Sunday, July 15, 2012

சடங்குகள் மோசக்காரர் புகுத்தியது


நண்பர் பெருமாள் அவர்களின் புதுமனை புகுவிழாவின் பொருட்டு நாம் கூடியுள்ளோம். சாதாரணமாக திறப்பு விழாக்களின் உள்தத்துவம் ஒரு விளம்பரத்துக்காகவேயாகும். என்ன விளம்பரம் என்றால் நண்பர் பெருமாள் முன்பு ஒரு வீட்டில் வசித்தார். இன்று இந்த வீட்டுக்கு குடி வந்துள்ளார் என்பது சுற்றத்தாருக்கும், நண்பருக்கும் தெரிய வேண்டும். எப்படி குடிமாறிப் போனால் முகவரி மாற்றம்  குறித்து விளம்பரப்படுத்துவது போலவாகும். இதுபோலத்தான் திருமணம், புதிய கடைத் திறப்பு எல்லாம் மக்களுக்கு இச்சங்கதியை தெரியப்படுத்தச் செய்ய ஒருவகை விளம்பர சாதனமாகும். இது எந்த நாட்டிலும் உண்டு.
இத்தகைய இந்த ஜாதி  இனத்தின் சுயநலக்காரர்கள், தந்திரக்காரர்கள். இதனை பணம் பறிக்கவும், மதத்தையும், மடத்தனத்தையும் புகுத்த  உபயோகப்படுத்திக் கொண்டனர். மக்களும் இதுபற்றி சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டு நடக்கின்றனர். சுயமரியாதைக்காரர்கள் இப்படி முட்டாள்தனமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் இத்தகைய நிகழ்ச்சிகளில் நடந்து கொள்ளுகின்றார்களே. இதனை மாற்றி பரிகாரம் காண வேண்டாமா? என்று எண்ணியே இப்படிப்பட்ட பகுத்தறிவுக்கு ஒத்த முறைகளை கையாளுகின்றோம். பார்ப்பனரைக் கூப்பிட்டு அர்த்தமற்ற சடங்குகளை செய்கிறார்களே ஒழிய, அது ஏன் செய்ய வேண்டும்? அதன் பலன் என்ன? என்று சிந்திப்பதே இல்லை.
மனிதன் எந்தக் காரியத்தை செய்தாலும் அதன் பலன் நல்லதா? கெட்டதா? என்று ஆராய்ந்து பார்த்து  செய்ய முற்படுவதோ, செய்ய தூண்டுவதோ நம்மவர்களுக்கு இல்லை. எதுவும் சுலபத்தில் அடைய வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றார்கள். இம்மாதிரியான காரியத்தில் கை வைக்க எவனுமே தோன்றவே இல்லையே. தோன்றியவன் எல்லாம் இம்மாதிரியான முட்டாள்தனத்தை பாதுகாக்கவேதான் நினைக்கிறான். கிராமப் பஞ்சாயத்துக்களை அமைப்பதில் முன்னெச் சரிக்கை வேண்டும். இங்கு மேல்நாட்டு பாணி ஜனநாயக முறை புகுத்த இங்கு மக்கள் இன்னும் தகுதி பெறவில்லை. அரசியல் கட்சிகள் புகுந்தால் பெரும்பாலான மக்களின் சமூக வாழ்வில் சிதைவு ஏற்படும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனக் கூறி அடிக்கடி ஒத்தி வைப்பும், வெளிநடப்பு நாடகங்களுமே நடக்கும். எங்கள் இயக்கத்தைத் தவிர இருக்கின்ற அத்தனை இயக் கங்களும், அமைப்புகளும் எங்களால் ஏற்படும் மாறுதல்களை ஏற்பட ஒட்டாமல் தடுக்கவே பாடுபட்டு வருகின்றன.
எங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இவர்கள் கடவுள் விரோதி, மத விரோதி பார்ப்பனரை எதிர்க்கின்றார்கள். இப்படித்தான் கூறுவார்களே ஒழிய, எங்களால் என்ன கேடு என்று எவனும் கூற முடியாது. எங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இவற்றைக் காப்பாற்றவே பாடு பட்டு வருகின்றனர். நாங்கள் கூறுகிறோம் என்றால், அப் படியே உங்களை நாங்கள் நம்பச் சொல்ல வும் இல்லையே? உன் அறிவு கொண்டு சிந்தித்துப் பார்த்து உனது புத்திக்கு சரி என்று பட்டால்தானே எடுத்துக் கொள்ளச் சொல்கின்றோம்.
மக்கள் காரண காரியங்களைக் கேட்டு நடக்க ஆரம்பித்து இருந்தால் வெகு நாளைக்கு முன்பே நாடு முன்னேறி இருக்கும். இல்லாததன் காரணமாகத்தான் நாம் இப்படி இருக்கின்றோம். மதம், சாஸ்திரம் என்பதெல்லாம் மனிதன் அறிவு கொண்டு சிந்திக்கக் கூடியது என்று ஆக்கி வைத்ததாகும் என்று எடுத்துக் கூறினார். அவர்கள் மேலும் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றின் மடமை பற்றியும், ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் தெளிவுபடுத்திப் பேசினார்.
(19.5.1962 அன்று ஆத்தூரில் நடைபெற்ற புதுமனை புகுவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 12.5.1962)
தோழர்களே, விசுவரெட்டிப் பாளையத்தில் என்னை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்று இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்தே முயற்சி செய் தும், இப்போதுதான் அந்த வாய்ப்பு ஏற்பட்டது. அதற்கு என் நன்றி.
எங்கள் கொள்கை மிகக் கசப்பான  கொள்கை! உங்களுக்கு இனிப்பாக இருக்கும் வகையில் எங் களுக்குப் பேசத் தெரியாது. இன்றுள்ள பிரத்தியட்ச நிலைமையை எங்கள் மனத்தில் பட்டதை - உங்களிட மிருந்து எதுவும் எதிர்பார்க்காமல் தைரியமாகச் சொல்கிறோம். உங்கள் அறிவுக்குப்பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள். மீதியை விட்டுத்தள்ளுங்கள். நாங்கள் சொல்லுவதுதான் சரி. இதைத்தான் கேட்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.
இப்படியே சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சித்தார்த்தன் என்பவர் எதையும் உங்கள் புத்தியைக் கொண்டு ஆய்ந்து பார்த்து உங்கள் புத்திக்கு சரி எனப்பட்டதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிரச்சாரம் செய்தார். அதனால்தான் அவருக்கு புத்தர் எனப் பெயர் ஏற்பட்டது. அதற்குப் பின் வள்ளுவர் இருந்தார். அவரும்,
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்று சொல்லிவிட்டுப் போனார். அதற்குப் பின் ஒருவரும் தோன்றவில்லை. எத்தனையோ நாயன்மார்களும் - ஆழ்வார்களும் தோன்றியும் மக்களுக்குள்ள இழிவு ஒழிய பாடுபட்டதில்லை. அவர்களெல்லாம் பார்ப்பனர்களுடைய தயவால் ஆழ்வார்களாகவும், நாயன்மார்களாகவும் ஆக முயற்சித்தார்களே தவிர, மக்களுக்கு ஏன் இந்த இழிவு? பாடுபடும் பாட்டாளி மக்கள் இழிஜாதியினராக - தீண்டப்படாதவர்களாக - சூத்திரர்களாக - பார்ப்பானின் வைப்பாட்டி மக்களாக இருக்க வேண்டும்? என்று கேட்டதே இல்லை. நாங்கள்தான் துணிந்து பகுத்தறிவுப் பணியாற்ற முன் வந்திருக்கிறோம். எங்கள் கொள்கைகளை விளக்கி பல புத்தகங்கள் போட்டிருக்கிறோம். இதையெல்லாம் நீங்கள் வாங்கி படிக்க வேண்டும். நூல் நிலையத்திலெல்லாம் திராவிடர் கழகத்தின் ஏடுகள் இருக்காது. இன்னும் அந்தத் துணிவு அவர்களுக்கு வரவில்லை.
பேய் பிடித்தாடும் மடமை இன்னும் நம் மக்களிடம் தானே இருக்கிறது? ஜப்பான் காரன் - ஜெர்மன்காரன் இவர்களைப் பேய் பிடிக்கிறதா? இல்லையே. ஏன்? கடவுள் யோக்கியதை தான் என்ன? திருட னும் கடவுளைக் கும்பிடுகிறான் - திருட்டுக் கொடுத்தவனும் கடவுளைக் கும்பிடுகிறான். கடவுள் யாருக்கு நல்லவர்? கடவுளுக்காக நாமா? நமக்காகக் கடவுளா? என்பதே விளங்க வில்லையே!
மதம் என்றால் என்ன? யாராவது சொல்ல முடியுமா? மதத்தின் தத்துவம்தான் என்ன? மதத்தின் பிரச்சாரம்தானே நாம் சூத்திரர்கள். ஜாதி இழிவைக் காப்பாற்றுவதும் இந்த மதந் தானே?  இந்த இருபதாவது நூற்றாண்டிலும் ஜாதி ஒழிய வேண்டும் என்று நாங்கள்தானே சொல்லுகிறோம்; அதற்காகப் பாடுபடுகிறோம் - சிறைக்குப் போகிறோம். ஜாதி ஒழிய வேண்டு மென்றால், இந்து மதம், சாஸ்திரம், சம்பிரதாயப் புராண, இதிகாசம் எல்லாம் ஒழிய வேண்டும். காந்தியார்கூட ஜாதியைப் பாதுகாக்க வருணாசிரம மதத்தை நிலை நிறுத்தவே பாடுபட்டார். அதனால்தான் காந்தியார் சிலையை உடைக்க வேண்டும் என்றேன். நமக்கு ஒரு அறிவு அதிகமிருந்தும் பயன் என்ன? மிருகங்களுக்கு ஒரு அறிவு குறைவு என்றாலும் ஜாதி இல்லையே! மிருகங்களுக்கு அறிவில் லாததின் பயன் ஜாதி இல்லை. நமக்குள்ள இழிவு ஜாதியால்தானே. இதைச் சிந்திக்க வேண்டாமா? 
(விசுவரெட்டிப்பாளையத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை - விடுதலை 8.7.1961.)

Sunday, July 1, 2012

புரசைவாக்கம் அருணகிரி சபையில்...


நான் பேசுவதற்கு முன்னே அக்கி ராசனர் என்னைக் குறித்து வெகுவாகப் புகழ்ந்து கூறிவிட்டார்கள். அதனால் பேச வேண்டிய தையும் மறந்துவிட்டேன்.  அவர் என்னைக் குறித்து அவ்வளவு பெருமையாக எடுத்து சொன்னதை நான் ஒப்புக் கொள்ள முடியாத யினும், அக்கிராசனருக்கு என்னிடத்திலுள்ள அதிக அன்பினால் பலவாறு புகழ்ந்து பேசியிருக்கின்றார். நான் இன்று பேசக் கூடியது உங்கள் மனதுக்கு வருத்தத்தைக் கொடுக்கக் கூடுமெனக் கருதித்தான் அக்கி ராசனர் முன் எச்சரிக் கையாகச் சிலவார்த்தை களைக் கூறினார். நான் யாருக்காகப் பேச வந்தேனோ அவர்களை வருத்தமுறச்செய் வதில் என்ன பயன்? முரட்டுத்தனமாகப் பிறர் உணர்ச்சியைப் புண்படுத்தக் கூடியவாறு பேசுவதில் யாதொரு பயனும் இல்லை என்பதை அறிவேன். ஆயினும் எனக்குச் சரி எனத் தோன்றுவதை நான் வெளியிட்டுப் பேசுவதில் பின் வாங்குவதில்லை யாதலால்தான் அக்கிராசனர் அதை யாரும் குற்றமாக கொள்ளக் கூடாதெனக் குறிப்பிட்டுப் பேசினார். எனக்கு முன் பேசிய நண்பர் குருசாமி தர்மத்தைக் குறித்தும் அருணகிரிநாதரைப் பற்றியும் சிலவார்த்தைகள் சொன்னார்.
அவர் வாலிபராதலால் தமக்கு உண்மை யாகப்பட்டதை எடுத்துச் சொன்னார். நான் வாலிபர்களின் உண்மைக் கருத்தை வெளி யிடுவதைப் பாராட்டுபவன்தான், அதற்கு முலாம் பூசி மறைப்பது நாட்டுக்குத் தீமையைதான் விளைக்கும். பரோபகார சிந்தையோடு கஷ்டப்படுபவர்களுக்கு உதவி புரிவோரிடத் துள்ள அசூசையினால் அவ்வாறு பேசவில்லை. நமக்குத் தர்மம் என்பது இதுதான் என்று வரையறுத்துக் கற்பிக்கப் பட்டிருப்பதனால்தான், கண்மூடித்தனமான செய்கைகள் இன்னும் செழித்து வருவதற் கிடமா யிருக்கின்றது. இதன் சம்பந்தமாக நமது மதமும் கோட்பாடுகளும் தர்மமும் ஒரு எல்லை ஏற்படுத்தியிருப்பதனால் அவ்வளவுக்குச் செய்யத்தான் யாருக்கும் மனம் வருமே தவிர அதைத் தாண்டிப்போக யாருக்கும் மனம் வராது. ஒரு அடியாருக்கு அன்னமளித்தால் இவ்வளவு புண்ணியம் என்று கணக்கு வாரியாக அதன் பலனாய் இவ்வளவு காலத்திற்கு மோட்சத்திலிருக்கலாமென்று வகுத்தெழுதி யிருக்கிறார்கள். இதைக் கேட்ட பிறகு, இத் தகைய தர்மம் சம்பந்தமான எண்ணம் வரு கிறதே தவிர வேறல்ல. இம்மாதிரியான காரியங்களினால் உண்மையான பரோபகாரமான காரியங்களுக்குக் குந்தகமேற்படுகின்ற தென்பதை நீங்கள் நன்றாய்க் கவனிக்க வேண்டும். இவற்றால் தான் நாடு முன்னுக்கு வருங்காரியங்கள் தடைப்படுகின்றன. எந்த தேசத்திலும் தர்மமில்லாமலிருக்கவில்லை. வெள்ளைக்காரன் தேசத்தின் தர்மம் நம்நாட்டுத் தர்மத்தைவிட பன்மடங்கு உத்தமமாயும் தேசத்திற்கும் சமுகத்திற்கும் உண்மையான நன்மையளிப்பதாயுமிருக்கின்றது. வெள்ளைக் காரன் நாட்டு தர்மம் கிணறு நிரம்பி வழிவது போல அவன் ராஜ்யம் நிரம்பி நம் நாட்டிலும் வழிந்தோடுகின்றது.
அத்தகைய தர்மம் நிறைந்த நாட்டில் என்னவழக்க மென்றால் ஒருவன் தெருவில் பிச்சைக்கு வந்தால் உடனே போலீஸ்காரன் பிடித்துக் கொண்டு போவான். அங்கு பிச்சையிடுவது சோம்பேறிகளை வளர்க்கும் முறை என்பதை நன்கறிந்து கொண்டார்கள். வெள்ளைக்காரன் நாட்டில் படிக்காதவன் என்றால் அவன் வெட்கித்தலை குனிந்து விடுவான். நம்நாட்டிலோ தர்மம் என்று வந்தால் நமக்கென்ன? நம்மாலான சாப்பாடு போட்டு விடுவோம். பிறகு அவன் தலைவிதி போலா கிறது. சரஸ்வதி நாக்கிலிருந்தால் எப்படியும் படித்துவிடுவார் என்ற தர்மந்தான் நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் முன்னே றும்போது நாம் இக்கதிக்காளாகியிருக்கக் காரணமென்ன? நமது மதங்கள், தர்மங்கள் என்ற பலத்தத்துவங்கள்தான் நம்மை இந் நிலையில் வைத்திருக்கின்றன. அவர்கள் முன்னேற்றத்திற்குப் பலமும் பீரங்கியும் மட்டும் காரணமல்ல. சென்னை மாகாணத்தில் உயர்ந்த குஷ்டரோக சயரோக, மருத்துவ ஆபத்திரிகளும் உயர்ந்த கலா சாலைகளும், கல்லூரிகளும் அவர்களுடையதாகத் தானிருக்க காண்கின் றோம்! தப்பான வழிகளில் பிள்ளைகளைப் பெற்று பள்ளியில் போட்டுவிட்டால் அவற்றை எடுத்து வளர்த்து சம்ரட்சிக்கும் அனாதை ஆசிரமங் களும் அவர்களுடையதாகத் தானிருக்கின்றன. தெருவிலும் நடக்கக்கூடாது அருகிலும் வரக்கூடாதென்று மிருகங்களிலும் கேவலமாய் நம்மால் நடத்தப்படுபவர்களையும் அவர்கள் சேர்த்துக் கல்வி அளித்து சமத்துவம் பாராட்டி மாக்களெனக் கருதப்பட்டவர்களை அவர்கள் மக்களாக்கி வருவதைக் காண்கின்றோம். இவற்றை எல்லாம் நாம் எளிதில் மறக்க முடியாது அல்லது மறைக்கவும் முடியாது.
அவர்கள் நொண்டி, முடம், குருடர்களைக் கொன்று விடுகிறார்களா? அத்தகையவர் களுக்கும் தம் சுய உதவியினால் எவ்வளவுக்கு ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு உதவிபுரிந்து வழிகாட்டி வருகின்றார்கள். இதனால் வெள்ளைக்காரன் தான் புத்திசாலியா? நமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா? என்ற கேள்வியும் கிளம்பக் கூடும் இதற்காக நாம் நமது முன்னோர்கள் வேரிலும் சுலபமாகக் குற்றம் சொல்லிவிட முடியாது. எந்தக் கொள்கை நீதியும், தர்மமும் காலத்திற்கும் இடத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு தானிருக்கும். ராமேசுவரத்தில் ஒரு செட்டியார் தர்மம் செய்வதற்காகக் சாணியும், பாலும் சுக்கு மட்டும் கொடுக்கிறார் என்றால் அதுபோல நாமும் இங்குச் சாணியை குவியலாய்க் கொட்டிக் கொண்டு வாரிக் கொடுப்பது தகுதியாகுமா? அந்தவிடத்திற்கு அவசியத்திற்கேற்றவாறு அது முக்கிய தர்மமாகவிருக்கலாம். அதற்காக நாம் அந்த செட்டியார் மீது குறை சொல்ல முடியுமா? முந்நூறு நானூறு வருடங்களுக்கு முந்திய காலத்துத் தர்மமென்ற காரியங்கள் இப்போது செய்ய முடியாதவைகளாகத்தானிருக்கும். அப்போது அவை அவசியமாக செய்ய வேண்டியவைகளாகத் தானிருந்திருக்கும். 
அக்காலத்தில் தற்போதிருப்பது போன்ற துரிதமான போக்குவரத்து சாதனங்களோ மற்றவசதிகளோ கிடையாது. அவ்வந்த நாட்டு மக்களுக்கு அவ்வந்த ஊரே சுவர்க்கம். அக் காலத்தில் அவர்கள் கிணற்றுத் தவளைகளை போலத் தானிருந்திருக்க முடியும். அப்பேர் பட்டவர்களுக்கு விளைச்சலும் அபரிமிதமாய் விளைந்து கொண்டிருந்தது. அக்காலத்தில் மழை பெய்வதற்கு அவசியமான காடு முதலியவை அடர்ந்திருந்ததால் பருவ மழைகள் தப்புவதில்லை. இதனால் உழுதாலும் உழாமல் விட்டாலும் அறுவடைக்குக் குறை வில்லை. அப்போது அதிகமாக விளைந்தாலும் தற்போதைப் போல விளைந்த தானியம்  முழுதும் வெளி  ஊருக்குக் கொண்டு போகப் படாமல் பெரும் குழிகள் வெட்டி அவற்றில் புதைத்து வைப்பதும் வழக்கமாயிருந்து வந்தது.
அன்றியும், அக்காலத்தில் பிச்சைக்காரர் களும் மிக அரிதென்றே சொல்லலாம். எவ்வளவு விளைந்தாலும் வாரி வெளிநாட்டுக்கு அனுப் புவது என்ற முறை அக்காலத்தில் அதற்கு சாதனமும் கிடையாது. அதனால்தான் இவ்வளவு பேருக்கு அன்னமிட்டால் இவ்வளவு புண்ணிய மென்றும் எழுதிவைக்க இடமிருந்தது, அதனால் நம் நாட்டில் காலக்கிரமத்தில் பிச்சை எடுக்கும் சாதிகளென்றே பல ஜாதிகளும் தோன்றிவிட்டன. ஏதோ சாம்பலையும் மண்ணையும் பூசிக்கொண்டு வந்தாலும் சாமி என்று விழுந்து கும்பிடும் முட் டாள்கள் அதிகமிருக்கின்றார்கள் என்பதை யறிந்து தான் பிச்சைக்காரர்களும் நாளுக்கு நாள் விருத்தியாகி கொண்டு வருகின்றனர். இத் தனைக் கோயில்களிருக்கையில் இன்னும் புதிதாகக் கோயில் கட்டுவது அவசியமாவென்று கேட்டால் பாவி தடுக்கின்றான். அவன் சொல்லைக் கேட்ட காதை லோஷன் போட்டுக் கழுவ வேண்டுமென்கிறார்கள். (நகைப்பும், கரகோஷமும்)
அக்காலத்தில் செல்வமிகுதியினால் செஸ் விடுவதற்கு வழியின்றி இவ்வாறெல்லாம் செய்து கொண்டிருந்தார்கள். தங்கள் விளைபொருள் களுக்குச் செலவு வேண்டுமென்ற முறையில் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு மேன்மேலும் தர்மம் என்னும் பெயரால் பலவாறு செலவிட்டு வந்தார்கள். அக்காலத்தில் எத்தனைக் கடவுளிருந்தாலும் பூசை போட்டு எவ்வளவு பேர் வந்தாலும் சோறு போடும் செல்வமும் செழிப்புமிருந்தது. அதனால்தான் இவ்வளவு கடவுள்களும் அடியார்களும் ஏற்பட இடமிருந்தது. ஆனால் இப்போதைய கொள்கையும் மதக்கோட்பாடுகளும் கால தேசவர்த்த மானத்திற்கு ஏற்றபடியும் மனிதன் அறிவுக்கும் தன்மைக்கும் ஏற்றவாறுமிருக்க வேண்டும். மகமதியர்களும், கிறித்துவர்களும், இந்துக்களும் எல்லா மதஸ்தர்களும் தான் பாவம் செய்யக் கூடாதென்கிறார்கள்.
ஆனால் பாவம், சுத்தம் முதலான தத்துவங்களுக்கு அவ்வந்த மதத்தினருக்கும் அர்த்தம் வேறாகத் தானிருக்கின்றது. பாலைவனத்தில் தோன்றிய இலாம் மதத்தில் சுத்தமென்றால் மூன்று வேளையும் குளிப்பதுதான் சுத்தமென்று எழுதி வைக்க முடியாது. அங்கு மணல் உடம்பில் தேய்த்துக் கொண்டாலும் குளித்து சுத்தமா வதற்கு ஒப்பாகத்தான் கருதப்படக்கூடும் அதனால் அந்த சுத்தம் தப்பு என்று சொல்லிவிடமுடியாது. நமக்குள் வெளிக்குப் போனால் நான்கு செம்பு தண்ணீர் விட்டு கழுவுபவர்களும் போதாக் குறைக்கு தலைமுழுகுபவர்களுமிருக்கிறார்கள். அவ்வாறு செய்தால் தான் அதனைச் சுத்த மெனக் கருதப்படுகிறது. ஆனால் இவர்களைவிட பன் மடங்கு கடுமையான சுகாதாரமுடைய வெள்ளைக் காரன் காகிதத்தில் பாதியும் கால்சராயில் பாதியுமாக துடைத்துவிட்டு போகிறான். அவன் நாட்டில் அவ்வளவுதான் வசதி. இங்கு குளிக்கா விட்டால் பாவி என்கிறார்கள்.
அங்கு குளித்தாச்சா? என்று கேட்பதே மரியாதைக் குறைவாகக் கருதப்படுகின்றது இங்குச் சிற்சிலர் வியர்வையினால் குளிக்க வேண்டிய அவசிய முண்டு. அங்கு குளிரினால் அத்தகைய அவசியமில்லை. அவ்வாறே நமக்குப் பாவம் என்பது எறும்பை மிதித்துவிட்டாலும் பாவம். அவன் சங்கதி அதைப்பற்றி அவனுக்குக் கவலையில்லை. இங்கு நாம் பசுவை அடித்தாலும் மகா பாவமென்கிறோம். அங்கு அவன் அதைக் கொன்று தின்னாவிட்டால் மார்க்கமில்லை. ஒருவன் சிற்றப்பன் மகளைக் கட்டலா மென்கிறான். மற்றவன் அதைப் பாவம் என்கிறான். இப்படிச் சவுகரியத்திற்கும் பழக் கத்திற்கும் ஏற்றவாறுதான் கொள்கைகளும் கோட்பாடுகளுமிருக்கக்கூடும். ஆதலால் அனைத்தும் காலதேச வர்த்தமானத்திற்கேற்ற வாறிருக்க வேண்டுமென்பது நன்கு விளங் கும், அன்றியும் அவ்வந்தக்காலத்தில் திறமைக்கேற்றவாறு ஏமாற்ற, ஏதேதோ எழுதி வைத்திருக்கலாம். அவற்றைக் குறித்து இப்போது கவலையில்லை. ஆனால் நாம் முக்கியமாய் கவனிக்க வேண்டியது இன்றைய நிலைமையில் எப்படியிருக்க வேண்டுமென்பதேயாகும். அதிலிருந்து தப்ப வழியுண்டா? வென்றும் பார்க்கவேண்டும்.
நாம் நமது செல்வம். அறிவு, ஒழுக்கம் முதலியவை பிரயோசனமான வழியில் செலவிடப்பட வேண்டுமென்பதனால், அது தர்மத்திற்கு விரோதமானதென்று சொல்ல முடியாது. இப்போது நாமிருக்கும் நிலையில் தர்மத்தின் பெயரால் சத்திரமும் சாவடிகளும் கட்டிக் கொண்டு போவோமானால் நம் சமுகத்தின் கதி என்னாகும்? நமது நாட்டின் நிலைக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்றவாறு தான் எந்த தர்மமும் ஏற்பாடும் செய்யப்பட வேண்டும். இனி நமக்குப் புதிதாகச் சாமிகள் வேண்டியதில்லை இப்போது இந்துக்கள் கணக்கின்படி 22 கோடி இந்துக்களிருக்கின்றனர். இவர்களுக்கு ஏற்பட்டி ருக்கும் கடவுள்களோ புராணங்களின் கணக்குப்படி 33 கோடி கடவுள்களாயிருக் கின்றன.  இதனை பங்கிட்டால் ஒரு ஆசாமிக்கு ஒன்றரைக் கடவுள் வீதம் மக்களைவிட கடவுள்தான் அதிகப்படுகிறது. (நகைப்பும், கரகோஷமும்) இவ்வளவு கடவுள்களை நாம் காப்பாற்றினால் போதும். நாட்டின் பெருமையை வளர்க்க மக்கள் கஷ்டத்தையும் போக்க அறிவை வளர்க்க கல்வி அத்தியாவசியம். அவர்கள் சுயமரியாதையுடனும் சுகமாகவும் வாழ்வதற்குத் தொழிலபிவிருத்தி அவசியம். எந்தத்  தேசத்திலும் இவையிரண்டும் இன்றியமையாத அவசியமான அம்சங்கள். 
நம்நாட்டிலே நூற்றுக்கு 93 பேர் படிப்பில்லாத தற்குறிகளாயிருக்கின்றார்கள். இதைவிட அவமானமான காரியம் ஒரு தேசத்திற்கு வேறு என்ன இருக்கிறது? அதுபோலவே சாப்பாட்டிற்குக் கஷ்டப்பட்டு வெளிநாடுக்குப் பிழைப்புக்காக துறைமுகங்கள் தோறும் கப்பல்கள் தோறும் ஆயிரக்கணக்கான ஜனங்களை பெண்டு பிள்ளை களுடன் ஏற்றுமதி செய்யப்படுவதான கோரக் காட்சியைத் துறைமுகங்களுக்குச் சென்று பார்த்தால் தெரியும். இவ்வாறு பிழைப்பின்றியும் சாப்பாட்டுக்கு வகையின்றியும் கடல் கடந்து ஜீவிக்கச் செல்லும் ஏழை மக்கள் தொகைகளை இச்சென்னை மாகாணத்தில் மட்டும் மாத மொன்றுக்கு லட்சத்திற்கு அதிகமாகக் கூடும், இவர்கள் குழந்தை குட்டிகளுடனும் வயோதிகர்கள் கர்ப்பிணிகளுடனும் செல்வதான பரிதாபத்தை என்ன வென்றுசொல்வது? இங்குள்ள கஷ்டத்தைவிட அங்குபோய் சாகலாமென்று தான் மனம் முறிந்து போகிறார்கள். இக்கொடுமைகளைக் கவனித்து பரிகாரம் தேடப்படுவதில்லை. இத்தகைய நாட்டில் நடக் கும் விஷயங்களோ விபரீதமாகத்தானிருக் கின்றன. இங்கு சாமிகளுக்கும் சடங்குகளுக்கும் உற்சவ வேடிக்கைகளுக்கும் லட்சக்கணக் காகத்தான் செலவிடப்படுகின்றது.
திருப்பதி முதலிய தேவஸ்தானங்களுக்கும் முக்கியமான மடங்களுக்கும் சுமார் 20 லட்சத்திற்கு அதிகமாக மாதாமாதம் வருமானம் கிடைக்கிறது. ஒரு சாமிக்கு ஒரு வேளைச் சாப்பாடாகிய சட்டி அரணைப் பூசைக்கு சுமார் 20 ரூபாய்க்கு அதிகம் செலவிடப்படுகிறது. இவ்வாறிருக்க அச்சாமியின் பிள்ளைகள், சாமியே கதி என்று கருதிக் கொண்டிருக்கும் மக்கள் கஞ்சிக் கலைந்து கொண்டு பிழைக்க வழியில்லாது ஆயிரக்கணக்காக கப்பலேறி வெளிநாடு சென்று துன்புறுகின்றார்கள். இவையிரண்டினையும் சேர்த்துப் பார்த்தால் அது சாமிக்குத்தான் அதிக அவமானமென்பது நன்கு விளங்கும் அத்தகைய சாமிகளுக்கிருக்கும் சொத்துக்களுக்கும் ஆடம்பரங்களுக்கும், வாண வேடிக்கைகளுக் கும் சதுர் கச்சேரிகளுக்கும் ஒரு விதமான அளவில்லை ராஜாவுக்குகூட அவ்வளவு ஆடம்பரமில்லை. ராஜாவாயினும் கொடுங் கோன்மையினால் அந்த சுகங்களை ஜனங்கள் படும் கஷ்டத்தைப் பார்க்காமல் அனுபவிக்கின்றனர் என்று சொல்லலாம். 
ஆனால் கருணை வள்ளல் என்ற கடவுள் இப்படி வீணாக்குதற்கு இடங்கொடுத்துக் கொண்டிருக்கலாமாவென்று தான் உங்களைக் கேட்கிறேன். இதனால் நாம் கடவுள் மீது குற்றம் சொல்லவில்லை. அது என்ன செய்யும் இன் றைக்கு யாராவது தங்கக்காரை போட்டால் பேசாமல் போட்டுக் கொள்ளுகிறது. யாராவது கழற்றிக் கொண்டு போனாலும் கல்லு போல் பேசாமல் சும்மா இருக்கிறது. சமீபத்தில் ஆண்டாள் தாலியையும் யாரோ கழற்றிக் கொண்டுபோய் விட்டதாயும் பத்திரிகைகளில் வாசித்திருப்பீர்கள். ஏன் இந்த நாட்டில் நூற்றுக்கு 93 வீதமானவர்கள் தற்குறிகளாயிருக்க வேண் டும்? இதற்கும் வறுமைக்கும் காரணமென்ன? ஆனால் நான் உங்களைச் சந்தோஷப்படுத்த ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிடலாம். வெள்ளைக்கார நீச அரசாங்கத்தார் நம் பணத்தைக் கொள்ளையிட்டுப் போவதாகச் சிலர் கூச்சலிடுகின்றனர். அந்த நீச அரசாங்கத்தால்தான் சரஸ்வதியும் நம் நாட்டை விட்டு ஓடிவிட்டாள் என்கின்றனர் மற்றும் சிலர். ஆனால் நம் நாட்டை விட்டோடிய சரஸ்வதி அந்த நீச்ச நாட்டுக்குத்தான் போய்ச் சேர்ந்திருக் கிறாள். வெள்ளைக்காரன் கொள்ளையிட்டுப் போவதையும் சாமிகளுக்கும், சடங்குகளுக்கும் செலவிடுவதையும் கணக்குப் பார்த்தால் சாமிகளுக்குச் செலவாவதுதான் பன்மடங்கு அதிகமாகும்.
சாமிகள், மதம் சடங்குகள் முதலியவற்றின் பேரால் செலவாகும் பணமும் கஷ்டமும் அசௌகரியங்களும் கணக்கிட முடியாது. பணம் சம்பாதிப்பதில் எத்தனையோ தந்திரமும் சூழ்ச்சியும் செய்யும் அறிவாளிகளும்கூட இவ்வாறு செலவிடுவதில் அந்தத் தந்திர மொன்றுமில்லாமல் முட்டாள்களாகத்தான் நடந்துக் கொள்கின்றனர். (கரகோஷம்) அபிஷேகத்தில் 150 ரூபாய் கொடுத்தாலென்ன? 10 ரூபாய் கொடுத்தாலென்ன? வித்தியாசம் என்னவென்று யாராவது சிந்திப்பது உண்டா? சென்னை மாகாண சர்க்காருக்கு வரும் கணக்குப்படி சாமிகளுக்கு வருமானம் 2 கோடிக்கு  அதிகமாகிறது. இதுதவிர கணக்கில் வரா கொள்ளைகளும் போக்குவரத்து தரகர் செலவும் சொல்ல வேண்டியதில்லை. கணக்குப் பார்த்தால் சாமிகளுக்கு நாம் கொடுப்பது சர்க்கார் வருமான வரியை விட அதிக மாகுமேயன்றி ஒருவிதத்திலும் குறையாது.
தர்மமென்றால் சாப்பாடு போடுவதுதானே வென்று கேட்டால் பாவம் என்ற தர்ம முறையைத்தான் நமக்குக் கற்பிக்கப்படுகிறது இத்தகைய வீணுக்குச் செலவாகும் பணம் மூன்று ஜில்லாவுக்குச் சாப்பாட்டுடன் கல்வி போதிக்கப் போதுமானதாகும். இம்மாதிரி, சுமார் 25 வருடங்களுக்கு நம் சாமிகள் சிறிது வயிற்றை இழுத்துக் கட்டிக் கொண்டு சும்மா இருந்தால் பிறகு நம் நாட்டில் ஒருவன்கூட மருந்துக்கும் தற்குறியாய் இருக்கக் காணமுடியாதென்பது திண்ணம்.(பெருத்த கரகோஷம்) உள்ளது உள்ளபடி உண்மையைச் சொன்னால் அவன் தப்பு சொன்னான்! இவன் நாத்திகப் பேச்சுப் பேசுகின்றான்! என்று வீண் கூச்சலிடும் கூட்டத்தாருக்கும் குறைவில்லை! மேடைமீதேறி வெள்ளைக்காரர்களைத் துரத்தி விடுவோ மென்று பயமுறுத்தலாம், மிரட்டினாலும் அர்த்தத் தோடல்லவா மிரட்ட வேண்டும்? ஜோபியில் எலிக்குஞ்சு இருக்கிறது. எடுத்து விட்டால் செத்துப்போவாய் என்றால் எவன் எடுப்பான்?எடுத்துவிடு. ஒரு கை பார்ப்போ மென்றுதான் சொல்வான். (நகைப்பு)
முற்போக்குக்கான மார்க்கத்துக்கும் அது வெற்றி பெறத்தகுந்த வழிக்கும் நமது அறிவையும் செல்வத்தையும் செலவிடாமல் நாம் யாரையும் வெல்ல முடியாது. ஒரு கூட்டத்தார் நம்மை தாழ்ந்த நிலையிலேயே அடக்கி வைத்துக் கொண்டிருக்க முயல்வது சரித்திர பூர்வமாகவும் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. மத விஷயத்திலும் மற்ற விஷயங்களிலும் வெள்ளைக்காரன் நம்மைவிடக் கேவலமாக இருந்திருப்பதை அவர்கள் தேசசரித்திரமே நன்கு விளக்குகிறது. அங்கிருந்த புரோகிதரும் சாமிகளும் இப்போது எங்குபோயின? எல்லாம் இங்கு வந்து சேர்ந்துவிட்டன. (நகைப்பு) அவர்கள் எல்லாவற்றையும் இங்கு மூட்டை கட்டி செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்பிவிட்டு அங்கு விஞ்ஞான ஆராய்ச்சியிலிறங்கியிருப்ப தால் நாளுக்கு நாள் அந்நாட்டார் முன்னேற்ற மடைந்து வருகிறார்கள். அவர்கள் சாமிக்கு உற்சவமில்லை!  தேர் இல்லை! திருவிழா இல்லை; அப்படியிருந்தும் அந்த சாமி அவர்களைப் பல அற்புதங்கள் கண்டுபிடிக்க வழியாயிருக்க, நம் சாமிகளுக்கு லட்சக்கணக்கான பணம் செலவிட்டு தேர் திருவிழா நடத்தியும் நாம் இந்தக் கதியிலிருக்கின்றோம். நம் நாட்டுப் பொருள்கள் வெளிநாட்டுக்குப் போகின்றது என்று கூச்ச லிடுவதனால் பயன் என்ன? கடுகளகாவது நாம் முன்னேறும் முயற்சி செய்தில்லை! நேற்றைய தினம் ருஷ்யாவில் செத்தவர்களைப் பிழைக்க வைக்கும் நூதன முறையை ஒருவர் கண்டுபிடித் ததாகத் திராவிடனில் படித்திருப்பீர்கள். இத்தனைக்கும் அது ஒரு நாத்திகம் நிறைந்த நாடு! நாத்திகருக்கு நரகம் வேண்டுமானால் ருஷியாவிலிருப்பவர்களுக்கே இருக்குமிடம் சரியாய் போய்விடும்.
ஆதலால், வேறு எந்த நாத்திகர்களுக்கும், நரகத்திலிடமிராது. அவ்வளவு நாத்திகமா யிருக்கும் ஊரில் செத்தவனைப் பிழைக்க வைத்து சாமியோடு போட்டி போடுகிறார்கள். வெள்ளைக்காரன் நாட்டில் சாமிக்கு முக்கால் துட்டுக்கூட செலவில்லை. மகமதியனும் அப்படித் தான்! வெள்ளைக்காரன் கோவிலுக்குப் போனால்  துணி அழுக்கை வெளுப்பதற்குச் செல விடுவதை விட வேறு செலவில்லை. விவசாயத்திலும் அவர்கள் எந்தப் பழத்தை எந்த நிறத்துடன், எந்த சுவையில் பயிரிட வேண்டுமென்றும் ஆராய்ச்சி செய்து அதற்குத் திராவகங்கள் ஊற்றிப் பயிரிட்டு வெளி நாடுகளுக்கு அனுப்புகிறார்கள். நாம் உழவுகட்ட வேண்டுமானாலும் பார்ப்பனனைக் கூப்பிட்டு நல்ல வேளை பார்த்து அந்தந்த ஏருக்கும், மாட்டுக்கும் பூசை போட்டு உழுவதனால்தான் இக்கதியிலிருக்கிறோம். (கரகோஷம்)
நமக்கு இவ்வளவு கோடிசாமிகளும் இவ்வளவு பணச் செலவுமிருந்தும், நாம் கடுகளவாவது முன்னேற முடியாதிருக்கிறோம். பூகோள சரித்திரம் போதிக்கும் ஆசிரியரின் தகப்பனும் கிரகணத்தன்று தர்ப்பையை எடுத்துக் கொண்டு சமுத்திரக்கரைக்குத் தர்ப்பணம் செய்துவைக்க வந்து விடுகிறான். இவன் பேச்சைக் கேட்டுக் குளிக்கப் போனால் நம்மை முதலை இழுத்துக் கொண்டு போய்விடுகிறது. கிரகணஸ்நானத்திற்குப் போவோம் என்று சொல்லும் எம்.ஏ.களும், பி.ஏ.களும் இன்னு மில்லாமல் போகவில்லை. இக்காலத்திலும் சந்திர, சூரியனை ராகுகேதுவென்னும் பாம்புகள் விழுங்கும் கதைகளும் அதன் மூலமான புரட்டுகளும், பணம் பறிக்கும் சூழ்ச்சிகளும் ஒழிந்த பாடில்லை. தேச முன்னேற்றத்திற்கோ அறிவு வளர்ச்சிக்கோ, ஒழுக்கத்துக்கோ முட்டுக் கட்டையாயிருக்கும் எவற்றையும் ஒழிக்க முயல வேண்டும். அம்மாதிரி செய்யும் தேசமும் மதமும் சமூகமும்தான் முன்னுக்கு வரும். கிலாபத் மதப்பித்துப் பிடித்திருந்த துருக்கி தற்போது அதனை இருந்தவிடம் தெரியாமல் மூட்டைக் கட்டியனுப்பி விட்டு முன்னேற்றத்துக்கு வழிதேடிய தால்தான் தற்போது அய்ரோப்பாவில் மற்றைய நாடுகளை போல நல்ல நிலைமை யடைந்து வருகிறது. நாம் தர்மம் வேண்டா மென்று சொல்லவில்லை.
நம் மதத்திலுள்ள அர்த்தமற்ற தத்துவங்களை ஒழித்து, பிறருக்கு எவ்விதத்தில் உபகாரமோ, அதை செய்து மக்களுள் சமத்துவமுவம், சகோதரத் துவமும், சத்தியமும், ஜீவகாருண்யமும் பரவச் செய்வதற்கு வழி தேட வேண்டுமென்றுதான் சொல்லுகி றோம். வீண் செலவிடும் பணங்களை உண்மை யாகக் கஷ்டப்படுவர்களுக்கு உபகாரம் செய்வதில் செலவிடுங்கள் என்றுதான் சொல்லு கின்றோம். பழைய குருட்டு நம்பிக்கைகளைத் தம் சூழ்ச்சிகளுக்கு ஆதாரமாகக் கொண்டு சுகமாயிருந்த கூட்டத்தார் இப்போது கூலி களைக் குறும்புப் பிரச்சாரத்தில் ஏவி விடுகின்றனர். எந்தக் காலத்திலும் நன்மைக்கும் பரோபகாரத்திற்கும் விரோதமாக நம் நாட்டில் ஒரு கூட்டத்தார் இருந்திருப்பது சரித்திர மூலமாகவும் நன்கறியப்படும். அர்த்தமற்ற கொள்கைகளை ஒழித்து ஒழுக்கமே பிரதான மென்று சீர்திருத்தி மற்றவனுக்கு உபகாரம் செய்வதுதான் மோட்சமென்று புகட்ட வேண் டுவதுதான் அவசியம். கஷ்டப்படுபவர்களுக்கு உதவியளித்து திருப்தி செய்வது தான் மேலான புண்ணியம். இவற்றைச் சொன்னால் என்ன நாத்திகம் வந்துவிட்டது! வீணாக மக்களைக் குழப்பி அவன் அறிவை கட்டிப் போட்டு நான் சொல்வதை நம்பு இல்லாவிட்டால் பாவம் என்று நான் சொல்லவில்லை. எதிலும் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் அப்போது தான் நாம் நாடு முன்னேற்றமடையுமேயன்றி, என் பாட்டான் முப்பாட்டான் போனபடி போகிறேன் என்ற மூடக் கொள்கைகளால் நாடு நாளுக்கு நாள் நாசமடைவது திண்ணம். என் புத்திக்கு எட்டியதை நாள் சொன்னேன். அதில் சரி எனத் தோன்றியதை ஒப்புக் கொண்டு அதன்படி நடக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். நான் சொல்வதில் பிசகிருந்தால் என் அறியாமைக்குப் பரிதாபப்படும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.
குடிஅரசு - சொற்பொழிவு - 30-06-1929