒரு நாடாம்; நாம் ஒரு சமுதாய மாம். இதற்கு யார் பாடுபடுகிறார்கள்? நாம் மூணே முக்கால் பேரைத் தவிர யார் இதைப் பேசுகிறார்கள்?
இந்தியக் கம்யூனிஸ்ட்கள்!
ரஷ்யாவிலே கம்யூனிஸ்ட் இருக்கிறான் என்றால் கோயில்களை எல்லாம் இடித்தான்; பாதிரிகளை எல்லாம் வெட்டினான். இங்கே இருக்கும் கம்யூனிஸ்ட் என்ன செய்கிறான்? பொறுக்கித் தின்கிறான்! மனிதனைப் பற்றி எவனும் பேசவில்லையே. இவ்வளவு மாநாடு நடத்தினோம்! எவனய்யா எங்களை ஆதரித்தான்? பயப்படுகிறானே, ஓட்டுப் போய்விடும் என்று!
இருப்பது கஷ்டமல்ல; சாவதே கஷ்டம்!
ஆகவே, தோழர்களே! முதலில் நமக்கு இருக்கிற இழிவு நீங்க வேண்டும். மனிதனுக்கு இருக்கிற ஜாதி உரிமை என்ன தெரியுமா? ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 500 வருடம் இருக்கலாம். இப்போது சராசரி 52 வயதுதான். வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம். அவன் வருவதற்கு முன்பு இங்கு சராசரி வயது 10கூட இல்லை; 7 வயதுதான். அவன் வந்த பிறகு வைத்தியம் சுகாதாரம் எல்லாம்.
எல்லாம் நமக்கு அவன் ஏற்றிய பிறகுதானே இவ்வளவு உயர்ந்தது. ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயது சராசரியாக வாழுகிறான். நாமும் இன்னும் 10 வருஷத்தில் 75 வயதுவரை வாழ்வோம். இப்படி நாளாக, நாளாக 500 வயதுவரை வாழ வேண்டி வரும்! இருப்பது கஷ்டமல்ல; சாவதுதான் கஷ்டம்! அவ்வளவு அற்புத அதிசயங்களை எல்லாம் கண்டுபிடித்திருக்கிறான்.
சுயமரியாதை இயக்கம் இல்லாவிட்டால்
நாம் வளர்ச்சி அடையாததற்குக் காரணம், நாம் தேவடியாள் மகனாக இருப்பதால்தான். நமக்கு, நமது சுயமரியாதை இயக்கம் வராவிட்டால் படிப்பேது? சொல்லுங்கள்! சுயமரியாதை இயக்கம் வராவிட்டால், 100-க்கு 10 கூட படித்திருக்கமாட்டார்களே! சுயமரியாதை இயக்கம் வந்ததற்குப் பிறகுதானே இவ்வளவு! சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? கடவுள் ஒழியவேண்டும்; காந்தி ஒழியவேண்டும்; பார்ப்பான் ஒழிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான்.
காந்தியாரை பார்ப்பான் விட்டுவைத்தானா?
காந்தி நம்ம கொள்கைப் பக்கம் திரும்பினார். காங்கிரசுக்கும், கடவுளுக்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லை என்று சொன்னார். உடனே காந்தியைக் கொன்று போட்டான், சொன்ன 30 நாளிலே! இவரும் ராமசாமி ஆகிவிட்டார்; இவன் இந்தியாவிலே பெரியஆள்; இவனை விட்டுவைக்கக் கூடாது என்று உடனே கொன்று போட்டான்.
செருப்பால் அடித்தோமே கடவுளை!
கடவுள் கதையும் சிரிப்பாய்ச் சிரிக்குது. அதுதான் வீரமணி சொன்னாரே; செருப்பால் அடித்தார்களே கடவுளை! என்ன ஆகியது? செருப்பாலே அடித்தால் ஓட்டுப் போடமாட்டான் என்று காமராஜர் முதற்கொண்டு பிரசாரம் செய்தார். தி.மு.க. 183 வந்துவிட்டதே! காங்கிரசு, காமராசர், கடவுள், வெங்காயம் எல்லாம் சேர்ந்து 20பேர்கூட வரவில்லையே. சாமியைத் திட்டுகிறோம் என்று குறை சொல்லுகிறார்களே தவிர, சாமியை செருப்பாலடித்தவர்கள் 200 பேர் வந்து விட்டார்களே!
நாம் பள்ளத்தில் கிடக்கிறோம்!
ஆனதனால் மக்கள் அறிவு பெற்று வருகிறார்கள்; நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். விஷயங்களை எடுத்துச் சொல்லவேண்டும். தெரியாது அனேகம் பேருக்கு. இப்போது நாம் முன்னேற்றம் அடைய வேண்டும். மேலே வரவேண்டும். அப்புறம் இன்னும் மேலே போகலாம். இப்போது நாம் பள்ளத்தில் கிடக்கிறோம். 4ஆவது ஜாதி, 5ஆவது ஜாதி, தீண்டப்படாத ஜாதி, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்றல்லவா நாம் இருக்கிறோம்? இது அல்லவா மாற வேண்டும்? இது மாறாமல் மேலே போக முடியுமா? இதை மாற்றிவிட்டு அல்லவா மேலே போகவேண்டும்? நாங்கள் தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டு வருகிறோம்; எங்களால்தான் முடிய வேண்டும என்று இருக்கிறது நிலைமை! வேறு எந்தக் கட்சிக்காரருக்கும் கவலை இல்லை! எலக்ஷனிலே ஓட்டுப் போய்விடும் என்று பயப்படுகிறார்கள். ஆகவே நாம் மாநாடு போட்டோம்,. அதற்குக் காரணம் கூட வீரமணி சொன்னாரே!
சட்டத்தில் தந்திரம்!
தீண்டாமை இல்லை என்று சட்டம் செய்துபோட்டான். எல்லாவற்றிலும் தீண்டாமை ஒழிந்துவிட்டது என்ற சொல்லிவிட்டு மதத்திற்கு மட்டும் தீண்டாமை என்று நிபந்தனை போட்டுவிட்டான். நாம் கர்ப்பகிரகத்திற்குள் போகக்கூடாது என்று சட்டம் செய்தான். எனவேதான். மாற்றவேண்டும் என்கிற நிலைமைக்கு வந்துவிட்டோம். சட்டத்திலும், சாஸ்திரத்திலும் இருப்பதாலே முதலில் அதை மாற்ற வேண்டும் என்ற முடிவு செய்துவிட்டோம்.
ஆட்சியை ஒழித்தாக வேண்டும்!
சட்டத்திலே இருப்பது ஒழியவேண்டுமானால், சட்டத்தை ஒழித்தால்தான் உண்டு; சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்றால் ஆட்சியை ஒழித்தால்தான் உண்டு! அந்த அளவுக்கு நாம் பக்குவமாக வேண்டும். ஆனால், அவன் ஆட்சி ஒழியும்படி இல்லாமல் பாதுகாத்துக் கொண்டான். நாடு கூட்டாக இருந்தால் எல்லாம் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று நாட்டை 14,15 நாடாகப் பிரித்தான். அந்தந்த நாடு மற்ற நாட்டோடு சம்பந்தம் இல்லை என்றான். 16 மாநிலத்திலே மக்கள் இருக்கிறார்கள்.அவனுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையே! மலையாளம் , தெலுங்கு, இந்தி வங்காளி என்று தனித்தனி மாநிலங்கள்.
அரிய முயற்சி தேவை!
தமிழ்நாட்டில் உள்ள நாலரைக் கோடி மக்களில் துலுக்கன், கிறிஸ்தவனைத் தவிர, மூன்று கோடி மக்கள் சூத்திரன்தானே? முஸ்லிம், கிறிஸ்துவன் எல்லாம் சேர்த்தால் 10 லட்சம் இருக்கும். ஆகவே, இதை மாற்றியாக வேண்டும்; பெரிய விஷயந்தான். பெரிய முயற்சி செய்ய வேண்டும்! பெரிய முயற்சி செய்ய வேண்டும்!!
மனிதன் இருக்க வேண்டும்!
ஒரு அரசாங்கம் நடக்க வேண்டுமானால் அரசியல் சட்டம் வேண்டும்; ஒத்துக்கொள்கிறேன். அதற்காக அரசாங்கம் நடக்க வேண்டும் என்பதற்காகப் பார்ப்பான் இருக்க வேண்டுமா? அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதற்காகச் சூத்திரன் இருக்க வேண்டுமா? மனிதன் தானே இருக்க வேண்டும்? மற்ற நாட்டிலேயும்தான் அரசாங்கம் நடக்கிறது. அங்கு பார்ப்பான், சூத்திரன் இருக்கிறானா? ஆகவேதான், அவன் வைத்திருக்கிற பாதுகாப்பு எல்லாம் எல்லோரும் ஒன்று சேரக்கூடாது என்பது, பார்ப்பானுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதாற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு. நாம்தான் மாற்ற வேண்டும் என்கிறோம்.
மாறு அல்லது மாண்டு போ!
நாம் நடத்திய மாநாட்டுக்கு வேறு கட்சிக்காரர்கள் ஒருவரும் வரவில்லையே; ஓர் உதவியும் செய்ய வில்லையே; சி. அய். டி. யும் வேறு கட்சிக்காரன் வருகிறானா என்று கவனித்து வந்தான். எனவே பயந்து கொண்டு ஒருவரும் வரவில்லை. இழிவுக்கு ஆளான வன் எல்லாம் வரவேண்டுமே! வந்து உதவி செய்ய வேண்டுமே! மந்திரிகள் வரவேண்டுமே! ஆகவே விஷயம் முக்கியமானது, மாறியே ஆகவேண்டும்; மாறாவிட்டால் சாகவேண்டும்!
(தந்தை பெரியாரின் இறுதிப்பேருரையாம் மரண சாசனத்திலிருந்து)
நன்றி:விடுதலை (19-12-2010)

Saturday, December 18, 2010

கூவி அழைக்கிறோம்!


ஜாதி, மதம், வருணம், தேசம் என்கிற கற்பனை நிலைகளை எல்லாம் தாண்டிய இயக்கம், பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற வருணங்களை ஒழித்து எல்லோரும் எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம்.மனித சமூகத்தினரிடம் அன்பு கொண்டு சம நோக்குடன் மக்களுக்குச் சேவை செய்யவேண்டுமென்ற ஆசை-யுள்ள மக்களை அப்படிப்பட்ட சமதர்ம நோக்கமுள்ள உண்மைத் தொண்டர்களை இரண்டு கைகளையும் நீட்டி மண்டியிட்டு வரவேற்கச் சுயமரியாதை இயக்கம் காத்திருக்கிறது. அது உலக மக்கள் எல்லோரையும் பொறுத்த இயக்கம்.

ஏழை என்றும் பணக்காரன் என்றும், எஜமானன் என்றும், கூலி என்றும் ஜமீன்தாரன் என்றும், குடியானவன் என்றும், உள்ள சகல வகுப்புகளையும், வேறுபாடுகளையும், நிர்மூலமாக்கித் தரைமட்டமாக்கும் இயக்கம்.
மற்றும் குரு என்றும், சிஷ்யன் என்றும், பாதிரி என்றும், முல்லா என்றும், முன் ஜென்மம் பின் ஜென்மம் என்றும், கர்ம பலன் என்றும், அடிமையையும் எஜமானனையும், மேல் ஜாதிக்காரனையும் கீழ் ஜாதிக்காரனையும், முதலாளியையும் தொழிலாளியையும், ஏழையையும் பணக்காரனையும், சக்ரவர்த்தியையும், குடிகளையும், மகாத்மாவையும், சாதாரண ஆத்மாவையும் அவனவனுடைய முன் ஜென்ம தர்மத்தின்படி அல்லது ஈஸ்வரன் தன் கடாட்சப்படி உண்டாக்கினார் என்றும் சொல்லப்படும் அயோக்கியத்தனமான சுயநலங்கொண்ட சோம்பேறிகளின் கற்பனைகளையெல்லாம் வெட்டித் தகர்த்து சாம்பலாக்கி எல்லோர்க்-கும், எல்லாம் சமம்; எல்லாம் பொது என்ற நிலையை உண்டாக்கும் இயக்கமே!
ஜாதி, சமய, தேசச் சண்டையற்று - உலக மக்கள் யாவரும் தோழர்கள் என்று சாந்தியும் ஒற்றுமையும் அளிக்கும் இயக்கம். ஆதலால், அதில் சேர்ந்து உழைக்க வாருங்கள் வாருங்கள் என்று கூவி அழைக்கிறோம்.
ஈ.வெ.ரா. 
குடிஅரசு 30.7.1933

Friday, December 17, 2010

காணாத இடத்தில் குரைக்காதே!

மூடர்: சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமா? அதுதான் கடவுள்.இன்னும் ஒன்றுதான் அப்புறம் ஒன்றுமில்லை. துளியூண்டு சங்கதி. காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்த பிறகு கூடவா நாசமாய் போன சாமி இருக்குதென்று நினைக்கின்றீர்கள்?
பதில்: அப்படியானால் அந்தக் காரணத்தை கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா?
மூடர்: கடவுளைப் படைப்பதற்குக் காரணம் கேட்பது முட்டாள்தனமாகும்.
பதில்: அப்படியானால் உலக படைப்புக்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதை விட இரட்டிப்பு முட்டாள்தனமாகும்.
மூடர்: உங்களோடு யார் பேசுவார்கள்?
பதில்: சரி, நல்ல காரியமாச்சுது சனியன் தொலைஞ்சுது. ஆனால் காணாத இடத்தில் குரைக்காதே!
(சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தை பெரியார் எழுதியது. பக்கம் 12)
 குடிஅரசு( 4.1.1931)

Sunday, December 12, 2010

மானங்கெட்ட பிழைப்பு

காங்கிரசின் பேரால் எலக்ஷன் நடத்துகின்றவர்கள் தங்களுடைய (அதாவது அபேட்சகர்களாக நிற்கும் ஆசாமிகள் தனிப்பட்ட முறையில் தங்களுடைய) யோக்கியதைகள் தேசத்தார்கள் அறிந்திருப்பதால் தங்களுக்குச் சொந்தத்தில் ஓட்டு கிடைக்காது என்று தீர்மானம் செய்து கொண்டு காந்திக்கு ஓட்டு செய்யுங்கள் என்று கேட்டு மக்களை ஏமாற்றி வருவது ஒரு புறமிருக்க, இவ்வேமாற்றுதலை ஜஸ்டிஸ் கட்சியார் வெளியாக்கும் முறையில் காந்தியார் காங்கிரசை விட்டு போய் விடுகிறேனென்று சொல்லுவதையும் அந்தப்படி காங்கிரசை விட்டு அவர் வெளியேறுவதற்கு உண்டான காரணங்களை அவர் எடுத்துச் சொன்னபடியே வெளியிடுவதையும் பார்த்த காங்கிரஸ்காரர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும் அடக்க முடியாத ஆத்திரம் கொண்டு வாயில் வந்தபடி எல்லாம் இழிதகமையில் வைகின்றனர். இதை நாம் ஒரு வெட்கம் கெட்ட ஆத்திரம் என்றும், மானங்கெட்ட பிரச்சாரம் என்றும் தான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது.
காந்தியார் வெட்ட வெளிச்சமாக முழு முட்டாள்களுக்கும், புரியும் மாதிரியில், தான் விலகும் காரணங்களை விளக்கியிருக்கிறார்.
1. என்னைத் தலைவர் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் என் இஷ்டப்படி நடப்பதில்லை. ஆனால் என்னை உபயோகித்துக் கொள்கிறார்கள்.
2. காங்கிரஸ்காரர்கள் பலரிடத்தில் நாணயமில்லை.
3. என்னை உபயோகித்துப் பயன் பெறுவதற்காகவே என்னிடம் பக்தி விசுவாசம் உள்ளவர்கள் போல் நடிக்கிறார்கள்.
4. கதரில் நம்பிக்கை இல்லாதவர்கள் கதரைக் கட்டி ஏமாற்றுகிறார்கள்.
5. சத்தியத்திலும், அகிம்சையிலும் நம்பிக்கை யில்லாதவர்கள் சத்தியவான்கள் போல் வேஷம் போட்டு ஏமாற்றுகிறார்கள்
என்றும் சொன்னதோடு, இன்னமும் காங்கிரஸ்காரர் என்பவர்களின் வண்டவாளங்களையும் நாணயக் குறைவுகளையும் அவர் நன்றாய் எடுத்துக் காட்டிவிட்டு, எந்தக் காரணத்தை முன்னிட்டும் தான் இனிமேல் காங்கிரசில் இருக்க முடியாது என்ற முடிவாய் சொல்லியும் விட்டார்.
இப்படி இருந்தும் எலக்ஷனில் நிற்பவர்கள் காந்தியாருக்காக ஓட்டுப் போடுங்கள் நிற்கும் ஆசாமிகளைக் கவனிக்காதீர்கள் என்று கேட்டால் இதில் கடுகளவாவது நாணயமோ, மானம் வெட்கமோ இருக்கின்றதா என்றுதான் கேட்கின்றோம்.
ஓட்டர்கள் எப்படி வேண்டுமானாலும் ஓட்டு செய்யட்டும். நமக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. இன்று நம்நாட்டு மக்கள் 100க்கு 92 பேர்கள் தற்குறிகள். அதிலும் விஷயம் தெரிய கவலையுள்ளவர்கள் நூற்றுக்கு ஒருவர் இருவர் கூட இருக்க மாட்டார்கள். இவர்களிலும் உண்மையான விஷயம் தெரிந்துகொள்ளக்கூடியவர் களும் தெரிந்து கொள்ள சவுகரியமுடையவர்களும் 100இல் இரண்டொருவர் கூட இருக்க முடியுமா? என்பது சந்தேகம்.
மேலும் பார்ப்பனர் பிரச்சாரமும், பார்ப்பனக் கூலிகள் பிரச்சாரமுமே தான் நடைபெற சாத்தியமாகின்றது. அவர்கள் தங்கள் வாழ்வுக்கும், ஆதிக்கத்துக்கும் மற்றவர்களை அடக்கி ஆண்டு எல்லா உத்தியோ களையும் பதவிகளையும் தாங்களே அனுபவிக்கவும் அனுகூலமாகவே தங்கள் பிரச்சாரங்கள் நடக்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற்குப் பார்ப்பனரல்லா தாரிடமே பெரிதும் பணம் பறித்து பார்ப்பனரல்லாதாரிலே கூலிகளைப் பிடித்து பிரச்சாரம் நடத்தி வருகிறார்கள். பத்திரிகைகளும் பெரிதும் பார்ப்பனர்களே நடத்து கிறார்கள் என்பதோடு பத்திரிகை நிருபர்களும் எல்லோரும் பார்ப்பனர்களாகவே இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இவர்களுடைய ஏதாவது ஒரு புரட்டைப் பார்ப்பனரல்லாதார் வெளிப்படுத்தினால் அதற்கு இவ்வளவு ஆத்திரப்படுவ தென்றால் மனம் போனபடி வைவதென்றால், இதை ஏன் மானங்கெட்ட ஆத்திரம் என்று சொல்லக்கூடாது என்று மறுபடியும் கேட்கின்றோம்.
தெருவில் திரியும் சோம்பேறிகள், நாணயமாய் பிழைக்க மார்க்கமில்லாத அயோக்கியர்கள் ஆகியவர்கள் தங்கள் நிஜ வேஷத்தோடு போனால் பிச்சை போடாமல் உதைத்து அனுப்புவார்கள் எனப் பயந்து மேலெல்லாம் பட்டை நாமங்களையும், உருத்திராட்ச விபூதிகளையும் அணிந்து கொண்டு வெங்கடாசலபதிக்கு கோவிந்தா, வெங்கடாசலபதிக்கு தர்மம் போடுங்கள் பழனி யாண்டவனுக்கு அரோகரா, முருகனுக்குத் தர்மம் செய்யுங்கள் என்ற கூப்பாடு போட்டுப் பிச்சை கேட்பதற்கும், இந்த தேர்தல் ஆட்கள் மகாத்மா காந்திக்கு ஜே - காந்தியாருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூப்பாடு போட்டு ஓட்டு கேட்பதற்கும் என்ன வித்தியாசம் என்றுதான் தெரிய ஆசைப்படுகிறோம்.
அதுவும் தோழர். காந்தியாரே இந்த விஷயம் தெரிந்து காங்கிரஸ்காரர்கள் என்னிடம் பக்தி விசவாசம் இருப்பதாக வேஷம் போட்டுக் காட்டி பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆதலால் நான் காங்கிரசை விட்டு வெளியேறுகிறேன் என்று சொன்ன பிறகும் கூட மறுபடியும் இந்தப் பாடம் படித்து ஓட்டுப் பிச்சை கேட்கிறார்கள் என்றால் இந்தக் கூட்டத்திற்கு என்றுதான் மானம் வெட்கம் நாணயம் வரும் என்று கேட்கின்றோம்.
இந்த நிலையில் ஜஸ்டிஸ் கட்சியார் அயோக்கியத் தனம் செய்கிறார்கள் என்றும், தோழர் ராமசாமி முதலியார் அயோக்கியத்தனம் செய்கிறார்கள் என்றும் பார்ப்பனப் பத்திரிகைகளும், கூலிகளும் எழுதுவதின் யோக்கியதை நமக்கு விளங்கவில்லை. கடவுள் பெயரைச் சொல்லி பல சோம்பேறிகளும் அயோக்கியர்களும் பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதற்காகவே உலகில் கடவுள் ஒழிப்பு சங்கங்கள் தோன்றி வேலை செய்து ஒரு அளவு வெற்றி பெறுவது போலவே, பார்ப்பனிய ஒழிப்பு சங்கங்கள் தோன்றி வேலை செய்து ஒரு அளவுக்கு வெற்றி பெற்று வருகின்றன, என்றாலும் இன்னமும் பலமான வேலைகள் செய்ய இம் மானங்கெட்ட செய்கைகள் தூண்டுகின்றன. நல்ல வேளையாக தோழர் காந்தியாரே இந்த விஷயம் தெரிந்து, தானே காங்கிரசை விட்டு ஒழிந்து விடுகிறேன் என்ற சொல்லி விட்டதால், இனி காந்தி ஒழிப்புச் சங்கங்களுக்கு வேலை குறைந்ததென்றே மகிழ்ச்சி அடைகின்றோம்.
மற்றுமொரு போக்கிரித்தனம் என்னவென்றால், பம்பாய்க்குப் போன பார்ப்பனர்கள் அங்கிருந்து கொண்டு சர். சண்முகத்திற்கு ஓட்டு இல்லையென்று பத்திரிகை களுக்குச் சேதி அனுப்புகிறார்களென்றால் இதை விட சூழ்ச்சிக்கு வேறு ஆதாரம் என்ன?
முடிவாக வரப்போகும் தேர்தல்களில் வாக்காளர்கள் இந்தப் புரட்டுகளுக்கு ஏமாந்து போகாமல் அபேட்சகர் களின் யோக்கியதையையும், செய்யப் போகும் வேலை யையும் நன்றாய் அறிந்து தங்கள் இஷ்டப்படி நடக்க வேண்டும் என்றே வேண்டிக்கொள்ளுகிறோம்.
- பகுத்தறிவு - துணைத்தலையங்கம் - 28.10.1934

தேர்தல் பிரச்சாரப் போக்கு
தோழர் சத்தியமூர்த்தி புகார்களுக்குப் பதில்
தேர்தலில் போட்டி அபேட்சகர்கள் ஒருவரையொருவர் இகழ்வதும், எதிர் அபேட்சகர் மீது வாக்காளர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும்படி செய்வதும் உலகம் முழுதும் சகஜமாகிவிட்டது. ஆனால், அவ்விதம் செய்வதற்கும் ஓர் எல்லையுண்டு. இப்போது சென்னை நகர் சம்பந்தப்பட்ட வரையில், காங்கிரஸ் பெயரைக் கூறிக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அபேட்சகராக நிற்கும் ஆளைக் கவனிக்காதீர்கள். மகாத்மா காந்திக்காக ஓட்டுபோடுங்கள் எனக் கூறுகிறார்கள். இது நாமம் போட்ட சோம்பேறிகள் திருப்பதி வெங்கிடாசலபதிக்கு உண்டியல் பிச்சை கேட்பது போலாகும். ஆனால் நான் அவ்விதம் எதுவும் கூற விரும்பவில்லை. சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட வரையில் பார்ப்பனர் - அல்லாதார் ஜாதியை ஆதாரமாகக் கொண்டே தேர்தல் இயக்கம் நடந்து வருகிற நீங்களெல்லோரும் சென்னை நகரத்துக்கு அபேட்சகராக நிற்கும் தோழர் ராமசாமி முதலியாரின் அந்தஸ்தையும், யோக்கியதாம்சங்களையும் தோழர் சத்தியமூர்த்தி யோக்கியதாம்சத்தையுமே கவனிக்க வேண்டும். அபேட்சகர் களில் யார் செய்வது சரி, யார் செய்து தப்பு என்பதைப் பகுத்தறிந்து, உங்களிஷ்டம் போல் ஒருவருக்கு ஓட்டு போடும் உரிமை உங்களுக்குண்டு. எனவே, வீண் புரட்டுகளைக் கேட்டு நீங்கள் ஏமாற மாட்டீர்களென்பது நிச்சயம்.
காங்கிரஸ் பெயரால் நடந்து வரும் பிரச்சாரத்தை நீங்கள் கவனிக்கக் கூடாது. காங்கிரஸ் அரசியலில் இன்னும் சிறிது காலத்தில் மிகுந்த மாறுதலேற்படலாம். ஏனெனில் காந்தியார் காங்கிரசிலிருந்து விலகிவிட உத்தேசித்துள்ளார். அப்படி யிருந்தும் காங்கிரஸ்வாதிகள் தேர்தலுக்காக மகாத்மா பெயரை உபயோகித்து வருகிறார்கள். தோழர் சத்தியமூர்த்திக்கு 4000 பிராமணரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கிறதென்றும், அதற்குமேல்தான் அவர் இப்போது கணக்கிட வேண்டுமென்றும் அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர். அப்படியாயின், தோழர் ராமசாமி முதலியாருக்கு 11,000 பிராமணரல்லாதாரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கின்றனவென்று நீங்கள் தைரியமாகக் கூற வேண்டும். இப்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் தோழர் சத்தியமூர்த்தி, தோழர் முதலியாருக்கு விரோதமாக பல பொய்யான விஷயங்களைக் கூறியிருக்கிறார். அவைகளால் பொதுஜன அபிப்பிராயம் மாறக்கூடுமோவென்றே, இப்போது தோழர் முதலியார் அவைகளுக்குப் பதில் கூற வேண்டியிருக்கிறது.
(20-10-1934) மாலை சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் தலைமைதாங்கி காங்கிரஸ் புரட்டுகளும், வஞ்சகங்களும் என்பது பற்றி பெரியார் ஆற்றிய உரை.)
- பகுத்தறிவு - சொற்பொழிவு - 28.10.1934
                                                                                                                                          நன்றி:விடுதலை 11-12-2010

Thursday, December 9, 2010

ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி!

அம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை, என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய  அறிவாளிகளாக இருக்கிறார்களோ அவர்களெல்லாம் நாஸ்திகர்கள்தான்; நாஸ்திகனாக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக்கூடிய மனிதராக ஆகமுடிகிறது. அவர்கள்தான் தங்கள் படிப்பை, திறமையைப் பயன்படுத்துகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் ஒரு பெரிய அறிஞர். அதன் காரணமாகவே அவர் ஒரு பெரிய நாஸ்திகர். அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம்  என்பவரெல்லாம் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார்.
இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்தமதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்தமதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.

டாக்டர் அம்பேத்கர் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே இந்து மதத்தை ஒத்துக்கொள்வதில்லை. அவர் காந்தியைப்பற்றிச் சொல்லும் போது “காந்தி ஒரு பச்சை இந்து. மனுதர்ம முறை, வர்ணாசிரம முறையைப் பாதுகாக்க நினைப்பவர். அவர் ஆதித்திராவிட மக்களுக்கு என்ன செய்ய முடியும்?’’ என்று கடுமையாகத் தாக்கி வருணாசிரம ஆதார சுலோகங்களையெல்லாம்கூட எடுத்துப்போடு, காந்தி பச்சை இந்துவாக இருப்பதால்தான் அவர் புத்தி இப்படிப் போகிறது என்று எழுதினார்.

1930_-35லேயே ஜாதி ஒழிப்பில் தீவிரக் கருத்துள்ளவராக இருந்தார்; ஜாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் (ஜாத்மத்தோடகமண்டல் என்று கருதுகிறேன்.) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஒரு அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் ஜாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக்கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமையுரையாக (address) 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு ஜாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள் என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஜாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல. ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை (Chapter) நீக்கிவிடவேண்டும் என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள். அதற்கு அம்பேத்கர் “ஜாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழியவேண்டும்’’  என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப்பேசாமல் வேறு எதைப்பேசுவது? ஆகையால், அதை நீக்கமுடியாது என்று சொல்லிவிட்டார். பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார்.  அதற்கும் அவர் நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்: தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது. நான் அம்பேத்கரிடம் அந்தப், பேச்சை வாங்கி “ஜாதியை ஒழிக்கும் வழி’’ என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார்.

நாம் இராமயணத்தைப்பற்றி வாயால் பேசிக்கொண்டிருக்கும் போதே, அதாவது 1932 லேயே அவர் இராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு சிவராஜ்தான் தலைவர், இதெல்லாம் குடியரசில் இருக்கிறது.
அவர் ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தபோது, கீதையைப்பற்றி பேசும்போது, கீதை ஒரு பைத்தியக்காரனின் உளறல் என்றே பேசினார். அப்போது சி. பி. ராமசாமி அய்யா போன்றவர்கள் “இதென்ன அக்ரமம்; வெறும் அம்பேத்கர் பேசியிருந்தால்கூடக் கவலையில்லை; ஒரு கவுன்சில் மெம்பராக இருக்கிற அம்பேத்கர் அதுவும் சென்னையில் வந்து, கீதை பைத்தியக்காரனின் உளறல் என்று பேசுவதென்றால் அக்ரமம்’’  என்றெல்லாம் கூச்சல் போட்டார்கள்.

நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். அந்த மாநாட்டுக்கு, சண்முகஞ் செட்டியார் வரவேற்புரை அளித்தார். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக ஜெயக்கர் வந்திருந்தார். அவர் ஏதோ நம்மைப் பாராட்டிப் பேசிவிட்டுப் போய்விட்டார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம் ஆகப்போகிறேன் என்று சொன்னார். நானும் ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். தயவுசெய்து  அவசரப்பட்டுச் சேர்ந்துவிடாதீர்கள். குறைந்தது 1லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கைவைக்கக்கூடாத மதம் ((Perfect Religion)  என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கைவைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும்.  தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது, உதைக்க வந்தால்கூட சிபாரிசுக்காவது ஆள்வேண்டாமா? என்று சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக்கூடா தென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம்  மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கெனவே புத்தர்தான்.

நாங்கள் உலக புத்தர் மாநாட்டிற்குச் சென்றபோது அவரை பர்மாவில் சந்தித்தேன். புத்தர் மாநாட்டில் நான் பேசுவதாக ப்ரோகிராமில் (நிகழ்ச்சி நிரல்) போட்டிருந்தார்கள். ஆனால், எனக்குச் சொல்லவில்லை. நான் போனேன். பிறகு என்னமோ வேறொருவரை பேசச் சொல்லிவிட்டார்கள். அப்போது அம்பேத்கர் என்னிடம் இன்றைக்குக் கையெழுத்துப்போட்டு புத்தமதத்தில் சேர்ந்துவிடுவோம், என்று சொன்னார்.

மைசூர் மகாராஜா புத்தமதக் கொள்கையில் ரொம்பப் பற்றுள்ளவர். நானும் மைசூரிலேயே நிரந்தரமாகத் தங்கலா மென்றிருக்கிறேன். அவர் எத்தனையோ ஏக்கர் நிலம்கூட தருவதாகச் சொல்லி இருக்கிறார். இப்படி இதையெல்லாம் வைத்து ஒரு பெரிய யூனிவர்சிட்டி (பல்கலைக்கழகம்) ஆரம்பிக்காமல் நாமும்  சாகிறவரையில் பேசிக்கொண்டேயிருந்துதான் என்னாவது? ஏதாவது சாவதற்குள் செய்ய வேண்டாமா? என்று இன்னும் என்னென்னமோ சொன்னார். அதோடு தைரியமாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். சேர்ந்த பிறகு ஒரு அறிக்கை வெளியிட்டார்.

“நான் இனிமேல் ராமன், கிருஷ்ணன், சிவன், இந்திரன் முதலியவைகளைக்  கடவுளாக ஏற்றுக் கொள்வதில்லை. அவதாரங்கள் என்பவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. உருவ வணக்கத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஜாதிமுறையில், இன்னும் மோட்சம் _  - நரகம் இவற்றை  நம்புவதில்லை; சடங்கு,  திதி -_ திவசங்கள் ஆகியவைகளில் நம்பிக்கையில்லை.’’ இனிமேல் இவைகளைச் செய்யமாட்டேன். இதுபோல இன்று நாம் எதை எதைக் கண்டிக்கிறோமோ, ஒத்துக்கொள்வதில்லையே, அதையெல்லாம் சொல்லியிருக்கிறார்.

அம்பேத்கர் மக்களுக்கு வழி காட்டுபவர். ஜாதிமதக் குறைபாடுகளை மனதில்பட்டதைத் தைரியமாக எடுத்துக் கூறிவந்தார். சுயநலமில்லாமல் பாடுபட்டவர்; இந்தியா பூராவும் விளம்பரம் பெற்றவர். அவர் தமது மக்களுக்குப் பௌத்த மதத்திற்குப் போகும்படி வழி காட்டியிருக்கிறார். இங்கு  பலபேர் மாறக்கூடிய நிலை ஏற்படும். தன் சமுதாயத்திற்குப் படிப்பு, உத்தியோகம் முதலிய காரியங்களில் முயற்சிசெய்து பல வசதிகளைச் செய்திருக்கிறார். உத்தியோகத்தில் 100க்கு 15 என்று வாங்கிக்கொடுத்தார்.

அவர் உள்ளபடியே ஒரு பெரிய தலைவர். அவருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது. அவர் சமதர்ம காலத்திற்குமுன் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர். அம்பேத்கருக்குப் பிறகு அவரைப் போன்ற தலைவர் ஏற்பட முடியாது.
- தந்தை பெரியார் 28.10.1956 இல் வேலூர் நகராட்சி மன்றத்தில்
  ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை - 7.12.1956)

Sunday, December 5, 2010

வெறும் பெயர் மாற்றத்தால் தாழ்த்தப்பட்டோர் நிலை உயர்ந்துவிடாது!


தோழர்களே!
இன்று இவ்வாண்டு விழாவில் தோழர்கள் ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன், என்.சிவராஜ், எஸ்.குருசாமி. டி.என்.ராமன், குஞ்சிதம், வித்துவான் முனிசாமி, ஆரோக்கியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியவர்கள் பேசினார்கள். என்னுடைய முடிவுரையுடன் ஆண்டு விழா நிகழ்ச்சி முடிவுபெற்றதென்றே கருதுகிறேன். ஆனால், நான் பேசவேண்டும் என்று கருதி இருந்த வற்றை எல்லாம் உபன்யாசகர்கள் பேசி விட்டார்கள். ஆதலால் நான் அதிகம் பேசுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். நீங்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும். பெண்களை அதிகமாக அங்கத்தினர்கள் ஆக்க வேண்டும்.
பகுத்தறிவு
உண்மையிலேயே எல்லோரும் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்கவேண்டும். பகுத்தறிவை வளர்க்க வேண்டும். எந்த விஷயத்தையும் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும். மனதிற்குத் தோன்றியதை எல்லாம் பகுத் தறிவு என்று சொல்லி விடக்கூடாது. புஸ்தகத்தைப் படித்து ஒப்புவிப்பது பகுத்தறிவாகிவிடாது. சாத்தியம் அசாத்தியம் இன்னதென்று அறியவேண்டும். அனுபவ பலன் இன்னதென்று தெரியவேண்டும். நமது சக்தி எப்படிப்பட்டது? அது எவ்வளவு? என்பதை உணர வேண்டும். கால தேச வர்த்தமானங்களைக் கவனிக்க வேண்டும். நமது அறிவுக்கு ஒரு காரியம் சரி என்று பட்டாலும் மேல்கண்ட அநேக விஷயங்களை உணர்ந்தே அதைப்பிரயோகிக்க வேண்டும். அதாவது பகுத்தறிவை பிரயோகிக்க பகுத்தறிவு வேண்டும்.
உங்கள் கொள்கை
இங்குப் பேசிய பலர் சுயமரியாதையைப் பற்றியும், அரசியலைப் பற்றியும் பேசினார்கள். இச்சங்கத்தைச் சேர்ந்த மக்கள் பெரிதும் தாழ்த்தப்பட்ட மக்களாகக் காணப்படுகிறபடியால் உங்களுக்கு அரசியல் - அரசாங்கத்தைத் தழுவிப் போவதுதான் பயன்படத் தக்கதாகும். அரசியலில் உங்கள் வகுப்பைத் தனியாகப் பிரிக்கப்பட்டாய் விட்டது. மற்ற வகுப்புகள் லட்சியத் திற்கும் நிலைக்கும் உங்கள் வகுப்பு லட்சியத்துக்கும் பெரியதொரு நிலைக்கும் வித்தியாசம் இருப்பதாலேயே அரசியலில் நீங்கள் தனி உரிமை கேட்க வேண்டிய தாயிற்று. அந்தப்படியே அரசாங்கம் உங்களுக்குத் தனி உரிமை அளித்தும் நீங்கள் மற்ற மேல் ஜாதி மக்கள் என்பவர்களால் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள். மேல் ஜாதியாருக்குத் தந்திரமும், சூழ்ச்சியும் இயற்கை யாகவே உண்டு. அதனால்தான் அவர்கள் மேல் ஜாதிக்காரர்களாய் இருக்கிறார்கள். அதில்லாத தினால்தான் நீங்கள் கீழ் ஜாதி என்பதில் சேர்க்கப்பட்டு அதற்குண்டான பயனை அனுபவித்து வருகிறீர்கள். உங்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்று குறிப்பிட்ட தற்கே தோழர் ஆரோக்கியசாமி கோபித்துக் கொண் டார். கோபித்து என்ன செய்வது? பிரத்தியட்சத்தில் நீங்கள் தாழ்த்தப்பட்டு இருக்கிறீர்களா - இல்லையா? அந்தப்படி இல்லையானால் உங்களுக்குத் தனி உரிமையே வேண்டியதில்லை அல்லவா? சமூக வாழ்வில் உங்களுக்கு எவ்வளவு இடையூறு சட்டப்படி இருக்கிறது என்று பாருங்கள். உங்களுக்குக் கோவில் பிரவேச உரிமை கிடையாது. தெரு, குளம், பள்ளிக் கூடம்ஆகியவைகளின் பிரவேச உரிமைகூட இப்போது ஜஸ்டிஸ்கட்சி ஏற்பட்ட பிறகு உங்களுக்கு உண்டாகி இருக்கிறது. அதற்கு இன்னும் பல இடங்களில் தடை இருந்து வருகிறது.
கோவில் பிரவேசம்
திருவாங்கூர் கோவில் பிரவேச உரிமையைப் பற்றிப் பாராட்டிப் பேசினீர்கள். அதனால் உங்களுக்கு என்ன லாபம்? உங்கள் தாய்நாட்டில் உங்கள் நிலை என்ன? உங்களைவிட இன்னும் மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கே நமது நாட்டில் பல இடங்களில் கோவிலின் மதில் பிரவேச உரிமை கூட கிடை யாது.இந்த நிலையில் உள்ள மக்கள் சிலர் சிறிது கூட மானமில்லாமல் அரசியலைப்பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் மனித உரிமைக்கு லாயக்கற்றவர்கள் என்பதற்கு இதுவே போதிய உதாரணமாகும்.
நியாயமாய்ப் பேசப் போனால் நீங்கள் மாத்திரம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்லர். சில இடங்களில் கோவில் உரிமை இல்லாதவர்கள் மாத்திரம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. சகலகோவில்களிலும் பிரவேசிக்க உரிமை உள்ள நாங்களும் தாழ்த்தப்பட்டவர்களேயாவோம். கோவில்களில் எங்களுக்கும் உரிமை இல்லாத இடம் பல உண்டு. காப்பிக்கடை, ஓட்டல் முதலிய இடங்களில் நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவும், சில அறை களுக்குள் செல்லப்படாதவர்களாகவும்தான் இருந்து வருகிறோம். உங்கள் இழிவைப்பற்றிப் பேசுவதால் எங்கள் இழிவும் நீங்கலாம் என்பதே எங்கள் அனு தாபத்தின் கருத்தாகும். பந்தியில் சாப்பிடும்போது தனக்கு வேண்டிய பதார்த்தத்தைப் பக்கத்து இலையில் இருக்கிறவர்களுக்கு வேண்டும் என்று சொல்லிப் பரிமாறுகிறவனைக் கூப்பிட்டு பிறகு தனது இலைக்கும் வாங்கிக்கொள்ளுகிற தந்திரத்தை நீங்கள் அறிந்த தில்லையா? அது போல்தான் உங்கள் குறையோ, இழிவோ நீங்கினால் கூடவே எங்கள் குறையும் இழிவும் தானாகவே நீங்கிவிடும். அதனாலேயே உங்கள் குறைகளைப்பற்றி நாங்கள் சதா பேசிக்கொண்டே வருகிறோம்.
காங்கிரசில் சேருவது...
நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அரசியல் கூப்பாடுகளை வெறுக்கிறீர்களோ, எவ்வளவுக்கு எவ்வளவு அரசியல் கட்சிகளுடன் சேராமல் இருக் கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுடைய குறைகள் நிவர்த்திக்கப்படலாம் என்பது எனது அபிப்பிராயம். உங்கள் தலைமேல் கால் வைத்து ஏறிப்போகிறவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பீர்களேயானால் உங்கள் கொடுமை சீக்கிரத்தில் கவனிக்கப்படும். இல்லாவிட்டால் நீங்கள் படிக் கல்லாக விழுந்து கிடக்க வேண்டியதுதான். காங்கிரஸ் ஏற்பட்டு 50 வருஷகாலம் ஆகியும் ஜஸ்டிஸ்கட்சி ஏற்பட்டு பங்கு கேட்க ஆரம்பித்த பிறகே சமுதாயத் துறையில் பெரியதொரு மாறுதல் ஏற்பட முடிந்தது. அதன்பிறகுதான் உங்கள் நிலையும் இந்த 10 வருஷகாலத்தில் எவ்வளவோ மாறுதலை அடைய முடிந்தது. அப்படிக்கில்லாமல் காங்கிரசுக்கே கை தூக்கி வந்திருப்பீர்களேயானால், மேல் ஜாதிக்காரர்கள் பின் னாலேயே கோவிந்தாப் போட்டிருப்பீர்களேயானால் உங்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
திருவாங்கூர் பிரகடனம்
திருவாங்கூர் ஆலயப் பிரவேச விளம்பரத்தைக் கவனித்துப் பாருங்கள். அது எப்படி ஏற்பட்டது? தோழர் சர்.சி.பி.ராமசாமி அய்யரைப்பற்றி நமக்குத் தெரியாதா? அவர் சர்க்கார் பராமரிப்பிலிலுள்ள சகல வீதிகளிலும், சகல பிரஜைகளும் நடக்கலாம் என்று ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் செய்த சட்டத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் தடுத்தவரல்லவா? அதாவது கல்பாத்தியில் ரோட்டில் ஈழவர்கள் நடக்கக்கூடாது என்று ஒரு பார்ப்பன மேஜிஸ்திரேட் 144 தடை உத்தரவு போட்டு தடுத்ததைப் பற்றி சட்டசபையில் கேள்வி கேட்கப்பட்டபோது சர்.சி.பி.அய்யர் என்ன பதில் சொன்னார்? அந்தத் தடை உத்தரவு சரியானதுதான் என்று ஆதரித்துப் பதில் சொன்னார். அதாவது அந்தப் பிரவேச சட்டத்திற்கு ஒரு புது வியாக்கியானம் செய்தார். என்னவென்றால் ஏதாவது ஒரு வேலையின் பேரில் அவசியத்தின் பேரில் தெருவில் நடப்பவனுக்குத்தான் அந்தச் சட்டம் இடம் கொடுக்குமே ஒழிய அனாவசியமாய் வேலை இல்லாமல் நடப்பவனுக்கு அச்சட்டம் இடம் கொடுக்காது என்று சொல்லி குறிப்பிட்ட 144 தடை உத்தரவு, வேண்டுமென்ற அவசியம் இல்லாமல் நடந்து மேல் ஜாதிக்காரர்களின் மனத்துக்கு சங்கட முண்டாக்குவதைத் தடுப்பதற்கு ஆக போடப்பட்ட உத் தரவு என்றும், அது அவசியம்தான் என்றும் சொன்னார்.
ஆகவே, திருவாங்கூர் திவான் சர். சி.பி. அய்யரின் தாராள நோக்கம் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அப்படி இருக்க திருவாங்கூர் கோவில் கதவு எப்படி உடைக்கப்பட்டது என்று யோசித்துப் பாருங்கள். அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களும், ஈழவர்கள் நாடார்கள் உள்பட உள்ள மற்ற மக்களும், மதத்தையும், கோவிலையும் சாமியையுமே உடைக்கப் பார்த்தார்கள். இந்துமதம் புரட்டு, கோவில் புரட்டு, சாமியே புரட்டு என்று மகாநாடுகள் கூட்டி பதினாயிரக்கணக்கான பேர்கள் சேர்ந்து தீர்மானம் செய்தார்கள். பலர் முஸ்லிமாக துருக்கி தொப்பி போட் டார்கள். பலர் தாடி வளர்த்து தலைமுடி வளர்த்து கிருபான் (கத்தி) கட்டித் தொங்கவிட்டுக்கொண்டு சீக்கி யர்கள் ஆனார்கள். சிலர் குடும்பத்தோடு கிறிஸ்தவர்கள் ஆனார்கள். அதன் பிறகே கோவில் கதவு திறக்கப் பட்டது. தமிழ் நாட்டில் உள்ள சகல மேல் ஜாதிக்காரர் களும் பார்ப்பனர்கள் உள்பட திருவாங்கூர் ராஜாவை வாழ்த்தி விட்டார்கள். வெற்றி பெறும் இரகசியம் எங்கே இருக்கிறது பாருங்கள். அதுபோலவே நீங்கள் காங்கிரஸ் மதம், கோவில், சாமி ஆகியவைகளையெல்லாம் உடைக்க ஆரம்பித்தீர்களேயானால் உங்களுக்கு யாருடைய தயவும் இல்லாமல் சகல சுதந்திரமும் சகல உரிமையும் தானாக உங்களைக் தேடிக் கொண்டுவரும்.
பட்டம் மாற்றுவதில் பயனில்லை
அப்படிக்கு இல்லாமல் தாழ்த்தப்பட்டவர்கள் என்று உங்களைக் கூப்பிடுவதற்கு ஆக நீங்கள் கோபித்துக் கொள்வதால் ஒரு காரியமும் ஆகிவிடாது. பறையர்கள் என்கின்ற பட்டம் மாறி ஆதிதிராவிடர்கள் ஆகி இப்போது அரிஜனங்கள் என்கின்ற பட்டம் வந்ததுபோல்வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமே ஒழிய குறையும், இழிவும் நீங்கி விடாது. விபசாரிகளுக்கும், குச்சிகாரிகளுக்கும் தேவதாசி, தேவ அடியாள் என்கின்ற பெயர்கள் இருப்ப தால் அவர்களுக்கு சமுகத்தில் இழிவு இல்லாமல் போய் விடவில்லை.
அதுபோல பார்ப்பானல்லாதவர்களுக்கு நாயகர், முதலியார், தேவர், வேளாளர், ராஜா, ராயர் என்கின்ற தான பல பெயர் இருந்ததாலேயே சமுக வாழ்வில் சூத்திரன் என்கின்ற பெயர் போய்விடவில்லை. ஆதலால், பெயரைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இழிவும், குறையும் போக்க வழி பாருங்கள். அதற்கு அம்மாதிரி நம்மை குறைவுபடுத்தும் மக்களுடன் ஒத்துழையாமை செய்வதும் அவர்களுடைய முன்னேற்றத்துக்கு நாம் முட்டுக்கட்டை போடுவதும்தான் சரியான மருந்தாகும்.
கோடரிக்காம்புகள்
சில கோடாலிக் காம்புகள் அவர்களுடன் ஒத்து ழைப்பதால் நாம் ஏமாந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட இழி மக்கள், மானமற்றவர்கள் நம்மில் பலர் இருப்பதாலேயே நாம் இம்மாதிரி சங்கம் ஸ்தாபனம் பல வைத்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டியிருக்கிறது. எல்லோருக்கும் சுயமரியாதை உணர்ச்சி இருக்குமானால் தாழ்த்தப் பட்டவர்கள் சங்கமோ. பார்ப்பனரல்லாதார் சங்கமோ எதற்கு ஆக இருக்க வேண்டும்? நம்மில் எத்தனையோ பேர் உதைத்த காலுக்கு முத்தமிட்டு வாழவேண்டிய வர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் இழி தொழிலுக்கெல்லாம் நாம் பரிகாரம் செய்யவேண்டிய வர்களாய் இருக்கிறோம். அந்தப் பரிகாரம் நம்முடைய உறுதியும் தைரியமும் கொண்ட ஒத்துழையாமையிலும் முட்டுக்கட்டையிலும்தான் இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி சிலர் பேசியதோடு என்னையும் சில கேள்விகள் துண்டுச்சீட்டு மூலம் கேட்டிருக்கிறார்கள்.
கேள்விகள்
1. தோழர் ஜீவானந்தம் முதலியவர்களுக்கும் உங் களுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருவர் கேட்கிறார். இப்போது ஒரு வித்தியாசமும் இல்லை. முன்பு அவர்கள் தேர்தல் பிரசாரம் ஊசிப்போனது என்றும், நாற்ற மடிக்கிறது என்றும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், இப்போது அவர்களும் தேர்தல் பிரசாரத்தில் இறங்கிவிட்டதாகப் பத்திரிகைகளில் பார்க்கிறேன். நான் ஜஸ்டிஸ் கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறேன். அவர்கள் காங்கிரஸ்கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய் கிறார்கள். மற்றபடி வித்தியாசமில்லை.
2. இரண்டாவதாக ஜஸ்டிஸ் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு தோழர் கேட்டிருக்கிறார். அதற்கும் பதில் - ஒரு வித்தியாசமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்றுள்ள ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய கொள்கையாகிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் உத்தியோக விஷயங்களில் அனுபவத்தில் சிறிதாவது இருக்கிறது என்றால் அது ஜனநாயக கட்சியின் மூல புருஷரான தோழர் எஸ்.முத்தையா முதலியார் அவர்களின் தொண்டினால் என்று தான் சொல்லுவேன். ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் பலரும், பார்ப்பனரல்லாத மக்களில் பலரும் அவருக்கு போதிய நன்றி விசுவாசம் காட்டாவிட்டாலும், நான் என்னைப் பொறுத்தவரை எப்போதும் ஒரு அளவுக்கு நன்றியு டையவனே ஆவேன். மற்றபடி ஜனநாயகக் கட்சியார் அரசியல் நிபுணத்துவத்தை உத்தேசித்து ஜஸ்டிஸ் கட்சிக்கும், மிதவாதக் கட்சிக்கும், தங்கள் கட்சிக்கும் ஏதோ வித்தியாசமிருப்பதாக கூறலாம். ஆனால், அது என் சிறிய கண்ணுக்குத் தென்படவிலலை.
இந்தியாவில் ஒரே கட்சிதான்
இன்று இந்தியாவில் அரசியல் கொள்கையில் ஒரே கட்சிதான் உண்டு. அதாவது தேர்தலில் வெற்றி பெற்று, மந்திரி பதவியை அடைந்து, பணமும் அதிகாரமும் பெற வேண்டும் என்கின்ற கவலை கொண்ட ஒரே கட்சிதான் உண்டு. அதை அடைவதற்குப் பல மார்க்கங்கள், பல தந்திரங்கள் கொண்டிருப்பதன் மூலம் பல கட்சிகள் இருப்பதாய்க் காணப்படலாம். அதோடு கூடவே அவை பெரிதும் சமுதாயத் துறையில் ஒன்றுக்கொன்று நேர்மாறான கொள்கை கொண்ட கட்சிகளாய்க் காணப்படலாம். அதன் பயனாய் சில கட்சி உண்மை பேசலாம், சில கட்சி புரியாத மாதிரி பேசலாம், சில கட்சி அடியோடு பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் பேசலாம். இதுதான் இன்று அரசியல் கட்சிகளின் நிலைமை.
ஜஸ்டிஸ் கட்சி
ஆனால், ஜஸ்டிஸ் கட்சி தனது கொள்கைகளில் திட்டத்தில் உண்மை பேசுகிறது. அதுவும் சாத்தியமானால் மட்டும்தான் நடத்திக் கொடுப்பதாய் பச்சையாய் அதில் உள்ள சில கட்சி சொல்லுகிறது. தலைவர்களுக்குள்ளோ, அங்கத்தினர்களுக்குள்ளோ கட்சி கொள்கை விஷயத்தில் அபிப்பிராய பேதமில்லை. தலைவர்களில் பின்பற்றுபவர் களில் ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லாதவர்களாகவும், பொதுநோக்குடையவர்கள் அல்லாதவர்களாகவும், சுயநலத்துக்கு ஆக எதையும் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கலாம். அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. அம்மாதிரி நபர்கள் எல்லாக் கட்சியிலும் உண்டு. அவர்களால் நேரும் கெடுதிக்கு எல்லாக் கட்சியாரும் சிறிது மார்ஜின் (இடம்) விட்டுத்தான் தீரவேண்டும். மற்றபடி இன்று சமுதாயத் துறையில் பிற்பட்டு அடிமைப்பட்டு இழிவுபட்டுக் கிடக்கும் மக்களுக்கு ஜஸ்டிஸ் கட்சி தான் சஞ்சீவி மருந்து என்று சொல்லுவேன்.
காங்கிரஸ் கட்சிக்கு உத்தியோகமும் பதவி ஆசையும் இருப்பதாலேயே நான் அதை குறைகூறவில்லை. ஆனால், அது பிற்படுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு இருக்கும் மக்களுக்குச் சமஉரிமை அளிக்க மறுப்பதையும், மற்றவர்கள் அளிப்பதைக் கெடுப்பதையுமே முக்கியக் கொள்கையாய்க் கொண்டு இருக்கிறபடியால் அதை ஒழித்து ஆக வேண்டும் என்கின்றேன். அதன் தலைவர் கள் பழைமை விரும்பிகளாக இருப்பதாலேயே வருணாசிரம தர்மிகளாக இருப்பதாலேயே அவர்களிடத்தில் எனக்கு நம்பிக்கையும் மதிப்பும் இல்லை. மற்றபடி கட்சிகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
சுயமரியாதைப் பிரசாரம்
3. சுயமரியாதை இயக்கப்பிரசாரம் ஏன் செய்ய வில்லை என்று கேட்கப்பட்டிருக்கிறது. நானும், எனது தோழர்களும் ஒரு அளவுக்கு செய்து கொண்டுதான் வருகிறோம். ஆனால், முக்கிய கவனம் ஜஸ்டிஸ் பிரசாரத்தில்தான் இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் நன்மையைக் கோரி அது அவசியம் என்று கருதுகிறேன். எப்படியானாலும் இன்னும் ஒன்றரை மாதங்களில் ஜஸ்டிஸ் தேர்தல் பிரசாரம் தீர்ந்துவிடும். அதற்கப்புறம் அக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி. நானும் எனது தோழர்களும் தனி சுயமரியாதை இயக்கப் பிரசாரம்தான் செய்வோம்.
தோற்குமா? ஜெயிக்குமா?
4. ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெறுமா? என்று கேட்கப் பட்டிருக்கிறது.
ஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்தால், நான் மகிழச் சியடைவதோடு சுயமரியாதை இயக்கப் பிரசாரத்துக்கு பார்ப்பனரல்லாத மக்களால் அதிக ஆதரவு கிடைக்கக் கூடும் என்கின்ற தன்மையால் இயக்கப் பிரசாரம் பலமாய் நடக்கவும் இடம் ஏற்படும் என்று கருதுகிறேன். ஜஸ்டிஸ் கட்சி ஜெயித்தால் தலைவர்கள், பதவி பெற்றவர்கள் ஆகியவர்களினது அனாதரவு ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஏனெனில், சிதறிக் கிடக்கும் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து பலமாய் வேலை செய்ய தோல்வி ஒரு சாதனமாகும். ஆனால், ஜஸ்டிஸ் கட்சி தோல்விய டையாது. ஏனெனில் அதற்கு எதிரான கட்சி எதுவும் கொள்கையில் பலம் பொருந்தியதாக இல்லை. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களில் சிலர் இப்போது இருக்கும் அலட்சியப் புத்தியும் பொறுப்பற்ற தன்மையும், சுயநல சூழ்ச்சியையும் விட இன்னும் கேவலமாய் நடந்து கொண்டாலும் அக்கட்சிக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை. ஏனெனில், அதற்கு கொள்கை பலம் உண்டு. காங்கிரசுக்கு அது அடியோடு பூஜ்ஜியம். ஆதலால், ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடையாது என்று கருதுகிறேன்.
சமதர்மம்
5. சமதர்மத்தைப் பற்றி ஒரு தோழர் குறிப் பிட்டிருக்கிறார். ஜஸ்டிஸ் கட்சி சமதர்மக் கட்சி என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அது தோன்றிய பிறகுதான் இன்று பறையனும், பார்ப்பானும் ஒரு ஸ்தானத்தில் சரிசமமாய் வீற்றிருக்கிறார்கள். புலியும், பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிப்பதுதான் சமதர்ம ராஜ்ஜியம் என்பது பழங்கால பேச்சு. ஆனால், அது இன்று சர்க்கஸ் கொட்ட கைகளில் நடைபெறுகிறது. அதனாலேயே, நாம் அதை சமதர்ம ராஜ்ஜியம் என்று சொல்லுவதில்லை. ஆனால், இன்று பறையனும், பார்ப்பானும், சாஸ்திரியும், சங்க ராச்சாரியும், சக்கிலியும் ஒரு பீடத்தில் அமர்கிறார்கள், ஒரு பதவியில் இருக்கிறார்கள். எப்படி? சவுக்கினாலா? ரிவால்வார் பயத்தினாலா? இல்லவே இல்லை. தாங்களாகவே ஆசைப்பட்டு அதுவும் பத்தாயிரம், இருபதாயிரம் செலவு செய்து கொண்டு போய் அமர ஆசைப்படுகிறார்கள். பறையனை பார்ப்பான், பிரபுவே! எஜமானே! என்று நின்று கொண்டு கெஞ்சிப் பேசு கிறான். இதெல்லாம் எப்படி ஏற்பட்டது? ஜஸ்டிஸ்கட்சி ஏற்படுவதற்கு முன் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைப் பற்றிய ஒரு வார்த்தையாவது காங்கிரஸ் கூட்டத்தில், நட வடிக்கையில், ஆதாரத்தில், திட்டத்தில், கொள்கையில் இருந்ததா என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, ஜஸ்டிஸ் கட்சி சமதர்ம கட்சி என்பதில் உங்களுக்கு இன்னும் சந்தேகம் உண்டா என்று கேட்கிறேன். ஆகையால் சமுதாய சமதர்ம வேலையேதான் நான் இப்போதும் இன்றும் செய்து வருகிறேன். பொருளாதார சமதர்ம வேலை செய்ய எனக்கு ஆசைதான். ஆனால், காங்கிரஸ் அதுக்குப் பரமவிரோதி என்பதோடு, அது ஒரு காட்டிக்கொடுக்கும் ஸ்தாபனமாகும். அது ஒழிந்தால்தான் பொருளாதார சமதர்மம் பேச சவு கரியப்படும் என்றாலும் சட்டத்துக்கு மாறாய் இல்லாமல், அதாவது சர்க்கார் அடக்குமுறைக்கு ஆளாகாமல் எவ்வளவு சமதர்ம பிரசாரம் செய்யலாமோ அவ்வளவையும் செய்துதான் வருகிறேன். செய்யத்தான் போகிறேன். மற்றபடி நீங்கள் எனக்கு இவ்வளவு கவுரவம் செய்து இவ்வளவு தூரம் எனது அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல வசதி அளித்ததற்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
(27.12.1936 அன்று சென்னை - கோடம்பாக்கம் 
பகுத்தறிவு சங்க நான்காவது ஆண்டில் ஈ.வெ.ரா. ஆற்றிய உரை)
ஆதாரம்: குடிஅரசு - 10.1.1937

சண்முகத்தின் அஹம்பாவம்

தோழர் சண்முகம் அவர்கள் தனது தேர்தல் சம்பந்தமாய் ஆங்காங்கு பிரசங்கம் செய்து வருவது யாவரும் அறிந்ததாகும். அவருடைய எதிரிகளாகிய காங்கிரஸ்காரர்கள் - தேசிய பத்திரிகைக்காரர்கள் - பார்ப்பனர்கள் ஆகியோர் சண்முகத்தை வைவதற்கும் அவர்மீது பழி சுமத்தி விஷமப்பிரச்சாரம் செய்வதற்கும் ஒட்டவா ஒப்பந்தத்தையும், சட்டசபைத் தலைவர் பதவியில் அவர் வில்லிங்டன் பிரபுக்கு அடிமையாய் இருந்தார் என்றும், இனியும் அடிமையாய் இருக்கப் போகின்றார் என்றும் காங்கிரசுக்கு துரோகியென்றும், வியாபாரிகளுக்கு துரோகியென்றும் சொல்லி அவற்றைப் பல்லவியாய் வைத்து எதிர்ப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். இவற்றிற்கெல்லாம் தக்க பதில் சொல்லப்பட்டவுடன் இப்போது அந்தப் பல்லவிகளை உபயோகிக்க முடியாமல் போய்விட்டதால் சண்முகம் பிரசங்கத்தில் அப்படிச் சொன்னார் இப்படிச் சொன்னார் இது அகம்பாவம் இது தலைவர்க்கழ கல்ல இப்படிப்பட்டவர்கள் தலைவராகக் கூடாது. இவர் தெரிந்தெடுக்கப்பட்டால் எப்படியும் தலைவராகி விடுவார். ஆதலால் தெரிந்தெடுக்கக் கூடாது என்று புதிய முறையில் இப்போது விஷமப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள் தென்னிந்தியாவில் உள்ள காங்கிரஸ் வாதிகள் அனேகர் - தேசிய பத்திரிகைக்காரர்கள், காங்கிர பத்திரிகைக்காரர்கள் ஆகியவர்கள் பெரிதும் யோக்கியப் பொறுப்பு, நடுநிலைமை என்கின்ற விஷயங்களைச் சுயநலத்துக்குத் தியாகம் செய்த, வீரர்களாக இருப்பதாலும், அதோடு மானாபிமானத்தையும் வந்த விலைக்கு விற்கத் துணிந்திருப்பதாலும், அவர்களுக்கு உண்மை, ஒழுங்கு, மனிதத் தன்மை என்பவை கண்களுக்கே தென்படாமல் போய்விடுகின்றன. அப்படிக்கில்லாமல் இருந்தால் தோழர் சண்முகம் என்ன பேசினார்? ஏன் பேசினார்? என்பவை களையும் முழுவதும் எடுத்துச் சொல்லி மேல் கொண்டு தங்கள் காரியங்களை நடத்தி இருக்கலாம். அவற்றை விட்டு விட்டு எங்கோ இரண்டொரு வார்த்தைகளைப் பொறுக்கிக் கொண்டு அதை ஆதியாய் வைத்து வெறிகொண்டவர் களைப் போல் கண்டபடி உளறிக் கொட்டி வருகின்றனர். இதன் பயனாய் காங்கிரஸ்காரர்கள் யோக்கியதையையும் தேசிய பத்திரிகைகளின் யோக்கியதையையும் உலகமறிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதே ஒழிய சர். சண்முகத்தை சிறிதாவது அசைக்க முடிந்தது என்று சொல்லிவிட முடியவில்லை.
சண்முகம் அசெம்பிளிக்குப் பிரசிடெண்டாக இருந்த தால் அவரை பிரசிடெண்ட் என்று மதித்தவர்கள் அல்லது அவரை பிரசிடெண்ட் முறையில் குறை கூறுகிறவர்கள் யோக்கியர்களாய் இருந்தால் அவருக்குப் போட்டி போட்டி ருக்கக் கூடாது, அல்லது பிரசிடெண்டாய் இருந்தபோது அவர் செய்த குற்றம் ஏதாவது இருந்தால் அதை மரியாதையுடன் எடுத்துக்காட்டி இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் சண்முகம் பிரசிடெண்டாய் இருந்தாலும் அவருக்கு போட்டி போடக் கூடாது என்கின்ற ஒழுங்கை அடிமை தேசத்திலுள்ள அடிமை மக்கள் பின்பற்ற முடியாது என்றும் காங்கிரஸ்காரர்கள் சட்டசபையில் இல்லாத காலத்தில் அவர் பிரசிடெண்ட் ஆனதினால் அவருக்கு காங்கிரஸ்காரர்கள் பிரசிடெண்ட் யோக்கியதையைக் கொடுக்க முடியாது என்றும் சொல்லி அவரை ஒரு சாதாரண மனிதனாகவே கருதி போட்டி போட்டுக் கண்டபடி மேடைகளில் ஏறி, காலிகள் முதல், சத்தியாக்கிரகிகள் என்கின்றவர்கள் வரை பூதக்கண்ணாடி வைத்துக் கண்டுபிடிப்பதற்குக் கூட உண்மையோ யோக்கியதையோ இல்லாமல் பேசி, எழுதி விஷமப் பிரச்சாரம் செய்தால் தோழர் சண்முகம் தனது வாய்க்குப் பூட்டுப் போட்டுக் கொள்ள வேண்டுமென்று எந்தப் பயங்காளியாவது சொல்ல முன்வருவானா என்று கேட்கின்றோம்.
எதிர்ப்பிரச்சாரத்தின் யோக்கியதையைப் பற்றிச் சொல்ல ஒன்று இரண்டு விஷயங்களே போதுமென்று நினைக் கின்றோம்.
முதலாவது, அவரை செக்கு ஓட்டுகிற மாதிரியாகப் படம் போட்டு அதற்குச் சிறிது கூடப் பொருத்தமில்லாத விஷயத்தைச் சொல்லி அற்பத்தனமாய், போக்கிரித்தனமாய் பிரச்சாரம் செய்தார்கள்.
இரண்டாவது, அதைவிட இழிவான முறையில் தோழர் சண்முகம் தனது தொகுதியை விட்டு பயந்துகொண்டு ஓடிவிட்டார் என்று கேவலப் பிரச்சாரம் செய்தார்கள். மூன்றாவதாக, அவர் சட்டசபைக்குப் போனால் பிரசிடெண் டாகி விடுவார். பிரசிடெண்டானால் வைசிராய் பிரபுவுக்கு அடிமையாகி விடுவார். ஆதலால், அவருக்கு ஓட்டுக் கொடுக்கக்கூடாது என்று விஷமப் பிரச்சாரம் செய்தார்கள்.
இவை தவிர அப்படிக் கெடுதி செய்து தேசத்தைக் காட்டிக் கொடுத்தார் இப்படிக் கெடுதி செய்து தேசத் துரோகியானார் என்றும் பிரச்சாரம் செய்தார்கள்.
இவ்வளவு காரியங்கள் நடந்த பிறகு தோழர் சண்முகம் மேடையேறாமல் இருக்க முடியுமா என்று பார்லிமெண்டு ஒழுங்கு தெரிந்த மேதாவிகளைக் கேட்கின்றோம்.
ஆண்மையோடு, வீரத்தோடு போர்புரிபவர்களே யுத்த முறையைப் பற்றிப் பேச யோக்கியதை உடையவர்களா வார்கள். சண்டித்தனமான போர் முறையில் யுத்த முறை யைப் பற்றிப் பேசுவது, தோல்வியை ஒப்புகொண்டதாகுமே ஒழிய வேறில்லை.
சண்முகத்தை இந்தப் பார்ப்பனர்கள் வம்புக்கிழுக்கிறார் களா? அல்லது அவரே வம்புக்கு வந்தாரா? என்பதைப் பொது ஜனங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
வேட்டைக்குப் போன ஒரு வேடன் ஒரு மிருகத்தைச் சுட குறி பார்க்கிறபோது, அந்த மிருகம் வேடனைப் பாயவந்தால் வேடன் அய்யோ மிருகம் பாய வருகிறதே என்று அதன் மீது பழி கூறுவது எவ்வளவு நியாயமும் வீரமும் ஆகுமோ, அதுபோல் சும்மா இருக்கும் சண்முகத்தை வம்புக்கிழுத்து விட்டு விட்டு அய்யோ சண்முகம் இப்படிப் பேசினாரே! அப்படிப் பேசினாரே!! அவர் அகம்பாவம் எவ்வளவு என்று பேசுவதில் ஆண்மை எங்கே, வீரம் எங்கே, நீதி எங்கே, உண்மை எங்கே என்று கேட்கின்றோம்.
சண்முகம் ஒரு பதவியில் இருப்பவர், அவர் பெரிய மனிதர், ஆதலால் இப்படிப் பேசக் கூடாது என்று தர்ம உபதேசம் செய்கிறார்கள் சிலர். சிறிதும் வெட்கமில்லாமல் சண்முகம் பெரிய மனிதர், இவர்கள் அது அல்லாதவர்கள், ஆதலால் இவர்கள் என்ன பேசினாலும் அவர் ஒன்றும் பேசக் கூடாது என்பதை இவர்களே ஒப்புக் கொள்ளுவது போல்தான் ஆகின்றது.
நாய்கடித்தால் நாயைத் திருப்பிக் கடிக்கக் கூடாது என்பது சரியான நீதிவாக்கியந்தான். ஆனால் அதை அடிக்காமல் இருக்க முடியுமா என்று தான் கேட்கின்றோம்.
காங்கிரஸ் துரோகி, தேசத் துரோகி என்று சொன்ன பிறகே அவர், தான் துரோகி அல்ல என்று பதில் சொல்ல வந்தால் எலக்ஷன் போட்டியில் அவர் அகம்பாவமாய் பேசினார் என்று சொல்லுவது அர்த்தமற்ற வார்த்தையேயாகும்.
இப்போதும் அவர் அதே வார்த்தையைத் தான் சொல்லுகின்றார். காங்கிரஸ்காரர்கள் என்னை எவ்வளவு தேசத் துரோகி என்று சொல்லி விஷமப் பிரச்சாரம் செய்தாலும் நான் வெற்றி பெறத்தான் போகின்றேன். பொது ஜனங்களுக்குச் சொந்த புத்தி உண்டு. ஆதலால் அதோடு மாத்திரமல்ல நான் இந்திய சட்டசபைத் தலைவருமாகத்தான் போகின்றேன் என்று சொல்லுகின் றார். அதில் என்ன தப்பு? அதற்காக அவரை என்ன செய்யமுடியும்? என்றுதான் கேட்கின்றோம்.
இந்த வார்த்தைக்கு அகம்பாவம் காரணமா? அல்லது அவரைத் தெரிந்தெடுக்கப்போகும் ஓட்டர்களின் ஞானமும் வாக்குறுதியும், நாணயமும் காரணமா என்று கேட்கின்றோம்.
தோழர் பனகால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்று எப்படி எல்லாப் பார்ப்பனர்களும் டிங்-டங்-டாங் என்று சுதேசமித்திரன் முதல்கொண்டு தோழர்கள் சீனிவாச அய்யங்கார், அல்லாடி அய்யர், சி.பி. ராமசாமி அய்யர் முதல் கொண்டு ஆகாயத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்களோ, அது போலவே இப்போதும் சர். சண்முகம் வெற்றிபெறக் கூடாதென்று அந்த அனாதைகள் உள்பட மகாத்மாக் களை உபயோகித்துக் கொள்வது உள்பட காரியங்கள் நடக்கின்றன. நடந்தால் நடக்கட்டும் என்றேதான் சொல்லுகின்றாரே ஒழிய இதற்குப் பயப்பட வில்லை. சண்முகம் தோற்றுவிட்டாலும் முழுகிப்போவது ஒன்றும் இல்லை. மேலால் நடக்கப் போவது என்ன வென்றுதான் கேட்கின்றோம்.
1926இல் ஜஸ்டிஸ் கட்சி தோற்றுப் போனதுதான் மந்திரிச் சபையிலும் நிர்வாக சபையிலும் பார்ப்பனப் பூண்டுக்கு இடமில்லாமல் போனதற்குக் காரணமாய் ஏற்பட்டதே ஒழிய வேறில்லை.
பார்ப்பனரல்லாதாருக்கு அவர்கள் வீதாசாரத்துக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூட கொடுக்கக் கூடாது என்று சொல்லி மிரட்டியதின் மூலமாய் ஏமாற்றிய காரணம் தான், இன்று பார்ப்பனர்களைத் தங்கள் வகுப்புக்குத் தகுந்தபடி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்கச் செய்ததும் சில இடங்களில் அடியோடு இல்லாமல் போக நேரிட்டதுமாகும்.
அதுபோலவே சண்முகத்தின் விஷயமும் தோல்வி ஏற்படாது, ஏற்பட்டாலும் அது ஒரு சமயம் சண்முகத்தின் சுயநலத்துக்கு விரோதமாக மாறினும் பார்ப்பனரல்லதார் நன்மைக்கு இரட்டை லாபம் என்பதோடு பார்ப்பனர் நிலைமை கடுகளவு கூட முற்போக்கு அடையக் கூடியதாய் இராது என்பதையும் தைரியமாய் சொல்லுவோம். ஆகையால் இன்றைய பார்ப்பனர்களால் பிறர் கண்டுபிடிக்க முடியாமலும், தோல்வி அடையாமலும் இருக்கும்படியாக எவ்வித பித்தலாட்டமும், விஷமப்பிரச்சாரமும் செய்ய முடியாது என்பதும், அந்தக்காலம் மலையேறி விட்டது என்பதும் நமது அபிப்பிராயமாகும்.
- பகுத்தறிவு - துணைத்தலையங்கம் - 14.10.1934

Saturday, November 27, 2010

என்னைப் பற்றி...

மக்களை அறிவாளியாக்கும், துறையில் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் துறையில் யார் பாடுபட்டாலும் அவர்கள் பொது மக்களால் வெறுக்கப்படவும், நாத்திகர்கள் என்று கூறப்படவும், தொல்லைக்கு ஆளாக்கப்படவும், கொல்லப்படவுமான தன்மை உலகிலேயே இயற்கையாக இருந்து வருகிறபோது, அந்த நிலை நம் நாட்டில், நம் மக்கள் இருக்கும் யோக்கியதையில் ஏற்படாமல் இருக்க முடியுமா? அதலால், அந்த நிலைக்கு ஆளாகும் தன்மையை எதிர்பார்த்தே நான் இந்தக் காரியத்தில் பிரவேசித்துத் தொண்டாற்றி வருகிறேன்.
இதன் பயனாக நான் பலமுறை சிறை சென்றிருக்கிறேன்; வாழ்க்கையில் பல இன்னல்களை அடைந்திருக்கிறேன்; இதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கத்திற்கு என் பெயராலும், இயக்கத்தின் பெயராலும் அரசாங்கத்தாராலோ, அரசாங்கத்தில் உள்ள மேல் ஜாதி மக்களாலோ அல்லது இந்தக் கருத்துக்கு மாறுபட்டவர்கள் என்பவர்களாலோ எனது முயற்சியைத் தடுக்கவும், ஸ்தாபனத்தை ஒழிக்கவுமான தன்மையாக ரூபாய் 15,00,000 (பதினைந்து இலட்ச ரூபாய்)க்கு மேல் கடந்த காலத்துக்கு என்று இன்கம் டாக்ஸ் வரி (வருமானவரி) போடப்பட்டிருக்கிறது என்பதுடன் நிகழ்காலத்திற்கும் ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய் போல் இன்கம்டாக்சும் போடப்பட்டும் வருகிறது.
இவை தவிர நம் நாட்டில் உள்ள எல்லாப் பார்ப்பனராலும் வெறுக்கப்பட்டிருக்கிறேன். மேல் ஜாதியார் என்று பார்ப்பனரைப் போல் தங்களைக் கருதிக் கொண்டிருக்கும் எல்லாச் சைவர்கள் என்பவர்களாலும் பெரிதும் வெறுக்கப்பட்டிருக்கிறேன். இவை மாத்திரமா? 100 க்கு 90 கிறிஸ்துவர்களாலும் வெறுக்கப்படுகிறேன். இஸலாமியர்களாலும் வெளிப்படையாய் வெறுக்கப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
இவற்றுள் ஒரு அதிசயமென்னவென்றால் ஆதி திராவிட மக்களுக்குள் பதவியில் உள்ள சிலர் தவிர, ஒருவர்கூட எனக்கு ஆதரவாளர் கிடையாது. யாராவது சிலர் அவர்கள் சொந்த சுயநல காரியங்களுக்கு வருவார்கள். அவ்வளவுதான். சிலர் எதிரிகளாகவே, அலட்சியப்படுத்துபவர்களாகவே ஆகிவிட்டார்கள். எதற்கு இவற்றைச் சொல்கிறேன் என்றால் என் இந்தத் தொண்டுக்கு ஆதரவாளர்களாக, பாராட்டுபவர்களாகப் பெரும்பாலான மக்கள் இல்லை என்பதைக் காட்டுவதற்காகவேயாகும்.
இதில் நான் மகிழ்ச்சியும், பெருமையும் அடையத்தக்கதும், குறிப்பிடத்தக்கதுமான காரியம் என்னவென்றால் என் இயக்கத்தில் (இந்தத் தொண்டுக்கு ஏற்பட்ட இந்த இயக்கத்தில்) வேறு எந்த இயக்கத்தையும் விடக் கட்டுப்பாடும், அதற்கேற்ற கடமைப்பாடும் நல்ல அளவுக்கு இருந்துவருகின்றன. இயக்கத் தோழர்கள் யாராயிருந்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்கள் வெளியே போய்விடுகிறார்கள் என்பதுதான். நாத்திகர் என்பதற்காக யாரும் பயப்படாதீர்கள். சாக்ரட்டீஸ் நாத்திகர்; பெர்ட்ரண்ட் ரஸல் நாத்திகர்; பெர்னாட்ஷா நாத்திகர்; இங்கர்சால் நாத்திகர்; நேரு நாத்திகர். மற்றும், இயேசுநாதரும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டு கொலையுண்டார்; முகமது நபியும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டு அடித்து விரட்டப்பட்டார். புத்தர்களும், சமணர்களும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டு அவர்களின் வீடுகள், மடங்கள் கொளுத்தப்பட்டு வெகுபேர் கொல்லப்பட்டு, கழுவேற்றப்பட்டு, அவர்கள் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு அல்லலுற்றனர். இவர்கள் தவிர, அமெரிக்காவில் பல நாத்திகச் சங்கங்களில் மூன்று கோடிக்கு மேல் வெளிப்படையான நாத்திகர்கள். இங்கிலாந்திலும் அதுபோலவே அரைக்கோடிக்கு மேலும், ஜெர்மனியில் ஒரு கோடியும், சைனாவில் 60 கோடியும், ரஷ்யாவில் 25 கோடியும், ஸ்பெயினில் முக்கால் கோடியும், பிரான்சில் முக்கால் கோடியும், பர்மாவில் அரைக்கோடியும், சயாமில் ஒரு கோடியும் இருக்கிறார்கள்.
இப்படியாக நூற்றுக்கணக்கான கோடி மக்கள் நாத்திகர்களாக இருக்கிறார்கள். பல தேசங்கள் நாத்திக தேசங்களாகவே இருந்து வருகின்றன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் பகுத்தறிவு கொண்ட தேச மக்கள் ஆவார்கள்.
(விடுதலை தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் - 1973 இல் பெரியார் எழுதியது)