Sunday, April 28, 2013

திராவிடர் கழகமே தொழிலாளர் ஸ்தாபனம்தான்


பேரன்புமிக்க தலைவரவர்களே, தாய்மார்களே! தோழர்களே!! இன்று நடைபெறும் இவ்வாண்டு விழாவிலே நான் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது குறித்துப் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். மற்றும் என்னைப் பெருமைப்படுத்தி வாழ்த்துரைகள் வழங்கிய தொழிற் சங்கங்களுக்கும் அவற்றின் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள் ளுகிறேன். பெருமைப்படுகிறேன் தொழிலாளர் நிறைந்த இப்பகுதியிலே திராவிடர் வாலிபர் கழகம் 8 ஆண்டுகளாக வேலை செய்து வருவதையறிந்து நான் பெருமைப்படுகிறேன். காரணம் என்ன? தொழிலாளருக்கு உள்ளபடியே பாடுபடும் ஸ்தாபனம் திராவிடர் கழகம் ஒன்றுதான் என்பதுவே யாகும். மற்ற ஸ்தாபனங்கள் தொழிலாளர்க்கும் - முதலாளிக்கும் இடையேயிருந்து தங்கள் தங்கள் நலனைச் சாதித்துக் கொள்பவைகள் என்பதே எனது அழுத்தந்திருத்தமான எண்ணமாகும். இவ்வபிப் பிராயம் இன்று நேற்றல்ல எனக்கு ஏற்பட்டது, கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தக் கருத்து எனக்கு இருந்துவருகிறது. இன்றைய நிலையில் அவ்வெண் ணம் மேலும் ஊர்ஜிதமாகிவிட்டதை நான் காண் கிறேன்.
இஷ்டமில்லை என்றாலும்...
சில மாதங்களுக்குமுன் நடைபெறுவதாயிருந்த அகிலஇந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தின்போது பத்திரிகைக்காரர்கள் அதுபற்றி எனது அபிப்பிராயம் கேட்டனர். அது சமயம் நான் திருச்சியில் நமது கழக நிர்வாகத் தலைவர் தோழர் டி.பி.வேதாசலம் அவர்கள் இல்லத்தில் தங்கியி ருந்தேன். அங்குதான் பத்திரிகை நிருபர்கள் என்னைச் சந்தித்தது. வேலை நிறுத்தம் செய்வது எனக்கு இஷ்ட மில்லை. ஆனால், வேலை நிறுத்தம் தொடங்கி விட்டால் அதைத்தான் நான் ஆதரிப்பேன் என்றேன். இவ்வாறு கூறுவது எங்களுக்குப் புரியவில்லையே என்றனர் பத்திரிகை நிருபர்கள்.
உங்களுக்குப் புரியாதுதான், நான் புரியும்படி விளக்கம் கூறுகிறேன் என்று மேலும் அவர்களிடம் நான் சொன்னேன், நமது குழந்தைகள் இருக்கின்றன; நெருப்புக்கிட்டே போகாதே என்று எவ்வளவோ பயப் படுத்தித்தான் வைக்கிறோம். எனினும் அக்குழந்தை தீயில் குதித்துவிட்டு, அய்யயோ சுடுதே! சுடுதே!! என்று அலறும்போது, பெற்றெடுத்த தாயோ, தகப் பனாரோ அந்தக் குழந்தையை மேலும் ஏன் தீயில் குதித்தாய் என்று கடிந்து இரண்டு உதை கொடுப்பது அறிவுடைமையாகுமா? அவர்கள் செய்தது தவறா யிருப்பினும் அந்தச் சமயத்தில் நாம் அவர்களைக் கடிந்து தண்டிப்பது நியாயமில்லையல்லவா? அதேபோன்று வேலை நிறுத்தம் கூடாதென்று கடைசி நேரம்வரை நான் ஒவ்வொரு வேலைநிறுத்தக் காலங்களிலும் கூறி வந்திருக்கிறேன். இதனால் நான் தொழிலாளிக்கும் துரோகி என்றுகூடக் கெட்ட பெயர் சூட்டப்பட்டேன். ஆனால் வேறு வழியின்றி வேலை நிறுத்தம் துவக்கப்பட்டுவிட்டால், மற்றவர்களைக் காட்டிலும் நானே அதில் அதிக கவலைப்பட்டு என்னாலியன்ற தொண்டு புரிந்து வந்திருக்கிறேன். அத்தன்மையிலேயே அனைத்து இந்திய ரெயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தம் அறவே கூடாதென் பதும், எக்காரணத்தாலேனும் துவக்கப்பட்டு விட்டால் நானும் எனது இயக்கத்தாராகிய திராவிடர் கழகத்தினரும் ஆதரித்தே தீருவோம் என்பதும் என்று கூறினேன். இவையனைத்தையும் பத்திரிகை நிருபர்கள் எழுதிக் கொண்டார்கள். ஆனால் அதைச் சிறிதுகூட வெளியிடவேயில்லை.
பத்திரிகைகளின் மோசடி
சில நாள்கழித்து மற்றொரு காரியமாக அதே நிருபர்கள் என்னிடம் வந்தனர். என்னையா! முன்பு தாங்கள் எடுத்துக் கொண்ட செய்தி வெளியிடவே யில்லை. மீண்டும் வேறு காரியத்துக்காக என்னை அபிப்பிராயம் கேட்க வந்துவிட்டீர்களே என்று சற்று கோபமாகக் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்; நாங்கள் என்ன செய்வது? நீங்கள் தொழிலாளரின் வேலை நிறுத்தத்திற்கு எதிரிடையாக அபிப்பிராயம் கூறுவீர்கள் என்று பத்திரிகை உலகத்தார் நினைத் தார்கள்போலும். ஆகவேதான் நாங்கள் அனுப்பிய செய்தியை கத்திரித்து விட்டார்கள். அது எங்கள் குற்றமல்ல, பத்திராதிபர்களின் குற்றமாகும் என்றனர்.
நம் தொண்டின் முக்கியம்
இதை ஏன் கூறுகிறேன் என்றால், சுயமரியாதை இயக்கமோ அல்லது திராவிடர் கழகமோ ஆற்றும் பொதுத் தொண்டுக்கு ஏதாவது முக்கியமிருப்பின், அது பாடு பட்டுழைத்துப் பலனறியாது தவிக்கும் ஏமாந்து வாழும் தொழிலாளிகளுக்கும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினருக்கும் நல்வாழ்வை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை என் பதை எடுத்துக்காட்டவே யாகும். இதைத் தவிர, எங்களுக்கு பட்டம், பதவி, தேர்தல், ஓட்டு முதலியவை களில் கவலையும் கருத்தும் வைத்து அதற்காக தொழிலாளர் தயவைப் பெற அவர்களிடத்திலே வீண் படாடோப வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி, கட்சியின் அரசியல் ஆதிக் கத்துக்காக அவர்களது சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் சூதோ, சூழ்ச்சியோ எங்களிடத்தில் கிடையாது.
தொழிலாளரின் குறைகள்
பொதுவாக தொழிலாளர்களும் அவ்வித ஏமாற்று வலைகளில் சிக்கி மயங்கி தம் வாழ்வைக் கெடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களேயன்றி, சிறிதாவது அறிவு வளர்ச்சி பெற்றவர்களாக ஆவதற்கு முயற்சி செய்வது கிடையாது. தொழிலாளர் அவ்வித அறிவு பெற்றுவிட்டால், எந்த அரசியல் கட்சிக்காரர்தான் அவர்களை ஏமாற்ற முடியுமென்று கேட்கிறேன். உங்களது ஒன்றுபட்ட சக்தியை நீங்கள் உணர்ந்துவிட்டால் உங்களை எதிர்க்க யாரால் முடியும்? ஆனால் இன்று தொழிலாளர்களாகிய நீங்கள் அரசியலின்பேரால் பலவிதப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒற்றுமையின்றி வாழ்கின்றீர்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, சோசிய லிஸ்ட்டு, தீவிரவாதி என்று இவ்வாறாகப் பிரிக்கப்பட்டு உங்களுக்குள்ளாகவே ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொள்வதும், அடி தடிகளில் இறங்குவதும், போட்டிச் சங்கங்கள் அமைப்பதும், காட்டிக்கொடுப்பதும் ஆன காரியங்கள்தான் இன்றையத் தொழிலாளர் இயக்கமாக இருந்துவருகிறது.
இன்றைய தொழிலாளர் தலைவர்கள் எனப்படு வோரின் தொண்டும், இப்படியாகக் கட்சிப் பிரிவினை களை உண்டாக்கித், தமது சுயநலத்துக்காகப் பயன் படுத்திக் கொள்வதாக இருக்கிறதேயன்றி, இதுவரை இவ்விதக்கட்சிப் போட்டிகளால் தொழிலாளர்களுக்கு இம்மியளவாவது பயனேற்பட்டதென்று எவராவது கூற முடியுமா? என்று கேட்கிறேன். இவ்வளவுக்கும் காரணம் தொழிலாளர்கள் அறிவு வளர்ச்சி பெறாததேயாகும். எனவே தான் திராவிடர் கழகத்தாராகிய நாங்கள், அரசியலில் வீணாகக் காலங்கழிப்பதைவிட மக்களுக்கு வேண்டிய அறிவுத் துறையிலே பாடுபட்டுவருவதின் கருத் தாகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பாடுபட்டுழைத்தும் பலனறியாத பாட்டாளி மக்களுக்கும் பொதுவாக நம் நாட்டு மக்களுக்கு அறிவு, மானம், ரோஷம், உண்டாக்கும் ஸ்தாபனந்தான் திராவிடர் கழகமென்பதும், அதன் வேலை திட்டங்களுமாகும்.
ஆரியச் சூழ்ச்சி
நம் நாட்டுக்கு கி.மு.2000 ஆண்டு காலத்தில் திராவிடம் என்றே பெயர் இருந்தது. இராமாயணங்களிலும் புராணங்களிலுங்கூட நம் நாட்டுக்கு திராவிடம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆரியர் இந்நாட்டுக்குக் குடியேறிய பின்னர்தான் திராவிடம் என்பதற்குப் பதிலாக தென்னாடு என்று பெயர் கொடுக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு என்றும் வழங்கி வரலாயிற்று. திராவிடம், திராவிடர் என்பதால் ஆரியர் ஆதிக்கத்துக்கு என்றும் எதிர்ப்பு இருக்கும். ஆதலால் திராவிடம் என்ற உணர்ச் சியை அறவே அழித்தொழிக்கச் சூழ்ச்சி செய்துவரலாயினர். ஆனால் தற்சமயம் இந்நாட்டிலுள்ள பார்ப்பனர் கூறலாம்; நாங்கள் ஆரியரல்ல நாங்களும் இந்நாட்டினர் தானென்று. ஆனால் இதே சமயத்தில், நம் நாட்டுப் பற்றோ, மொழிப்பற்றோ சிறிதும் கிடையாது. ஆரியக் கலாசாரத்தையே பின்பற்றி வருவதோடல்லாமல், நமது முன்னேற்றத்தையும் முயற்சியையும் ஒழிப்பதையே அவர்களது முழுமுயற்சியாகக் கொண்டிருக்கின்றனர். இவைகளைக் கைவிடாமல் நாங்கள் ஆரியரல்ல என்று கூறிவிட்டால் போதுமா?
உதாரணமாக ஆங்கிலோ இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டுப் பார்ப்பனர்களும். ஆங்கிலோ இந்தியர்கள், நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள்தானே! ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம் நாட்டு உணர்ச்சியிருக்கிறதா? நமது மக்களைப்பார்த்தால் டேய்! தமிழ் மனுசா என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் எப்படிப் பிறந்தவர்கள் என்ற வரலாற்றை அறியாமல், தான் ஏதோ நேராக அய்ரோப்பாவில்  பிறந்து இங்கு குடியேறியது போல ஜாதி ஆணவத்துடன் அல்லவோ நடக் கிறார்கள்.
அதைப்போலவே இந்நாட்டுப் பார்ப்பனர்களும், மேல் நாட்டி லிருந்து குடியேறிய ஆரியர் களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாயிருந்தும் கூட, ஆரிய ஜாதி முறைகளையும், அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ் ஜாதிகளாக, அடிமைகளாக மதித்து நடத்துவதும், அதற்கேற்ப நம் நாட்டு மன்னர்களை ஏமாற்றி ஜாதி-மதம்-கடவுள்-புராணம்-இதிகாசம் பேரால் தங்களுக்குத் தனிச்சலுகைகளும் பெற்று, பாடுபட்டு உழைக்கும் ஏழை மக்களுக்கு வாழ்வில் வறுமையும் தொல்லையும் இருக்க, பாடுபட்டுழைக்காத ஒரு கூட்டத்துக்கு வாழ்க்கையிலே மிதமிஞ்சிய ஆதிக்கமும் இருந்து வருகிறது.
திராவிடர் உணர்ச்சி வலுத்தால்... இன்றுகூட எந்தப் பார்ப்பனனையாவது பார்த்து நீ என்னையா பிராமணனா என்று கேட்டால், இன்றைய நிலையில் அவ்வாறு கூறிக்கொள்ளச் சற்று அச்சம் கொண்டாலும், நான் பிராமணனல்ல என்று கூறுவானேயன்றி நானும் திராவிடன்தான் என்று கூற முன்வரமாட்டார்களே ஏன்? திராவிடர் என்ற உணர்ச்சி வலுத்துவிட்டால் பார்ப்பனிய ஆதிக்கத் துக்கு, அன்றே அழிவு ஏற்பட்டுவிடும் என்பதாலேயாகும்.
எனவேதான் திராவிடர் கழகத்தாராகிய நாங்கள் பார்ப்பனர்களுக்குத் தனிப்பட்ட தொல்லையோ தீங்கோ விளைவிப்பதென்பது எங்கள் கொள்கை யல்ல; பார்ப்பனியத்தை அறவே ஒழித்து மக்களிடையே ஒன்றுபட்ட சமுதாய உணர்ச்சியை உண்டாக்க வேண்டுமென்பதாகும் என்று கூறுகிறோம். இதை இந்நாட்டுப் பார்ப்பனர்கள் இனியாவது அறிந்து தம் தவறுதலைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
அதைவிடுத்து எங்களது முயற்சியை அழிக்க மேலும் சூழ்ச்சிகள் செய்வார்களேயானால் அது தமக்குத் தாமே அழிவு தேடிக்கொள்வதாக முடியும். பார்ப்பனர்களுக்கு தனித் தொழிலாளர் கழகம் என்று ஒன்று இருக்கிறதா? காரணம் என்ன? உழைக்கும்வேலை அவர்களுக்குக் கிடையாது. எதற்கும் லாயக்கற்ற பார்ப்பனனாயிருப்பினும் கடவுள் பேரால் பாடுபடாமலேயே சுகவாழ்வு வாழ்வதேன்? பிறவியின் பேரால், ஜாதியின் பேரால் ஒரு கூட்டம் ஆதிக்கம் செலுத்தும் அக்கிரமம் இந்நாட்டைத் தவிர வேறு நாட்டில் இருக்கிறதா? அதுவும் சுயராஜ்யம் பெற்றபின்னரும் இந்த அக்கிரமம் இருக்கலாமா? அறிவின் பேரால், உழைப்பின் அருமையின் பேரால் ஒருவனுக்கு உயர்வும் நல்ல பலனும் இருக்க வேண் டுமா? ஜாதியின் பேரால் பதவியின் பேரால் சோம் பேறிகளெல்லாம் உயர்ந்தவர்கள் என்று புகழப்படுவதா என்று கேட்கிறேன்? தொழிலாளத் தோழர்களே! இந்த உணர்ச்சியும், மானமும், ரோஷமும் உங்களுக்கு ஏற்படாமல், உங்களுக்கு என்னதான் கூலி உயர்ந் தாலும் பயன் என்ன?
சமுதாய அமைப்பு
சமுதாயத்திலே புகுத்தப்பட்டு வேரூன்றியுள்ள பார்ப்பனிய மூடப்பழக்க வழக்கங்களுக்கு நீங்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியைப் பாழாக்குகின்றீர்களே? இதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டாமா? இதைத்தான் திராவிடர் கழகம் கூறுகிறது. சமுதாய அமைப்பிலே புதியதோர் மாற்றம் வேண்டும். அந்த மாறுதலை அடிப்படையாகக் கொண்ட நல்லாட்சி வகுக்க வேண்டும்.
சமுதாய அமைப்புப் பற்றி நம் மக்களுக்குச் சற்றாவது தெளிவு உண்டா? பாமர மக்களை நான் கூறவில்லை. பெரிய பெரிய பண்டிதர்கள், புலவர்கள், ராஜ தந்திரிகள் முதல் பண்டார சன்னதிகள் வரைதான் தெரியுமா? சமுதாய அமைப்பு எப்படியிருக்க வேண்டுமென்று.
ஒருவன் பறையனாகவும், ஒருவன் சூத்திரனாகவும், ஒருவன் பார்ப்பனனாகவும் இருக்க வேண்டுவதும், இதன் காரணமாய் ஒரு கூட்டம் மட்டும் பாடுபடாமல் உல்லாச வாழ்வு வாழ்வதும் சரியான சமுதாய அமைப்பு என்று எவராவது கூறமுடியுமா? கூறமுடியவில்லை என்றால், அந்த அமைப்பை மாற்றியமைக்க வேண்டுவதுதானே இன்றைய முக்கியப் பொதுப் பணியாகும். அதிலே நாம் கவலை செலுத்தாமல், பதவி-பட்டம் ஓட்டுகளில் மட்டும் பாடுபடுவது மானரோஷமுள்ள காரியமாகுமா?
சமுதாயமும் அரசியலும் வெவ்வேறல்ல
சமுதாயம் வேறு, அரசியல் வேறு என்று கூறுவது தவறாகும். சமுதாய அமைப்பைச் சரிவர நடத்துவது தானே அரசாங்கத்தின் கடமையாகும். சமுதாய அமைப்புக்கு வழிவகை அமைப்பதே மதத்தின் தத்து வமாகும். முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் தங்களது மதத்தை அவ்விதமே கையாண்டு வருகின்றனர். ஆனால் நமது மதமிருக்கிறதே அது நமது சமுதாய அமைப்பின் முன்னேற்றத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாயிருக்கிறது. நம் அரசாங்கம் என்பதோ மக்களுக்காக அல் லாமல், அரசாங்கத்தாருக்காக மக்கள் வாழவேண்டிய தலைகீழ் தத்துவத்தில் நாம் உழன்று வருகிறோம். எனவே நாமும் நமது நாடும் முன்னேற வேண்டுமானால் சமுதாயத் துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டும். அதன் பின்னரே நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும். அவ்வாறில்லாது இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே, யார் ஆட்சிசெய்தாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகள் ஒரு சிறிதும் நீங்குவதற்கு வழிவகையிருக்க முடியாது.
வாலிபர் பங்கு
இவ்வித சமுதாயப் புரட்சியை உண்டாக்குவதில் தீவிரப்பங்கு கொள்ள வேண்டியவர்கள் வாலிபர்களே யாகும். அவ்வித தன்மையில் பொன்மலை திராவிடர் வாலிபர் கழகத்தார் மேலும் தமது தொண்டினை ஆற்ற வேண்டும். அதற்கு இங்குள்ள தொழிலாளர்கள் பெரிதும் ஆதரவு தரவேண்டும். கம்யூனிஸ்டுகளும், சோஷியலிஸ்டுகளும் மறைமுகமாகப் பார்ப்பனியத் துக்கு ஆதரவு தரும் சூழ்ச்சியை விட்டொழிக்க வேண்டும். கழகக்கொள்கைக்கிணங்க அதாவது பார்ப்பனியத்தை, மூடப் பழக்க வழக்கங்களை தொழி லாளர் இடையேயிருந்து அகற்றுதல் என்பதை விட்டுவிட்டு, வேறு என்னதான் தலைகீழாக நின்றாலும் அவர்களுக்கு நிரந்தர உரிமை ஏற்படாது. வேண்டு மானால் தொழிலாளர் பேரால் சுயநல வேட்டையும் அல்லது தத்தமது அரசியல் ஆதிக்க வேட்கையையும் பூர்த்திசெய்து கொள்ள முடியுமேயல்லாது பயன் ஒன்றும் காணமுடியாது. இதை இனியாவது கம்யூனிஸ்டுகளும், சோசியலிஸ்டுகளும், தீவிரவாதிகள் எனப்படுவோரும் உணர வேண்டும்.
எச்சரிக்கை!
தொழிலாளரும் இவர்கள் விஷயத்தில் எச்சரிக்கை யாயிருக்க வேண்டும். அரசியல் கட்சிக்காரர்களுக்குத் தொழிலாளர்கள் தங்கள் சக்தியை வீணாக்குவதிலும், குறிப்பாகத் தேசியத்தின்பேரால் ஏமாறுவதிலும் நீங்கள் உஷாராயிருக்க வேண்டும். இல்லையேல் தொழிலாளத் தோழர்களே! எதிர்காலத்தில் மேலும் மேலும் நீங்கள் பலவிதத் தொல்லைகளுக்கு உள்ளாக நேரிடும். தவிர, இனிப் பொதுத் தொண்டில் கூட நமக்குள் கட்சி பிரதிகட்சி, வீண் எதிர்ப்புகள் இருத்தல் கூடாது. சகோதரத்துவ முறையிலேயே தொண்டாற்ற வேண்டும். என்னைக் கேட்டால் ஒரே மேடையில் ஒரு ராமாயணக்காரரும், ஒரு பெரிய புராணக்காரரும், காங்கிரஸ்காரரும், நாமும் கலந்து பேசவேண்டும். பார்ப்பனரும் நம் மேடையில் பேசவேண்டும் அவரவர்கள் கருத்தை எடுத்துக் கூறவேண்டும். மக்கள் அதைக் கேட்கவேண்டும். சிந்தித்து அவரவர்களின் முடிவுக்குச் செயலாற்ற வேண்டும். அந்த அளவுக்கு மக்களிடத்திலே மனமாறுதல் ஏற்பட வேண்டுமென்பதே எனது எண்ணம்.
நாம் வழிகாட்டுவோம்
நம்மை வேண்டுமானால், காங்கிரஸ்காரரோ, மதவாதிகளோ அவர்கள் மேடையில் அனுமதிக்க மாட் டார்கள். ஆனால் நாம் அதற்கு வழி காட்டவேண்டும். ஏனென்றால் நம்மிடம் ஒன்றும் ஒளிவுமறைவு கிடையாது. அரசியல் லாபத்துக்காக இயக்கத்தை நடத்துபவர் களல்ல நாம்; எனவே, தோழர்களே! எதிர்காலத்தில் நமக்குப் பொறுப்பு அதிகமிருப்பதால், திராவிடர் அனைவரும் ஒன்றுபட்டு வாழவும், உழைப்பாளிகளுக்கு உள்ளபடியே உரிமை ஏற்படவும் பாடுபட வாலிபர்கள் முன்வரவேண்டும். பார்ப்பனத் தோழர்களும் கால நிலையை அறிந்து, மனமாற்றம் அடைந்து திராவிட நாட்டின் நலனுக்காக ஆவன செய்ய வேண்டுகிறேன். அதுவே திராவிடர் இயக்கத்தின் கொள்கையாகும். இனிப்பொதுத் தொண்டில் மக்களிடையே ஒரு சிறிதும் துவேஷ உணர்ச்சி கூடாது. கனம் ஆச்சாரியாரும் நானும் சந்தித்த வாய்ப்பு இதற்கு வழிகாட்டியாகவும், அனுகூலமாகவும் இருக்குமென்பதே எனது எண்ண மாகும்.
(குறிப்பு : 22.05.1949ஆம் நாளில் பொன்மலை திராவிடர் கழக 8ஆம் ஆண்டு விழாவில் பெரியார் ஆற்றிய பேருரை)
குடிஅரசு - சொற்பொழிவு - 28.05.1949

Sunday, April 21, 2013

குறள்


நல்லாண்மை யென்பது ஒருவருக்குத் தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கிக் கொளல்.
நாயனார் அவர்கள் குறளில், நல்ல ஆண்மை என்பது ஒருவருக்குத் தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் என உரைத்திருக்கின்றதையும், அதன் கருத்து ஒருவனுக்கு ஆண்மை என்று சொல்லப் படுவது தன் குடியை உயர்த்திக் கொள்வது என்பதையும் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். ஆனால் நமது நாட்டில் ஆண்மைக்காகப் பாடுபடுகின் றோமென்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நல் லாண்மை ஏற்பட வேண்டுமானால் வகுப்பு நலனையும் குல நலனையும் மறந்துவிட வேண்டும்; தேசத்தையே பெரிதாக நினைக்க வேண்டும் என்று மனதார அர்த்தமில்லாத மாய வார்த்தைகளைச் சொல்லி, பாமர ஜனங்களாகிய தம் குலத்தாருக்கே துரோகம் செய்து, அவர்களைக் காட்டிக் கொடுத்து, அந்நிய குலத் தாருக்கு ஒற்றர்களாகி, அவர் பின்னால் திரிந்து வயிறு வளர்ப்பதையும், தத்தமக்கு ஆக்கந்தேடிக் கொள் ளுவதையும் நாம் பார்க்கும் போது நமது குலம் எவ்வளவு இழிவான நிலைமையில் இருக்கிறது என்பதும் விளங்கும். தற்கால ராஜீய உலகத்தில் எவனாவது ஒருவன் தன் வகுப்பு முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவதும், மற்றும் தாழ்ந்த வகுப்பு முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவதும் தேசத் துரோகமெனவும், ஆண்மைத் துரோகமெனவும் மதிக்கப்பட்டுப் போகிறது. இந்நிலையும் நமது நாட்டின் பிற்பட்ட வகுப்பாருடையவும், தாழ்த்தப்பட்ட வகுப் பாருடையவும் ஈனஸ் திதியை விளக்குவ தோடு, முற்பட்ட வகுப்பாருடையவும் உயர்ந்த வகுப்பாருடையவும் ஆதிக்கத்தையும் எடுத் துக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் நல் லாண்மைக்கென ஏற்பட்ட பத்திரிகைகள் மிகுந்திருந்த போதிலும் அவைகள் முற்பட்ட வகுப்பாருக்கும், உயர்ந்த வகுப்பாருக்கும் பயந்து கொண்டு, வகுப்பு நலனை நாடுவதும், இல்லாண் மையாக்கிக் கொள்ளுவதும் நல்லாண்மை ஆகாதென்றும் சொல்லி தங்கள் பத்திரிகைகளை நடத்தி வருகின்றன. நாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு வகுப்பாருக்கும் தங்கள் தங்கள் ஆண்மைகளை அடையவும், நாட்டு நலன்களில் சமஉரிமை அடையவும் மார்க்க மில்லா திருக்கும் போது தேச உரிமையும், நாட்டு உரிமையும் யாருக்கு? வகுப்புரிமை பெற்றால் வகுப்புச் சச்சரவுகளை உண்டாக்கும் எனச் சொல்லிக் கொண்டு பல வகுப்புரிமைகளையும் நாசமாக்கி, ஒரு வகுப்பார் சகல உரிமைகளையும் அடைந்து முன் நிற்பதை மற்ற வகுப்பார் பார்த்துக் கொண்டு அவர்களுக்கு அடிமையாயிருக்க வேண்டும் என்று சொல்லுவதில் எவ்வளவு யோக்கியமிருக்கும்? நமது நாட்டில் பல வகுப்புகளிருந்த போதிலும் ஒவ்வொரு வகுப்பையும் கவனித்து அதற்கு வேண்டிய சுயமரியாதை ஏற்பட்டிருக்கின்றதா? தேசத்திற்கு வரும் ஆக்கம் பல வகுப்புகளுக்கும் சரிவரப் போய்ச் சேர மார்க்க மிருக்கின்றதா? என்பதைக் கவனித்து வேலை செய்தால் அது தேசத்தையே முன்னுக்குக் கொண்டு வந்ததாகும். அப்படிக்கின்றி முன்னாலிருக்கிற வகுப்பாரை மாத்திரம் கூட்டிக்கொண்டு, அவர்கள் மெச்சும்படி அவர்கள் பின்னாலும் திரிந்து கொண்டு, நாட்டுநலம், நாட்டுநலம் என்று சொல்லிக் கொண்டும், வகுப்பு நலத்தைத் தேடினால் நாடு கெட்டுப்போகும் என்றும் சொல்லிக் கொண்டு திரிந்தால் ஒரு நாடு எப்படி முன்னுக்கு வரும்? ஒரு நாடு என்பது, ஒரு நாட்டிலுள்ள பல வகுப்பாரின் சேமத்தையும் பொறுத்ததா? ஒரு வகுப்பாரின் சேமத்தை மாத்திரம் பொறுத்ததா? உண்மை நாட்டுநலம் தேடுவோர் தாழ்ந்த வகுப்பாருடைய நலத்தையும், பிற்பட்ட வகுப்பாருடைய நலத்தையும் தேடுவதைத்தான் நாட்டு நலமென்று நினைப்பார்கள். நாடு என்பது சகல வகுப்பாருக்குமேயொழிய வலுத்த வகுப்பாருக்கென்று மாத்திரம் ஏற்பட்டதல்ல. வகுப்பு நலன் தேடுவது என்றால் நமது நாடு பல வகுப்புகளை உடையதாயிருக்கிறது. ஆதலால் பல வகுப்பாருடைய நலனையும் தேடுவதாய் ஏற்படும்; அப்போது அது முடியாத காரியமாகிவிடும்; ஆதலால் நாட்டுநலம், நாட்டுநலம் என்று பொதுவாய்ச் சொல்லிக் கொண்டிருப்பதுதான் அனுகூலமானது என்று சிலர் சொல்லுகிறார்கள். நமது நாடு பல வகுப்பாரைக் கொண்டதாகவோ எந்தக் காரணத்தினாலோ ஏற்பட்டுப் போய்விட்டது. பல வகுப்பாருக்கும் நம்பிக்கை உண்டாகும்படியாக நடந்து கொள்ள வேண்டியதுதான் நாட்டின் நலன் தேடுவோரின் கடமை.
நாட்டுநலன் தேடுவோரின் ஒவ்வொரு திட்டமும் சகல வகுப்பாரின் நம்பிக்கைக்கும் ஏற்றதாய்த்தான் இருக்க வேண்டும். தற்போது நமது நாட்டில் வகுப்பு என்று சொல்லக்கூடிய மாதிரியில் வகுப்புரிமைக்கு ஆவலாயும், ஒன்றுக்கொன்று அவநம்பிக்கையாயும் இருப்பது மூன்றே வகுப்புத்தான். அவை பிராமணர் - பிராமணரல்லாத இந்துக்கள் - பஞ்சமர் என்று சொல்லக் கூடிய மூன்று வகுப்பார்தான். இதை எல்லோருமே சர்க்கார் உள்பட - நாட்டு உரிமை தேடுவோர் உள்பட - எல்லோரும் ஒப்புக்கொண்டாய்விட்டது. ஆந்திரர் - தமிழர் - கர்நாடகர் - கேரளர் என்கிற பிரிவைச்சொல்லி ஜனங் களை ஏய்க்க வேண்டியதில்லை. இவற்றைத் தனித்தனி யாகவே பிரிக்கவேண்டுமென்று காங்கிரஸ் ஏற்பாடு செய்தாகிவிட்டது. காங்கிரஸிலும் அதுபோலவே பிரித் தாகிவிட்டது. ஆதலால் அதைப் பற்றிக் கவலையில்லை. எனவே மேற்சொன்ன மூன்று வகுப்பார்தான் ஒருவருக் கொருவர் அவநம்பிக்கையுடனிருக்கிறார்கள். இவர் களுக்கு உரிமை வழங்கிவிட்டால், இவர்களுக்குள்ளாகவே பல வகுப்புகள் கிளம்பும் என்று சிலர் சொல்லி ஜனங்கள் புத்தியைக் கலைக்கக்கூடும். அப்படியிருந்தாலும், சகல வகுப்பாரின் நலனையும் கவனிக்கத்தகுந்த திட்டம் போடுவதற்கு முடியா தென்று பயப்பட வேண்டியதில்லை. வகுப்புகளுக்குத் தகுந்தபடி உத்தியோகங்களையும் ஸ்தானங்களையும் அமைக்கவும் சௌகரியமிருக் கிறது. 3ஙூ கோடி ஜனங்களுக்குள்ள இங்கிலாந்து பார்லி மெண்டில் 700 மெம்பர்கள் இருந்து ராஜீய பாரம் செய்கிறார்கள். ஆதலினால் நமது நாட்டிலும் சகல வகுப்பாரையும் ராஜீய பாரத்தில் சேர்ப்பது கஷ்டமல்ல. இரட்டை முதல் வகுப்புப் படியும், 5000, 6000 ரூபாய் சம்பளமும் கொடுக்காமல் 3-வது வகுப்புப்படிச் செலவும் 400, 300 சம்பளமும் கொடுத்தால் எல்லாம் சரிக்கட்டிப் போகும். அப்போது அதிகப் போட்டி இருக்காது. ஆதலால் வகுப்புரிமையைப் பற்றி பயப்பட வேண்டியதில்லை. அல்லாமலும், நமது நாட்டில் அதிகமான பிரிவினைகள் இருக்கிறதாக நினைத்துக் கொள்ளுகின்றோமேயல்லாமல், வாஸ்தவத்தில் அளவுக்கு மிஞ்சினதாக ஒன்றுமில்லை. பிராமணர் களும் தாங்கள் ஒரு வகுப்பென்றும், தங்களைத் தவிர மற்றவர்களில் சூத்திரர் - பஞ்சமர் என இரண்டு வகுப்புகள் தான் இருப்பதாக ஒப்புக் கொள்ளு கிறார்கள். பிராமணரல்லாதாரும், மேற்சொன்ன பிராமணரல்லாதார் எல்லாம் ஒரு வகுப்பென்றும், தங்களுக்குக் கீழ் பஞ்சமர் என்று ஒரு வகுப்பும் இருப்பதாகத்தான் ஒப்புக் கொள்ளுகிறார்கள். பஞ்சமர்கள், தாங்கள் ஒரு வகுப்பென்றும், மற்றவர்கள் தங்களுக்கு மேற்பட்ட வகுப் பென்றும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். இம் மூன்று வகுப்பாரும் தங்களில் ஒருவருக் கொருவர் வித்தியாசமிருப்பதாகக் கற்பித்துக் கொள் ளுவதால், இம்மூவருக்கும் தான் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுண்டாகும் படி தக்க உரிமைகள் ஏற்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இம்மூவரும் தங்களுக் குள் ஒருவருக் கொருவர் உயர்வு - தாழ்வு இல்லை; எல்லோரும் சமம்தான்; மனித உரிமையை அடைவதில் நாம் ஒருவருக் கொருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர்களல்ல என்கிற உணர்ச்சி வருகிற காலத்தில் வகுப் புரிமையைப் பற்றிய கவலையே வேண்டியது மில்லை. வகுப்பின் பேரில் உரிமையும் கேட்க அவசியம் ஏற்படாது. அப்படிக்கில்லாமல் பல வகுப்பாரும் சேர்ந்து கஷ்டப்பட்டு ஒரு பதவியைச் சம்பாதித்தால், அதை ஒரு வகுப்பாரே அனுபவிப்பதற்கு அனுகூலமாகவும், மற்ற வகுப்பார்கள் சூத்திரர்கள் என்றும், பிற்பட்ட வரென்றும், தீண்டாதார்கள் என்றும், தெருவில் நடக்கவும் - கண்ணில் தென்படவும் அருகர்களல்ல வென்றும், ஒரு வகுப்பார் ஒரு வகுப்பாரால் கருதப் படுகின்ற போது, வகுப்புரிமையைக் கவனிக் காமல் நாட்டுரிமையைக் கவனிக்க வேண்டுமென்று சொல் லுவது நல்லாண்மையல்லாததும், அர்த்தமில் லாததும், பித்தலாட்ட உரிமையாகவுமேதான் முடியும். -  குடிஅரசு - துணைத் தலையங்கம்  14.02.1926