Saturday, December 17, 2011

பகுத்தறிவு வளர்ச்சியாலேயே உலகம் முன்னேறியது!


தந்தை பெரியார் அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களின் உருவப் படத்தினை திறந்து வைத்து, அண்ணா பேரவையினைத் துவக்கி வைத்து ஆற்றிய அறிவுரையாவது:-
இன்றைய தினம் அண்ணா பேரவையினைத் துவக்கி வைக்கும் இந்நிகழ்ச்சியில் அண்ணாவின் படத்தினை திறந்து வைக்கும் வாய்ப்பினை எனக்களித் திருக்கிறார்கள். நமது நாட்டில் அண்ணா பேரவை என்னும் பெயரால் பகுத்தறிவுக் கொள்கையோடு இப்படிப்பட்ட ஒரு அமைப்பு அமைவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
அண்ணா நமக்கெல்லாம் சாதாரண மான நண்பராக, மனிதராக இருந்தாலும் அவர் ஆற்றிய தொண்டுகளைப் பார்க்கும் போது அவரை ஒரு மகாபுருஷர் என்றே சொல்ல வேண்டும். அண்ணா பகுத்தறிவு வாதி, நாத்திகர், திராவிடர் கழகத்திலிருந் தவர்; புராண - இதிகாச கடவுள் புரட்டுக்களைப் பற்றியெல்லாம் எழுதியவர்; இராமாயணத்தைக் கொளுத்தியவர்.
பகுத்தறிவைப் பரப்புவது சாதாரண காரியமல்ல; பகுத்தறிவு என்றால் நாத்திகம். அதைப் பரப்பி ஒரு ஆட்சியை நிறுவுவது என்றால் அது சாதாரணமான காரியமல்ல. அண்ணா ஒருவர் தான் எந்த புரட்சியும் - கொலையும் இல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை நிறுவியவராவார். லெனின் பகுத்தறிவு ஆட்சியை உண்டாக்கினார் என்றால் பாதிரிகள், பணக்காரர்கள், மதவாதிகளைக் கொன்று உண்டாக்கினார். ஆனால், அண்ணா ஒருவர்தான் ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் பார்ப்பானை - பணக்காரனைக் கொல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை அதுவும் மக்களின் ஆதரவைப் பெற்று நிறுவியவராவார். இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் யாவரும் காந்தி சொன்னார், கடவுள் சொன்னார் என்று சொல்லிக் கொண்டு போனார்களே ஒழிய, அறிவு என்ன சொல்கிறது என்று சொல்ல வில்லை. அதன்படி நடக்கவில்லை. அண்ணா ஒருவர்தான் அறிவுப்படி நடக்கிறேன் என்று துணி வாகச் சொல்லி நடந்து காட்டினார். அண்ணா அவர்கள் இருந்தால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் இந்தக் கருத்துகளை பரப்பி இருப்பார். இங்கு அண்ணா படத்தை திறந்து வைக்கிறோம் என்றால் அவர் கொள்கைகளைப் பின்பற்றி பரப்ப வேண்டுமே ஒழிய, படத்தை வைத்துக் கும்பிடுவதால் பலன் இல்லை.
உலகமெல்லாம் முன்னேறியதற்குக் காரணம் பகுத்தறிவு வளர்ச்சியாலேயேயாகும். உலகமெங்கும் 100 வருஷ காலமாக பகுத்தறிவு ஸ்தாபனங்கள் வளர்ந்து வந்திருக்கின்றன. நமது நாட்டில் இந்த ஒரு ஸ்தாபனம் தான் 50 ஆண்டு காலமாக தொண்டாற்றிக் கொண்டு வருகிறது. வேறு ஸ்தாபனங்கள் தோன்ற வில்லை. ஒரு சில ஸ்தாபனங்கள் இக்கொள்கையை பரப்ப முன்வந்து அழித்து ஒழிக்கப்பட்டு விட்டன. நம் நாட்டைத் தவிர, உலகின் மற்ற நாடுகளில் இக்கொள்கையையுடைய ஸ்தாபனங்கள் நிறைய பல பெயர்களில் தொண்டாற்றிக் கொண்டு வருகின்றன.
இன்றைய தினம் இந்த ஸ்தாபனங்கள் வளர்ந்ததன் காரணமாக உலகில் சுமார் 120 கோடிக்கு மேலான மக்கள் கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதிகளாக இருக்கிறார்கள். புத்தன் இந்தக் கொள்கையுடை யவன்தான். புத்தன் என்றால் புத்தியுடையவன். புத்தியைக் கொண்டு ஆராய்பவன் என்றுதான் பொருள். இப்படி தங்கள் புத்தியைக் கொண்டு ஆராய் கின்ற மக்கள் இன்று உலகின் பல பாகங்களிலும் இருக் கின்றார்கள். இவர்கள் அத்தனை பேரும் நாத்திகர் களேயா வார்கள். சிந்தனையாளராக இல்லாத நாத்தி கர்கள் 200 கோடி பேர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். சிந்தனையாளராக இல்லாத நாத்திகர்கள் என்றால் கடவுள் நம்பிக்கைக்காரர் களாகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்களாவார்கள்.
தங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்கிற எவரும் கடவுள் நம்பிக்கை யாளர்கள் என்கின்ற எவரும் கடவுளை நம்பி எந்தக் காரியத்தையும் கடவுளிடம் விடுவது கிடையாது. தலைவலி வந்தால்கூட டாக்டரிடம்தான் செல் கிறார்கள். இவர்கள் எப்படி உண்மையான கடவுள் நம்பிக்கைக்காரர்களாக இருக்க முடியும்? எனவே தான், இவர்களை சிந்தனையாளராக இல்லாத நாத்திகர்கள் என்கின்றேன். பார்லிமெண்டிலே நேற்று பேசி விட்டானே, வேதத்தையும் - சாஸ்திரத்தையும் குப்பையிலே எறிந்து விட்டு இன்றைய அறிவுப்படி நடக்க வேண்டும் என்று இந்தக் கடவுள் - மதம் - சாஸ்திரம் - வேதம் இவை யாவும் ஒழிக்கப்பட்டால் தான் நமது மக்கள் மற்ற உலக மக்களைப் போல முன் னேற்ற மடைய முடியும். அதன் பேராலே உழைக் கிறதற்கு ஒரு ஜாதி. அதன் பேராலே பிழைக்கிறதற்கு ஒரு கூட்டம் இருப்பதால் இதை தடுத்துக் கொண்டு வருகிறது. இந்தக் கூட்டம் மக்கள் அறிவு பெற்றால் தானாகவே  அழிந்துவிடும்; அல்லது இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடும்; அதுவும் இல்லாவிட்டால் தங்களையே நம்மோடு சேர்ந்து விடும். மக்கள் அறிவற்றவர் களாக இருக்கிற வரை இது வளர்ந்து கொண்டுதானிருக்கும்.
இப்போது நம் மக்களுக்கு தேவையானது பகுத்தறிவேயாகும். இந்தப் பேரவை பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு அதற்காக அமைக்கப் பட்டதானால் பகுத்தறிவு என்பது வெளியே தெரிகிற மாதிரி இதன் பெயர் இருக்க வேண்டும். அண்ணா பகுத்தறிவுப் பேரவை என்றிருக் கலாம். நாங்கள் முதலில் உண்மை நாடுவோர் சங்கம்  என்பதாக ஈரோட்டில் ஒரு நாத்திக சங்கத்தைத் துவக்கினோம். அதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து உறுப் பினர்களாகி இருந்தார்கள். அதன் பெயரால்தான் முதன் முதலில் குடிஅரசு என்று ஒரு பத்திரிகை நடத்தினேன். அது பலரை வளர்த்தது. இந்த கரு ணாநிதி, அண்ணாதுரை, நெடுஞ்செழியன், நடராசன் எல்லாம் அதில் பணியாற்றியவர்கள்தான். அதிலிருந்து வெளியே பிரச்சாரத்திற்குச் செல்ல வேண்டியிருந்த தால் அதை கவனிக்க முடியவில்லை. அதன் பின் அரசியலில் ஈடுபட்டதால் அதை நிறுத்த வேண்டிய தாயிற்று.  அதன்பின் விடுதலையை ஏற்படுத்தினேன். அது சமுதாயத்திற்குப் பயன்படாமல் போனதோடு அரசியலிலும் அவ்வளவாக செயல்பட முடியாமல் போய்விட்டது என்றாலும், விடுதலையில் வெளி வருகிறது என்றால், உத்தியோகஸ்தர்கள் பயப்படுகிற அளவிற்கு இருக்கிறது. அரசாங்கமும் யோசிக்கும் படியாக இருக்கிறது என்றாலும் அது மாதம் இதுவரை ரூ. 3,000 நஷ்டத்தில் நடந்தது. இப்போது ரூ. 4,000 நஷ்டத்தில் நடக்கிறது. ஏன் இப்போது ரூ. 4,000 நஷ்டம் என்கிறேன் என்றால், ஒரு இலட்ச ரூபாய்க்கு அதற்காக மெஷினை வாங்கி இருக்கிறது.  அதற்கு வட்டி பார்த்தால் ரூ. 1,000த்துக்கு மேலாகும். விடுதலை ஆபீஸ் இருக்கிற கட்டிடத்தை வாடகைக்கு விட்டால் குறைந்தது ரூ. 2,000 வாடகை வரும். இப்படி நஷ்டத்தில் ஏன் நடத்த வேண்டி இருக்கிறதென்றால், இந்த வேலையைச் செய்ய வேறு பத்திரிகைகள் இல்லாததாலேயேயாகும். மற்ற எந்த பேப்பரும்  செய்யாத வேலையை அது செய்கிறது. விடுதலையில் வந்தால் அதிகாரி பயப்படுகிறான். அய்கோர்ட் ஜட்ஜே பயப்படுகிறான். இப்போது பகுத்தறிவு பிரச்சாரத் திற்காக உண்மை என்று ஒரு பத்திரிகை ஆரம்பிக்கிறேன். அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பகுத்தறிவு கருத்து கொண்ட சுமார் 100 புத்தகங்கள் இருக்கின்றன.  அதையெல்லாம் படிக்கச் செய்ய வேண்டும். புத்தகம் போட வேண்டும். கொஞ்சம் வளர்ந்த பின்னர் பத்திரிகைப் போட வேண்டும். இன்னும் அதிகமான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு அண்ணா பேரவை வளர்ச்சிக்காக ரூ. 100 அன்பளிப்பாக அளித்தார்கள்.
(13.2.1969 அன்று மதுரையில் அண்ணா பேரவையைத் துவக்கி வைத்து தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 23.12.1969)

Sunday, December 11, 2011

எது கடவுள்? எது மதம்?


தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியார்கள் என்றும், சமயாச்சாரியார்கள் என்றும் கட்டியழு பவர்கள் ஒன்று பகுத்தறிவில்லாதவர் களாக இருக்க வேண்டும்; அல்லது வயிற்றுப் பிழைப்புக்குப் புறப்பட்ட புரட்டர்களாயிருக்க வேண்டும் என்பதை அபிப்பிராயமாகக் கொண்டு, வெகு கால முதலே பல தடவைகளில் பல பெரியார்கள் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.
அதுபோலவே சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ, அல்லது ஒரு ஆசாமி என்றோ, அல்லது ஒரு உருவமென்றோ கொள்ளுவதும் உண்மை ஞானமற்றவர்களின் கொள்கை என்றும் பலர் சொல்லிவந்திருக்கிறார்கள். இதைத்தான் சுயமரியாதைக்காரர்கள் எடுத்துக்காட்டி வருகிறார்கள். ஆதலால் உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்விப்பு, அழிவிப்பு என்பவையான மூவகைத் தன்மைகளை யும், மேற்படி சாமிகளோ, ஆசாமிகளோ ஒவ்வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ, அல்லது ஒவ் வொரு தன்மைக்கு ஒவ்வொரு ஆசாமி பொறுப்பாளியாய் இருக்கின்றான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்கள் விசார ஞானமற்றவர்கள் என்றே சொல்லுவோம்.
மற்றபடி மேல்கண்ட ஒவ்வொரு தன்மைக்கும் மேல்கண்ட ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது என்றும், அது ஒரு உருவமல்ல, ஒரு உருப்படி அல்ல என்றும், உற்பத்தி, வாழ்வு, அழிவு என்னும் தன்மையையும், அத்தன்மைக்கு ஆதார மான தோற்றங்களைத்தான் கடவுள் என்றோ, தெய்வம் என்றோ, சாமி என்றோ, ஆண்டவன் என்றோ கருதுகிறோம் என்பதாகவும், தானாகத் தோன்றிற்று, தானாக வாழ்ந்தது, தானாக அழிகின்றது என்கின்ற யாவும் இயற்கைதான் என்றும் அவ்வியற்கைக்குத்தான் கடவுள், ஆண்ட வன், சாமி, தெய்வம் என்று சொல்லுகின் றோம் என்பதாகவும், மற்றும் இவ்வி யற்கைத் தோற்றங்களுக்கு ஏதாவது ஒரு காரணமோ அல்லது ஒரு சக்தியோ இருக்கவேண்டுமே என்றும், அந்தக் காரணத்திற்கோ, சக்திக்கோதான் கடவுள், சாமி, ஆண்டவன், தெய்வம் என் கின்ற பெயர் கொடுக்கபட்டிருக் கின்றது என்பதாகவும் சொல்லிக்கொண்டு மாத் திரம் இருப்பவர்களிடத்தில் நமக்கு இப்போது பெரியதொரு தகராறு இல்லை.
ஆனால் அந்தக் கடவுள் என்பவை களுக்கு கண்,மூக்கு, வாய், கை, கால், தலை, பெயர், ஆண் பெண் தன்மை, பெண்ஜாதி, புருஷன், வைப்பாட்டி, தாசி, குழந்தை குட்டி, தாய், தகப்பன் முதலிய வைகளைக் கற்பித்து, அவைகளினிடத்தில் பக்தி செய்ய வேண்டும் என்றும், அவற் றிற்குக் கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேளை பாலாபிஷேகம், படைப்பு, பூஜை முதலியன செய்யவேண்டும் என்றும், அச்சாமிகளுக்குக் கல்யாணம் முதலியவை செய்வதோடு அந்தக் கடவுள் அப்படிச் செய்தார், இந்தக் கடவுள் இப்படிச் செய்தார் என்பதான திருவிளை யாடல்கள் முதலியவை செய்து காட்ட வருஷா வருஷம் உற்சவம் செய்யவேண்டும் என்றும், அக்கடவுள்களின் பெருமையைப் பற்றியும் திருவிளையாடல்களைப் பற்றியும் பாடவேண்டும் என்றும், அப்பாடல்களை வேதமாக திருமுறையாக பிரபந்தமாக அப்படிப்பட்ட கடவுள்கள் உண்டு என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்றும், அப்பாடல்களைப் பாடினவர்களை சமயாச்சாரியார்களாக ஆழ்வார்களாக, சமயகுரவர்களாக, நாயன்மார்களாக அற்புதங்கள் பல செய்த அவதாரங் களாகக் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்றுவார்கள் என்றும், மற்றும் நாம் செய்த - செய்கின்ற - செய்யப்போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கி யத்தனங்களையும், கொடுமைகளையும் மன்னிப்பார் என்றும் சொல்லப்படுபவை களான மூடநம்பிக்கையும் வயிற்றுப் பிழைப்பும் சுயநலப்பிரசாரமும் ஒழிய வேண்டுமென்பதுதான் நமது கவலை. ஏனெனில், இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும், மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும், மற்ற நாட்டார்கள்போல நம் நாட்டு மக்களுக்குப் பகுத்தறிவு விசாலப்படாமல் மற்ற நாட்டார்களைப்போல விஞ்ஞான (சையன்ஸ்) சாஸ்திரத்திலே முன்னேற்ற மடையாமல் இருப்பதற்கும், அந்நிய ஆட்சிக் கொடுமையிலிருந்து தப்பமுடியா மல் வைத்த பளுவைச் சுமக்க முதுகைக் குனிந்து கொடுத்துக் கொண்டிருப்பதற் கும் இம்மூடநம்பிக்கைகளும், சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரசாரமும், இவைகளினால் ஏற்பட்ட கண்மூடி வழக்கங்களும், செலவுகளுமே தான் காரணங்கள் என்பதாக நாம் முடிவு செய்து கொண்டிருக்கின்றோம்.
நாமும் நமது நாடும் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கும், ஒருவரையொருவர் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொடுமைப்படுத்தி ஒற்றுமையில்லாமல் செய்திருப்பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள் கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத் திற்கும் பயன்படாமல் பாழாவதற்கும், மக்களின் அறிவு வளர்ச்சி கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும், சிறப்பாக மக்களின் ஒழுக் கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும் உபகாரமும் இல்லாமல் இருப்ப தற்கும் மேற்கண்ட கொள்கைகள் கொண்ட கடவுள் என்பதும், அதன் சமயமும், சமயாச்சாரியார்கள் என்பவர் களும் அவர்களது பாடல்களும் நெறி களுமே முக்கிய காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறோம். சொல்லத் தயாராயிருக்கின்றோம்.
நிற்க, இக்கடவுள்களின் பொருட்டாக நம் நாட்டில் பூஜைக்கும், அபிஷேகத் திற்கும், அவற்றின் கல்யாணம் முதலிய உற்சவத்திற்கும், பஜனை முதலிய காலட்சேபத்திற்கும், இக்கடவுள்களைப் பற்றிய சமயங்களுக்காக மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மூர்த்தி ஸ்தலம், தீர்த்த ஸ்தலம் முதலிய யாத்திரைகளுக் கும், இக்கடவுள் அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக்கடவுள் களைப்பற்றிப் பாடின பாட்டுகளையும் அச்சடித்து விற்கும் புத்தகங்களையும் வாங்குவதற்கும், மற்றும் இவைகளுக் காகச் செலவாகும் பொருள்களாலும் நேரங்களாலும் ஏற்படும் செலவும் நம் ஒரு நாட்டில் மாத்திரம் சுமார் இருபது கோடி ரூபாய்களுக்குக் குறைவில்லாமல் வருஷா வருஷம் பாழாகிக்கொண்டு வருகின்றன என்று சொல்லுவது மிகையாகாது.
இவ்விருபது கோடி ரூபாய்கள் இம்மாதிரியாக பாழுக்கிறைக்காமல், மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ விஞ்ஞான (சையன்ஸ்) வளர்ச்சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ செலவாக்கப்பட்டு வருமானால் நம்நாட்டில் மாத்திரம் வாரம் லட்சக்கணக்கான மக்களை நாட்டை விட்டு அந்நிய நாட்டிற்குக் கூலிகளாக ஏற்றுமதி செய்ய முடியுமா? அன்றியும் தொழிலாளர்கள் கஷ்டங்கள் என்பதும் ஏற்படுமா? தீண்டக் கூடாத - நெருங்கக்கூடாத - பார்க்கக் கூடாத - மக்கள் என்போர்கள் கோடிக் கணக்காய் புழு, பூச்சி, மிருகங்களுக்கும் கேவலமாயிருந்து கொண்டிருக்க முடி யுமா? 100-க்கு மூன்று பேர்களாயிருக்கும் பார்ப்பனர்கள் மற்ற 100-க்கு 97 பேர்களைச் சண்டாளர், மிலேச்சர், சூத்திரர், வேசி மக்கள், தாசி மக்கள், அடிமைப்பிறப்பு என்று சொல்லிக்கொண்டு அட்டை இரத்தத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சிக்கொண்டும், நம்மையும் நம் நாட்டையும், அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து நிரந்தர அடிமைகளாக இருக்கும்படி செய்து கொண்டும் இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம்.
நமக்குக் கல்வி இல்லாததற்குச் சர்க்கார் மீது குற்றம் செலுத்துவதில் கவலை கொள்ளுகின்றோமேயல்லாமல் நம் சாமியும், பூதமும், சமயமும் நம் செல்வத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டிருப்பதைப் பற்றி யாராவது கவலை கொள்ளுகின்றோமா என்று கேட்கின்றோம்.
நிற்க, அன்பையோ, அருளையோ, ஒழுக்கத்தையோ, உபசாரத்தையோ மாறு பெயரால் கடவுள் என்று கூப்பிடுகின்றேன் அதனால் உனக்கு என்ன தடை? என்று யாராவது சொல்ல வருவார்களானால், அதையும் (அதாவது அக்குணங்கள் என்று சொல்லப்பட்ட கடவுள் என்பதையும்) பின்பற்றும்படியான குணங்களாகவோ, கடவுள்களாகவோதான் இருக்க வேண் டும் என்று சொல்லுகின்றோமே ஒழியக் குணங்களைப் பின்பற்றாமல் வெறும் வணங்கும்படியான கடவுளாக இருக்க நியாயம் இல்லை என்றே சொல்லுவோம்.
மதம்
இதுபோலவேதான் மதம் என்பதும், சமயம் என்பதும், சமயநெறி என்பதும் மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்து கொள்ளவேண்டிய நடையைபற்றிய கொள்கைகளைக் கொண்டது என்பவர்களிடத்தில் நமக்குத் தகராறு இல்லை! அன்பே சிவம் என்பதான சிவனிடத்தில் நமக்குச் சண்டையில்லை! அன்பு என்னும் குணம்தான் சிவம்; அந்த அன்பைக்கொண்டு ஜீவன்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான் சைவம் என்பதானால் நாமும் சைவன் என்று சொல்லிக் கொள்ளவே ஆசைப்படுகின் றோம். அதுபோலவே ஜீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது, ஜீவன்களுக்கு உதவி செய்வது ஆகிய குணங்கள்தான் விஷ்ணு, அக்குணங்களைக் கைக்கொண்டு ஒழுகு வதுதான் வைணவம் என்பதான விஷ்ணுவிடத்திலும் வைணவனிடத்திலும் நமக்குத் தகராறில்லை என்று சொல் லுவதோடு நாமும் நம்மை ஒரு வைண வன் என்று சொல்லிக் கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்றே ஆசைப்படுகின்றோம். நமக்கும் மற்றும் உள்ள மக்களுக்கும் அச்சைவத் தன்மையும் வைணவத் தன்மையும் ஏற்பட வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.
அப்படிக்கில்லாமல், இன்னமாதிரி உருவம் கொண்ட அல்லது குணம் கொண்டதுதான் கடவுள் என்றும், அதை வணங்குகின்றவன்தான் சைவனென்றும், அப்படி வணங்குகிறவன் இன்ன மாதிரி யான உடை பாவனை கொண்டவனாகவும் இன்னமாதிரி குறி இடுகிறவனாகவும் இருப்பதுதான் சைவம் என்றும், இன்ன பேருள்ள இன்ன காரியம் செய்த கடவுள் களைப் பற்றிப் பாடின, எழுதின ஆசாமி களையும் புஸ்தகத்தையும் வணங்குவதும் மரியாதை செய்வதும்தான் சைவம் என்றும், மற்றபடி வேறு இன்ன உருவமோ, பேரோ உள்ள கடவுள் என்பதை வணங்குகிறவர் களையும் வேறு குறி இடுகின்றவர் களையும் யாதொரு குறியும் இடாதவர் களையும் சைவரல்லாதவர் என்று சொல்வதுமான கொள்கைக்காரரி டமே நமக்குப் பெரிதும் தகராறு இருக்கின்றது என்று சொல்வதுடன் அக்கொள்கை களையும், அச்சமயங்களை யும், அக்கடவுள் களையும் பாமர மக்களிடம் பரவவிடக் கூடாது என்றும் சொல்லு கின்றோம்.
அன்றியும், பல சமயப் புரட்டர்கள் இம்மாதிரி விவகாரம் வரும்போது நான் கடவுள் என்பதாக ஒரு தனி வஸ்துவோ, ஒரு குணமோ இருப்பதாகச் சொல்ல வில்லை என்றும், மலைதான் கடவுள், ஆறுதான் கடவுள், சமுத்திரம்தான் கடவுள், மரம் செடிதான் கடவுள், புஷ்பம்தான் கடவுள், அதன் மணம்தான் கடவுள், அழகுதான் கடவுள், பெண்தான் கடவுள், அதன் இன்பம்தான் கடவுள், இயற்கைதான் கடவுள், அத்தோற்றம்தான் கடவுள், என்பதாக தமக்கே புரியாமல் உளறுவதும், மறுபடியும் சிவன்தான் முழுமுதற் கடவுள், மற்றபடி விஷ்ணுவும் பிரம்மாவும் அவரது பரிகார தேவதைகள், சைவ சமயம்தான் உண்மைச்சமயம் அது தான் முக்தி அளிக்கவல்லது என்பதும் அல்லது விஷ்ணுதான் முழுமுதற்கடவுள் என்பதும், அதுதான் பரத்துவம் கொண் டது. மற்றவை விஷ்ணுவின் பரிவார தேவதைகள் என்பதும், வைஷ்ணவ சமயம்தான் உண்மை சமயம் அதில்தான் பரத்திற்கு மார்க்கம் உண்டு என்பதும் அச் சிவனையோ, விஷ்ணுவையோ முழுமுதற் கடவுளாகக் கொண்டு அக்கடவுள்களை யும், அச்சமயங்களையும் பாடினவர்கள் தான் கடவுள் நெறியையும் நிலைமையையும் உணர்த்திய பெரியார்கள் - சமயாச் சாரியார்கள் என்பதுமாக மக்கள் முன் உளறிக் கொட்டி அவர்களது மனதை குழப்பச் சேற்றில் அழுத்துகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களது புரட்டையும் பித்தலாட்டங்களையும் வெளி யாக்கி மக்களைக் குழப்பச் சேற்றிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று தான் சொல்லுகின்றோம்.
உலகத்தில் கடவுள் என்பது இன்னது என்பதாக மனதில் விளம்பரப்படுத்திக் கொள்ளாமலே கடவுளைப் பற்றிய தர்க்கங்களும் தகராறுகளும் தினமும் நடைபெற்று வருகின்றன. இது இன்று நேற்று ஏற்பட்ட விவகாரம் அல்ல என்றுங்கூடச் சொல்லுவோம்.
எனவே, மக்களின் பாரம்பரியமானதும் எங்கும் பரவியிருக்கும் படியானதுமான மடமைக்கு இதைவிட வேறு உதாரணம் கிடையாது என்பது நமது அபிப்பிராயம். ஏனெனில், இந்த விவகாரம் பாமர மக்களிடையில் மாத்திரம் நடைபெற்று வருகின்றது என்று சொல்லுவதற்கில்லை. இது பெரும்பாலும் படித்தவன், ஆராய்ச் சிக்காரன், பண்டிதன், பக்திமான் என்கின்ற கூட்டத்தாரிடையேதான் பெரிதும் (இவ்வறியாமை) இடம்பெற்று உரம் பெற்றிருக்கின்றது. இவைகள் ஒழியச் செய்யும் காரியத்தை நாஸ்திகமென்றும், பாபச் செயல் என்றும் யார் சொன்னாலும் சுயமரியாதைக்காரர்கள் பயப்படக்கூடாது.
(தந்தை பெரியார் அவர்கள் 17 வருஷத்திற்கு முன்பேசியது)
குடிஅரசு - சொற்பொழிவு - 09.06.1945

Tuesday, December 6, 2011

டாக்டர் அம்பேத்கர் மறைவு : பின்னணி என்ன?


இந்தியாவின் சிறந்த அறிஞர் களின் முன்னணியிலுள்ள அறிஞ ரும் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்தி விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன். உண்மையில் சொல்ல வேண்டுமா னால், டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறை பாடானது எந்த விதத்திலும் சரிச் செய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத் தலைவர் என்றுச் சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறி ஞராக விளங்கினார். எப்படிப்பட்ட வரும் - எடுத்துச் சொல்லப் பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களையெல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங் கினார்.
உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை வெகு சாதாரணமாக மதித்ததோடு, அவருடைய பல கருத்துக்களைச் சின்னா பின்னமாகும்படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார். இந்து மதம் என்பதான ஆரிய ஆஸ்திக மதக் கோட்பாடுகளை வெகு அலட்சிய மாகவும், ஆபாசமாகவும் அர்த்தமற்ற தாகவும் மக்கள் கருதும்படியாகப் பேசியும் எழுதியும் வந்தார். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், காந்தியாரையே ஒரு பத்தாம் பசலி பிற்போக்குவாதியென்றும், அவரால் பிரமாதமாக நடிக்கப்பட்டு வந்த கீதையை முட்டாள்களின் உளறல்கள் என்றும் சொன்னதோடு, காந்தியாரின் கடவுளான ராமனை மகா கொடியவன் என்றும், ராமாயண காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி, பல்லாயிரக் கணக்கான மக்களிடையில் ராமா யணத்தை சுட்டு எரித்து சாம்பலாக்கிக் காட்டினார்.
இந்துமதம் உள்ள வரையிலும் தீண்டாமையும், ஜாதிப் பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்யதுக்கள் தவழும்படியாக ஏராள மான புத்தகங்களை எழுதி வெளி யிட்டார். இப்படியாக அநேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும், ஆராய்ச்சி நிபுணரும் சீர்திருத்த புரட்சி வீரருமான டாக்டர் அம்பேத்கர் முடிவு எய்தினது இந்தியாவுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக் கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவே ஆகும்.
அம்பேத்கரின் மறைவு என்னும் செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதி லிருந்து அவருடைய மரணத்துக்குப் பின்னால் சில இரகசியங்கள் இருக்கலா மென்று கருதுகிறேன். அதாவது காந்தி யார் மரணத்துக்கு உண்டான காரணங் களும், அதற்கு ஆதாரமான பல சங்கதி களும்  டாக்டர் அம்பேத்கர் மரணத்துக் கும் இருக்கக் கூடும் என்பதே ஆகும்.
- ஈ.வெ.ரா.
(விடுதலை 8.12.1956)

Sunday, December 4, 2011

கடவுள் சங்கதி


கடவுள் சங்கதி என்று இவ்வியாசத்துக்குத் தலைப்புக் கொடுத்ததின் காரணம் என்னவென்றால், கடவுள் உண்டா, இல்லையா என்பதல்ல இவ்வியாசத்தின் கருத்து என்பதை விளக்கவேயாகும். கடவுள் என்பதாக ஒன்று இருக்கட்டும்; அல்லது கடவுள் என்பதாக ஒன்று இல்லாமலே போகட்டும். இருந்தால் உயர் குணங்களும் நற்பண்புகளுமே கடவுளாக இருக்கட்டும்; அல்லது கடவுள் என்பதாக ஒரு வஸ்து அய்ம்புலன்களோடு இருந்து கொண்டு நினைத்துக் கொண்டும், செய்துகொண்டும், கவனமாய் கவனித்துக் கொண்டும், பலாபலன்களை அளித்துக் கொண்டும் இருக்கட்டும், அல்லது குணமில்லாமல், உருவமில்லாமல், விளக்கிச் சொல்ல வகையும் ஆதாரமும் இல்லாமல் ஒரு அரூபி வஸ்துவாக இருந்தாலும் இருக்கட்டும். அது மனத்துக்கும் எட்டினதாகவோ அல்லது அறிவுக்கும் மனத்துக்கும் எட்டாததாகவோ இருக்கட்டும். புத்த பகவானுக்கு அறிவு வழிகாட்டிய கடவுளாக இருந்தாலும் இருக்கட்டும் அல்லது கிறிஸ்துநாதருக்கு அருள் சுரந்த கடவுளாக இருந்தாலும் இருக்கட்டும் அல்லது மகம்மது நபியை உலகுக்கு அனுப்பி மக்க ளுக்குத் தனது நீதியை எடுத்துச் சொல்லும்படி செய்த கடவுளாக இருந் தாலும் இருக்கட்டும். மற்றும் ஆகாயமாய், நீராய், நெருப் பாய், காற்றாய், நிலப் பொருளாய் இருந்தாலும் இருக்கட்டும். அல்லது எப் படியோ ஏதோ ஒருவித மாய்க் கருத்தாய்க் கற்பனை யாய் இருந்தாலும் இருக்கட்டும். அதைப் பற்றியெல்லாம் கூட உண்டு, இல்லை என்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மற்றபடி கடவுள் விஷயமாய் இக்கட்டுரையின் நோக்கம் என்ன வென்றால், கடவுள் என்பதைப் பற்றி, கடவுள் என்பதற்கு ஆக, மனிதர்கள் இன்று நடந்து கொள்ளும் தன்மை, பான்மை சரியா? அவை அவசியமா? என்பதேயாகும்.
முதலாவது இக்கட்டுரையின் நோக்கம்:  கடவுளைக் காப்பாற்ற கடவுள் ஒருவரோ பலரோ உருவமாகவோ அருவமாகவோ, மற்றெப்படியாகவோ கடவுள் இருக்கிறார் என்பதாக மக்களுக்கு மக்கள் எடுத்துச் சொல்ல வேண்டி யதும் பிரசாரம் செய்யவேண்டியதும் அவசியம் தானா?
இரண்டாவதாகக் கடவுள் எண்ணம் மக்களுக்கு மறைந்து போய் விட்டது. அதை ஞாபகப்படுத்தப் பிரசாரகர் களைச் சம்பளத்துக்கு வைத்துப் பாதிரிகளை, குருமார் களை ஏற்படுத்திக் கடவுள் தத்துவத்தைப் போதிக்க ஸ்தாபனங்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியம் தானா? மற்றும் நாஸ்திகர்கள் பலர் தோன்றிக் கடவுள் இல்லை என்று நாஸ்திகப் பிரசாரம் செய்துவருவதால் கடவுள் கரைந்து வருகிறார். ஆதலால் கடவுளைக் காப்பாற்ற வேண்டியது மிகமிக அவசியம் என்று பலர் கருதி, ஆஸ்திகப் பிரசாரம் செய்து கடவுளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம் தானா? மற்றும் கடவுளுக்குக் கோவில் வேண்டுமா? கடவுளுக்குப் பெண்டாட்டி வேண்டுமா? கடவுளுக்குக் காமவிகாரம் உண்டா? கடவுளுக்குக் குழந்தைகள் வேண்டுமா? கடவுளுக்குத் தாசி, போக மாதர் வேண்டுமா? கடவுளுக்குப் படைப்பு, சாப்பாடு, நகை, துணி, மணி, கல்யாணம், உற்சவம், ஊர்வலம் வேண்டுமா? இவை ஒருபுறமிருக்கக் கடவுள் சக்திக்கு - செய்கைக்கு ஏதாவது அளவுண்டா? அல்லது அவர் எல்லாம் வல்லவரும் எல்லாவற்றிற்கும் பொறுப்பானவருமா? அவருடைய சக்திக்கும் செயலுக்கும் எல்லை உண்டா? இல்லையா? கடவுள் சக்தியை உணர்ந்தவன் கடவுளைக் காப்பாற்றக் கவலை கொள்ளுவானா? உண்மையிலேயே சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்று மனப்பூர்வமாய் நம்பி இருக்கும் ஒருவன் கடவுளைக் காப்பாற்ற முற்படுவானா? கடவுள் இல்லை என்று ஒருவன் சொன்னால் அவன் மீது பாய்ந்து கோபிப்பானா?
இந்தப்படி கடவுளைப் பற்றிக் கவலைப்படுகிறவர், கடவுள் பிரசாரம் செய்கிறவர்களில் யாராவது தம் எண்ணத்தில் - நடத்தையில் கடவுள் சித்தப்படி நடப்பவர் களாகவோ, கடவுளுக்குப் பயந்து நடப்பவர்களாகவோ அல்லது கடவுள் தன்மையில் மதிப்பும், நம்பிக்கையும், பயமும் கொண்டவர்களாகவோ எங்காவது காணப்படு கிறார்களா?
கடவுள் நம்பிக்கை உடையவன் எவனாக இருந்தாலும், அவன் கடவுளைத் தொழ வேண்டுமா? பூசிக்க வேண்டுமா? தொழுதாலும், பூசித்தாலும், அதற்கு ஒரு நேரம், ஒரு இடம், ஒரு உருவம், ஒரு வாக்கியம் - பாட்டு வேண்டுமா?  மற்றும் அதற்குப் பண்டம், படைப்பு வேண்டுமா? உண்மையாகக் கடவுள் இருப்பதானாலும், இருப்பதாக நம்புவதானாலும் பலமதக்காரர்களும் இன்று கடவுள் சம்பந்தமாய் நடந்து கொள்ளும் நடத்தைகள் அவசியமா? என்பனவாகி யவைகள் ஒருபுறமிருக்க, தம்மைப் பெருத்த அறிவாளிகள் என்றும், எல்லாம் அறிந்த மேதாவிகள் என்றும் கருதிக் கொண்டிருக்கும் சிலர்  கூறுகிறபடி அதாவது, கடவுள் இருக்கிறதோ இல்லையோ அது வேறு விஷயம், கடவுள் என்பதாக ஒரு சர்வ சக்தியுள்ளவர் ஒருவர் இருக்கிறார் என்று மக்கள் நம்பும்படி செய்தால்தான் மக்கள் யோக்கியமாய் - பிறருக்குத் தீங்கிழைக்காமல் நடந்து கொள்ளுவார்கள். ஆதலால் கடவுள் பயம் மக்களுக்கு இருக்க வேண்டும், அந்தப் பயத்தைத் தெளியவைக்கக் கூடாது என்று சொல்லுகிறார்களே அதைப்பற்றிச் சிறிது சிந்தித்தால், அவர்கள் கருதுவதுபோல், கடவுள் உணர்ச்சியையும், கடவுள் தன்மைகளையும், நியாயத் தீர்ப்புகளையும், பயப்படத்தக்க கொடூர ரூபம் உள்ள நரக வேதனைகள், செக்கில் போட்டு ஆட்டுதல் முதலிய பலமான தண்டனை களையும் பின் ஜென்மத்தில் பல கஷ்டமான இழிவுகளையும், துன்பங்களையும் தரத்தக்க தலைவிதிகளையும், மற்றும் பலவித மோட்ச சுகங்களையும், உயர் பிறவிகளையும், சுகபோகங்களையும் தரத்தக்க முன்ஜென்ம புண்ணிய கர்மங்களையும், அவைகளுக்கேற்ற கடவுள்வாக்கு, வேதம், சாஸ்திரம், புராணம் முதலிய கற்பனைகளையும், எவ்வளவோ கெட்டிக்காரத்தனமாய் கற்பனை செய்து மக்களுக்குள் பல ஆயிரம் ஆண்டுகளாகப் புகுத்தி வந்தும்கூட, இன்றுவரையில் மக்களில் பெரும்பா லோர் - ஏறக்குறைய எல்லா மக்களும் யோக்கியமாய் மனிதனை மனிதன் ஆட்கொள்ளாமல், சராசரி மனிதனுக்கு மேம்பட்ட பொருளை அனுபவியாமல் இருக்க முடியவில்லையே அது ஏன்? என்றும், கடவுள் உணர்ச்சியை இவ்விதமாக எல்லாம் மக்களுக்குள் ஊட்டியதால் ஏதாவது பயன் ஏற்பட்டிருக்கிறதா? என்றும் பார்த்தால், மனிதன் ஒழுக் கத்திற்குக் கடவுள் உணர்ச்சி வேண்டும் என்கிற விதமும் அடிபட்டுப் போகிறதே.
ஏன் எனில், உலகில் அறிவில்லாத பாமர ஏழை மக்கள் மாத்திரம்தான், ஒழுக்கமற்று நாணயமற்று உண்மையற்று நடந்து கொள்ளுகிறார்கள் என்பது அல்லாமல், கற்ற மக்கள், செல்வவான்கள், பெரும் பதவியில் உள்ளவர்கள், மிக மிகப் பக்திமான்கள், குருமார்கள் உள்பட எல்லோருமே பெரிதும் விதிவிலக்கு இல்லாமல், கீழ்மக்கள் தன்மையாய் நடந்து கொள்ளுகிறதைப் பார்க்கிறோமே. ஆகவே கடவுள் உணர்ச்சிக்கும், ஒழுக்கத்துக்கும் உயர்குணத்துக்கும் சிறிதும் சம்பந்தமில்லை என்று  தெளிவாகிவிட வில்லையா? கடவுளுக்கு உருவம் எதற்கு என்றால் அதற்கு ஒரு சமாதானம் கூறப்படுகிறது. அதென்னவென்றால்,
பாமர முட்டாள் ஜனங்களுக்குக் கடவுளின் அருவ - (உருவமற்ற)த் தன்மை விளங்காது ஆதலால், கடவுளை ஒரு உருவமாகக்காட்டி அந்த உருவம் மக்கள் உள்ளத்தில் பயரூபமாய் அடிமைரூபமாய் விளங்க, கடவுள் உருவங்களுக்குப் பல கோர கொடூரச் செயல்களைக் கற்பித்து, அதோடு கடவுளை மேல் ஜாதியாகக் கற்பித்து, அவைகளிடத்தில் பக்தி உண்டாகும்படி செய்வதற்கு ஆக உருவம் கடவுளுக்கு அறிவாளிகளால் கற்பிக்கப்பட்ட தாகும். என்று சொல்லப் படுகிறது. இதையும் சிறிது சிந்தித் தால் இதன் பயனற்ற தன்மையும், அறியாமையும், சூழ்ச்சியும் விளங்காமல் போகாது. சாதாரணமாக, நம் நாட்டில் கடவுளுக்கு உருவங்கள் ஏற்படுத்தி வழிபாடு செய்யத்துவங்கிய காலம் 2000, 3000 ஆண்டு களுக்கு மேற்பட்டதாகவே இருக்கலாம். அதாவது ஆரியர் நம் நாட்டிற்கு வந்து, அவர்களது (ஆரிய) மதத்தைப் புகுத்தி, அதன் மூலம் கடவுள்களைக் கற் பித்து, அவற்றிற்கு உரு வங்கள் ஏற்படுத்தின காலத் தில் இருந்தே, நம்நாட்டில் உருவக் கடவுள்கள் காட்சி அளித்து வருகின்றதென்ன லாம். அதற்கு ஆதாரம் என்னவெனின், எந்தக் கடவுள்களது உருவத்தை எடுத்துக் கொண்டாலும், ஆரிய மதக்கதை சம்பந்த மும், ஆரியத்தோற்ற சம்பந்தமும் இல்லாமல் காண்பது அரிதாகவே இருக்கிறது. ஆகவே, இந்தப்படி 3000, 4000 ஆண்டுகளாகக் கடவுளை உருவமாக்கி, மக்களுக்குக் காட்டி, கடவுள் தன்மையை ஊட்டி வந்தும், இன்றைக்கும் பாமர மூட ஜனங்கள் மாத்திரம் அல்லாமல் பண்டிதர்கள், ஞானிகள் என்பவர்கள் முதல் பெரும் மேதாவிகள் என்பவர்களுக்குக் கூட, உண்மையான கடவுள் பக்தி அவரவர் நடப்பில் கடவுள் தன்மை, பகுத்தறிவு ஆகியவை ஏற்படவில்லை என்றால்,  மூடர்களுக்குக் கடவுள் பக்தி ஏற்படுவதற்கு ஆக உருவம் (விக்கிரகம்) கற்பிக்கப்பட்டது என்பதில் ஏதாவது உண்மையோ பலனோ அறிவுடைமையே உண்டு என்று யாராவது கொள்ள முடியுமா?
மற்றும் நித்தியமான சர்வசக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றால், கடவுள் என்பதாக ஒன்று உண்டா இல்லையா? என்பதாக மக்களுக்குச் சந்தேகம் ஏற்படுவானேன்? சிலருக்குக் கடவுள் இல்லை என்றும் இருக்க முடியாதென்றும் தோன்றுவானேன்? ஏதோ அறிவிலிகளுக்கு இப்படித் தோன்றுகிறது என்று கொள்ளுவதானாலும் அறிவாளி களுக்கு கடவுளைக்காப்பாற்ற வேண்டும், கடவுள் பிரசாரம் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றுவானேன்? கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று குழந்தைகளுக்கும் பள்ளிப் பிள்ளைகளுக்கும் கற்பிக்க முயற்சி செய்வானேன்?
அவைதான் போகட்டும் என்றாலும், கடவுள் அவதாரம் என்றும், கடவுள் தன்மை அடையப் பெற்ற பெரியார்கள் என்றும், கடவுள் மனித ரூபமாய் - பன்றி ரூபமாய் மற்றும் ஏதேதோ ஆபாசரூபமாய்க் காணப்படுவானேன்? கடவுளுக்குக் குமாரரும், தூதுவரும், அசரீரியும், மக்கள் மீது மருளும், அதாவது சாமியாடுதலும் ஏன்?
இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மெய்யாய் இருந்தாலும் பொய்யாய் இருந்தாலும், இவைகள் கடவுள் இருப்பதை ஊர்ஜிதம் செய்யவோ அல்லது மக்களுக்குக் கடவுளால் பயன் ஏற்படவோ அல்லது உலக நடப்புக்காவது மனித சமுதாய நல்வாழ்வுக்காவது ஏதாவது பயன் ஏற்படுமா என்பது மிகவும் சிந்திக்க வேண்டியதாகும். இதுவரையில் காலம் எப்படிக் கழிந்திருந்தாலும், இனி மேலாவது மனித சமுதாயம் பயமும் கவலையுமற்றுச் சாந்தியாய் திருப்தியாய் நல்வாழ்வு வாழவேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வண்ணம் இனிச் சமுதாய ஒழுங்குகள், ஒழுக்கங்கள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலம் பயங்கரமான ஆபத்துக்குள்ளாகும் காலம். எப்படி எனில், மக்கள் இனிச் சுலபத்தில் சாகமாட்டார்கள். இதுவரை நம்மக்களுக்கு சராசரி ஆயுள் 25 என்றால், இனி மக்கள் சராசரி ஆயுள் 50க்கு மேற்பட்டுத்தான் இருக்க முடியும். சுகாதாரம் அதிகம், வைத்தியம் வசதி அதிகம், மனிதன் நோய் களையும் துன்பங்களையும் கடவுள் மீது பாரத்தைப் போட்டு விட்டு அற்பா யுளாகப் போய்க் கொண் டிருந்தவன் தன் முயற்சியில் நம்பிக்கை வைத்துப் பரி காரம் தேடி மீளுகிறான். மனிதனுக்குப் பல துறை களில் அறிவு உணர்ச்சி ஏற்பட்டு  வாழ்வை நீட்டிக் கொள்ள வசதி பெற்று விட்டான்.
அதுபோலவே மக்கள் பிறப்பும் அதிகமாகிவிட்டது. கர்ப்பச் சிதைவு, சிசு மரணம், பிரசவ மரணம் இனி சுலபத்தில் ஏற்படாத மாதிரிப் பாதுகாப்புகள், பரிகாரங்கள் ஏற்பட்டுவிட்டன. இனி மலடும் இருப்பதற்கில்லாமல் நிவர்த்தி மார்க்கங்கள் ஏற்பட்டுவிட்டன. இனி விதவைகளாகவும் எவரும் காலங்கழிக்க முடியாமல் விதவை மணம், சுதந்திரக் காதல் முதலியன செல்வாக்குப் பெற்று, தாராளமாய் நடப்பில் வருவதன் மூலம் அவற்றாலும் பிறப்பு அதிகமாகின்றன.
பொதுவாகப் பிறப்பு விகிதமும், பலவிதச் சவுகரியங்களால் நபர் 1-க்கு 2, 3, 4 என்பதாக குழந்தைகள் இருந்து வந்தது மாறி, இப்பொழுது நபர் ஒன்றுக்கு 6, 8, 10, 12 என்பதாகக் குழந்தைகள் பிறப்பதும், அவைகளும் நீண்ட நாள் வாழ்வதுமாக இருக்கின்றன.
இவர்களுக்கு எல்லாம் உணவு, போக போக்கியப் பொருள், பிழைப்பு, நல்வாழ்வு ஆகியவை தேவைப்படுவதுடன் உணவுப்பஞ்சம் ஏற்பட்டே தீரும். இவைகளில் பெரும் போட்டியும் அதன் பயனாய் வெறுப்பு, வஞ்சம், துரோகம், கொள்ளை, கொலை முதலியவைகள் மலிந்துவிடும். சாதுவும் யோக்கியமுமான மக்கள் மிகமிகத் துன்பமடைய நேரிடும். அயோக்கியர்களும் காலிகளுமே நல்வாழ்வு வாழ்வார்கள் அதற்கேற்ற அரசாங்கம்தான் ஏற்படமுடியும்.
- குடிஅரசு - கட்டுரை - 07.05.1949