Saturday, February 25, 2012

சமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக!


நமது நாட்டின் செல்வத்துக்கோ, படிப்புக்கோ மற்றபடி வளப்பத்துக்கோ குறைவேதுமில்லை. வேண்டிய அளவுக்கு மேல் உள்ளது. ஆனால், அது எங்கே போய் விட்டது என்றால் எல்லோருக்கும் கிடைக்கும்படி சரியானபடி பங்கிடப்படவே இல்லை.
இப்போதுதான் பூமி ஒருவர் இடம் 500 - 1,000 வேலி என்று குவிந்து இருந்ததை ஆளுக்கு 30 ஏக்கருக்கு மேல் இருக்கக் கூடாது என்று பிரித்தார்கள். அதுபோலவே, 10 கோடி, 20 கோடி, 50 கோடி என்று ஒரு சிலரிடம் போய் குவிந்துள்ள பணத்தையும்  உச்சவரம்பு கட்டி பாக்கியை அரசாங்கம் எடுத்துக் கொண்டு எல்லா மக்களுக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும்.
எல்லா வளமும் இருந்தும் அது எல்லோருக்கும் கிட்டவில்லை யென்றால், எல்லா வளமும் இருந்தும் அறிவு வளம் இல்லாத குறை ஒன்றுதான் காரணமாக இருக்கின்றது. மனிதன் மற்ற மிருகங்களிடம் இல்லாத பிரத்தியேகமான அறிவான பகுத்தறிவினைப் பெற்றுள்ளான். அந்த பகுத்தறிவினை மனிதன் மற்ற காரியங்களுக்கு எல்லாம் செலவிடுகின்றான். நல்ல உணவு, நல்ல உடை, நல்ல வாழ்வு வாழப் பயன்படுத்துகின்றான். ஆனால், நாம் ஏன் கீழ்ஜாதி? அவன் என்ன மேல் ஜாதி? நாம் ஏன் ஏழை? அவன் ஏன் பணக்காரன்? என்று சிந்தித்துப் பார்க்காதவனாக ஆகிவிட்டான். இந்தத் துறையில் சுத்த முட்டாளாக ஆகிவிட்டான்.
அவன் என்ன பார்ப்பான்? அவன் ரத்தம் என்ன ரத்தம்?  நமது ரத்தம் என்ன கீழா? அவன் மட்டும் ஏன் உயர்ந்தவன்? நாம் மட்டும் ஏன் இழிஜாதி? என்று சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. இது போலத்தான் அவன் ஏன் பணக்காரன்? நாம் ஏன் ஏழை? என்று சிந்திப்பதே இல்லை.
இவைகளுக்கு எல்லாம் காரணம் நாம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்காததுதான்.
1925-லேயே சமதர்மத்தைப் பற்றி பேசியவன் நான் என்று நண்பர் பழனி அவர்கள் கூறினார்கள். 1925-இல் காங்கிரசை விட்டு விலகிய பிறகு கடவுளை ஒழிக்க வேண்டும். பணக்காரனை ஒழிக்க வேண்டும். சமதர்மம் மலர வேண்டும் என்று பிரச்சாரம் செய்த நான் சமதர்மம் எப்படி ரஷ்யாவில் நடைபெறுகின்றது என்பதை நேரில் போய் பார்த்துவிட்டு வரலாமே என்று அங்கு போய் பார்த்துவிட்டு வந்தேன். சமதர்மம் எப்படி உன்னத நிலையில் அங்கு நடைபெறுகின்றது என்பதை கண்டு வந்த நான் முன்னிலும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டேன்.
சமதர்மம் வெற்றி பெற வேண்டுமானால், மக்கள் மனத்தில் குடிகொண்டு உள்ள கடவுள், மதம், சாஸ்திரம் பற்றிய முட்டாள்தனமான எண்ணங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
(10.7.1965 அன்று முதுகுளத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை -விடுதலை 7.8.1965)

இனிவரும் உலகத்தில் கடவுளின் கதி!



இனிவரும் உலகத்தில் கடவுள் தன்மை எப்படி இருக்கும் என்று அறிய மக்கள் கண்டிப்பாக ஆசைப் படாமல் இருக்க மாட்டார்கள். அதைச்சற்று இங்கு ஆராய்வோம்.
கடவுள் தானாக யாருக்கும் தோன்றுவதில்லை. பெரியோர்களால் சிறார்களுக்குப் போதிக்கப்பட் டும், காட்டப்பட்டுமே தோற்றமான எண்ணமும் உருவகமு மாகும். ஆனதால் இனிவரும் உலகத்தில் கடவுளைப் பற்றி போதிக்கிறவர்களும், காட்டிக் கொடுப்பவர்களும் மறைந்து விடுவார்கள். யாராவது இருந்தாலும் அவர்களுக்கும் கடவுள் மறக்கப்பட்டுப் போகும்.
ஏனெனில், கடவுளை நினைக்க மனிதனுக்கு ஏதாவது ஒரு அவசியம் இருந்தால்தானே நினைப்பான்? சகல காரண காரியங்களுக்கும் மனிதனுக்கு விவரம் தெரிந்து விடுவதாகவும் சகல தேவைகளும் மனித னுக்கு கஷ்டப்படாமல் பூர்த்தியாகவும் இருந்தால், ஒரு மனிதனுக்குக் கடவுளைக் கற்பித்துக் கொள்ளவோ நினைத்துக் கொள்ளவோ அவசியம் ஏன் ஏற்படும்?
மனிதன் உயிரோடு இருக்குமிடமே அவனுக்கு மோட்சமாய்க் காணப்படுமானால் விஞ்ஞானப் பெருக்கம் ஏற்பட்ட இடத்தில் கடவுள் சிந்தனைக்கு இடம் இருக் காது.
சாதாரணமாக மனிதனுக்கு இன்று கடவுள் நிச்சயத் திற்கு ஒரே ஒரு காரணம் தானே சொல்லப்படுகிறது? அக்காரணம் என்னவென்றால், இந்த உலகத் தோற்றத் துக்கு காரணம் என்ன? காரண பூதமாக இருப்பது எது? அதுதான் கடவுள் என்று சொல்லப்படுகின்றது.
இது விஞ்ஞானிகளுக்கு சுலபத்தில் அற்றுப் போன விஷயம் பஞ்சபூதங்களின் சேர்க்கையே உலகம் என்பர். நம்முடைய வாழ்வில் நாம் எதைக் கடவுள் செயல் என்று உண்மையாய்க் கருதுகிறோம்? நம் அனுபவத்திற்கு வந்த ஒவ்வொன்றுக்கும் நாம் சமாதானம் தெரிந்து கொள்கிறோம்; தெரியாதவற்றை தெரியாது என்று ஒப்புக் கொள்கிறோம். தெரிந்ததை தெரிந்தது என்று சொல்லுகிறோம். இதுவேதான் உலக நடப்புக்கும் கொள்ள வேண்டிய முறையாகும். ஒரு சமயம் உலக நடப்புக்குக் காரணம் தெரியாவிட்டாலும், அதற்காக ஒரு காரியத்துக்கும் ஆகாத தேவையில்லாத கடவுளை எவனும் வணங்க மாட்டான்.
புதிய உலகத்தில் மோட்ச, நரகத்துக்கு இடம் இருக்காது; நன்மை, தீமை செய்ய இடமிருந்தால்தானே மோட்சமும், நரகமும் வேண்டும்? எவருக்கும் யாருடைய நன்மையும் தேவையிருக்காது. புத்திக் கோளாறு இருந்தால் ஒழிய, ஒருவனுக்கு ஒருவன் தீமை செய்ய மாட்டான். ஒழுக்கக் கேட்டுக்கும் இடமிருக்காது. இப்படிப்பட்ட நிலையில் மோட்ச, நரகத்துக்கு வேலை ஏது? ஆள் ஏது?
எனவே, இப்படிப்பட்ட நிலை புதிய உலகத்தில் தோன்றியே தீரும். தோன்றாவிட்டாலும் இனிவரும் சங்கதிகள் அடைந்த மாறுதல்களைக் காண வேண்டுமென்றும். இவைகளால் உலகில் மக்களை இப்போது வாட்டி வரும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வாழ்க்கை என்றால் பெருஞ்சுமை என்று சலித்துக் கொண்டும் வாழ்க்கை என்றால் போராட்டம் என்று திகைத்துக் கொண்டும் இருக்கிற நிலைமை போய்.
வாழ்க்கை என்றால் மக்களின் இன்ப உரிமை என்ற நிலைமை உண்டாக வேண்டுமென்னும் ஆவலுடன் பணியாற்றி வருவார்கள்.
நம்மால் என்ன ஆகும்? அவனின்றி ஓரணுவும் அசையாதே! என்று வாய் வேதாந்தம் பேச மாட் டார்கள். நம் கண்முன் காணப்படும் குறைபாடுகளைப் போக்க நாம் எப்படி உழைக்க வேண்டும் என்பதே அவர்களின் கவலையாகவும், அவர்களின் எண்ண மாகவும் இருக்கும். எப்போதோ, யாரோ, எதற்காகவோ எழுதி வைத்த ஏட்டின் அளவோடு நிற்க மாட்டார்கள். சுயசிந்தனையோடு கூடியதாகவே அவர்களின் செயல்கள் இருக்கும் மனித அறிவீனத்தினால் விளைந்த வேதனைகளை மனித அறிவினாலேயே நீக்கிவிட முடியும் என்ற ஆசையும், நம்பிக்கையும் கொண்டு உழைப்பார்கள்.
அவர்களின் தொண்டு; மனித சமுதாயத்தை நாளுக்கு நாள் முன்னுக்குக் கொண்டு வந்தவண் ணமாகவே இருக்கும் சுய சிந்தனைக்கு இலாயக்கற்ற வர்களே இந்த மாறுதல்களைக் கண்டு மிரள்வதும், காலம் வரவரக் கெட்டுப் போச்சு என்று கதறுவதுமாக இருப்பார்கள்.
இன்றைய மக்களிலே பலருக்கு பழமையிலே இருக்கும் மோசம் அறிவையே பாழ் செய்து விடு கிறது. புதிய உலகத் தோற்ற வேகத்தைத் தடை செய்து விடுகிறது. பழைய முறைப்படி உள்ள அமைப்பு களால் இலாபமடையும் கூட்டம் புதிய அமைப்பு ஏற்படுவதைத் தடுக்க முயற்சிப்பது இயற்கை. ஆனாலும், பாமரரின் ஞானசூன்யம், அறியாமை, சுயநலக்காரரின் எதிர்ப்பு எனும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு கலங்காமல் வேலை செய்வோரே. இனிவரும் உலக சிற்பிகளாக முடியும். அந்த சிற்பிகளின் கூட்டத்திலே நாமும் சேர்ந்து நம்மாலான காரியத்தைச் செய்ய வேண்டுமென்று வாலிபர்கள் பகுத்தறிவாளர்கள் ஆசைப்பட்டு உழைக்க முன்வர வேண்டுகிறேன்.
நூல்:இனிவரும் உலகம்

Sunday, February 19, 2012

சமதர்மமும் நாஸ்திகமும் சமதர்மமும் நாஸ்திகமும்


என்னை நாஸ்திகன் என்று சொல்லுகிறவர்கள், நாஸ் திகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லு கிறார்களோ, அந்த அர்த்தத்தில் நான் நாஸ்திகன்தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன்.
நாஸ்திகத்துக்குப் பயந்தவனானால், எந்த ஒரு காரியமும் செய்ய முடியாது. அதிலும் சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டுமானால், நாஸ்திகனால்தான் முடியும். நாஸ்திகம் என்பதே சமதர்மம் என்று பெயர். அதனால் தான் ரஷ்யாவை யும் நாஸ்திக ஆட்சி என்கிறார்கள்.
பவுத்தரையும் நாஸ்திகம் என்றதற்குக் காரணம் அவர் சமதர்மக் கொள்கையைப் பரப்ப முயற்சித்ததால்தான், நாஸ்திகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரம் அல்ல, சமுதாயத்தைச் சீர்திருத்த ஏதாவது பழைய கொள்கைகளை மாற்ற வேண்டுமானால், அந்த மாற் றத்தையும் ஏன் எவ்வித சீர்திருத்தத்தை யுமே நாஸ்திகம் என்று தான் சமுதாயப் பிரியர்கள் (பழைமையை மாற்ற விரும்பாதவர்கள்) சொல்லித் திரிவார்கள்.
எங்கெங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ - சமத்துவத் துக்கு இடமில்லையோ அங்கெல்லாமிருந்து தான் நாஸ்திகம் முளைக்கின்றது.
கிறித்துவையும், முகம்மது நபியையும்கூட நாஸ்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கு, அவர்களது சமதர்மப் போக்கும், சீர்திருத்தமுமே காரணமாகும். துருக்கியில் கமால் பாட்சாவும், ஆப்கானிஸ்தான் அமீரும் நாஸ்திகர்கள் என்று அழைக்கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தந்தான் காரணம்.
ஏனென்றால் இப்போது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும், பழக்கங்களும் எல்லாம் கடவுள் கட்டளை என்றும், கடவுளால் சொல்லப்பட்ட வேதங்கள் சாஸ்திரங்கள் ஆகியவைகளின் கட்டளைகள் என்றேதான் சமயப்பிரியர் கள் சொல்லுகின்றார்கள்.
ஆகவே, நாம் இப்போது எதை எதை மாற்ற வேண்டுமென்கிறோமோ அவை எல்லாம் கடவுள் செய்ததாக வும் அல்லது கடவுள் தனது அவதாரங்களையோ, தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப்படு வதால் அவைகளைத் திருத்தவோ, அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட்டளையை மீறினதாக அல்லது கடவுள் கட்டளையை மறுத்ததேயாகும்.
உதாரணமாக, மக்களில் நான்கு ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதென சொல்லப்படுகையில், மேற்படி ஜாதிகள் ஒழிய வேண்டுமானால், அவன் கண்டிப்பாக கடவுளை மறுத்தோ அலட்சியம் செய்தோதான் ஆக வேண்டும். எல்லா மதங்களும், மதக் கொள்கைகளும் கடவு ளாலோ, அவதாரங்களாலோ, கடவுள் தன்மை யாலோ ஏற்பட்டது என்று சொல்லப்படுகையில் அம்மத வித்தி யாசங்கள் ஒழிய வேண்டும் என்றும் மதக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்றும் சொல்லும்போது, அப்படிச் சொல்லுபவன். அந்தந்தக் கடவுள்களை கடவுள்களால் அனுப்பப்பட்ட தெய்வீகத் தன்மை பொருந்தியவர்களை அலட்சியம் செய்தவனேயா கின்றான். அதனால்தான், கிறித்தவர் அல்லாதவர் அஞ்ஞானி என்றும், மகம்மதி யரல்லாதவர் காபர் என்றும் இந்து அல்லாவர் மிலேச்சர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
அன்றியும் கேவலம் புளுகும் ஆபாசமும் நிறைந்த புராணங்களை மறுப்பதே இந்து மதக் கொள்கைப்படி நாஸ்திகம் என்று சொல்லப்படும் போது ஜாதியையும், வர்ண தர்மத்தையும் மறுப்பதை ஏன் நாஸ்திகம் என்று சொல்ல மாட்டார்கள்.
ஜாதி உயர்வு - தாழ்வு; செல்வம் - தரித்திரம்; எஜமான் - அடிமை ஆகியவைகளுக்கு கடவுளும், கர்மமும்தான் காரணம் என்று சொல்லுவதானால், பிறகு மக்களுக்கு விடுதலையும், முன்னேற்றமும் எங்கே இருக்கின்றது?
கடவுளையும், கர்மத்தையும் (விதிச் செயல்) ஒழித்தால் ஒழிய, அதற்காக மனிதன் எப்படி பாடுபட முடியும்? மேடும், பள்ளமும் கடவுள் செயலானால், மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டு சமன் செய்வது கடவுள் செயலுக்கு விரோதமான காரியமே யாகும். மனிதன் முகத்தில் தலையில் மயிர் வளருவது கடவுள் செயலானால், அதை சவரம் செய்து ஒழிப்பது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும், அதாவது, ஓரளவுக்கு நாஸ்திகமான காரியமேயாகும். அதிலும் சவரம் செய்யச் செய்ய மறுபடியும் அது வளர்வதை அறிந்தும் மீண்டும் சவரம் செய்வது வடிகட்டின நாஸ்திகமேயாகும். பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதுகூட நாஸ்திகன் தானே! ஏனெனில், கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்துக்காகப் பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போட்டு அவன் பட்டினியை மாற்றுவது கடவுளுக்கு விரோதமான செயல் தானே? அதாவது, கடவுளை நம்பாத கடவுள் செயலை லட்சியம் செய்யாத தன்மையேயாகும். இப்படியே பார்த்துக் கொண்டே போனால் உலகத்தில் ஒரு ஆஸ்திகனும் இருக்க முடியாது!
ஆதலால், நம்மைப் பொறுத்தவரை நாம் பல மாறுதல்களை விரும்புவதால் அவை கடைசியாக நாஸ் திகமேயாகும். நாஸ்திகமும், சாஸ்திர விரோதமும், தர்மத்துக்கு விரோதமும் செய்யாமல் யாரும் ஒரு சிறிதும் உண்மையான சீர்திருத்தம் செய்ய முடியவே முடியாது. பொதுவாக நமது நாட்டில் உள்ள தரித்திரம் போக வேண்டுமானால், வேற்றுமைகளைப் போக்க முயற்சிக்கும் சமதர்வாதிகளை (வெள்ளையரை) வைவது மாத்திரம் போதாது, நாஸ்திகம் என்ற சொல்லுக்கு அஞ்சினாலும் முடியாது.
நமது நாட்டினரே ஏழைகளை வஞ்சித்துக் கொள்ளை அடிக்கிறார்கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொண்டு இருப்பதால், தினமும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாமர மக்களை விழிக்கச் செய்து, நீங்கள் ஏழைகளாய், தரித்திரர்களாய் இருப்பதற்கு கடவுள் செயல் காரணமல்ல, மக்களின் முட்டாள்தனமேதான் காரணமாகும்.
ஆதலால், நீங்கள் கடவுள் செயலை லட்சியம் செய்யா தீர்கள் என்று சொன்னால்தான், செல்வந்தர்களின் அக் கிரமங்களை பாமர மக்கள் அறிந்து உணரக் கூடும். அப் போது கடவுள் செயலையும், அதிக மூடர்களிடம் கடவுளையும் மறுத்துத்தான் ஆகவேண்டும். இந்த நாட்டில் ஒருபுறம் ஏழைகள் பட்டினி கிடக்க, மற்றோர்புறம் ஒரு சிலர் கோடீ சுவரர்களாக இருந்து கொழுத்துக் கொண்டு டம்பாச்சாரியாய் வாழ்க்கை நடத்துவதும் கடவுள் செயல் என்று தானே சொல்ல வேண்டும்?
ஆகையால், கடவுள் செயல்கள் ஒரு காரியத்திற்கும் மற்றொரு காரியத்திற்கும் மாறுபடுவது போலவே தர்மமும், நீதியும் கூட ஒரு சமயத்துக்கும் மற்றொரு சமயத்துக்கும் மாறுபட வேண்டியதேயாகும்.
ஒரு காலத்தில் அரசர்கள் விஷ்ணு அம்சமெனக் கருதப்பட்டார்கள். ஆனால், இப்போது அரசர்கள் கொள் ளைக்காரர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். அதுபோலவே செல்வவான்கள் இந்தக் காலத்தில் லட்சுமி புத்திரர்களாக இருக்கிறார்கள்.
இன்னொரு காலத்தில் அவர்கள் பெருத்த வஞ்சக பகற் கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கப்பட்டு பலாத்காரத்தில் அவர்களிடமிருக்கும் செல்வங்கள் பிடுங்கிக் கொள்ளப்படும்.
உதாரணமாக, மனுதர்மத்தில் சூத்திரனிடம் பொருள் சேர்த்து வைத்திருப்பதை பிராமணன் பலாத்காரத்தினால் பறித்துக் கொள் ளலாம் என்று இருக்கின்றதை இன்னமும் பார்க்கிறோம். இன்னும் கொஞ்சம் போனால் இதுமாமறி பார்ப்பான் பணம் வைத்திருந்தால் மற்றவர் பிடுங்கிக் கொள்ளலாம் என்று ஏற்படக் கூடும். அப்படி இருப்பது முன்னைய வழக்கத்துக்கு விரோதம் என்பதாக யாரும் சொல்ல முடியாது. காலம் போகப் போக நேரில் உழுது பயிர் செய்ய முடியாதவனுக்கு பூமி இருக்க வேண்டியதில்லை என்றும் அப்படி யிருந்தாலும் சர்க்காருக்கு வரி கொடுப்பது போல் ஒரு சிறு அளவுதான் பாத்தியம் முன்பேயொழிய இப்போது இருப்பது போல் உழுகின்றவன் தன் வயிற்றுக்கு  மட்டும் எடுத்துக் கொண்டு பூமிக்குடையவனுக்கு பெரும் பாகம் கொடுப்பது என்கிற வழக்கம் அடியோடு அடிபட்டு போகலாம்.
இதுபோல் இன்று கோவில் கட்டுவது தர்மமாக இருக்கின் றது. ஆனால், பிற்காலத்தில்  கோயிலை இடித்து, விக்கிரகங் களை உதைத்து, பள்ளிகளும், தொழிற்சாலைகளும் ஏற்படுத்து வது தர்மம் என்றாகலாம். இதுபோல் அநேக விஷயங்களில் இன்றைய தர்மம் நாளை அதர்மமாக தலை கீழாக மாறக்கூடும். அப்படிப்பட்ட நிலைமை வரும்போது இன்றைய நிலைமை எல்லாம் கடவுள் கட்டளை என்றால் அதை மாற்ற முற்படுகின்றவன் கடவுளையே மறுக்கத் துணிந்தவனாக வேண்டும்.
கடவுளை மறுக்கத் துணிந்தவனே தர்மத்தின் பேரால் உள்ள இன்றைய கொடுமைகளை ஒழிக்க முடியும். அப்படிக்கில்லாமல் கடவுளுக்கும், மோட்சத்துக்கும் பயந்து கொண்டிருப்பவனால் ஒரு காரியமுமே செய்ய முடியாது என்பது உறுதி. இந்நிலையில் சமதர்மம் எப்படிக் கொண்டு வரமுடியும்?
அரசியல், சமூக இயல், பொருளாதார இயல்களில் உள்ள இன்றைய கொடுமையான நிலையும், முட்டாள்தனமான நிலையும்,  அயோக்கியத் தனமான வஞ்சகச் சூழ்ச்சியுமான எல்லாம் கடவுள் கட்டளையாலும், மோட்ச காரணங்களாலும், சாஸ்திர தர்மங்களாலுமே செய்யப்பட்டு ஏற்பட்டதாகும். ஆகையால்தான், இந்தக் கடவுள் நம்பிக்கை ஒழியாமல் சமதர்மம் கொண்டு வரமுடியாது என்று நான் அவ்வளவு உறுதியாகக் கூறுகிறேன்.
(திருச்சியில் சமதர்மமும் நாத்திகமும் என்ற தலைப்பில் தந்தை பெரியார் ஆற்றிய அறிவுரை - குடிஅரசு 1930 - விடுதலை 3.12.1967)

Friday, February 3, 2012

என்னை கொல்லாமல் இருப்பதற்குக் காரணம்...

இன்றைய தினம் இந்த மதுரை மாநகருக்கு எனது கொள்கை பிரச்சாரத்திற்காக வந்த என்னை இந்த மதுரை மாநகராட்சி மன்றத்தார் அழைத்து வரவேற்பளித்து பெருமைப்படுத்தியதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏதோ மக்களுக்காகத் தொண்டு செய்கிறவர்களை ஊக்குவிக்கவும்,பாராட்டவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது சாதாரணமானதேயாகும். என்னைப் போலொத்த பெரும்பான்மையான மக்களின் கருத்துக்கு மாறாக தொண்டாற்றுகின்ற எனக்கு வரவேற்பு கொடுப்பது என்பது சாதாரணமான காரியமல்ல. புரட்சிகரமான கருத்து என்று சொல்லும்படியான பல மாறுதல் கருத்தை சொல்லி வருகிறேன். இது போன்று பெரும்பாலான, மிகப் பெரும்பாலான மக்களின் கருத்துகளை சொல்கிறவர்களை அதன்படி நடக்கிறவர்களை மக்கள் எதிர்ப்பது மட்டுமல்ல, கொலை செய்யப்படுவது இயற்கை. ஆனால், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான மக்களின் கருத்துக்கு, நடத்தைக்கு மாறாக இருந்து வருகிறேன் என்றாலும் இதுவரை என்னை யாரும் கொலை செய்யவில்லை என்பதோடு இந்த நகர மக்கள் எனக்கு வரவேற்பளிக்கிறார்கள் என்றால் மக்கள் அவ்வளவு பண்பாடு பெற்றிருக்கிறார்கள் என்பது தவிர இதனால் எனக்கொன்றும் பெருமை இல்லை. யேசுநாதரை நாத்திகர் என்று சொல்லி அவரை சிலுவையில் அறைந்தார்கள். முகமது நபியை நாத்திகர் என்று சொல்லி ஓட ஓட அடித்து விரட்டினார்கள். அதுபோன்றே பவுத்தர்கள், சமணர்கள் எல்லாம் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சமுதாய சீர்திருத்தம் செய்ய முற்பட்ட ஆப்ரகாம் லிங்கனை சுட்டுக் கொன்றார்கள். கென்னடியை சுட்டுக் கொன்றார்கள். நமது நாட்டில் ஒன்றும் பெரிய மாறுதல் செய்யவில்லை. “கோயில்கள் எல்லாம் குச்சுக்காரி விடுதிகள்”, “பார்ப்பனர் விலகிக் கொண்டு மற்றவர் படிக்க இடம் கொடுக்க வேண்டும்”, “காங்கிரசில் அயோக்கியர்கள் பெருகி விட்டார்கள்; அதை கலைக்க வேண்டும்” என்று சொன்னதற்காக காந்தியை சுட்டுக் கொன்றார்கள். நான் கொல்லப்படாமல் இருப்பதற்கு காரணம் ஒன்று மக்கள் பக்குவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எனது தொண்டினை மக்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமலிருக்க வேண்டும். நமது மக்கள் அறிவு பெற முடியாமல் நீண்டநாட்களாகத் தடுக்கப்பட்டு வந்ததன் காரணமாக உலகத்தில் நமது மக்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள். அறிவில் வளர்ச்சியடைய முடியாதவர்களாக, விஞ்ஞானத்தில் எந்த அதிசயத்தையும் கண்டுபிடிக்க முடியாதவர்களாக மற்ற வெளிநாட்டு மக்கள் காட்டுமிராண்டிகள் என்று அழைக்கும் வண்ணம் இருக்கிறோம். நமது நாட்டில் தெய்வீக சக்தி பொருந்தியவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். பல மகான்கள், மகாத்மாக்கள், ஆனந்தாக்கள், தீர்த்தாக்கள் எல்லாம் இருந்திருக்கின்றனர். ஆனால், அவர்களில் எவரும் எந்த விஞ்ஞான அதிசய அற்புதத்தையும் செய்யவில்லை. அவர் என்னடா மகான் என்றால், “சாணியைத் தொட்டால் ஜவ்வாது வாடை வரும்”, “கையை நீட்டினால் சாம்பல் வரும்” என்கின்றானே தவிர,இன்னதைச் செய்தான் என்று சொல்ல ஒன்றுகூட இல்லை. நமக்குள்ள நூல்கள் என்பவை எல்லாம் மனிதன் படித்தால் மோட்சத்திற்கு போகலாம். பக்தி வரும் என்றுசொல்ல முடியுமே தவிர, மனிதனுக்கு அறிவு வரும் என்று சொல்லும்படியான நூல் ஒன்றும் நமக்கு இல்லை. நான் குறை சொல்வதெல்லாம் 1000-ம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக சொல்லப்படுகிறதைக் குறை சொல்கின்றேன். அதைப் பரப்பி நம் மக்களை காட்டுமிராண்டிகளாக்க முற்படுகிறவர்களைத்தான் குறை சொல்கின்றேனே தவிர, இன்றைக்கு இருப்பவனை இந்த ரயில், மோட்டார், மின்சார விளக்கு, மைக் போன்ற விஞஞான சாதனைகள் செய்தவனைச் சொல்லவில்லை.


                                                        - (13.12.1969 அன்று மதுரையில் நடைபெற்ற            நகராட்சி வரவேற்பில் தந்தை பெரியார் ஆற்றிய உரை - 


                                                                         ‘விடுதலை’ 24.12.1969