Sunday, June 26, 2011

மதப்போட்டி - யாரைப் பார்த்து யார் காப்பியடித்தார்?

மதங்கள் என்பவைகளுக்கெல்லாம் ஒரு கடவுள் இருந்தாகவேண்டும்; மோட்சம், நரகம் இருந்தாக வேண்டும். கடவுள் தன்மை பொருந்திய அவதார புருஷர்கள், குருமார்கள் இருந்தாக வேண்டும்.
இவை இல்லாமல் உலகில் எந்த மதமும் இருக்க முடியாது. இந்து மதத்துக்கோ இவைகள் மாத்திரம் போதா. அதாவது பல கடவுள்கள் வேண்டும்; பலவிதமான மோட்சங்கள், பலவிதமான நரகங்கள் வேண்டும். மற்றும் பலவிதமான பிறப்புகள் முன் பின் ஜன்மங்கள் வேண்டும்; பலவிதமான அவதாரங்கள், பலவிதமான குருமார்கள் வேண்டும்; இவ்வளவும் போதாமல் கடவுளை நேரில் கண்டு மோட்சத்திற்குப் போன பலவிதமான பக்தர்கள் வேண்டும்.
இந்தக் காரியங்கள் சிறப்பாக இந்து மதத்தின் உட்பிரிவு மதங்களானச் சைவ மதம், வைணவ மதம் என்று சொல்லப்படும் இரண்டு உட்பிரிவு மதங் களுக்கும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருந்து வருகின்றன.
பெயர்களைப் பொறுத்த வரையில் சில மாறுதல்கள் இருக்கலாமே ஒழியக் காரியங்களைப் பொறுத்த வரையில் ஏறக்குறைய ஒருவரைப் பார்த்து ஒருவர் காப்பியடித்தது போலவேதான் இருக்கின்றன.
உதாரணமாக, வைணவத்தில் ராமாயணம் ஏற்பட்டதற்குக் காரணம் விஷ்ணுவும் அவரது மனைவியாகிய லட்சுமியும் கலவி செய்ததில் இருந்தே ஏற்பட்டது என்றால், சைவத்துக்குக் கந்தபுராணம் ஏற்பட்டதற்குக் காரணம் சிவனும் அவரது மனைவியாகிய பார்வதியும் கலவி செய்ததில் இருந்தே ஏற்பட்டது.
எப்படியெனில், விஷ்ணுவும் லட்சுமியும் பகல் நேரத்தில் கலவியில் இருந்தபோது சில ரிஷிகள் படுக்கை அறைக்குள் பிரவேசித்து விஷ்ணுவைக் காண ஆசைப்பட்டதாகவும், துவாரபாலகர்கள் தடுத்ததாகவும் அதற்கு அவர்களை ரிஷிகள் சபித்த தாகவும், அந்தச் சாபம் தீரவேண்டியதற்காகவே ராமாயணம் முதலியவை ஏற்பட வேண்டிய தாயிற்றாம்.
அதுபோலவே, பரமசிவன் பார்வதியோடு பல நூறு வருஷங்கள விடாமல் கலவி செய்து கொண்டு இருந்ததாகவும் அதனால் ஏற்படும் வீர்யமும், கர்ப்பமும் மிகக் கொடுமையான காரியத்தைச் செய்யக் கூடியதாகிவிடும் என்று, தேவர்கள் முறையிடக் கலவி முற்றுப்பெறுவதற்கு முன்பாகவே கலவியை நிறுத்திக் கொள்ள வேண்டியதாகி, அதனால் இந்திரியம் நிலத்தில் விழுந்து பிறகு என்னென்னமோ ஆபாசமாகிக் கடைசியாக சுப்பிர மணியர் தோன்றிக் கந்தபுராணம் ஏற்படவேண்டிதா யிற்று என்றுமே கதைகள் இருக்கின்றன.
அன்றியும் பூபாரம் தீர்க்கவும். ராட்சதர்களை அழிக்கவும் விஷ்ணு ராமராய்த் தோன்றினார்.
அதுபோலவே பூபாரம் தீர்க்கவும் அசுரர்களை அழிக்கவும் சிவன் சுப்பிரமணியனாகத் தோன்றினார்.
ராமன் பிறப்பதற்காகத் தேவர்கள் விஷ்ணுவை வேண்டினார்கள்.
சுப்பிரமணியன் பிறப்பதற்காகவும் தேவர்கள் சிவனை வேண்டினார்கள்.
ராமன் ராட்சதர்கள் என்பவர்களைக் கொன்றான்.
சுப்பிரமணியன் அசுரர்கள் என்பவர்களைக் கொன்றான்.
ராமன் ராட்சதர்களைக் கொல்லும்போது (மூலபலம்) கொல்லக்கொல்ல உற்பத்தியாகிக் கொண்டே வந்தனர்.
சுப்பிரமணியன் அசுரர்களைக் கொல்லும்போது கொல்லக் கொல்ல அசுரர்கள் தலைகள் முளைத்துக் கொண்டே வந்தன.
ராமன் பெண்ஜாதி சீதை ஒரு வளர்ப்புப்பெண். சமுத்திரத்தில் கண்டெடுக்கப்பட்டவள்.
சுப்பிரமணியன் பெண் ஜாதியும் ஒரு வளர்ப்புப் பெண், வள்ளிச் செடிக்கடியில் கண்டெடுக்கப்பட்டவள்.
சைவத்துக்கும் வைணவத்துக்கும் இனியும் அனேக விஷயங்களில் கடவுள்களைப் பற்றிய கதைப் பொருத்தங்கள் காணலாம்.
அதுபோல சைவ, வைணவ ஆச்சாரியார்கள் விஷயங்களிலும், சைவத்துக்கு நாயன்மார்களாகவும், வைணவத்துக்கு ஆழ்வாராதிகளாகவும், ஏற்படுத்தப் பட்டிருப்பதோடு அல்லாமல், பல பக்தர்களையும் அவர்கள் செய்த காரியங்கள் அவற்றின் பயனாய் அவர்கள் அடைந்த முக்திகள் ஆகிய விஷயங்களிலும் ஒன்று போலவே கதைகள் கற்பிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
வைணவ பக்தர்கள் விஷயத்துக்குப் பக்த லீலாமிருதம் என்னும் புத்தகம் போலவே சைவ பக்தர்கள் விஷயத்துக்குப் பெரியபுராணம் என்னும் புத்தகமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
வைணவ பக்தரில் ஒரு குயவர் இருந்தால், சைவ பக்தரிலும் ஒரு குயவர் இருக்கிறார்.
எப்படி எனில், வைணவக்குயவர் கோராகும்பராய் இருந்தால், சைவக்குயவர் திருநீலகண்டராய் இருக்கிறார்.
இருகுயவ பக்தர்களுடைய கதையும் ஒன்று போலவே அதாவது, கோராகும்பரும் தன் பெண் ஜாதி யுடன் பேசாமல் இருந்து கடைசியாக மகாவிஷ்ணுவே இருவரையும் பேசும்படி செய்து சேர்த்துவைக்கிறார்.
திருநீலகண்ட குயவனாரும் தன் பெண்ஜாதியோடு பேசாமல் இருந்து கடைசியாகச் சிவபெருமான் வந்தே இருவரையும் பேசும்படி செய்து சேர்த்துவைக்கிறார்.
மற்றும், தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பதிலும் வைணவ மதத்திற்கு சோக்கமாலா என்கின்ற தீண்டாத ஜாதி பக்தர் ஒருவர் இருந்து அவரைக் கோவிலுக்குள் விடாமல் தடுக்கப்பட்டு கனவு கண்டு கடைசியாக விஷ்ணு வந்து அழைத்துப் போகிறார்.
சைவத்திலும் தீண்டப்படாத வகுப்புக்கு நந்தன் என்பதாக ஒருவர் இருந்து பரமசிவன் வந்து கனவில் சொல்லிச் சாமி தரிசனம் செய்யப் பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இரண்டுமத புராணங்களிலும் பார்ப்பனர் களுக்கு மாத்திரம் ஒரே மாதிரியான உயர்வும், மற்றவர்களுக்கு இழிவும் ஏற்படுத்தப்பட்டிருப்ப தோடு ஜாதிப் பாகுபாடுகளைப் பற்றி ஒரே மாதிரி யாகவே குறிப்பிட்டுப் பலப்படுத்தி இருக்கிறது.
இவற்றுள் சைவத்தைப் பார்த்து வைணவர்கள் காப்பி அடித்தார்களா ? அல்லது வைணவர்
களைப் பார்த்து சைவர்கள் காப்பி அடித்தார்களா? என்பது ஆராய்ச்சி வேலையாய் இருக்கலாம்.
அதில் பிரவேசிக்க நமக்கு இஷ்டமில்லை. ஏனெனில், தமிழ் நாட்டில்தான் சைவத்தைப்பற்றிப் பிரபலமாய்ப் பேசப்படுகின்றதே ஒழிய, மற்றபடி இந்தியாவின் வடபாகம் முழுவதும் ஆந்திரதேசம் உள்பட வைணவமே மேலோங்கி இருக்கிறது. வடநாட்டில் வைணவர் என்றால்தான் மாமிசம் சாப்பிடாதவர் என்று அருத்தமாகும்.
ஆகையால், இவை இரண்டிற்கும் மதக் கிரந்தங்கள், மதக் கதைகள், மத பக்தர்கள், மதக் கடவுள்கள் என்பவைகளில் ஒன்றை ஒன்று காப்பி அடிப்பதோ அல்லது இருவரும் ஒன்றாய் உட்கார்ந்து கூடிப்பேசியோ ஒரு முடிவுக்கு வந்துதான் இப் பெரும் புளுகு மூட்டைகளை ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறார்கள் என்பது அறியக்கிடக்கின்றது.
(சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் தீட்டியது இது)
குடிஅரசு -கட்டுரை -14.04.1945

Saturday, June 25, 2011

சுயமரியாதை திருமணம் என்றால் என்ன?

தோழர்களே, இன்று இங்கு நடைபெறப் போகும் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகின்றது. மற்ற திருமணங்களுக்கும் அடிப்படையாக என்ன மாறுதல் இருக்கின்றது என்று பாருங்கள்.

அனாவசியமாக சிலர் சுயமரியாதைத் திருமணமா? என்றாலே அதிசயப்படுவதும் ஏதோ முழுகிவிட்டதுபோல் வெறுப்படைவது மாயிருக்கின்றதே  தவிர வேறு என்ன மாறுதல் இருக்கின்றது என்பது எனக்கு விளங்கவில்லை.

விவாகம் அல்லது திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஒரு பெண்ணும், ஆணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையை கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்கு பலர் அறிய, செய்யக் செய்துகொள்ளும் அல்லது செய்யப்படும் காரியமே ஆகும். இதைச்சிலர் அதாவது பழைய முறைக்காரர் சடங்கு என்கிறார்கள். சிலர் அதாவது, புதிய முறைக்காரர்கள் ஒப்பந்தம் என்கிறார்கள்.

சடங்கு என்று சொல்லுகின்றவர்கள் உண்மையிலேயே சடங்காகவே கருதி காரியங்களில் லட்சியமில்லாமல் நடத்துகிறார்கள். அதாவது, கலியாணத்தில் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் எவ்வித உரிமையும் இல்லை. அதுபோலவே சடங்கிலும் கலியாணக்காரருக்கும் சடங்குக்கும் யாதொரு உரிமையுமில்லை. எப்படியென்றால் தம்பதிகளின் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களைப் பெற்றோர்களோ அல்லது இந்தப் பெற்றோர்களுக்கு வேண்டியவர்களோ பார்த்து இன்ன பெண்ணுக்கு இன்ன மாப்பிள்ளை அல்லது இன்ன மாப்பிள்ளைக்கு இன்ன பெண் என்று தீர்மானித்துவிட்டால் அதைத்தம்பதிகள் மணமக்கள் ஆட்சேபிக்க முடியாது.

அது மாத்திரமல்ல இன்னொரு அநியாயம் என்னவென்றால் திருமணம் என்பது நடக்கும் நிமிஷம்வரையில் மாப்பிள்ளை பெண்ணைப் பார்த்திருக்க மாட்டார். பெண் மாப்பிள்ளையைப் பார்த்திருக்க மாட்டார். 100க்கு 99 திருமணத்தில் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரையொருவர் சந்தித்துப் பேசி இருக்கவே மாட்டார்கள்.

அங்க லட்சணம், அறிவு லட்சணம், யோக்கியதை லட்சணம் ஆகிய எதையும் பார்க்காமலும் தெரியாமலும்தான் திருமணம் தீர்மானிக்கப்படுகிறது.

இவர்கள் இருவர்கள் விஷயத்தில் ஏதாவது ஒன்று கவனிக்கப்படுகின்றதா என்றால் இருவர் பிறந்த நேரம் என்று சொல்லப்படும் அது சரியான நேரமோ தப்பான நேரமோ என்பதைப்பற்றி கவலை இல்லாமல் ஒரு காலத்தை குறிப்பில் வைத்து அதன் மூலமாகவே ஒரு பொறுப்பற்ற நபரால் இருவருக்கும் பொருத்தம் உண்டா இல்லையா என்பது முடிவு செய்யப் பட்டுவிடும். சில சமயங்களில் பிறந்த காலம் நேரங்கள்கூட கவனிக்கப்படாமல் பெண்ணின் பெயரின் முதலெழுத்தையும் மாப்பிள்ளையின் பெயரின் முதலெழுத்தையும் ஆதாரமாக வைத்து பொருத்தம் முடிவு செய்யப்பட்டு விடும்.

மற்றும் சில சமயங்களில் அதுகூட இல்லாமல் கோவிலில் பூ வைத்து கேட்பது மூலமோ, கருடன் பறப்பது மூலமோ, பல்லி கத்துவது மூலமோ, இருவர் பெயர் எழுதப்பட்ட சீட்டுகளின் மீது ஈ (பறவை) உட்காருவதன் மூலமோ, அல்லது கோவில்களில் ஏதாவது ஒருவன் சாமியாடி வாக்கு சொல்லுவதன் மூலமோ கலியாணம் தீர்மானிக்கப்பட்டு விடும். எவ்வளவு காட்டு மிராண்டித்தன வாழ்வில் நமது மக்கள் இருந்து வருகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை.

இதுபோலவே, சடங்குகள் விஷயத்திலும் இந்தச் சடங்குகள் எதற்காக என்றாவது இந்தச் சடங்கின் அர்த்தம் என்ன என்றாவது இச்சடங்குகளுக்கு அவசியமோ, ஆதாரமோ ஆரம்பகாலமோ பொருத்த மோ என்னவென்றாவது மணமக்களுக்கோ, பெற் றோர்களுக்கோ, மற்றும் பந்து மித்திரர்களுக்கோ யாருக்குமே தெரியாது.

ஆனால், சுயமரியாதைக் கலியாணம் என்பது இந்தப்படிக்கல்ல. மணமக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து தங்களுக்குள்ளாகவே ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அர்த்தமும், பொருத்தமும் அவசியமும் இல்லாமல் வெறும் சடங்கு பழக்க வழக்கம் என்பதற்காக மாத்திரமே ஒன்றையும் செய்யக்கூடாது என்பது மேயாகும்.
இவை மாத்திரமல்லாமல் திருமணம் சம்பந்தமாக செலவு மெனக்கெட்டு வீண் கஷ்ட நஷ்டம் ஆகியவைகளைப்பற்றி பழையமுறைத் கலியாணங் களில் லட்சியமே செய்யப்படுவதில்லை. ஆடம்பரத்துக் காகவே வீண் செலவுகளைத் தகுதிக்கு அதிகமாக கடன் வாங்கியாவது செய்யப்பட்டு வருகின்றது.

திருமணத்திற்காக 3 நாள், 4 நாள், 5 நாள், சிலர் 7 நாள்கூட மெனக்கெட்டு அயலூர் பந்து மித்திரர் களையும் தருவித்து மெனக்கெடச்செய்து 5 விருந்து, 10 விருந்து என்பதாகச் சாப்பாட்டுச் செலவும், பந்தல், மேளம், சங்கீதம், ஊர்வலம், பானம் என்பதாக வீண் காரியங்களும் குடிகாரர்கள் குடித்த போதையில் தாருமாராய் நடப்பதுபோல் கலியாண போதையில் சிக்கி பணங்கள், நேரங்கள் கஷ்டங்கள் ஆகியவைகள் தாருமாறாக செலவாக்கப்பட்டு வருகின்றன.

2, 3 நாளைக்கு ஆக சிலர் பார்த்து புகழ்வதற்காக என்று செய்யப்படும் இப்படிப்பட்ட தாருமாரான ஆடம்பரச் செலவுகள் கலியாணத் தம்பதிகள் தலையிலோ அல்லது குடும்பத்தார்கள் தலையிலோ விழுந்து கலியாணக் கடன் பார்வைகளால் வெகுநாளைக்கு அவதிப்பட வேண்டியிருப்பதால் சில குடும்பங்கள் கலியாணச் செலவாலேயே பாப்பராகி மீளாக்கடன் காரர்களாகக் கூட ஆகவேண்டியதாகி விடுகின்றன. இப்படிப்பட்ட கொடுமைகளும் முட்டாள்தனமான காரியங்களும் கூடாது என்பதுதான் சுயமரியாதைத் கலியாணம் என்பதின் முக்கியாம்சங்களாகும்.

மற்றும் கலியாணம் செய்துகொள்ளும் விஷயத்தில் தம்பதிகளைவிட மூன்றாவதவர்களுக்கே சகல சுதந்திரமுமிருந்து வருகிறது. செய்து வைப்பதற்கு ஒரு புரோகிதன் வேண்டும். இன்ன இன்ன மாதிரி செய் என்பதற்குப் பெற்றோர்கள், பந்து மித்திரர்கள் வேண்டும். இவர்கள் சொன்னபடி யெல்லாம் தம்பதிகள் நடக்கவேண்டும்.

சுயமரியாதைக் கலியாணம் என்பதில் இந்த முறையில்லை. மணமக்கள் தங்கள் ஒப்பந்தங்களை ஒருவருக்கொருவர் சொல்லி சம்மதித்ததற்கு அறிகுறியாக மாலையிட்டுக் கொள்வது என்பதுடன் முடிவுபெற்று விடுகின்றது.

மற்றும் இவற்றையெல்லாம்விட ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் கலியாண விஷயத்தில் மணமக்களின் வாழ்க்கைச் சம்பந்தம் முக்கியமானது. லட்சியமானது அல்லவென்றும் அதிலும் ஏதோ ஒரு தெய்வீக சம்பந்தம் இருக்கிறதென்றும் அதுவேதான் திருமணத்தின் லட்சியமென்றும் ஆதலால் அப் பெண்ணும், மாப்பிள்ளையும் அத்தெய்வீக சம்பந்தத்துக்காக ஒருவர் குற்றங்களையும் அநீதிகளையும் மற்றவர்கள் பொருத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதிலும் சிறப்பாக மாப்பிள்ளை செய்யும் கொடுமையையும் அநீதியையும் பெண் பொறுத்துக்கொண்டு வாழ்நாள் முழுமையும் மாப்பிள்ளைக்கு பெண் அடிமையாய் பக்தியாய் இருக்க வேண்டுமென்றும் கூறப்படுகிறது.
ஆனால், சுயமரியாதைக் கலியாணம் என்பதில் அப்படி இல்லை.

திருமணம் என்பது பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்க்கையை நடத்த ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமென்றும் அவ்வொப்பந்த விஷயம் பெண்ணையும், ஆணையும் மாத்திரமே பொருத்ததே ஒழிய வேறு எவ்வித தெய்வீகத்துக்கோ அல்லது எவ்விதக் கட்டுப்பாட்டுக்கோ சம்பந்தப்பட்டதல்ல என்றே சுயமரியாதைக் கலியாணத்தின் தத்துவமாகும்.

மேலும், பழையமுறை கலியாணமானது ஆணுக்கும் பெண்ணுக்கும் கலியாணம் ஏற்பட்ட பிறகு தான் ஒருவர் மீது ஒருவர் ஆசைகொள்ளுவதோ காதல் கொள்வதோ ஏற்பட வேண்டுமே ஒழிய அதற்கு (கலியாணத்துக்கு) முன்னால் ஒருவர் மீது ஒருவருக்கு ஆசையும், காதலும் ஏற்படுவது கூடாதென்றும் குற்றமென்றும் அது விபசாரத்துக்குச் சமானமானதென்றும் கூறப்படுகின்றது.

சுயமரியாதைக் கலியாணத்திலோ, கலி யாணத்துக்கு முன்பாகவே ஆணுக்கும் பெண் ணுக்கும் ஒருவருக்கொருவர் ஆசையும் காதலும் ஏற்பட்டு அதன் பின்னரே கலியாணம் நடக்க வேண்டும் என்றும், மற்றபடி கலியாணம் ஆனபிறகு கலியாணம் ஆய்விட்டதே என்கின்ற காரணத்திற் காக அங்க ஈனராய் இருந்தாலும் வியாதிக்காரராய் இருந்தாலும், கொடியவராய் இருந்தாலும் ஒருவருக் கொருவர் ஆசையும் காதலும் கொண்டுதான் ஆகவேண்டுமென்றும் சொல்வதைக் கண்டிப்பாய் ஒப்புக்கொள்ளுவதில்லை.

மற்றும், பழையமுறை கலியாணங்கள் ஒரு தடவை கலியாணமாகிவிட்டால் எந்தக் காரணத்தைக் கொண்டும் மறுபடியும் பிரியக் கூடாதென்றும் இப்படிக் கூறாவிட்டாலும் ஆணுக்கு பிரித்துவிடவோ பிரிந்துகொள்ளவோ உரிமை உண்டு. பெண்ணுக்குத் தான் உரிமையில்லை.) என்றும் பெண்ஜாதி செத்துப்போனால் புருஷன் மறுவிவாகம் செய்துகொள் ளலாம் என்றும் பெண்ஜாதி உயிருடன் இருக்கும் போதே புருஷன் மாத்திரம் பல பெண்களைக் கலியாணம் செய்துகொள்ளலாம் என்றும் பெண்கள் மாத்திரம் எந்தக்காரணம் கொண்டும் புருஷன் எவ்வளவு கொடியவனாகவும் மனுஷத்தன்மை அற்றவனாகவும் எவ்விஷயத்துக்கும் பொருத்த மில்லாமல் கொடுமையும் சித்திரவதையும் போன்ற கஷ்டத்தையும் கொடுப்பவனாலும் புருஷனைவிட்டுப் பிரியக் கூடாதென்றும் வேறு கலியாணம் செய்துகொள்ளக் கூடாதென்றும் புருஷன்தான் பக்குவமாவதற்குமுன் தனது 5ஆவது 10ஆவது வயதிலேயே இறந்துபோனாலும் வேறு புருஷனைக் கலியாணம் செய்துகொள்ளாமல் விதவை என்னும் பெயருடன் உலக சுகபோகங்கள் எல்லாவற்றையும் வெறுத்து மக்கள் கண்ணுக்கும், மனதுக்கும் வெறுப்புத்தோன்றும் தன்மையில் வாழவேண்டும் என்றும் சொல்லுகின்றது.

சுயமரியாதைத் கலியாணத்தில் இவ்வித அக்கிரமும், அயோக்கியத்தனமும் அறியாமையும் கொடுமையும் மூர்க்கத்தனமும் காட்டுமிராண்டித் தனமும் இல்லை. வாழ்க்கைக்கும் மனதுக்கும் ஏற்ற தம்பதிகளானால் கூடிவாழலாம். அவைகளுக்கு ஒவ்வாத வாழ்க்கையே நரகம் போன்றதான தம்பதிகளானால் பிரிந்து மனதிற்கு ஏற்றவர்களை மணந்து இன்ப சுகவாழ்வு வாழ உரிமை உண்டு என்பதோடு புருஷனோ மனைவியோ யார் இறந்துபோனாலும் மறுவிவாகம் செய்துகொள்ளலாம் என்று கூறுகிறது.

பழையமுறை கலியாணப்படி பெண்களுக்கு சொத்து உரிமை இல்லை. வாழ்க்கையில் சரிபங்கு ஆதிக்க உரிமை இல்லை என்று கூறப்படுகிறது. சுயமரியாதை கலியாணத்தில் சொத்திலும் வாழ்க்கை ஆதிக்கத்திலும் பெண்ணுக்கு ஆணைப்போலவே சரிபங்கு உரிமை இருக்கின்றது என்பதுடன் இவைகளே கலியாண ஒப்பந்தத்தின் ஷரத்துக் களாகும்.

அநேகமாய் கலியாண தத்துவம் பழையதும் புதியதும் ஒரு மாதிரிதான். எப்படி எனில் இங்கு ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் கலியாணம் செய்துகொண்டார்களே ஒழிய ஆணும் ஆணும் சேர்ந்தோ, பெண்ணும் பெண்ணும் சேர்ந்தோ கலியாணம் செய்துகொள்ளவில்லை.

ஆதலால் இவ்விதத் திருணமத்தைப் பற்றி யாரும் கவலையோ, ஆத்திரமோ படவேண்டியதில்லை. பெண்மக்களில் பலருக்கு இவ்விஷயத்தில் ஏதாவது மனசஞ்சலம் இருந்தாலும் இருக்கலாம். ஆண்களில் படித்தவர்கள் வித்வான்கள் என்று சொல்லப்படுபவர் களிலேயே சில அழுக்குமூட்டைகள் இருந்து கொண்டு விஷமப் பிரசாரம் செய்துவரும்பொழுது பெண்களில் இதுவிஷயமாய் அதிருப்தி உள்ளவர்கள் இருப்பது அதிசயமல்ல.

ஏனெனில், பெண்களை நாம் எப்படி வைத்திருக்கின்றோம். அவர்களில் 100-க்கு 99-பேருக்கு அடுப்பங்கரையையும், படுக்கை வீட்டையும் மாத்திரமே காட்டி நகை மாட்டுகின்ற  ஸ்டேண்டுபோல் நகைகளை மாட்டி இது என் பெண்ஜாதி (அடிமை) இது உன் பெண்ஜாதி என்று கண்காட்சி காட்டுகின்றோமே ஒழிய, வேறு அவர்களுக்கு என்ன கற்றுக்கொடுத்திருக்கிறோம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

வேண்டுமானால் கண்ணை மூடிக்கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு கணக்கு வழக்குப் பார்க்காமல் பிள்ளை களைப் பெறுவார்கள். இதற்கு ஒரு உபாத்தியாயரோ, அறிவோ வேண்டியதில்லை. எவ்வளவுக்கெவ்வளவு மடமை உண்டோ அவ்வளவுக்கு அவ்வளவு பிள்ளைகள் பிறந்துவிடும். எவ்வளவுக்கெவ்வளவு அடிமைத்தன்மையில் மோகம் உண்டோ அவ்வளவுக்கவ்வளவு நகைகளை மாட்டிக்கொள்ளுவார்கள்.

தங்களை விகாரமாய் சிங்காரித்துக் கொள்ளுவார்கள். இவைகளையும், இவைபோன்றவைகளையும் தான் நாம் அவர்களுக்குத் தாய் தந்தையர்கள் என்கின்ற முறையில் கற்றுக் கொடுத்திருக்கிறோம்.

ஆகவே, இப்படிப்பட்ட பெண்களிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். இன்றையப் பெண் எவ்வளவோ கல்வியும், செல்வமும், நாகரிக ஞானமும், கௌரவமும் உள்ள சுற்றத்தார்களுக்குள்ளும் சகவாசத்துக்குள்ளும் இருந்துவந்தும் நிரம்பவும் கர்நாடக முறையில் பட்டிக்காட்டு கிராமவாசிப் பெண்களைவிட இளப்பமாய் நடந்துகொள்வதைப் பார்த்தால் நமக்கு எவ்வளவு சங்கடமாயிருந்தது என்பது அவரவர் களுக்கே தெரிந்திருக்கலாம்.

இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர்களால் வளர்க்கப்பட்டால் அவற்றிற்கு மனிதத்தன்மை எப்படி ஏற்படும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நமது மக்களுக்கு ஏன் மனிதத்தன்மை இல்லை, சுய மரியாதை இல்லை என்றால் அவற்றிற்கெல்லாம் முக்கியத்திலும் முக்கியமான காரணம் இப்படிப்பட்ட தாய்மார்களால் பெறப்பட்டு வளர்க்கப்பட்டதேயாகும்.

கடைசியாக தோழர்களே ஒன்று சொல்லி முடித்துவிடுகிறேன். கலியாணமானவுடன் பெற் றோர்கள் பிள்ளைகளை எதிர்பார்ப்பார்கள். சுற்றத்தார் எத்தனை ஆயிற்றென்று கணக்குக்கூட்டி வரு வார்கள். தம்பதிகள் பிள்ளை பெறுவதினால் படும் கஷ்டம் காயலா அசௌகரியம் வாலிபம் பாழாவது அதிகப் பிள்ளைகள் பெறுவதினால் தரித்திரம், துன்பம், வியாகூலம், விசாரம், மனங்கெட நேருவது சுயமரியாதை இழந்தாவது வாழ ஆசைப்படுவது ஆகிய காரியங்களைப் பற்றியெவரும் சிந்திக்கமாட்டார்கள்.

யாதொரு பொறுப்பும் அறிவும் அற்று இன்று மணமக்களைப் பார்த்து 16 பிள்ளைகள் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என்று சொல்லுகிற வர்கள் நாளைக்கு ஒரு குழந்தைக்கு அரைச்சங்கு பால் வார்க்கக்கூட சம்மதிக்கமாட்டார்கள்.

ஏதாவது கஷ்டம் வந்தால்கூட பக்கத்து வீட்டில் குடி யிருந்துகொண்டு கணக்குக்கூட்டிப் பார்த்து அசூசையும் வெறுப்பும் அடைவார்களே தவிர, சிறிது பரிதாபம்கூட காட்டமாட்டார்கள். ஆதலால் மணமக்கள் குழந்தைகளைப் பெறும் விஷயத்தில் சிறிது ஜாக்கிரதையாகவும், அறிவுடைமையாகவும் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
(08.06.1934ஆம் தேதி சென்னை சவுகார் பேட்டையில் நடந்த சுயமரியாதைத் திருமணத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு )
- புரட்சி  17-06-1934


Sunday, June 19, 2011

திராவிடர்கள் இந்துக்களா?


திராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்பது எமது முடிவாகும். இந்தக் கருத்தை ஆதாரமாக வைத்தே திருவாரூரில் கூடிய ஜஸ்டிஸ் கட்சி மாகாண மகா நாட்டில் திராவிடர் ஆகிய நாம் இந்துக்கள் அல்ல என்றும், மக்கள் எண்ணிக்கையைக் கணக்கு எடுக்கும் சென்சஸ் ரிபோர்ட்டில் நாம் ஒவ்வொருவரும் திராவிடர் என்ற பெயர் கொடுக்க வேண் டுமே ஒழிய இந்துக்கள் என்று பெயர் கொடுக்கக் கூடாது என் றும் தீர்மானம் செய்திருக்கிறோம். ஆனால் இத்தீர்மானத்தை அனேக ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர்கள் லட்சியம் செய்ததாகவே தெரிய வில்லை. அரசியல் பதவிகளில் இருக்கிற லட்சியத்தில் பதினாறில் ஒரு பாகத்தைக்கூட நம்மவர்களில் அனேகர் சமுதாயத்தில் தங்களுக்கு இருக்கவேண்டிய பதவிகளைப் பற்றியோ தங்களது இழி நிலை யைப்பற்றியோ கவலைப்படுவ தில்லை. இந்தக் காரணமே திராவிடர்களின் இழிநிலைக்கு முதன்மையானதாக இருந்து வருகிறது. எவ்வளவோ பெரும் படிப்பும், ஆராய்ச்சி அறிவும் மேல்நாட்டு நாகரிகமும் தாராளமாய்க் கொண்ட மக்கள் கூட தாங்கள் அனுபவித்து வரும் சமுதாய இழிவு விஷயத்தில் போதிய கவலைப்படாமலே இருந்துவருகிறார்கள். இவர்கள் சிறிது கவலை எடுத்துக் கொண்டி ருந்தாலும் மாபெரும் மாறுதல் ஏற்பட்டிருக்கும் என்பதோடு திராவிட நாட்டில் சிறப்பாகத் தமிழ் நாட்டில் இருந்து இந்து மதம் பறந்து ஓடி இருக்கும்.
இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது, கடு களவு அறிவு உள்ளவர்களும் உணரக்கூடிய காரியமேயாகும். இந்துமதம் என்பது திராவிடர் களை இழிவுபடுத்தி, கீழ்மைப் படுத்தி அவர்கள் முன்னேறுவ தற்கு இல்லாமல் ஒடுக்கி வைத் திருக்கிறதற்கே ஏற்படுத்தப்பட்டது என்பதல்லாமல் - அதற்காகவே இந்து மதம் என்பதாக ஒரு போலி வார்த்தை உச்சரிக்கப்படுகிறது என்பதல்லாமல், மற்றபடி வேறு கொள்கையுடனோ குறிப்புகளு டனோ அது (இந்து மதம்) இருக்க வில்லை.  உண்மையில் இந்து மதம் என்பதாக ஒன்று இல்லை என்பதற்கு ஆரியர்கள் சொல்லும் சொற்களே போதிய சான்றாகும். 1940 வருஷம் டிசம்பர் மாதம் 8ஆம் தேதி யில், சென்னைத் திருவல்லிக்கேணி மணி அய்யர் மண்டபத்தில் நடந்த தமிழ்நாடு ஆரியர் மகாநாடு என்பதில் தலைமை வகித்த திவான் பகதூர் வி.பாஷியம் அய்யங்கார் அவர்கள் தமது தலைமைப் பிரசங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:- நாம் அனைவரும் ஆரிய மதத்தைச் சேர்ந்தவர்களாகும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் கிடையாது. இந்து என்கின்ற பெயர் நமக்கு அந்நியர் கொடுத்ததேயாகும். நாம் ஆரியர்கள். ஆரியப் பழக்கவழக் கத்தை அனுசரிக்கிறவர்கள் ஆரியர் களே யாவார்கள்.  கண்டவர்களை ஆரிய மதத்தில் சேர்த்துக் கொண்ட தானது ஆரிய மதத்தின் பலவீனமே யாகும் என்பதாகப் பேசி இருக்கிறார். இந்தப் பேச்சு 10-_-12_19-40 இந்து, மெயில், சுதேசமித்திரன், தினமணி, விடுதலை ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்து இருப்பதோடு விடுதலையில் இதைப் பற்றி அதே தேதியில் தலையங்கமும் எழுதப்பட்டிருக்கிறது. மற்றும் திவான் பகதூர் பாஷியம் அய்யங்கார் அவர்கள் அதே பேச்சில் இந்து மதத் திற்கு ஆதாரம் வேதங்களேயாகும் வேதத்தை ஒப்புக் கொளளாதவர் இந்துவல்ல என்றும் பேசி இருக் கிறார். எனவே இந்து மதம் என்பதோ அல்லது ஆரியமதம் என்பதோ ஆரியர்களுடைய ஆரியர்களின் நன்மைக்கேற்ற கொள்கைகளைக் கொண்ட மதம் எனபதும், அது வேத மதம் என்பதும் இப்போதாவது திராவிடர்களுக்கு விளங்குகிறதா என்று கேட்கிறேன்.
அதோடு கூடவே சைவர்களையும், சைவப் பண்டிதர்களையும், தங் களைத் திராவிடர் (தமிழர்) என்று சொல்லிக் கொள்ளுபவர்களையும், திராவிடர்கள் வேறு ஆரியர்கள் வேறு ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய் என்பவர் களையும், தென்னாட்டுச் சிவனே போற்றி என்பவர் களையும், அய்யா நீங்கள் இனியும் இந்து மதத்தையும், வேதத்தையும், வேதசாரங்களான புராண இதி காசங்களையும், வேதக் கடவுள் களையும், வேத ஆகமங்களையும் ஒப்புக் கொள்ளுகிறார்களா? என்று கேட்கின்றேன்.  பொது வாகத் தமிழ் மக்களையும், சிறப்பாகத் தங்களைப் பார்ப் பனரல்லாதார் என்றும்,ஆரியர் அல்லாதார் என்றும், சொல்லிக் கொள்ளுகிறவர்களையும் இனியும் தங்களை இந்துக்கள் என்றும் இந்து மதத்தைப், பின்பற்றுகிற வர்கள் என்றும் சொல்லிக் கொண்டு ஆரிய வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கலாமா என்றும் கேட் கின்றேன். ஒருவன் தனக்கு இந்து மதத்தைக் கைவிட தைரிய மில்லை ஆனால், தன்னை சூத் திரன் அல்ல என்றும், ஆரியன் அல்ல என்றும் எப்படி சொல்லிக்கொள்ள முடியும்?
மதத்தினாலும், இனத்தினா லும், நாட்டினாலும் ஆரியரில் இருந்து பிரிந்து இருக்கிற தமிழர்கள் தங்கள் நாட்டில் 100-க்கு 90 பேர்களாக அவ்வளவு கூடுதல் எண்ணிக்கை உள்ளவர் களாக இருந்து கொண்டு சகல துறைகளிலும் ஆரியர்கள் மேலா கவும், தமிழர்கள் தாழ்வாகவும், இழிமக்களாகவும் இருப்பது உலகத்தில் 8-ஆவது அதிசயமல்லவா என்று கேட்கிறேன். இதற்கு தமிழ்ப் பெரியார்கள், பண்டி தர்கள், கலைவாணர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. முடிவாக நான் ஒன்று சொல்லுகிறேன். தமிழன் எவ்வளவு தூரம் இந்து மதத் தையும் இந்துமத கலை, ஆச்சா ரம், கடவுள், கோவில், பண்டிகை, சடங்கு, வேஷம், குறி,உடை, நடை முதலியவைகளை வெறுத்துத் தள்ளுகிறானோ அவ்வளவு தூரம்தான் அவனுக்குச் சுயமரி யாதையும் மனிதத் தன்மையும் வரப்போகிறது என்றும் அவ் வளவு தூரம்தான் அவன் உண் மையான தமிழனாய் இருக்க முடியும் என்றும் வலிமையாய் கூறுகிறேன்.
குடிஅரசு, கட்டுரை - 30-.10.-1943

மாணவர்களும் பொதுநலத் தொண்டும்!


தோழர்களே!
இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்பட்டு வருகிறது. அப்படிக் கூடுவதில் ஆரியர்கள் முயற்சியில், ஆரியர்கள் ஆதிக்கத்தில், ஆரிய மாணவர்களால் கூட்டப்படும் மாணவர் மாநாடு என்பதாகச் சிலவும், ஆரிய முயற்சியோ, ஆரிய ஆதிக்கமோ, ஆரிய மாணவர் கலப்போ சிறிதும் இல்லாமல் திராவிட மாணவர்களாலேயே கூட்டப்படுவன பலவுமாக இருந்து வருவதைக் காண்கின்றோம். ஆரிய ஆதிக்க, ஆரிய மாணவர் பெரிதும்கொண்ட முதல் கூறப்பட்ட மாநாடுகளின் நடவடிக்கைகள் தேசியம் என்கின்ற ஆரியச் சூழ்ச்சியை அடிப்படையாய் வைத்து இந்நாட்டில் என்றும் திராவிடர்கள் மீது ஆரிய ஆதிக்கமும் சுரண்டலும் நிலைத்து வருவதற்கே பாதுகாப்பாக நடந்து வந்ததையும் - வருவதையும் காண்கின்றோம். மேலும் அந்த ஆரிய ஆதிக்க மாணவர் மாநாட்டில் திராவிட மாணவர்கள் சிலர் கலந்திருந்தாலும் அவர்களுக்கு (அத்திராவிட மாணவர்களுக்கு) தங்கள் (திராவிட) நாட்டைப் பற்றியோ தங்கள் (திராவிட) இனத்தைப் பற்றியோ கவலை இல்லாததும், அவைகளைப்பற்றி அம்மகாநாட்டில் சிறிதும் பேசக்கூடாத நிபந்தனைக்குள் அடங்கியதும் ஆன ஆரியக்கூலி, ஆரிய அடிவருடி, திராவிடத் தன்மானமற்ற தன்மை கொண்ட யோக்கியதைதான் யோக்யாம்சமாக இருந்து வருகிறது. பின்னவர்களுக்கு என்றாலோ திராவிட நாட்டுப் பற்றும், திராவிட இனப்பற்றும், தன்மானமும் முக்கிய குறிக்கோளாகக் கொண்ட யோக்கியதாம்சம் இருந்து வருகிறது.
இந்தக் குறிக்கோள் உணர்ச்சியானது இதுவரை திராவிட மக்களுக்கு அவர்களது கல்வியாலும் தேசியத் தாலும், மற்றும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆரியர்களாலும் கடுகளவுகூட ஏற்படுவதற்கு இடமில்லா மல் போனதோடு இவை அடியோடு மறந்துவிடுவதற்கு அனுகூலமாகவே செய்யப்பட்டு வந்திருக்கின்றன. இந்த நாட்டில் ஆரியத்திற்கும் ஆரிய தேசியத்திற்கும் எதிராக எத்தனையோ நாளாக எவ்வளவோ முயற்சிகள் செய்யப்பட்டுவந்தும் திராவிட மாணவர்களுக்கு சிறிதுகூட உணர்ச்சி ஏற்படமுடியாமலே இருந்து வந்திருக்கின்றது. மற்றும் நான் முன் சொன்னது போல் திராவிட மாணவர்களுக்கு இந்நிலை ஏற்பட அவர்களது கல்வி, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், கல்வி ஸ்தாபனம், அதை நடத்தும் ஆட்சி ஆகியவைகளும் காரணமாக இருந்து வருகிறது. ஏன்? மேற்கண்ட யாவற்றிலும் ஆரியம்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இவைகளை எவர் மறுக்க முடியும்?
சர்க்கார் தன்மை
நம் சர்க்காருக்கு நம் கல்வியைப் பற்றி உள்ள கவலை எல்லாம், தாங்கள் இந்த நாட்டில் நிலைத்து ஆட்சி செலுத்த இந்த நாட்டு மக்களே நமக்கு நிபந்தனை இல்லாத அடிமைகளாயிருக்க போட்டி போட்டுக் கொண்டு வந்து நம் காலடியில் விழுந்து கிடக்கத் தகுதி உடைய மாதிரி கல்வி இருக்க வேண்டும் என்பது முக்கியமாகும். அதற்கு அவர்களுக்குத் தரகர்களாக இருந்து நடத்திக் கொடுப்பவர்கள் இந்த நாட்டு ஆரியர்களேயாகும். இதற்கு சர்க்கார் இந்த ஆரியர்களுக்குக் கொடுக்கும் பிரதிபலன் கல்வியையும், கல்வி கற்பிப்பதையும், அதை நிர்வகிப்பதையும் ஆரியரிடம் ஒப்புவித்து அவர்களுக்கு ஏராளமாக ஆசிரியர் பதவி, பாடப் புத்தகம் எழுதுதல், பரீட்சை திருத்தல், கல்வி அதிகாரி ஆகியவை பேரால் சம்பளம் சன்மானம் வருமானம் ஆகியவைகளுக்கு அள்ளிக்கொடுத்து வருவதேயாகும். ஆரியர்கள் இந்தக் காரியங்களால் இந்த நிலையைத் தங்களுக்கு ஆக்கிக் கொண்டு, இவற்றின் மூலம் சர்க்காருக்கு அடிமைகளைக் கொடுத்து உதவுவதோடு, தங்கள் ஆதிக்கத்திற்கும் வசதி செய்து கொண்டு, இந்த நாட்டு மாணவர்களை நான் மேற்சொன்னமாதிரி நாட்டுப்பற்று, இனப்பற்று, மானப்பற்று இல்லாமல் செய்து வருவதுடன் அவன் (மாணவன்) மூளையையும் கெடுத்து முட்டாள் மூடநம்பிக்கைக்காரனாக்கி, அவனை மனிதத் தன்மைக்கே இலாயக்கற்றவர்களாக ஆக்கி தங்களுக்கும் நிரந்தர அடிமையாக ஆக்கிக்கொள்ளுகிறார்கள்.
கல்வி கற்றவர் நிலை
இதனால்தான் இன்று சமீபகாலம் வரை இந்தக் கல்வி கற்ற ஒரு திராவிடனுக்குக்கூட நாட்டுப்பற்று, இனப்பற்று, மானப்பற்று இருப்பதைக் காணுவது மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது. ஆங்கிலம் கற்றவர்களுக்குள்ளும் இல்லை, தமிழ் கற்றவர்களுக்குள்ளும் இல்லை என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. உதாரணமாக, திராவிட மக்களின் ஆங்கில உயர்தரக் கல்வி கற்று உயர்ந்த பட்டம் பெற்று கல்வி இலாகா முதல், பெரும் பெரும் பதவிகள் பெற்று உயர் நிலை அனுபவித்தவர்களில் இன்று எத்தனை பேருக்கு இனப்பற்று, நாட்டுப்பற்று இருக்கிறது என்பதாகக் கணக்குப் போட்டுப் பாருங்கள். ஆனால் இவர்களில் எதிரிகளுக்கு அடிமையாய், கையாளாய், ஆதரவாளர்களாய், எதிரிகளின் ஆதிக்க ஆதாரங்களைப் பிரசாரம் செய்யும் கூலிகளாய் இல்லாதவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கணக்குப் பாருங்கள், பிந்தினவர்களில் இந்தப்படி இல்லாதவர்களைக் காண்பதே அரிதாய் இருக்கிறதா இல்லையா என்று கேட்கிறேன். கல்வியின் தன்மை இதற்கு ஆக நான் இந்தப்படியான அதாவது இக்கல்வி கற்ற திராவிட நபர்களின் மீது குற்றம் சொல்ல வரவில்லை. மற்றென்னவென்றால் அந்தக் கல்வியின் தன்மையும் பயனும் அப்படிப்பட்டதென்றும், அது இனியும் நம் மக்களைப் பெரிதும் அப்படித்தான் செய்யும் என்றும் சொல்லுவதற்காகவே இதை வலியுறுத்திக் கூறுகிறேன். இதை நீங்கள் முதலில் உணரவேண்டும். பொதுவாகவே இந்த இன்றைய கல்வியின் தன்மையையும் பயனையும் பற்றி நான் மாத்திரம் இப்படிச் சொல்லவில்லை. சுமார் 30 வருஷங்களுக்கு மேலாகவே அனேக கல்வியாளர்கள், பொதுஜனத் தலைவர்கள் என்பவர்கள், பேரறிவாளர்கள் என்பவர்கள் குறைகூறி வந்திருக்கிறார்கள். இந்தக் கல்வி அடிமைக் கல்வி என்றும், அறிவுக்கு ஏற்றதல்ல என்றும் சொல்லிவந்திருக்கிறார்கள். சமீப 30 வருஷ காலத்தில் இன்றைய கல்வியை இகழாதவர்களும், புகழ்ந்து கூறியவர்களும் மிகமிக அரிதாகும்.
காந்தியார் சொன்னதே இது
மற்றும் இன்றைக்கு 25 வருஷங்களுக்கு முன்னால் காந்தியார் மாணவர்களைப் பள்ளியைவிட்டு வெளியில் வந்து சமுதாய அரசியல் தொண்டாற்றும்படியும், சர்க்காரோடு ஒத்துழையாமையும், மறியலும், சட்டமறுப்பும் செய்யும்படியும் அழைத்த காலத்திலும் மாணவர்களுக்கு எடுத்துச் சொன்ன காரணங்களில் இந்தக் கல்வி பயனற்றது, அடிமைத்தன்மை பயக்கக்கூடியது, நாட்டுப்பற்றை மறக்கடிப்பது என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். அந்த வார்த்தையைக் கேட்டுத்தான் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளியை விட்டு வெளிவந்து காங்கிரஸ் தொண்டாற்றி, காங்கிரஸ் என்னும் ஆரிய ஸ்தாபனத்தை இன்றைய நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆகவே இந்தக்கல்வி பயனற்றது, என்றும் இதைவிட்டு வெளிவந்து மாணவர்கள் நாட்டுக்கும், இனத்துக்கும் பாடுபட வேண்டியது மாணவர் கடமை என்றும் சொல்லுவது குற்ற முடையதாகவோ, புதியதாகவோ ஆகிவிடாது என்கிறேன்.
மாணவர்களும் பொதுநலத் தொண்டும் மாணவர்கள் பொதுநலத் தொண்டாற்றுவது கூடாது என்று யாரும் சொல்லமுடியாது. சுய நலனுக்கு ஆக தன் மகனைப் படிக்கவைக்கின்ற பெற்றோருக்கும், சுயநல வாழ்வுக்கு ஆகவே படிக்கும் மாணவனுக்கும் வேண்டுமானால் மாணவர் பொதுத்தொண்டாற்றுவது குற்றம் எனலாம். அல்லது இக்கல்வியினால் பொதுநல உணர்ச்சி அறிவுப் பெருக்கம் ஏற்படுகிறது என்றாவது ருஜுப்பிப்பதானால் இந்தப் பருவத்தைக் கல்விக்கும், பொதுநலத் தொண்டிற்கும் சேர்ந்து பயன்படுத்துவது கல்விக்குக் குந்தகமாகும் என்று சொல்லலாம்.
எப்படி இருந்த போதிலும் இன்று பொதுநலத் தொண்டாற்றுவதற்கு அதாவது நம்நாட்டின் மேன்மைக்கும், இனத்தின் தன்மானத்துடன் கூடிய உயர்வுக்கும், வெகுநாளாக நம் இனத்திற்கு இருந்துவரும் இழிவும், முற்போக்கு முட்டுக்கட்டையும், அந்நியன் சுரண்டலும், ஆதிக்கமும் ஒழியப் பாடுபடுவதற்கும் யாராவது ஒருவர் அல்லது ஒரு கூட்டம் இருந்துதானே ஆகவேண்டும்? இக்காரியத்திற்குப் பாடுபட இன்று நம்மில் யார் இருக்கிறார்கள்? முதலாளி படிப்பாளி வர்க்கம்
இராஜாக்களும், ஜமீன்தார்களும், இராஜா, சர், திவான் பகதூர் முதலிய பட்டவான்களும், கோடீஸ்வரர்களும், லட்சாதிபதிகளும், ராஜமன்னார்களும், எதிராஜுகளும், கதிரேசர்களும், கல்யாணசுந்ததிரங்களும், மீனாட்சிசுந்தரன் களும், சிதம்பரநாதர்களும் ஆகிய பட்டம், பதவி, செல்வம், வக்கீல் நிபுணத்துவம், தமிழ்ப் புலமை முதலியவைகளில் விளம்பரம் பெற்றவர்களும் பயன்படுவார்களா? முன்வரு வார்களா? அல்லது இதுவரை இக் கூட்டங்களால் தங்கள் நலனுக்கு பெருமைக்குப் பதவிக்கு அல்லாமல் வேறு காரியம் அதாவது நம் இழிவு நீங்க, நம்நாடு பெருமை பெற நம் சுரண்டல்கள் ஒழிய நம்மை இழிவுபடுத்தும் ஆதாரங்கள் ஒழிய ஏதாவது நடந்திருக்கிறதா?
கோவில் கட்டுவார்கள்; அன்னச் சத்திரம், மடம் கட்டு வார்கள். ஆரிய ஆதிக்க ஆதாரங்களுக்கும், சமயத்திற்கும், சட்டத்திற்கும் அடிமைகளாகி அவற்றைப் பெருக்கி மற்ற மக்களையும் அதில் திருப்பிவிடுவார்கள்; அல்லது தன் காரியத்திற்கு எதையும் செய்வார்கள்; அல்லது தன் காரியத்தைத் தவிர வேறு எதையும் சிந்தையில் கொள்ளார்கள். இவைதானே சாதாரணமாக இக் கூட்டத்தாரால் நடைபெற்று வருகின்றன? மில் முதலாளிகள், வர்த்தகர்கள், பாங்கர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், குட்டிப் பண்டிதர்கள், உபாத்தியாயர்கள் ஆகியவர்களில் பெரும்பான்மை மக்களைப் பாருங்கள். பிரின்ஸ்பால்கள் வைஸ்சேன்ஸ்லர்கள் அதிகாரிகள் ஆகியவர் களையும் பாருங்கள். இவர்கள் இத்தனை பேர்களிலும் திராவிடர்களைப் பிறவி இழிமக்களாய்க் கருதும்படி செய்யும் ஆரிய சமயத்தை வெறுத்தவர்கள் எத்தனைபேர்? ஆரியர்கள் ஆதிக்க ஆதாரங்களை வெறுத்தவர்கள் எத்தனை பேர்? மற்றதைச் சொல்ல வாய் கூசுகிறது.
யாருக்கு இன உணர்ச்சி இருக்கிறது?
கடைசியாகச் சொல்லுகிறேன் உங்கள் பெற்றோர்களில் தானாகட்டும் எத்தனை பேருக்கு இன உணர்ச்சியும், இன இழிவை நீக்கவேண்டும் என்கின்ற மான உணர்ச்சியும் இருக்கிறது? மற்றும் திராவிடரில் எந்தக் கூத்தாடிக்காவது, காசுக்குப் பாடுகிறவனுக்காவது எத்தனை பேருக்கு இன, மான உணர்ச்சி இருக்கிறது? இதே தன்மைகளை எடுத்துக் கொண்டு அவை ஆரியர்களுக்குள் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
உங்களைத் தவிர வேறுகதி இல்லை
இந்த நிலையில் மாணவர்களே! உங்களைத் தவிர இந்தக் கேடுகெட்ட நாட்டை, இழிவுபட்ட இனத்தை மேம்படுத்த யார் இருக்கிறார்கள்? நீங்கள் இன்றைய படிப்பைப் படித்துத் தேர்ந்து என்ன செய்யப்போகிறீர்கள்? நீ தேறுவதே கஷ்டம்; தேர்ந்த வுடன் விண்ணப்பம் எழுதிக்கொண்டு வீணர்களின் வீட்டுவாயிலுக்கு சம்பள வேலை தேடி யாத்திரை திரியப் போகிறீர்கள். அதில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? வேலை கிடைத்தால்தான் நீங்கள் சாதிக்கப்போவதென்ன? லஞ்சம் வாங்காவிட்டால் பணம் மிஞ்சுமா? மானமிழக்கா விட்டால் உத்தியோகம்தான் மிஞ்சுமா?
படித்தவர்களைப் பாருங்கள்
உங்களுக்கு முன்பு படித்து உத்தியோக வேலை பெற்று, பதவிபெற்று பிரபலமும் பணமும் பெற்ற திராவிட மக்களின் யோக்கியதையைப் பாருங்கள். முதலாவது, வேலைக்குப் போனால் நன்றியைக் கொன்று தின்றுவிட வேண்டும்; ஒரு சிறு பிரமோஷனுக்கு ஆக முன்பு வேலை வாங்கிக் கொடுத்தவன் கழுத்தைத் திருகச் சம்மதித் துப் புதுப் பிரமோஷனுக்கு சிபார்சு செய்கிறவனுடையவோ அல்லது பிரமோஷன் கொடுப்பவனுடையவோ கால் விரலை சப்பவேண்டும். இந்தப்படி நடக்காவிட்டால் (உத்தியோகத்தில்) வேலையில் முன்னேறவோ, வெற்றிபெறவோ முடியாது. இவ்வளவும் செய்து பெரிய பதவிபெற்று விட்டதாகவே வைத்துக் கொண்டாலும் அதைக் காப்பாற்றிக்கொள்ளப் பாடுபடுவதைத் தவிர மேலே போகப் பார்ப்பதைத் தவிர நாட்டுக்கு, இனத்திற்கு என்ன செய்ய முடிகிறது?
பதவியினால் நம் மக்களுக்கு, நாட்டுக்கு ஒரு நல்ல நலன் செய்த ஒரு இரண்டு மூன்று ஆளைக் காட்டுங்கள் பார்ப்போம், இன்னிலையில் நீங்களும் அதேமாதிரி படிப்புப் படித்து அதே வேலை செய்வதில் என்ன பலன்?
இதைத்தான் நான் சொல்லி உங்களைச் சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேனே ஒழிய உங்களைப் படிக்காமல் செய்து கெடுப்பதற்கு ஆக அல்ல அல்ல என்று சொல்லுகிறேன்.
ஆசிரியர்கள்
ஆசிரியர்களை நான் குறைவாகப் பேசியதாக சிலரால் சொல்லப்படுகிறது. ஆசிரியர்களில் நான் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை கூறவில்லை. ஆசிரியர்கள் என்றால் மேலே குறிப்பிட்ட ராஜாக்கள், சர்கள் முதலியவர்களைவிட என்ன பெரிய யோக்கியதை உடையவர்களாவார்கள். ஆசிரியர்கள் மற்ற உத்தியோகம், சேவைக்காரர்கள் போன்றவர்களைப் போல் ஊதியத்திற்கு உழைப்பவர்கள் தானே என்று சொல்லுகிறேன். இவர்கள் தனிப்பெருமை, ஆசிரம குரு பக்தி ஆகியவை களை எதற்காக உரிமை பாராட்டுகிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை.
ஆசிரியர்கள் ஆசிரிய வேலைக்கென சர்க்காரால் சர்க்கார் நலனுக்குப் படிக்க வைத்து, படிக்க வைத்ததையே படிப்பிக்க பள்ளிக்கூடச் சொந்தக்காரர்களால் சம்பளத்துக்கு நியமிக்கப்படுகிறவர்கள் ஆவார்கள். இவர்களது சொந்தப் புத்திக்கு ஒப்பமுடியாத படிப்பாயிருந்தாலும் சம்பளத்துக்கு ஆக கண்டிப்பாய் கோடுதாண்டாமல் படிப்பிக்க வேண்டிய அடிமைகளேயாவார்கள். இவர்களது ஆசிரியர் வேலையும் மற்றவர்களுக்கு அவர்களது வாழ்விற்காகப் பயன்படுகிற தேடிப்பிடிக்கின்ற வேலையைப் போலவே ஒரு வாழ்வு அல்லது வயிற்றுப் பிழைப்பு வேலையாக அமைந்ததே தவிர மற்றபடி யான ஒரு பெரிய தன்னல மறுப்பு (தியாகம்) பொருந்திய சேவையும் வேலையுமல்ல.
இன்றைய படிப்பு பயனற்றது, அறிவுக்குப் பயன்படாதது, நாட்டு நல உணர்ச்சியும், இன நல உணர்ச்சியும் அற்றது. அடிமைத் தன்மையைக் கற்பிக்கக்கூடியது என்பது விவாதத் திற்கு இடமில்லாமல் இவர்களுக்கும் அதிகமாகப் படித்த, அதிகப் பெருமை உடையவர்களால் ஒப்பமுடிந்தது என்று ஆன பிறகு இந்தப் படிப்பைக் கற்றுக் கொடுத்து வாழும் வயிறு பிழைக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பும் ஆச்சாரியர் குருபட்டமும் எப்படிப் பொருந்த முடியும்? சர்க்கார் உத்தியோகமே அடிமை வேலை என்று பல அறிஞர்கள், ஏன் சர்க்கார் அதிகாரிகளே பலர் சொல்லும் போது இந்த மாதிரி அடிமைகளை தயார் பண்ணுபவர்கள் எப்படி மதிக்கப்படத் தகுதி உள்ளவர்கள் ஆகமுடியும்?
பள்ளிக்கூடமும், காப்பிக்கடையும்
பள்ளிக்கூடங்கள், இன்று காப்பி ஓட்டல்கள் முதலிய வைகள் போல் ஒரு வியாபாரி ஸ்தலமாக ஆகிவிட்டன. பெரும்பான்மையான அய்ஸ்கூல்கள் இன்று வருடம் 3,000, 4,000, 5,000 ரூபாய் இலாபத்தில் நடைபெறுகின்றன. காலேஜூகளும் பல வழிகளில் ஸ்தாபகர்களுக்கு வியா பாரத்தைப் போலவே ஆதாயத்தை கொடுத்து வருகின்றன.
இந்த காப்பிக்கடை போன்ற பள்ளிக்கூடக் கடைகளில் காப்பி வினியோகிப்பதற்குப் பதிலாக கல்வி விநியோகிக்க (பரிமார) அமர்த்தப்பட்ட நபர்கள், அதுவும் முதலாளி சொன்னபடி அவன் தயாரித்த பதார்த்தங்களை அளவுப்படி குறிப்பிட்ட விலைக்குப் பரிமாரும் நபர்கள், எப்படி அன்னசத்திரம், காப்பி பலகார சத்திரம், கல்வி சத்திரம் வைத்த (கல்வி தானம் செய்த) பெருமையை அடைய உரியவர்கள் ஆவார்கள்?
ஒருவன் எஸ்.எஸ்.எல்.சி. படிக்க மாதம் 6 அல்லது 7 ரூபாய் செலவு செய்ய வேண்டும். ஒருவன் எஃப்.ஏ., பி.ஏ., படிக்க மாதம் 15, 20 ரூபாய் செலவு செய்ய வேண்டும். அயலூரில் போய் படித்தால் மேற்கொண்டு மாதம் 20, 30 ரூபாயாவது செலவு செய்ய வேண்டும். இந்நாட்டு மக்களின் சராசரி வரும்படி மாதம் 10, 15 ரூபாய்கூட இல்லை. உபாத்தியாயர்களுக்குச் சம்பளம் எஸ்.எஸ்.எல்.சி., (அய்ஸ்கூல்) வகுப்பு உபாத்தியாயரானால் மாதம் சராசரி 100 ரூபாய், காலேஜ் உபாத்தியாயர் சம்பளமானால் மாதம் சராசரி 150 அல்லது 200 ரூபாய். இவை தவிர 500, 700, 1000 ரூபாயும் உண்டு. இப்படிச் சம்பளம் பெற்று 360 நாள்களில் 180 நாள் பள்ளிக் கூடம் திறந்து அதுவும் தொழிலாளிபெற்றோர் ஆகியவர்கள் தினம் 10 மணி நேரம் வேலை செய்தால் அவன் மக்களுக்கு சம்பளம் பெற்று 5 மணி நேரம் மாத்திரம் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிற உத்தியோகமும் நூற்றுக்கணக்கான ரூபாய் வருவாயும் உள்ளவர்கள். இந்தத் தொழிலை நல்ல வரும்படியும், சுகமும் உள்ள தொழில் என்று சொல்லலாமே தவிர இதை தெய்வீகமும் தன்னல மறுப்பும் உள்ள பாராட்டிப் பெருமைப்படுத்தி குருபீட பக்தியும் நன்றிவிசு வாமும் காட்டப்படவேண்டிய தொழில் என்று சொல்ல என்ன ஆதாரம் இருக்கிறது? எங்கே இடமிருக்கிறது என்று யோசித்துப் பார்க்கும்படி என்னைக் குறைகூறும் ஆசிரியர்களை விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன்.
ஆசிரியர் கல்வி அறிவு
இந்து தேச சரித்திரம் கற்பிக்கும் சரித்திர ஆசிரியர் சரித்திரத்தோடு சரித்திரமாய் இராமாயண பாரதத்தையும் கற்பித்துவிடுகிறார். இந்து தேச சரித்திரத்துடனே இராமா யணமும், பாரதமும் பாடமாக வைக்கப்பட்ட புத்தகங்களே இந்த ஆசிரியர்களால் எழுதப்பட்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட ஆசிரியர்கள் சரித்திர புத்தகம் எழுதின தற்காகவோ, அல்லது சரித்திரப் பாடம் கற்பிப்பதற்காகவோ எப்படிப் போற்றப்பட்டவர்கள் ஆவார்கள்? இவர்கள் எஜமானர்களுக்கு (அதாவது கல்வி இலாக்காவுக்கு) அடிமையாய் இருந்து கூலிக்குத் தொண்டாற்றுகிறவர்கள் என்றுதான் கருதும்படி நடந்து கொள்கிறார்களே ஒழிய பாடப் புத்தகத்தில் உள்ள தவறுகளைக் கண்டித்து மறுத்துப் பிள்ளைகளுக்குக் கற்பிப்பதில்லை. கற்பிக்க உரிமை கொண்டாடுவதுமில்லை. இப்படிப்பட்ட ஊதியத் தொண்டர்கள் பணம் செலவழித்தும் நாள்கள் பல கழிந்தும் பயனேற்படுவதில்லையே என்பவர்கள் மீது கோபித்து என்ன பயன்? செய்வதையும் செய்துவிட்டு தங்கள் பரிதா பத்தைப் பற்றி நினைக்காமல் எடுத்துக்காட்டுபவர்களை கோபித்தால் கல்வியின் தரம் உயர்ந்துவிடுமா? ஆசிரியர் தன்மை மேம்பட்டு விடுமா? இப்படியே பூகோளம், வானசாஸ்திரம் ஆகியவைகளையும் எடுத்துப் பாருங்கள்.
சயன்ஸ் படித்த, உடல்கூறு, சாத்திரம் படித்த எந்த உபாத்தியாயர் கிரகணத்துக்கு தீட்டுகழிக்க முழுகாமலும் ஊறுகாய்ச் சட்டி, உப்புச்சட்டி ஆகியவைகளுக்கு சாந்தி கழிக்காமலும் வீட்டுக்கு விலக்கான பெண்களைத் தீண்டாதவர்களாய், நிழல்படாதவர்களால் பாவிக்காமலும் எத்தனை உபாத்தியாயர்கள் இருக்கிறார்கள்? புராணங் களை சமய ஆதாரமாக புராணக் கதைகளை வாழ்க்கைக்கு வழிகோலியாய் இருக்கத்தக்க விதம் படிப்பிக்காத, புராணக் கதைகள்படி கடவுள்கள், பண்டிகைகள், உற்சவங்கள், அறிகுறிகள் கொண்டாடாத உபாத்தியாயர்கள் எத்தனை பேர்கள் இருக்கக்கூடும்? இவர்களால் இவற்றால் இதனால் எல்லாம் இவ்வளவு செலவு செய்து படிக்கும் பிள்ளை களுக்கு என்ன லாபம் இருக்கிறது. இதுவரை படித்து வந்த இந்நதப் படிப்பினால் நாடும் இனமும், அடைந்த பயன் என்ன? சூத்திரன் என்பதற்கு வெட்கப்பட்டு புரட்சி செய்ய எவருக்கு உணர்ச்சி ஏற்பட்டது? ஏற்படாவிட்டாலும் காரியத்தில் வாழ்க்கையில் அடியோடு அவ்வாதாரங்களை வெறுத்த ஆசிரியர் எத்தனை பேர் உண்டு?
ஆகவே மாணவர்களே நீங்கள் இந்தப்படிப்பு படிக்கா விட்டால் அறிவே இல்லாதவர்களாக ஆகிவிடமாட்டார்கள். இந்தப் படிப்புப் படித்ததினாலேயே பெரிய அறிவாளி ஆகிவிட மாட்டீர்கள். நீங்கள் படிக்கும் இவ்வளவு சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், வான சாஸ்திரம், உடல்கூறு சாஸ்திரம் முதலியவை உங்கள் வாழ்வில், நீங்கள் டிப்டி கலெக்டரோ, கலெக்டரோ, முன்சீப்போ, ஜட்ஜியோ ஆனாலும்கூட அதற்கு எதாவது பயன்படுகிறதா? பரீட்சையில் உங்களை வாட்டவும் உங்கள் படிப்பை நீடிக்கச் செய்யவும் படிப்புக்கு அதிகப் பணம் செலவு செய்யவும் இதன் பேரால் பலர் பிழைக்கவும் பயன்படுவதல்லாமல் தங்கள் உத்தியோகத் தினசரி நடப்புக்குப் பயன்படுகிறதா?
எனவே எவ்வளவு மோசமான கல்வி? எவ்வளவு மோசமான கல்வி ஸ்தாபனம்? எவ்வளவு மோசமான ஆசிரியர், எவ்வளவு மோசமான, படிப்பிக்கும் தன்மை? என்று பாருங்கள்.
(18.02.1945 அன்று திருச்சி வடமண்டல திராவிட மாணவர் மாநாட்டைத் திறந்து வைத்தபோது மூவாயிரம் மாணவர்களுக்கிடையில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு -  24.01.1945