Sunday, October 31, 2010

இரணியன் நாடகம்

தோழர்களே!
சென்னை சீர்திருத்த நாடக சங்கத்தாரால் நடிக்கப்பட்ட இந்த முதல் நாடகத்துக்குத் தலைமை வகிக்கும் பெருமை எனக்களித்ததற்கு நன்றி செலுத்துகிறேன்.
நாடகம் என்பது ஒரு விஷயத்தைத் தத்ரூபமாக நடித்துக்காட்டுவது என்பதோடு, அது பெரிதும் மக்களின் நடத்தைக்கு வழி காட்டியாகவும், ஒழுக்கங்கள் கற்பிக்கப்படுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது என்றும் சொல்லப்படுகின்றது.
ஆனால், அது அந்தப்படி தத்ரூபமாய் நடத்திக் காட்டப்படுவதும் இல்லை, மக்கள் ஒழுக்கத்துக்கும், நடப்புக்கும் வழிகாட்டியாய் நடப்பிப்பதும் இல்லை என்று சொல்லுவதற்கு நாடக அபிமானிகள் மன்னிக்க வேண்டுகிறேன்.
தத்ரூபம் என்பதில் விஷயங்களின் ரசபாவங்களும், உண்மையாய் நடந்திருக்கும் என்று நினைக்கும்படியான எண்ணமும் ஜனங்களுக்கும் விளங்க வேண்டும்.
அந்தப்படி இல்லாமல் நமது நாடகங்கள் பெரிதும் சங்கீதக் கச்சேரி போலவும், காலட்சேப சபை போலவும், விகட சபை போலவும் நகைகள், உடுப்புகள், காட்சி சாலைகள் போலவும், விஷயங்களுக்குப் பொருத்தமில்லாத பேச்சுகளை அடுக்கி பேசும் பேச்சு வாத சபை போலவும் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. நாடகங்களுக்கு நடிப்புகளில் மிக விசேஷ சமயங்களில் அல்லது அசல் விஷயத்திலேயே பாட்டு வரும் சந்தர்ப்பங்களில் தவிர மற்ற சமயங்களில் பாட்டுகள் பொறுத்த மற்றது என்பது நமது அபிப்பிராயம்.
உதாரணமாக, நெருப்பு பிடித்து விட்ட சமயத்தைக் காட்ட நடிக்க வேண்டியவர் தடபுடலாய் ஆத்திரப்பட்டு குளறுபடியாய் இருப்பது போல் நடிக்க வேண்டுமா? அல்லது தாளம், சுருதி, ராகம் முதலியவைகளைக் கவனித்து சங்கீத லட்சியத்தில் திரும்பி ஜனங்களுடைய கவனத்தையும் சங்கீதத்தில் திரும்ப விட்டு விட்டால் நடிப்பு சரியானதாக இருக்க முடியுமா என்று கேட்கின்றேன். அதுபோலவே நடிப்புக்குப் பொருத்தமற்ற உடை, நடை, நகை முதலியவற்றுடன் விளங்கினால் விஷயம் நடந்ததாகத் தத்ரூபமாய்க் கருதப்படமுடியுமா?
மேல் நாடுகளில் ரசபாவங்களுக்காகவும் தத்ரூபமாய் நடந்ததாகக் காட்டப்படும் நடப்புக்காகவும் நடத்தப்படும் ட்ராமாக்களில், பாட்டு என்பதே மிக மிக அருமையாய்த் தான் இருக்கும். சங்கீதத்துக்காக நடக்கும் விஷயத்தை அங்கு ஆப்ரா என்று சொல்லப்படுமே தவிர, ட்ராமா என்று சொல்ல மாட்டார்கள். இங்கு சங்கீத வித்வான்களே நாடக மேடையைக் கைப்பற்றிக் கொண்டதானது நாடகக் கலையைச் சங்கீதம் அழித்துவிட்டது என்றும், மக்களது நாடக அபிமானமும் சங்கீதத்தில் திருப்பப்பட்டு விட்டது என்றும் தான் கருத வேண்டும்.
நாடகம் நடிக்கப்படும் கதைகள் விஷயமும் தற்கால உணர்ச்சிக்கும், தேவைக்கும், சீர்திருத்த முறைக்கும் ஏற்றதாயில்லாமல் பழமையைப் பிரச்சாரம் செய்யவும், மூட நம்பிக்கை வருணாசிரமம், ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு, பெண் அடிமை, பணக்காரத் தன்மை முதலிய விஷயங்களைப் பலப்படுத்தவும், அவைகளைப் பாதுகாக்கவும் தான் நடிக்கப் படுகின்றதே ஒழிய வேறில்லை. அரிச்சந்திரன் கதை, நந்தனார் கதை முதலானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அரிச்சந்திரன் கதையில் சத்தியம் பிரதானம் என்று சொல்லப்பட்டாலும், சத்திய அசத்திய விஷயம் நடக்காமல் கதையில் அலட்சியமாய் இருக்கிறது. ஜாதி வித்தியாசம் தீண்டாமை, பெண் அடிமை, பார்ப்பன ஆதிக்கம், பணக்காரத் தன்மை, எஜமானத் தன்மை ஆகியவைகள் தான் தலைதூக்கியிருக்கிறது. அதுபோலவே நந்தன் கதையிலும், ஆள்நெருப்பில் விழுந்து வெந்து போனதுதான் மிளிர்கின்றதே தவிர, உயிருடன் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக இல்லவே இல்லை. ராமாயணமும் சீதையைப் படுத்தின பாடு பெண் ஒரு சொத்து போல் பாவிக்கப்படுகிறதும் விளங்கும்.
இப்படிப்பட்ட கதைகள் ஒழிக்கப்பட வேண்டும். சுயமரியாதையும், சீர்திருத்த வேட்கையுமுள்ளவர்கள் அதை நடிக்கக் கூடாது.
இரணியன் கதையில் வீரரசம் சூழ்ச்சித்திறம், சுயமரியாதை ஆகியவை விளங்கினதோடு பகுத்தறிவுக்கு நல்ல உணவாகவும், இருந்தது. ஆனால் சில விஷயங்களில் தலைகீழ் மாறுதலாகவும், கடின வார்த்தை யாகவும் காணலாம். சீர்திருத்த நாடகம் என்றாலே மாறுதல் இருந்துதான் தீரும். மாறுதலுக்கு அவசியமானதும் பதிலுக்குப் பதிலானதுமான வார்த்தைகள் இருந்தால்தான் பழமை மாற சந்தர்ப்பம் ஏற்பட்டு அப்படி இல்லாமல் இருந்தால் தகுந்த மாறுதல் ஏற்பட இடமிருக்காது. ஆரியப் புராணங்களில் ஆரியர்களால்லாதவர்களை, குரங்கு, அசுரன், ராட்சதன், சண்டாளன், பறையன் என்பன போன்ற வார்த்தைகளையும் அது உபயோகிக்கும் முறையையும் பழக்கத்தில் இருந்து வரும் மாதிரியையும் பார்த்தால் இந்த சரித்திரம் படிப்பதில் அவசியமான மாறுதல் ஏற்பட உதவி செய்யுமா என்பது சந்தேகம்தான்.
நிற்க. இச்சரித்திரம் உண்டாக்கிய தோழர் புதுவை பாரதிதாசனை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். அவர் உணர்ச்சியுடன் உண்டாக்கி இருக்கிறார். இன்னமும் இதுபோல் பல நாடகங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். பாத்திரர்களுக்குக் கற்பித்த தஞ்சை தோழர் டி.என்.நடராசன் அவர்களின் ஆசிரியத் தன்மை மிகவும் போற்றத்தக்கது. அவர் 20 வருஷமாய் பொதுநலச் சேவையில் இருந்து வருகிறவர். ஜெயிலுக்குச் சென்றவர். அவர்கள் இருவருக்கும் இந்த இரண்டு பதக்கங்களைச் சீர்திருத்த நாடக சங்கத்தார் சார்பாய் சூட்டுகிறேன்.
நாடகத்துக்கு உதவி செய்த தோழர்கள் சி.டி.நாயகம், என்.எ. ஆனந்தம், அழகப்பா முதலியவர்களுக்கும் நன்றி கூறுகிறேன். சிறப்பாக தோழர் மாசிலாமணி முதலியவர்கள் இந்நாடகத்துக்கு விளம்பரம், அச்சுவேலை, காகிதம் முதலிய விஷயங்களில் திரேகப் பிரயாசை, பொருள் செலவு முதலியவைகள் செய்ததுடன் இவ்வளவு சிறப்புக்குக் காரணமாய் இருந்ததாகவும் கேட்டு மிகவும் மகிழ்வதோடும் அவரையும் பாராட்டி நன்றி செலுத்துகிறேன்.
இந்தப் புதிய நாடகத்துக்கு இவ்வளவு தோழர்கள் விஜயம் செய்து கவுரவித்ததற்கும், நாடக பாத்திரங் களுக்கும் சபையாருக்கும் ஊக்கமளித்ததற்கும் என் நன்றி செலுத்துகிறேன்.
இரணியன் நாடகத்தில் தோழர் ஈ.வெ.ரா. சொற்பொழிவு
                                                                              (குடிஅரசு -  16.09.1934)

Saturday, October 30, 2010

அரசியல் கட்சிகள்

கே : கட்சிகள் என்றால் என்ன?
வி: நல்ல லட்சியங்களைச் சொல்லி; ஜனங்களை ஏமாற்றி; தங்கள் வசம் செய்து; சுயநல லாபம் அடைவது. உதாரணமாக காங்கிரஸ் கட்சி, தேசியக் கட்சி முதலிய பல கட்சிகள்.
கே: அப்படியானால் சுயமரியாதைக் கட்சி இதில் சேராதோ?
வி: சேராது!                    
கே: ஏன்?
வி : அது யாரையும் ஓட்டுக் கேட்பதில்லை; பணம் கேட்பதில்லை; உத்தியோகம் கேட்பதில்லை; பதவி கேட்பதில்லை; பட்டம் கேட்பதில்லை. அது மாத்திரமல்லாமல் அதில் சேர்ந்தவர்கள் எல்லாம் தங்கள் சொந்த நேரத்தையும், பணத்தையும், செல்வாக்கையும் இக்கட்சிக்குச் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
எது அதிகக்கெடுதி?
மக்களைக் கோவிலுக்குப் போகவேண்டாம் என்று சொல்லுகிறவர்களால் ஜனங்களுக்குக் கெடுதி என்று சொல்வதானால் கோவிலுக்குப் போகும் படி சொல்லுகின்றவர்களால் அதைவிட அதிகமான கெடுதி என்றே சொல்லலாம்.கோவிலை இடிக்கின்றவர்களை விட, கோவில் கட்டுகின்ற வர்களாலேயே மக்களுக்கு நஷ்டமும், கஷ்டமும் ஏற்படுகின்றன.கடவுள் கல்லிலும், செம்பிலும், படத்திலும் இருக்கிறார் என்று சொல்லு கின்றவர்களை விட, கடவுள் இல்லை என்று சொல்லுகின்றவர்கள் நல்லவர்கள்.
100 ரூபாய் இனாம் 
தானாக ஏற்பட்ட கடவுள் எங்காவது உண்டா?
இந்த மூவரில் யார் நல்லவர்கள்?
கருப்பக் கவுண்டர் உதைப்பதாகச் சொல்லி மிரட்டி ஓட்டு வாங்கினார்.
தனபாலு செட்டியார் பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார். பஞ்சாபகேச அய்யர் சுயராஜ்யம் வாங்கிக் கந்தாயம் தள்ளிப் போடுவதாக ஆசைகாட்டி ஓட்டு வாங்கினார். இம்மூவரில் யார் யோக்கியர்கள்? இவர்களில் யார் பதிவிரதைகள்?
1. சீதா, புருஷன் பந்தோபஸ்தினால் வேறு புருஷன் சாவகாசம் செய்ய முடியவில்லை.
2. மீனாட்சி, புருஷன் உதைத்து விடுவானே என்று உதைக்குப் பயந்து சோரம் செய்யவில்லை.
3. நாமகிரி, ஜனங்கள் கேவலமாய் பேசுவார்களே என்று மானத்திற்குப் பயந்து வேறு புருஷனை இச்சிக்கவில்லை.
4. இரஞ்சிதம், தன் மனதிற்குப் பிடித்த கணவன் கிடைக்கவில்லை என்று கருதி யாருக்கும் இணங்கவில்லை.
5. சரஸ்வதி, மேல் லோகத்தில் செக்கில் போட்டு ஆட்டுவார்கள் என்ற கஷ்டத்திற்குப் பயந்து யாருக்கும் இணங்கவில்லை.
6. மேனகை, தான் கேட்டளவு பணம் கொடுக்கவில்லை என்று கருதி யாருக்கும் சம்மதிக்கவில்லை.
7. கோகிலா, தன் காதலனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு விரோதமே என்று கருதி வேறு யாருக்கும் ஒப்பவில்லை. 
            - தந்தை பெரியார் (குடி அரசு 21-12-1930 பக் 13)
      

Sunday, October 24, 2010

ஆத்மா பற்றி பெரியார்

சமீபத்தில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வக்கீல் உயர்திரு. மைலாப்பூர் எஸ்.ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர்களுடன் காங்கிரஸ் பிரசாரமாக ஆங்காங்கு சென்ற காலையில், ஒரு நாள் மதுரையில் இரவு 10 மணிக்கு மேல் படுத்துக்கொண்டு வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருக்கையில், ஆத்மாவைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் இதே அபிப்பிராயம் சொன்னபொழுது, உடனே அவருக்குக் கோபம் வந்து, உம்மிடம் சாவகாசம் வைத்ததே தப்பு என்றும், நீர் இவ்வளவு கீழான மனிதனென்று எனக்கு இதுவரையிலும் தெரியா தென்றும் சொல்லிப் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்டார்.

ஆனால், அப்படிப் பேசுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் கிருஷ்ணராயர் தெப்பக்குளத்தில் அவருடைய தலைமையின்கீழ் ஒத்துழையாமை சம்பந்தமான பிரசங்கம் செய்த பிறகு, தலைவர் முடிவுரையாக என்னைப் பற்றி அவர் பேசும்போது, ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் ஒரு பெரிய ராஜரிஷியென்றும், இவர் நமக்குத் தலைவராகக் கிடைத்தது நமது பாக்கியம் என்றும், மற்றும் பல விதமாகப் புகழ்ந்து பேசினார். மறுநாள் காலையில் அவருடைய கோபம் தணிந்த பிறகு, தானாகவே என்னுடன் பேசவந்த பொழுது, நாயக்கர்வாள்! கோபஞ்செய்து கொள்ளாதீர்கள். இராத்திரி தாங்கள் அம்மாதிரி பேசியதற்குக் காரணம் இன்னதென்று தெரிந்து கொண்டேன்.

அதாவது, சீமைக்குச் சென்று, கல்வி கற்றுவந்த உங்களுடைய குழந்தைகள் திடீரென்று இறந்து போன வெறுப்பினால் தாங்கள் இவ்வித எண்ணங்கொண்டு விட்டதாக உணர்ந்தேன். ஆதலால் கோபித்துக் கொள்ளாதீர்களென்று சமாதானம் சொன்னார். நான் அதற்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்றும், அக்குழந்தைகள் என் தமையனார் குழந்தைகள் என்றுமே அவருக்கு மீண்டும் உரைத்து, எனதபிப்பிராயத்தையே பலமாக மறுபடியும் வற்புறுத்தினேன். ஆகவே, நான் இந்த விஷயங்களெல்லாம் வெகு நாளாகவே கொண்டுள்ள அபிப்பிராயங்களானாலும், அவற்றின் சம்பந்தமான சகல தொல்லைகளையும் மேற்போட்டுக் கொண்டு, பிரசாரம் செய்கிறதென்கிற வேலையாக இப்பொழுதுதான் திரிகிறேன். இதற்கு முன் நான் எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், சிநேகமாக ஏற்பட்டவர்களிடமெல்லாம் இதைப்பற்றியே பேசியும் இருக்கிறேன்.

ஆத்மா என்னும் விஷயத்தில் சுருக்கமாக பதில் சொல்ல வேண்டுமானால், அது ஒருவித உணர்ச்சியே ஒழிய ஒரு தனிப்பட்ட வஸ்துவல்ல. அவ்வுணர்ச்சியானது சரீரத்தின் அசைவு நின்றவுடன் ஒழிந்துபோகும் என்பதேயாகும். இதைப்பற்றி இரண்டு விசயங்கள் குடிஅரசுவில் முன்னாலேயே எழுதப்பட்டிருக்கிறது. மூன்றாவது விஷயமும் சமீபத்தில் வரும் ஆத்மா என்பதைப் பற்றிய பேச்சே பேசாமலிருந்தால் நல்லதென்றும், இதனால் பல ஜனங்களுடைய அதிருப்தி ஏற்பட்டு, நமக்கு வெளி உதவிகள் குறைந்து போகுமெனவும் சிலர் கூறுகின்றார்கள். அதை ஒத்துக் கொள்ள என்னால் முடியவில்லை. எனது அபிப்பிராயங்களைச் சொல்லுவதை நமது கடமையாக வைத்துக் கொள்ளுவோம். மற்றவர்களுக்குத் துன்பமில்லாத முறையில் அதைப் பிரசாரம் செய்வோமென்பதைத் தவிர, வேறு விஷயங்களை எதிர்பார்த்துக் கொண்டு, அபிப்பிராயங்களை மூடி வைத்துக் கொண்டிருப்பது நியாயமாகாது. நமது ஆயுள் காலத்திற்கு எவ்வித அளவும், உறுதியும் பந்தோபஸ்துமில்லையாதலால், கூடுமானவரை சவுகரியமிருக்கும்பொழுது நமது அபிப்பிராயங்களை எல்லாம் சொல்லி விடுவதுதான் சரியென்று நினைக்கின்றேன்.

குடிஅரசு 31.5.193

Tuesday, October 19, 2010

காதல் பற்றி பெரியார்

காதல்

அன்பு,ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத் தவிர வேறு ஒரு பொருளைக் கொண்டதென்ற சொல்லும் படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசகம் எழுதப்படுவதாகும். ஏனெனில் உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி, அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல் திருப்தியில்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும்.
ஆனால் காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எது வரையில் இருக்கின்றது? அது எந்த எந்த சமயதில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறைந்து போய் விடுவதற்குக் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும் பொருளற்ற தன்மையும் உண்மையற்ற தன்மையும் நித்தியமற்ற தன்மையும் அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.
ஆனால் அந்தப்படி யோசிப்பதற்கு முன்னே இந்தக் காதல் என்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழுக்கில் அது எப்படிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள் “காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல, அன்பு -நேசம் -ஆசை -காமம் என்பவை வேறு, காதல் வேறு, நட்பு வேறு என்றும் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுத்துவதாகும். அக் காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமே இல்லை என்றும்,
அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும். அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும் பிறகு வேறு ஒருவரிடமும் அந்தக் காதல் ஏற்படாது அந்தப்படி மீறி அந்தப் பெண்ணுக்கோ ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய அது ஒருக்காலும் காதலாகாது என்றும், ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ என்றெல்லாம் ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது.
மேலும் இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும் ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.
ஆனால் இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனுபோகமும் மக்களின் அனுபவ ஞானமும் இல்லாதவர்கள் என்றோ அல்லது இயற்கையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றே தான் கருத வேண்டி இருக்கின்றது.
அன்றியும் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாவதர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்கின்றோம்.
இன்னும் திறந்து வெளிப்படையாய்த் தைரியமாய் மனித இயற்கையையும் சுதந்திரத்தையும் சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால் இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும் தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்வது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித் தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் தான் சொல்ல வேண்டும்.
இவ்வளவு பெருமையையும் அணியையும் அலங்காரத்தையும் கொடுத்துப் பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி அது என்ன? அது எப்படி உண்டாகிறது? என்பதை யோசித்துப் பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும். காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா? என்பது ஒரு புறமிருந்தாலும் தமிழ் மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண் பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறு பொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. அதன் வேறுவிதமான பிரயோகமும் நமக்குத் தென்படவில்லை.
அன்றியும் அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருளைத் தவிர வடமொழி மூலத்தை அனுசரித்துக் காதல் என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள் தான் கூறப்பட்டிருக்கின்றன. மற்றப்படித் தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண்பெண் சேர்க்கைக்கூட்டு முதலியவை சம்மந்தமான விஷயங்களும் அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துக்களையே தான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகிறதே தவிர காதலுக்கென்று வேறு பொருளில்லை.
ஆதலால் இவைகளன்றி காதல் என்பதற்கு வேறு தனி அர்த்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டு பிடித்தார்களென்பதும் நமக்கு விளங்கவில்லை.
நிற்க, இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தானாகவே உண்டாவதாயிருந்தால் எந்த சந்தர்ப்பத்தில் எந்த ஆதாரத்தின் மீது என்பவைகளைக் கவனித்தால், பெண் ஆணையோ ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்ப்பதாலும் அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும் உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்க கேட்க நேரிடுவதாலுமே தான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.
இந்தப் படியும் கூட ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில் கேட்ட மாத்திரத்தில் தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு வேண்டும் என்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கிறானோ அதுபோல் தான் இந்தக் காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர வேற எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப்படவில்லை.
எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தைத் திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது.
அதாவது அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்குப் பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோதான் யாரும் எந்தப் பெண்ணிடமும் ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும் போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம். அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம்.
உதாரணமாக ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஒரு ஆண் பார்க்கின்றான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கின்றாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு யார் என்று இவர்களில் ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஒரு அரசன் குமாரத்தி என்று சொல்லுகின்றாள். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு வெறுப்பேற்பட்டுப் போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி. இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?
நிற்க, அவன் தன்னைச் சேவகன் மகன் என்று சொல்லாமல் தானும் ஒரு பக்கத்துத் தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லிவிட்டால் அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு “மறுஜென்மத்தாலும்” இவனை விட்டுப் பிரியக்கூடாது என்று கருதி விடுகிறாள். நான்கு நாள் பொறுத்த பின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும் சேவகன் மகன் என்றும் அறிந்தாள் என்று வைத்துக்கொள்வோம்.இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா?அல்லது இருந்தாக வேண்டுமா? என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும் மறுக்கும் தன்மையும் விளங்கும்.
இந்தப்படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது. இது போலவே இன்னமும் தான் முதலில் நினைத்ததற்கு அல்லது தனது நன்மைக்கும் திருப்திக்கும் இஷ்டத்திற்கும் விரோதமாயோ தான் எதிர்பார்க்காத கெட்ட காரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காதல் பயன்படுமா? அதை எவ்வளவு தான் கட்டிப்போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால் உண்மைக்காதலின் நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது.
நிற்க, உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகிய பின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக் கூடச் சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா? என்பவைகளைக் கவனிக்கும் போது சரீர மாறுபாடாலும் பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாற முடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய்க் கருத நேர்ந்தால் அது பொய்யாகவோ மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்குச் சந்தேகப்படும்படி விட்டால் அப்போது கூடக் காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக் காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கி விடக்கூடிய காதல் குற்றமான காதலா?என்பதற்கு என்ன மறுமொழி பகர முடியும்?
காதல் கொள்ளும் போது காதலர்கள் நிலமை, மனப்பான்மை, பக்குவம், லஷியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சக் காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லஷியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியிலும் துன்பத்திலும் அழுந்த வேண்டியதுதானா? என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாததையும் அது பயன்படாததையும் காணலாம்.
ஒரு ஜதைக் காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துறவிகளாய் விட்டார்களானால் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும் வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்னடுமா? விரோதமில்லையானால் ஓருவர் ஞானியாகி துறவியாகிவிட்டால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக் விரோதமாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்காமல் போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும், ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.
அது போலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும் வெறுப்புக் கொள்வதும் பிரிவதும் இயற்கையேயாகும். பலவீனமாய் இருக்கும் போது ஏமாந்து விடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாத போது கட்டுப்பட்டு விடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையேயல்லவா?
உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஓரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களையெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்தத் தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சில சமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனிடமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம். ஆகவே இந்தத் தாசி கொண்டது காதலா? அல்லது வாழ்க்கைக்கு ஒரு செளகரியமான வழியா? இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக் கொண்டே வந்தால் இது ஒத்த காதல் ஆகிவிடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளை விடச் சிறிது கூடச் சிறந்தது அல்லவென்பது விளங்கிவிடும்.
அதற்கு ஏதேதோ கற்பனைகளைக் கற்பித்து ஆண் பெண்களுக்குள் புகுத்திவிட்டதால் ஆண் பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்மென்று கருதி எப்படிப் பக்திவான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால் அநேகர் தங்களைப் பக்திவான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதிப் பூச்சுப் போடுவதும் பட்டை நாமம் போடுவதும் சதா கோவிலுக்குப் போவதும் பாட்டுக்கள் பாடி அழுவதும் வாயில் சிவ சிவ என்று சொல்லிக்கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து பக்திமான்களாகக் காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், எப்படிக் குழந்தைகள் துங்குவது போல் வேஷம் போட்டுக் கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக ‘தூங்கினால் கால் ஆடுமே’ என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்க வேண்டுமென்று கருதிக் காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படிப் பெண்கள் இப்படி இப்படி இருப்பது தான் கற்பு என்றால் பெண்கள் அது போலவெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், உண்மையான காதலர்களானால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லி விட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்துவிட்டால் அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்….

ஆகவே ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும் அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அ.றிணைப் பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையிலிருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக் கூடியதென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாற வேண்டியது தான் என்றும், மாறக் கூடியது தான் என்றும் நாம் கருதுகின்றோம்.
ஆகவே, இதிலிருந்து நாம் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் அன்பும் ஆசையும் நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும் திருப்திக்குமேயொழிய மனதிற்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல் அன்பும் ஆசையும் நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இதை எழுதுகின்றோம். இதுவும் ஏன் எழுதவேண்டியதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் ‘இது காதலல்ல’, ‘அது காதலுக்கு விரோதம்’, ‘அது காம இச்சை’, ‘இது மிருக இச்சை’, ‘இது விபச்சாரம்’ என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒரு விதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப் பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்றுப் பார்த்துவிடலாம் என்றே இதைப் பற்றி எழுதலானோம்.
(18.01.1931′குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதிய தலையங்கம்.)

Sunday, October 17, 2010

இந்தியாவில் எப்படி பார்ப்பனியம் நிலைத்திருக்கிறது?


லகம் முழுவதும் விழிப்படைந்து முன்னேறிக் கொண்டிருக்கிற காலத்தில் குறிப்பாக எல்லா சமுகத்தைவிட மதசம்பந்தமான பிடிவாதத்தில் இணையற்ற மகமதிய அரசர்கள் ஆட்சி செய்யும் நாடுகளும் கூட அரசுரிமையை இழந்தாவது சீர்திருத்தத்தைப் பரப்பவேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கும் அரசர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்துவரும் இக்காலத்தில், இந்தியா மாத்திரம் ஒரு கடுகளவுகூட தன் நிலையைவிட்டு அசையாமல் இருக்கக் காரணம் என்னவென்பதை மக்கள் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
நிற்க. பொதுவாக உலக மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சகோதரபாவம் கொள்ளுவதற்கு உலகத்தில் முதல் தடையாயிருந்தது, இருப்பது மதங்கள் என்று சொல்லப்படுபவைகளேயாகும் - இரண்டாவது, அதன் உட்பிரிவுகள் ஆகும்.
மூன்றாவது, பாஷைகள் ஆகும். இதை அனுசரித்து இடவித்தியாசங்களும் ஆகும். உதாரணமாக பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள், இந்துக்கள் என்பன போன்ற மதப்பிரிவுகள் உலகத்தில் இல்லாமலிருந்தால் மக்கள் சமுகத்தை பெரும்பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்காட்டவும் ஒரு நாட்டாருடைய சுகதுக்கங்கள் மற்ற நாட்டார்களுக்கு சம்பந்தமில்லாமலிருக்கவுமுள்ளதான நிலை உலகத்தில் இருக்கவே முடியாது என்னலாம்.
வேண்டுமானால் ஒரு சமயம் தேசத்தின் பேரால் மக்களையும் பிரித்துக்காட்ட வேண்டியதாக ஏதாவது ஏற்பட்டால் ஏற்படலாம். அப்படிக்கு இருந்தாலும் துருக்கியருக்கும் ஆப்கானிஸ்தானத்திற்கும் உள்ள பிரிவுகள் போன்ற பிரிவுகளும் அமெரிக்காவுக்கும் அய்ரோப்பாவுக்கும் உள்ள வித்தியாசம் போன்ற பிரிவுகளும் போல இருக்குமே ஒழிய, எந்தக்காரணத்தைக் கொண்டும் ஒற்றுமைப்பட முடியாததும் ஒரு தேசத்தையோ, ஒரு சமுகத்தையோ அடியோடு கொன்று, ஒரு தேசத்தார் வாழத்துணியும் படியான பிரிவுகளாகவும், மற்றவர்களைப் பற்றி ஒரு சிறிதும் கவலை கொள்ளாமல் தங்கள் தங்கள் சமுக நன்மையை மாத்திரம் கவனிக்கக் கூடிய பிரிவுகளாகவும், ஒருவருக்கொருவர் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் முதலியவைகளால் வெறுப்புக் கொள்ளும் பிரிவுகளாகவும் பிரிந்திருக்க முடியவே முடியாது என்பது நமது உறுதியாகும்.
கிறிஸ்தவர்களுக்குள் இருந்த போதிலும் மதம் என்கின்ற ஒரு காரணத்தால் ஒன்றுபட்டு உலகத்தில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் இந்தியாவின் ஆதிக்கம் முதலிய விஷயங்களில் எதிரிகளாகவே இருந்து இந்தியாவை உறிஞ்சி வருகின்றார்கள் என்பதைத் தினமும் உணருகின்றோம். அது போலவே உலகத்தில் உள்ள எல்லா மகமதியர்களும் தங்கள் மதத்தின் பேராலும், சமுகத்தின் பேராலும் தங்களது நன்மையைக் குறிக்கொள்ளும்போது இந்துக்கள் என்பவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரிடையாய் இருக்க நேர்ந்தாலும் சிறிதும் அபிப்பிராய பேதமில்லாமல் ஒன்று சேருகின்றார்கள்.
அதுபோலவே இந்துக்கள் என்பவர்களும் மதவிஷயங்கள் என்பவைகளில் மகமதியர்கள் கிறிஸ்தவர்கள் என்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர முடியாதவர்களாயிருந்தாலும்கூட ஒன்று சேர வேண்டும் என்கின்ற உணர்ச் சிகளை எளிதில் அடைவதன் மூலம் எதிரிகளாக கருதத்தக்கவர்களாகி விடுகின்றார்கள்.
இது சரியா? தப்பா? அல்லது இதற்கு ஏதாவது பொருள் உண்டா? என்பவைகள் ஒருபுறமிருந்தாலும் முக்கியமாய் மதத்தின் பலனாய் வேற்றுமை உணர்ச்சிகள் தோன்றியே தீருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. இப்படியெல்லாம் இருந்தாலும் கூட மேல்நாட்டில் உள்ள ஒவ்வொரு மதக்காரர்களும் சமீபகாலமாய் தங்கள் பிடிவாத குணங்களை விட்டு முதலில் தங்களுக்குள் ஒன்றுபடுவதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு அம்முயற்சிக்கு எதிரிகளாய் இருப்பவைகளைத் தகர்த்தெறிந்து ஒரே சமுகமாக ஆவதற்கு மிக முனைந்து வருகின்றார்கள். இம் முயற்சிக்கு விரோதமாக மதத்தின் பேராலும் தெய்வத்தின் பேராலும் இருக்கும் தடைகளைக் கூட வெகு சுலபத்தில் தகர்த்தெறியத் துணிந்து வருகின்றார்கள்.
உதாரணமாக இம்முயற்சியில் சிறிதளவானாலும் முதலில் வழிகாட்டிய பெருமை மேல்நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கே உண்டு என்று சொல்ல வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் முதன் முதலாக நிலைமைக்குத் தக்கபடி தங்களைச் சரிப்படுத்தி கொள்ள முன்வந்தவர்கள். உதாரணமாக, அவர்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிளைக்கூட திருத்த முயன்று பழைய ஏற்பாட்டிற்கு விரோதமாய் புதிய ஏற்பாட்டை உண்டாக்கி நடை, உடை முதலியவைகளையும் மாற்றிக் கொண்டார்கள்.
அதுபோலவே, இரண்டாவதாக மகமதியர்களையும் சொல்லலாம். ஏனெனில், அவர்களிலும் இந்துக்கள் என்பவர்களைபோல பிறவியில் உயர்வு தாழ்வு என்பது போன்ற சில கடுமையான பிரிவினை வித்தியாசங்கள் இல்லாவிட்டாலும், வாழ்க்கையில் மகமதியர்களையும்- மதம் என்பது இந்துக்கள் என்பவர்களைப்போலவே அநேக விதங்களில் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றது என்று சொல்லலாம். உதாரணமாக, நடைஉடை பாவனை முதலாகிய பலவற்றுள் மதங்களின் பேரால் கட்டுப்பட்டுக் கிடந்தாலும், இப்போது தைரியமாய் அக்கட்டுபாடுகளில் சிலவற்றையாவது தளர்த்திவிட ஆரம்பித்து விட்டார்கள். அது மாத்திரமல்லாமல் வெகு துரிதமாகவும் தைரியமாகவும் சிலர் மாற்றிக் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் படிக்கு மாற்றிய மகமதிய வீர அரசர்களான அமீருக்கும் பாஷாவுக்கும் ஆதரவு கொடுக்கவும் முந்துகின்றார்கள்.
மற்றும் வெளிநாடுகளில் அந்தந்த தேச குடிஜனங்கள் பெரும்பாலோர் அத்திருத்தங்களுக்குத் தாராளமாய் ஆதரவளித்துப் பின் பற்றி வருவதில் யாதொரு தடையும் காண முடியவில்லை. ஆனால், புரோகிதக் கூட்டத்தின் தொல்லைகள் மாத்திரம் எந்த மதத்திலும் சிறிதளவாவது இல்லாமலிருக்கும் என்று சொல்லிவிட முடியாது என்றாலும், அவர்களிலும் சிலர் தம் சுயநலத்திற்கு வலியுறுத்துவதை தவிர வேறு காரணங்கள் சொல்லவோ ஆதாரங்கள் காட்டவோ முடியாதபடி மக்கள் அறிவு பெற்று விட்டார்கள்.
இந்தியாவில் உள்ள மகமதிய சமுகமும் இந்தியர்களுடன் பழகுவதால் கமால் பாட்சாவுக்கும், அமீருக்கும் விரோதமாக அதிருப்தியும் ஆத்திரமும் காட்டுவதன் மூலம் ஒரு புறத்தில் தங்கள் மதப்பற்றை காட்டிக் கொண்டாலும், மற்றொரு புறம் தங்கள் சமுக நன்மையை உத்தேசித்து அவர்களுக்கு ஆதரவளித்தே வருகின்றார்கள். உதாரணமாக அமீரையும் அவரது மனைவியரையும் இந்திய மகமதியர்களில் சிலர் குறைகூறி இருந்தாலும், அமீரினது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிட்டது என்று தெரிந்தவுடன் அவருக்கு இந்தியாவில் உள்ள மவுலானாக்கள் முதல் கொண்டு அனுதாபப்படுவதுடன் ஆதரவளிக்கவும் முந்துகின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இதன் காரணம் என்னவென்று பார்ப்போமானால், கூடுமானவரை அந்த சமுக நன்மை சம்பந்தமான கவலையும், ஒற்றுமையுமேயாகும். ஆனால், இந்துக்கள் என்பவர்களுக்குள் அம்மாதிரியான சமுக ஒற்றுமை இல்லாமல் எவ்வித திருத்தங்களுக்கும் எதிர்ப்புகள் இருந்து வருவதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போமானால், இதிலுள்ள மதப்பிரிவுகளோடு அவைகளிலுள்ள உட்பிரிவுகளும், ஜாதிப்பிரிவுகளும், அவற்றில் உள்ள உயர்வு தாழ்வுகளும், அதனால் சிலருக்கு ஏற்படும் நிரந்தர நலமுமே காரணமாகும்.
இந்த உள்பிரிவுகளும் ஜாதிப் பிரிவுகளும் நிலைத்து குருட்டுப் பிடிவாதமாய் இருப்பதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போமானால், மற்ற மதங்களை விட இந்துக்கள் இந்துமதம் என்பவற்றில் அதிகமான நிர்ப்பந்தங்கள் இருந்து வருகின்றன என்பதேயாகும். அவையாவன: முதலாவது, இந்துக்களுடைய மதக்கொள்கைகளின் படி மக்கள் படிக்கக்கூடாது. ஆனால், ஒரு சிறு வகுப்பினர் - பார்ப்பனர்கள் என்பவர்கள் மாத்திரம்தான் படிக்க உரிமையுள்ளவர்கள். மத ஆதாரம் என்பதைப் பற்றி இந்து மதத்தைச் சேர்ந்த மக்களே தெரிந்து கொள்ளக்கூடாது.
மத சம்பந்தமான எந்த விஷயங்களிலும் பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று ஏற்பாடு செய்து கொண்ட ஒரு சிறு வகுப்பார் அதாவது 100-க்கு 2 பேர்களான பார்ப்பனர்கள் - தவிர மற்றவர்களுக்குச் சொந்த அறிவை உபயோகிக்கவோ, ஆராய்ச்சி செய்யவோ, நன்மை தீமை எவை? அவசியமானவை எவை? அவசியமில்லாதவை எவை? என்று தெரியவோ சற்றும் உரிமை கிடையாது.
படிப்பு, மத சம்பந்தம் ஆகியவைகளில் இம்மாதிரியான நிர்ப்பந்தம் இருப்பதோடு மாத்திர மல்லாமல், மனித வாழ்க்கையிலும் மக்களைத் தனித்தனி ஜாதிகளாகப் பிரித்த தோடல்லாமல், அவற்றில் உயர்வு தாழ்வும் ஒருவரை ஒருவர் தொடாமல் நெருங்காமல், காணமுடியாமல் செய்வித்து ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பிறவித் தொழிலையும் ஏற்படுத்தி அவைகளையேதான் அவ்வகுப்பைச் சேர்ந்தவன் செய்து தீரவேண்டும் என்றும், அந்தப்படி அரசன் சட்டம், தண்டனை, கண்டனம் ஆகியவைகள் மூலம் செய்விக்க வேண்டும் என்றும் அரசர்களாலும் நிர்ப்பந்தப்படுத்தப் பட்டுவிட்டது.
ஒரு சிறு கூட்டத்தார் தங்கள் ஜனத் தொகைக்குத் தக்கபடி, தங்கள் வாழ்வுக்குத் தேவையானபடி நிரந்தரமாய் பொருள் வருவாய் இருக்கத் தக்கதாக பதினாயிரக்கணக்கான கடவுள்களை சிருஷ்டித்து, ஆயிரக் கணக்கான சடங்குகளையும் சிருஷ்டித்து அவற்றிற்கு தினப்படி பூஜை, உற்சவம், கல்யாணம், அவைகளின் திருப்திக்கு என்று அச்சிறு கூட்டத்தாருக்கு வேண்டியவைகளை யெல்லாம் அவசியமாக்கி, அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்றும் அச்சிறு கூட்டத்தாரின் திருப்தியே கடவுள் திருப்தி என்றும் மற்ற மக்கள் பிறந்ததே, அச்சிறு கூட்டத்திற்கு தொண்டு செய்வதற்கென்றும் பலவாறாகக் கற்பித்து, அக்கட்டுப் பாடுகளிலிருந்து யாராவது விலகவோ அல்லது அக்கட்டுப்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யவோ புறப்பட்டால் அவ்வாராய்ச்சி செய்வது மகாபாதகமான தென்றும், நாஸ்திகமென்றும் அப்படிப்பட்ட நாஸ்திகனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் மற்றும் இது போன்ற பல நிர்பந்தங்களையும் உண்டாக்கி வைத்திருக்கின்றார்கள்.
இது மாத்திரமல்லாமல், யாராவது துணிந்து இக்கட்டுப்பாட்டையும், கொடுமையையும் உடைக்கப் புறப்பட்டால் அவர்களை அசுரர்கள், ராட்சதர்கள், துஷ்டர்கள், தேவர்களுக்கு விரோதி, கடவுளுக்கு விரோதி, உலகத்திற்கு ஆபத்தை விளைவிப்பவன் என்பதான விஷமப் பிரச்சாரத்தால் அவனை அடியோடு அழித்து வந்திருக்கின்றார்கள். இன்றையதினமும் மேல் கண்ட கொள்கைகளே மதக் கொள்கைகளாகவும், அவைகளைக் கொண்ட புஸ்தகங்களே மத ஆதாரங்களாகவும், அவைகளை நிலைநிறுத்தச் செய்வதே சீர்திருத்தங்களாகவும் இருந்து வருகின்றன.
உதாரணமாக, இது சமயம் நாட்டில் ஏற்பட்ட ஒரு புது உணர்ச்சியும் கிளர்ச்சியுமானது மக்களை எவ்வளவோ தூரம் நடை, உடை, ஆச்சாரம், போக போக்கியம் முதலியவைகளில் பழைய கொள்கைகளையும், பழைய அனுபவங்களையும் மாற்றிக் கொள்ள அவசியமும் இடமும் ஏற்படுத்திக் கொடுத்து, அனுபவத்திலும் தலை சிறந்து விளங்கிக் கொண்டிருந்தும், தனது சொந்த சுயநலம் மாத்திரம் எவ்வளவு அறிவீனமும், ஆணவமும், இழிவும் பொருந்தியதாக இருந்த போதிலும் அதிலிருந்து சற்றாவது மாறுபடுவதோ தளர்த்தப்படுவதோ என்பது சிறிதும் முடியாததாகவே இருக்கின்றது.
உதாரணமாக, மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதி வித்தியாசத்தை நமது இந்திய நாட்டில் உள்ள அறிவாளிகள், பிரமுகர்கள், தலைவர்கள் பெரியோர்கள் இந்திய நாட்டில் உள்ள பொது இயக்கங்கள் சமய தத்துவங்கள் என்பவைகள் எல்லாம் அநேகமாய் ஒரே முகமாக விலக்க வேண்டும் என்றும், ஒழிக்க வேண்டும் என்றும், அந்தப்படி ஒழிக்காவிட்டால் நாட்டிற்கு சுதந்திரமில்லை, தேசத்திற்கு சுயமரியாதை இல்லை சமயத்திற்கு மதிப்பு இல்லை என்று பலவாறாக அபிப்பிராயம் கொடுத்தும் தர்மத்தின் பேராலும் மதத்தின் பேராலும் கூட்டங்கள் கூடித் தங்களுக்கும் தங்கள் ஆதிக்கத்திற்கும் தகுந்தபடியே தீர்மானங்கள் செய்து வருகின்றார்கள்.
உதாரணமாக, சமீபத்தில் பல இடங்களில் பார்ப்பனர்கள் ஒன்று கூடி வருணாசிரமத்தை உறுதிப்படுத்தி பார்ப்பனர் தவிர மற்றவர்கள் பார்ப்பனர்கள் வைப்பாட்டி மக்கள் பார்ப்பன சேவைக்காக கடவுளால் உண்டாக்கப்பட்டவர்கள் என்கின்ற கருத்துக்களடங்கிய சூத்திரர்கள் என்பதை நிலை நிறுத்த முயற்சித்திருப்பதும் சைவர்கள் என்பவர்கள் ஒன்று கூடி தீண்டாமை என்பதை நிலை நிறுத்தத்தக்க வண்ணமாக தீண்டாதவர்கள் என்பவர்களுக்கு தனிக் கோவில் கட்டிக் கொடுக்க என்று தீர்மானித்திருப்பதும் போதுமான உதாரணமாகும்.
எனவே, இந்த மாதிரி வருணாசிரம தர்மங்களும், இந்தமாதிரி சைவர்களும் நமது நாட்டில் உள்ளவரை எந்த விதத்தில் பார்ப்பனியம் ஒழிய முடியும்? எந்த விதத்தில் சமத்துவம் உண்டாகும்?
எந்தவிதத்தில் மக்கள் ஒற்றுமைப்பட்டு மானத்துடன் வாழ முடியும் என்பதை யோசித்தால் இந்தியாவில் எப்படி பார்ப்பனியம் நிலைத்து எந்தெந்த வழியில் நாட்டைப் பாழாக்கி வருகின்றது என்பது புலனாகும்.
எனவே, இந்தியாவில் பார்ப்பனியமற்ற மதமே இல்லை என்றும், இந்துமதமென்னும் தலைப்பின் கீழ் எந்தமதமானாலும், சமயமானாலும் அகச் சமயமானாலும் அவற்றை எல்லாம் அடியோடு அழித்தாலல்லாது மக்கள் கடவுள் நிலை என்பதையோ அன்பு நிலை என்பதையோ ஒருக்காலமும் அடைய முடியாததென்றே சொல்லுவோம்.
தந்தை பெரியார்
- குடிஅரசு துணைத் தலையங்கம் - 14.4.1929

Sunday, October 10, 2010

நவராத்திரி

* தந்தை பெரியார்


நவராத்திரி என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் - இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவமான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்கால மும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். வேதபாராய ணம், சூரிய நமஸ்காரம் முதலியவைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாளில் நமது வீடு வேத கோஷத்தில் நிறைந்து மங்களகரமாகும் படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப்பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக் களுக்கும், பணம் படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தியோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப்பனனுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து, ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.

நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, காலை முதல் உபவாச மிருந்து சரஸ்வதியை பூசை செய்ய வேண்டும். இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடைய வர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்துப் பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப் பூசைக்கு ஆயுத பூசை என்றொரு பெயரும் உண்டு. இந்த நவராத்திரியை இந்துமதப் பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண் டாடுகிறார்கள். அன்றியும் சிவ, விஷ்ணு ஆலயங் களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடு கிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள். இந்த வேடிக்கைகளைப் பார்க்கவே அநேகர் மைசூருக்குப் போவது வழக்கம். இதனால் கடவுள் பக்தி பரப்பும் தொழிலையுடைய பார்ப் பனரும் இவ்வுற்சவத்தால் தங்களுக்கு இலாபமிருப்ப தால் அவர்களே ஊர் ஊராய் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி விளம்பரப்படுத்துவார்கள். நிற்க; இதைச் சைவர், ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் முதலிய எல்லா மதத்தவர்களும் கொண்டாடக் காரணம் என்னவென் றால், கல்வியும், ஆயுதமும் அதற்குக் கற்பிக்கப்பட்ட தேவதையான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்று சொல்லப்பட்டவர்கள் - ஒவ்வொரு மதத்தினுடைய தெய்வங்களின் அம்மன்களானதனாலும், இந்து மதத்தவர்களுக்கெல்லாம் இது சம்பந்தப்படுத்தப்பட்ட புராணக் கதைகளிலிருப்பதாலுமேயாகும். துர்க்கை முதலிய அம்மன்களை வைஷ்ணவர்கள் பூசிக்கா விட்டாலும், இது சம்பந்தமான கதைகள் அவர்களி டையேயும் உண்டு. மற்றவர்கள் சரஸ்வதி பூசையன்று துர்க்காலட்சுமி ஸரஸ்வதீப்யோ நம என்று கூறி பூசை தொடங்குவார்கள்.

முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங்களும் விருத்தி யாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக் கொண்டிருந்ததால்; இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்தி பெற்று, ஒன்பதாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று, பரிவாரங் களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதிதேவிக்கு மகிஷாசூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே, இந்தக் கதையின் ஆதாரத்தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தைக் கொண்டே இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

நம்முடைய உற்சவத்திற்கும் மூடநம்பிக்கை களுக்கும் புராணக் கதைகளுக்கும் பாமரர்களே பங்காளிகள். படித்தவர்களுக்கு இதில் வயிறு வளர்க்கும் பிரத்தியட்ச அனுகூலமிருந்தாலும் கூட இதுபோன்ற கதைகளைப் பற்றிய விவகாரங்கள் எழும்போது, தங்களுக்கெல்லாம் வேறு கருத்தை இதில் பெரியவர்கள் அமைத்திருக்கிறார்கள் என்று எதற்கும் தத்துவ நியாயம் சொல்வதுபோல், இதற்கும் ஒரு ரகசிய அர்த்தம் உண்டாம்! வேத பாராயணம், கோயிலில் நடக்கும் பூசை, ஆராதனைகள், ஒன்பது நாளும் பார்ப் பானுக்குப் போடும் சோறு, அம்மன் விழித்தவுடன் செய்யும் தானம் முதலியவைகளால் பாமரர்களுக்கு இகலோக சுகம் சித்திக்க வேண்டுமாம். அதனால் மனம் சுத்தப்பட்டுப் பின்னால் மோட்சத்திற்கு வருவார்களாம். படித்த பண்டிதர்கள் இந்த ஆடம்பரத்தில் சோறும் தட்சணையும் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் சொல்லும் உள் கருத் தென்னவென்றால் மகிஷாசூரன், அவன் பரிவாரங்கள் முதலியவைகள் என்பதை அஞ்ஞானமும் அதன் காரியங்களுமாகவும், பார்வதியை சித் சக்தியாகவும் அது பரம்பொருளாகிய ஆத்ம ஸாக்ஷாத்கார விசேடத்தால் அஞ்ஞானத்தை வேரறுப்பதாகவும் கொள்ள வேண்டுமாம். துர்க்காலட்சுமீ சரஸ்வதீப்யோ நம என்னும் மந்திரத்தைப் பார்ப்பானிலிருந்து அம்மனையே பிரதானமாகப் பூசிக்கும் சங்கரமடத்து சாஸ்திரிகள் வரையிலும், மக்களிடமிருந்து கிடைக்கும் வரையிலும், தங்கள் லவுகீக சுகத்திற்காக அவர்களை வேரறுக்கிறார்களே ஒழிய, அவர்களது அஞ்ஞானத்தை வேரறுப்பதாகத் தத்துவார்த்தம் சொல்லும் சமயவாதிகளெல்லாம் மகிஷாசூரனிடமல்லவா (அதாவது ஆசையில்) மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்?

முன்னொரு காலத்தில், லட்சுமிதேவி உலகில் அலர்மேலு மங்கையாக வந்து, பரமதபதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெருமாளை அடைந்து ஆனந்திக்க, இந்த ஒன்பது நாள் தவமிருந்தாராம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுப்பெற விவாகம் பெரிய ஆடம்பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன்னிட்டுத்தான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண் டாடுகிறார்கள். இந்நாள்களில் திருப்பதியில் பிரம்மோற் சவம் நடக்கிறது. பிரம்மாவின் பத்தினியான சரசுவதியும் இந்த நவராத்திரியில் தன் நாயகனை அடைந்து நிலைபெறத் தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு, கடைசி மூன்று நாளும் சரசுவதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி அன்று சரஸ்வதி தவம் முடிந்து சந்துஷ்டியாயிருப்பதால், அன்று வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம்; தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்.
இதை நம்பி நடக்கும் நம்மைவிட, மற்றத் தேசங்களில் எல்லாம் சரஸ்வதி எந்நாளும் திருப்தியோடு கூடின சந்தோஷத்துடன் இருக்கிறாள். நம் தேசத்தில் வருடத் திற்கு ஒருநாள் தான் கண்ணைத் திறந்து திருப்திப்படு கிறாள். இதற்குக் காரணம், பார்ப்பானுக்குக் கொடுப்பது சரியாகக் கொடுக்கப்படுகிறதா? என்று பார்ப்பதற்காகவோ அல்லது பூசையின் திருப்திக் குறைவாலோ அல்லது நம்மிடம் ஆயிரமாயிரம் வருடமாக வாங்கியுண்ட நன்றி கெட்ட குணத்தை மறைப்பதற்கோ அல்லது தன்மொழி யான சமஸ்கிருத இலக்கணத்தைத் தன் முதற் பிள்ளைகள், மற்றப் பிள்ளைகளுக்கு எங்கே சொல்லி வைத்து விடுவார்களோ என்னும் அஞ்ஞானத்தாலோ என்பதை நாம் அறியோம்.
கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஒரு அரசன் இருந்ததாகவும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத்தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டதாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெண்சாதியான சுவேதி என்பவளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூசையை உபதேசித்ததாகவும், அவ்வாறே அவள் செய்து அங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து, அவன் சத்துருக்களை ஜெயித்துத் தகப்பனுக்கு ராஜ்யத்தை வாங்கிக் கொடுத்ததாகவும் சொல்லப்படு கின்றது. நவராத்திரிக்கு இன்னும் இதுபோன்ற பல கதைகளும் உண்டு.

கிரேதாயுகம் முதற்கொண்டு, இதுநாள் பரியந்தம் செய்த பூசைகளும், மந்திரங்களும், அதைச் செய்த ஜன சமூகங் களும், நம் நாடும், அதை ஏற்றுக் கொண்ட தெய்வங்களும் அய்ந்நூறு வருடங்களாக அன்னியர் படையெடுப்பால் சின்னாபின்னப் பட்டு, வெள்ளைக்கார மந்திரத்தால் வெளியேற்றப் பட்டிருக்கையில், நமது சரஸ்வதியும், லட்சுமியும், பார்வதியும் அவர்களுக்குப் பூசையும், அதற்காகப் பார்ப்பனனுக்குப் பணமும், தட்சணையும் எதற்கு? என்று குடிஅரசு கேட்டு விட்டால், சமயவாதியும், சாஸ்திரவாதியும், அது சமயத்தை அடியோடு தூஷிக் கின்றது என்று சொல்லுவதனாலும், படித்தவர்கள் என்பவர்களான ஆங்கில, சரித்திர, சயின்ஸ், பி.ஏ., எம்.ஏ.,வாதிகளுக்குப் புத்தி இருக்கிறதா? இல்லையா? என்று தான் கேட்கிறோம்!

மேலும், விஜயதசமி அன்று சிவன் கோயிலில் பரிவேட்டை உற்சவம் என்பதாக ஒன்று நடத்துகின்ற வழக்கமுண்டு. அன்று பகவான் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னிமரத்தில் நெருப்பிருக்கிறதாம். அதில் அம்பு பாய்ச்சினால் அந்த வேகத்தால் நெருப்புண்டாகி, அந்த மரத்தை எரித்து விடுமாம். அதனால் வேட்டையாடுவோருக்கும், ராஜாக் களுக்கும் எளிதில் ஜெயத்தைக் கொடுக்குமாம். இந்தக் காரணத்தால், இந்த வேட்டைத் தினத்திற்கு விஜயதசமி அதாவது, ஜெயத்தைக் கொடுக்கும் நாள் என்று பெயர். என்றாலும், இதற்கும் உள்கருத்துண்டாம். உள்கருத்தை வைத்து வைத்துத்தான் நம் நாடு உள்ளேயே போயிற்று. பாமரர்களுக்கு உள்கருத்து ஸ்தூலமாகவும், படித்தவர் களுக்குச் சூட்சமமாகவும் இருப்பதாகச் சொல்லு கிறார்கள். (எந்தச் சூட்சுமமும் பாமரர்களைப் படித்தவன் ஏமாற்றவே உபயோகப்படுகிறதே ஒழிய, காரியத்திற்கு ஒன்றும் உபயோகப்படுவதில்லை). அதாவது, நெருப்பி லடங்கிய வன்னி மரத்தையே ஆத்மாவோடு கூடிய தேக மாகவும், அம்பை ஞானமாகவும், வேட்டையில் அம்புவிடு வதை ஞானோபதேசமாகவும், மரம் எரிந்து விழுவதை கரும சம்பந்தமானவைகளை ஞானத்தணல் சுட்டு வெண் ணீறாக்குவதாகவும் கொள்ள வேண்டுமென்பார்கள். இந்த உள்கருத்து உபதேசம் கேட்டுத்தான் ராஜவம்ச மெல்லாம் நடுத்தெருவில் நின்றதான வடதேசத்துக் கதைகள் அநேகம்.

மைசூர் மகாராஜா பரிவேட்டையால் அய்தருக்கு அடிமையானார். ஆனால், வெள்ளைக்காரப் பரிவேட்டை தான் அதை விடுவித்துக் கொடுத்தது. தஞ்சாவூர்ராஜா செய்த சரஸ்வதி பூசையும், ஆரிய பரிவேட்டையும் சரஸ்வதி மகாலில் அடுக்கி வைத்த குப்பைக் கூள ஏடுகளும், ஆயுதங்களும், முன்வாயிலில் துளசியைக் கொட்டி விட்டு, பின்வாயிலில் ராஜாவை ஓடச் செய்து விட்டது. அதுபோலவே, திப்பு காலத்தில் திருவனந்த புரத்து ராஜாவிற்கு வெள்ளைக்காரர்கள் அபயம் கொடுத் தார்களே ஒழிய, சரஸ்வதி பூசையும், பரிவேட்டையும் ஒன்றும் செய்யவே இல்லை. அந்தப்படி அபயம் கொடுத் திராவிடில், அனந்த சயனப் பிரபுவும், அவர் பெண்சாதி யும், அவர் மருமகளும் ஓடிப் போயன்றோ இருக்க வேண்டும்? அனந்தசயனப் பிரபு பின்னும் ஓடிவந்து தங்கள் சொத்தென்று, அங்கு சயனித்துக் கொண்டி ருப்பதாக இப்பொழுதும் சொல்லுகிறார்கள்.

கடவுளையும், பெரியவர்களையும் தூஷிக்கிறவர்கள் காட்டும் ஆதாரங்களையும், அதன் நியாய வாதங்களை யும் கூட்டி ஆலோசியுங்கள். சரஸ்வதியைக் கொலு விருத்தி, பெரிய உற்சவங்கள் செய்யும் நமது நாட்டில் ஆயிரத்திற்கு 50 பேருக்குக்கூட கல்வி இல்லை. சரஸ் வதியே இல்லாத நாட்டில் ஆயிரத்திற்கு 996 பேர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.
நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு சாமானிய மல்லவே! ஒரு ஏட்டைக் கிழியோம்; ஒரு எழுத்தை மிதியோம்; இறைந்து கிடக்கும் இதழில் துப்போம்; படித்த ஒரு பழைய ஏட்டையும் வீசி எறியோம்; கால்பட்டால் தொட்டுக் கும்பிடுவோம்; கைபட்டால் கண்ணில் ஒத்திக் கொள்வோம்; எந்த ஏட்டிற்கும் காப்பு சொல்வோம்; செல்லரித்த ஏட்டையும் புண்ணிய தீர்த்தத்தில் கொண்டு போய் போடுவோமே ஒழிய தெருவில் போடோம்; கற்றவர் நாவின் கருத்தும், கம்பன் கவித்திறனும் அவளே என்போம். இத்தனையும் போதாமல் வருடம் ஒருதரம் பத்து நாள் பள்ளியறையில் வைத்துக் கும்பிடவும் செய்கிறோம். இத்தனையும் நாம் இங்கு செய்ய, இந்த சரஸ்வதி கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாமல் மேனாட்டில் குடிபுகுந்த காரணம் என்ன? என்பதை வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும். ஏ சரஸ்வதி! மேனாட்டில் உனக்கு என்ன மரியாதை இருக்கிறது? உன்னைப் படித்து எறிகிறார்கள்; காலில் மிதிக்கிறார்கள்; செருப்புக் கட்டுகிறார்கள்; மலம் துடைக்கிறார்கள்; உன் பெயர் சொல்லுவதில்லை; நீ ஒருத்தி இருக்கின்றாய் என்றுகூட நினைப்பதில்லை; உனக்குப் பூசை இல்லை; புருஷன் இல்லை; வீணை இல்லை; எல்லா வித்தைக்கும் அவர்கள் தாங்களே எஜமானர்கள் என்கிறார்கள். எனவே நீ செய்வது நியாயமாகுமா? என்று நாங்கள் சொல்லி விட்டால், உன் பாஷையான சமஸ்கிருத இலக்கணத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படாதென்று நீ சொன்னதாகச் சொல்லும் சாஸ்திரிகளே எங்களை நாஸ் திகர்கள் என்று சொல்கிறார்கள். உன் முதற்பிள்ளையான பார்ப்பனர்களின் தாசிப் பிள்ளை, அடிமை, வேலையாள், ஒழுக்கமற்றவன் என்று எங்களில் படித்த உணர்ச்சியற்ற பண்டிதர்களையும்கூட நீ சொல்லியிருப்பதாக உன் முதற் பிள்ளைகள் சொல்லும் ஏட்டைக்கூட கிழித்தெறியாமல் சற்றும் விசுவாசமற்றுப் போனாயே என்று நாங்கள் சொல்லிவிட்டால், தூஷித்தவர்களாகி விடுவோமா? நீயே சொல்லு!
நீ வாசம் செய்யும் மேனாட்டில் உனக்குப் பூசை யில்லை. நைவேத்தியமில்லை. பூசாரி, குருக்களுக்குக் காணிக்கையு மில்லை. பஞ்சமும் படியாமையுமுடைய இந்த நாட்டின் பேரில் மாத்திரம் உனக்கு வந்த வயிற் றெரிச்சல் என்ன? உன் முதற் பிள்ளைகளுக்கெல்லாம் உன் பேராலேயே அளித்தளித்து ஆண்டியானோமே என்று நாங்கள் சொல்லுவதாலேயே உன் பக்த கோடி கள், உன் புருஷனுடைய பிரம்மலோகத்திற்கும் உன் மாமனுடைய வைகுண்டத்திற்கும் உன் பாட்டனும் மகனு மான சிவனுடைய கைலாசத்திற்குப் போகும் கதவுகளை (சமயதூஷணையால்) சாத்தினவர்களாகி விடுகிறோ மாம். நீயும் உன் குடும்பத்துப் பெண்களும் குடிபோயி ருக்கும் நாட்டில் உங்கள் புருஷர்களுக்குக் கோயில் கிடையாது. கும்பாபிஷேகமில்லை. அப்படியிருக்க, நீங் களில்லாத நாட்டில் உங்களுக்குக் கோயிலும், கும்பாபி ஷேகமும், பூசையும் எதற்கு? இருக்கிற கோயில்களில் நீங்கள் குடியிருந்தால் போதாதா? காணிக்கையையும் நிறுத்தி, கும்பாபிஷேகத்தையும் விட்டு, கோயிலுக்கு எழுதி வைப்பதையும் நிறுத்திப் பணத்தையெல்லாம் படிப்பிற்கே வைத்துவிட்டுப் போங்கள் என்றால், பாமர மக் களுக்காக ஏற்பாடு செய்து வைத்த சமய ஒழுக்கங்களை யெல்லாம் தடுத்து மோட்ச வாசலை அடைக்கும் தாசர்க ளென்று எங்களை ராஜீயவாதிகள் கூடச் சொல்லலாமா?

ஆச்சாரிகளுக்கும், குருக்களுக்கும் அதைச் சேர்ந்த பார்ப்பனர்களுக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பக்கத்து ஏழைக்குப் படிப்பும், தொழிலும் கற்பியுங் களென்றால் ஆச்சாரிகளையும், பெரியவர்களையும் நாங்கள் குற்றம் சொல்லுகிறவர்களாகி விடுவோமா? அறுப்பறுக்கும் காலத்தில் கருக்கரிவாள்கூட ஒரு மூலையில் கவலையற்றுத் தூங்குகிறதே! வருண பகவானுக்கும் சூரிய பகவானுக்கும் ஏற்பட்ட சண்டையில் வருண பகவான் முறியடிக்கப்பட்டு, ஓடி மறைந்த விட்டானே! சூரியனே இப்போது கழனியில் உள்ள எல்லாவற்றையும் காய்ந்து தொலைத்து விட்டானே! உன் ஆயுதங்களுக்குக் காட்டிலும் கழனியிலும்கூட வேலை யில்லை என்றால், பின்னை கருமார் வீட்டிலும் வேலை என்ன? எனவே வேலையில்லா ஆயுதத்திற்குப் பூசை ஏன்?

சரஸ்வதி மகாலும், லட்சுமி விலாசமும், பார்வதி மண்டபமும் கட்டி வைத்த தஞ்சாவூர் மகாராஜா குடும்பம் எங்கே? தப்பித் தவறி அந்த வம்சத்திற்கு ஒரு டிப்டி சூப்ரண்டெண்ட் வேலைக்குக்கூட எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? காரணமென்ன? வீண் பூசைகளும், கோயில் கும்பாபிஷேகமும் அல்லவா? அவர்கள் செய்த பிராமண போஜனமும், தட்சணையும், கோயில் பூசையும் என்ன பலனை அளித்தது? சரஸ்வதி பூசையின் கொலு வால் அல்லவா நாயுடுகளின் அரசாட்சி தஞ்சாவூரில் ஒழிந்தது? கிளைவும், டூப்ளேயும் எந்தச் சரஸ்வதியைப் பூசித்தார்கள்? அவரவர்கள் முயற்சியும், கடமையும், எந்தக் கஷ்டத்திலும் செய்து முடிக்கும் தைரியமும் இருந் தால் எல்லா லட்சுமியும் அங்கே வந்து தீர்வார்கள். இதுவே உலக அனுபோகமும் சாஸ்திரத்தின் கருத்துமாகும்.
நன்றி:விடுதலை 10-10-2010

Tuesday, October 5, 2010

என்னைப் பெற்ற ஏழைகள்

அம்மையார் இந்திய மக்களின் சராசரி வாழ்வுக்கு 4 பங்கு காலம் அதிகமாகவே வாழ்ந்து விட்டார். தானாக நடக்க, இருக்க, மலஜலம் கழிக்க சவுகரியமுள்ள காலம் அவ்வளவும் வாழ்க்கை நடத்திவிட்டு சவுகரியம் குறைந்த 2 மணி நேரத்தில் முடிவெய்திவிட்டார். 28ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அம்மையிடம் அனுமதிபெற்றே ஜோலார்பேட்டை பிரச்சாரத்துக்குச் சென்றேன். 12 மணிக்கு ஆவி போக்குவரவு நின்றுவிட்டது. காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தேன். சின்னத்தாயம்மாள் சேலம் டவுனுக்கு 3 மைலில் உள்ள தாதம்பட்டி என்கின்ற கிராமத்தில் ஒரு பிரபல செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். மிக்க செல்வமாய் வளர்க்கப்பட்டவர்.


உதாரணமாக, தனது கிராமத்தில் புஷ்பவதி ஆனதற்கு சேலம் டவுனில் ஊர்வலம் விடத்தக்க தடபுடல் வாழ்க்கை-யில் இருந்தவர். ஈரோட்டில் ஏழைக் குடும்பத்தில், குழந்தைப் பருவத்திலேயே தகப்பனார் காணாமல் போன பிறகு ஒரு மிக ஏழ்மை வாழ்க்கை நடத்திய தாயா-ரால் காப்பாற்றப்பட்டவரும், பள்ளிக்கூடமே இன்னதென அறியாதவரும், 6 வயதிலேயே கூலி வேலை செய்யவும் 18 வயதில் கல்லுடைப்பு வேலை செய்யவுமாய் இருந்து வந்தவரும், 25 வயதில் வண்டி வைத்து வாடகைக்கு ஓட்டப்போகிறவருமான வெங்கிட்ட நாயக்கருக்கு நெருங்கிய பந்து உறவு காரணமாக வாழ்க்கைப் படுத்தப்பட்டவர்.
அம்மை செல்வக்குடும்பத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்து வந்தவராய் இருந்தாலும், வெங்கிட்ட நாயக்கரை மணந்த பிறகு வெங்கிட்ட நாயக்கர் தரித்திர வாழ்வு அம்மையாரையும் பீடித்து அம்மையார் செங்கல், ஓடு முதலியவைகளை காளவாயிலிருந்து ஊருக்குள் கட்டிடம் கட்டுபவர்களுக்குக் கூலிக்கு கூடைகளில் சுமந்து போட்டு தினம் 8 பைசா கூலி வாங்கி பிழைத்து வந்தவர். புருஷனுக்கு தினம் 2 அணா கூலியும், பெண்ஜாதிக்கு தினம் 0-0-8 பைசா கூலியுமாக சம்பாதித்து வந்தவர். பிறகு புருஷனுக்குக் கல்சித்திர வேலையில் தினம் பகலில் 8 அணாவும் இரவில் 0.12.0 அணாவும் பெறக்கூடிய யோக்கியதையும் வேலைத் திறமையும் ஏற்பட்டபோது, அம்மையார் வெளிவேலைக்கு போகாமல் இருக்க நேர்ந்தது.
ஆன-போதிலும் பின்னால் புருஷன் வண்டி ஓட்டிக்கொண்டு அடிக்கடி வெளியூர்களுக்குப் போவதைச் சகிக்காத அம்மையாரின் தகப்பனார் ஒரு சிறு தட்டுக்கடை வைத்துக் கொடுத்தார். அந்தக் கடை ஒரு வண்டிப்பேட்டையில் வைத்தால் தன்னுடன் தோழர்களாய் இருந்த வண்டிக்காரர்கள் தன்னிடம் சாமான் வாங்குவார்கள் என்று கருதி சட்டி பானை, அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் பொடி, விறகு முதல் சகல சாமக்கிரியை சாமானும் ஒருங்கே வைத்து வியாபாரம் செய்தார்கள். இந்தக் கடைக்கு வேண்டிய சகல சாமானும் அம்மையாரும், அம்மையாரின் மாமியாரான கெம்பு அம்மாளும் வீட்டில் தயார் செய்து கொடுத்து வருவார்கள். இந்த சமயம் 2, 3 குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன.
இந்த நிலையில் அந்தக் கடையில் நல்ல லாபம் கிடைத்ததாலும், பிறகு போட்டி ஏற்பட்டதாலும் அதை விடுத்து அந்தக் கடையை அப்படியே மற்றொருவனுக்கு விற்று விட்டு லாபப்பணத்தையும், கைம்முதல் பணத்தையும் சேர்த்து ஈரோடு பஜார் ரோட்டில் ஒரு மளிகைக் கடை வைத்தார். அம்மையை கைப்பிடித்த சம்பவத்தால் கல்தச்சு வெங்கிட்டன் என்ற பெயர் மாறி வண்டிக்கார வெங்கிட்ட நாயக்கனாகி, அதுவும் மாறி தட்டுக்கடை வெங்கிட்ட நாயக்கனாகி, பிறகு மளிகைக்கடை வெங்கிட்ட நாயக்கரானார். அதில் 3 வருஷத்திலேயே மற்றவர்கள் பொறாமைப்படும் படியான லாபமடைந்தார். ஒரு சிறு குச்சு - அதாவது கதவு இல்லாமல் தட்டி வைத்து இரவு முழுவதும் நாயை விரட்டிக் கொண்டிருக்க வேண்டிய குடிசையை மாற்றி ஓட்டுவில்லை கட்டிட வீடும், 2 ஏக்கரா விஸ்தீரணமுள்ள நல்லவயல் நிலமும் உடையவ ரானார்.
இது சமயம்தான் அம்மையாருக்கு முன்பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்துபோய் ஸ்தல யாத்திரைகள், தவங்கள் செய்து வரடி கல் சுற்றி, நிலத்தை வழித்து அதில் சாப்பாடு போட்டு பிசைந்து சாப்பிட்டு, சன்யாசிகளின் எச்சில் சாப்பிட்டு, வரம் பெற்று ஈ.வெ.கிருஷ்ணசாமியையும், ஈ.வெ.ராமசாமியையும் பெற்றெடுத்த காலம் என்றாலும், அம்மையாருக் குள்ள பிள்ளை ஆசையால் மூத்த பிள்ளை ஒன்றே தனக்குப் போதுமென்று கருதி அதற்கே தனது முலைப்பால் முழுதும் கொடுக்க ஆசைப்பட்டு இளைய பிள்ளையாகிய ராமனை மற்றொரு குழந்தையில்லாத அம்மை யாருக்கு அதாவது தன் புருஷனின் சிறிய தகப்பனார் மனைவியாகிய ஒரு விதவைக்கு ஒரு சிறு வீடும் சிறிது நிலமும் இருந்த காரணத்துக்காக அவர் களையே வளர்த்துக்கொள்ளும் படி இனாமாய்க் கொடுத்துவிட்டார்கள்.
அந்தக் காரணத்தாலேயே ராமன் (ஈ.வெ.ராமசாமி, பள்ளிக்கு அனுப்பாமல் தெருத்தெருவாய் சுற்றவும் கேள்வி கேட்பாடு இல்லாமல் அலையவும், கம்மநாட்டி வளர்ப்பது கழுதைக்குட்டிதான் என்ற பெயருக்கேற்ப ஒரு உருவாரமாய் இருந்து வரவும், மூத்த பிள்ளை கிருஷ்ணசாமியை மிக அருமையாய் செல்வமாய் வளர்க்கவும் ஆன நிலையேற்பட்டது. ஆனால் இந்தச் சமயம்தான் அதாவது இந்த இரு குழந்தைகளும் பிறந்த சமயம் தான் வெங்கிட்ட நாயக்கருக்கு பெரிய செல்வம் பெருக சந்தர்ப்பமும் பெருகி வந்த காலமாகும். அதாவது கடைசியில் சொன்ன மளிகை கடை வியாபாரமானது வலுத்துவிட்டது. வீடு, வயல், தங்க நகைகள் கேட்போர் மனமும், பார்ப்போர் கண்களும் திடுக்கிடும்படியான தோற்றமாய் இருந்த காலத்தில் எப்படியாவது மளிகைக்கடை நடக்கும் கட்டடத்தை பிடுங்கிக் கொண்டால் தங்களுக்கு அந்த லாபம் கிடைக்குமென்று கருதி சிலர் அந்தக் கடையை கட்டடக்காரனிடம் அதிக வாடகை வைத்து கேட்க ஆரம்பித்தார்கள்.
அம்மையாரும் - புருஷனும் யோசித்து கடையை சகல சாமானுடனும் பாக்கியுடனும் ஒப்புக்கொள்பவர் களுக்கு கொடுத்து விடுவதாய் விலை கூறினார். அதற்கு ஏற்பட்ட போட்டியில் நல்ல விலை கிடைத்தது. அந்தப் பணத்தைக் கொண்டு உடனே ஒரு மண்டிக்கடை அதாவது மொத்த வியாபாரக் கடை (மூட்டைக் கணக்காய் விற்பது) வைக்க யோசித்தார்கள். உடனே நல்லதொரு கடை அமைந்தது. அங்கு மண்டிக்கடை வைத்தார் புருஷன். உடனே மண்டிவெங்கிட்ட நாயக்கரானார். சின்னத்தாயம்மையாரும் மண்டி வெங்கிட்ட நாயக்கருக்கும் ஊரில் பணக்காரர் கூட்டத்தில் சேர்க்கத்தக்க பெயர் ஏற்பட்டதோடு எப்படியோ நாணயமுமேற்பட்டு விட்டது. தான் மிகவும் நாணயசாலி என்று காட்டிக் கொள்வதில் இருவர்களும் சமர்த்தர்-கள்.
அந்தக் காலங்களில் பணம் படைத்தவர்களுக்கு பணம் போட்டு வைக்க பாங்கி இல்லாததால் நாணயத்தில் பேர்பெற்ற சின்னத்-தாயம்மாளும், வெங்கிட்ட நாயக்கரும் ஒரு சேவிங் பாங்கி ஆகிவிட்டார்கள். பணம் ஏராளமாய் தங்களிடம் டிபாசிட் வர ஆரம்பித்ததும். தங்கள் வியாபாரத்தை மிகவும் பெருக்கி விட்டார்கள். மண்டிவெங்கிட்ட நாயக்கர் தன் கடையில் வியாபாரம் செய்தால் சின்னத்தாயம்மாள் வீட்டில் நெல் குத்தும் கொட்டணம், துவரை உளுந்து உடைக்கும் வேலை, விளக்கெண்ணெய் காய்ச்சி ஊத்தும் வேலை முதலியவைகளில் வீட்டில் எப்போதும் 20, 30 பேர் வேலை செய்யும்படியான தொழில் செய்து புருஷனைப் போலவே தானும் வருஷா வருஷம் சிறிதாவது பணம் சம்பாதித்து புருஷனுக்கு கொடுத்தே வருவார்கள்.
பணம் சேர்ந்தவுடன் மத பக்தி, மத சின்னம், விரதம், நோன்பு, திதி முதலியவைகள் தானாகவே தேடி வருவது வழக்கமல்லவா? அதுபோல் அம்மையார் மிகவும் பக்தியுடையவரானார். விரதங்கள் அதிகமாய் அனுஷ்டிக்கத் தொடங்கினார். மண்டி வெங்கிட்ட நாயக்கருக்கும் நாமம் பலமாக பட்டை பட்டையாய்த் திகழ்ந்தது. இந்த மத்தியில் வீட்டில் செல்வமாய் வளர்க்கப்பட்ட மூத்த பிள்ளை கிருஷ்ணசாமியும் பாகவதராக ஆகிவிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் அதாவது மண்டி வைத்து மண்டிக்கடை நன்றாய் நடக்க ஆரம்பித்து சிறிது எதிர்பார்த்ததுக்கு மேல் லாபம் வர ஆரம்பித்தவுடன் சின்னத்தாயம்மாள் சின்ன பிள்ளை ராமனை (ஈ.வெ.ராமசாமியை) ஒரு சிறு சண்டை காரணமாக இனாமாக (தத்து கொடுத்து விட்ட அம்மாளிடமிருந்து) பிடுங்கிக் கொண்டார்கள்.
ராமனை வளர்த்த அம்மாள் ஊர் பஞ்சாயத்துக் கூட்டினார். மண்டி வெங்கிட்ட நாயக்கருக்கு ஒன்றும் தட்டிச் சொல்ல முடியவில்லை. சின்னத்-தாயம்மாள், 2 கண்ணு தான் எனக்கு இருக்கிறது. இதில் ஒன்றைக் கொடுக்க முடியுமா? முடியாது போ! என்று சொல்லிவிட்டார்கள். முடிவில் ராமனை சுமார் 9 வயதில் கைப்பற்றினாலும் அவள் விதவை வளர்த்த பிள்ளையாய், ஊர்சுத்தியாய், லோலனாய்த் திரிந்ததால் படிப்பு இல்லை. அது மாத்திரமா? இனிமேல் படிக்கவும் லாயக்கில்லாத சோதாவாய் ஆகிவிட்டான்.
இருந்த போதிலும் பள்ளியில் வைத்து வீட்டு வாத்தியார் வைத்துப் பார்த்தார்கள். வாத்தியாருடன் சண்டை, பிள்ளைகளுடன் பலாத்காரம், அடிதடி, கடைசியாய் ’உபாத்தியாயரை வைவதில்லை பிள்ளைகளை அடிப்பதில்லை’ என்கின்ற வாசகம் ஆயிரம் தடவை, அய்ந்தாயிரம் தடவை தண்டக் காப்பி எழுதுவதே வேலையாய் இருந்ததால் ராமனைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திக் கொண்டு, மண்டிக்கடையில் அதாவது தரகு வியாபார இலாகாவில் மஞ்சள், மிளகாய், ஏலம் கூறும் வேலையில் போட்டார்கள். இருந்தாலும் ராமன் எங்கு வளர்த்த தாயாரிடம் போய்விடுவானோ என்றுச் சின்னத்தாயம்மாள் சின்ன மகனுக்கு சிறிது சலுகைக் காட்டி பொய் அன்பாவது காட்டிவருவார்கள்.
எப்படியோ பணம் சேர்ந்துகொண்டே வரும். இந்த சந்தர்ப்பம்தான் வெங்கிட்ட நாயக்கன் என்ற பெயர் மாறி நாயக்கரானதும் சின்னத் தாயம்மாள் என்கிற பெயர் மாறி நாயக்கர் அம்மாள் என்ற பெயர் ஏற்பட்டதுமாகும். அம்மையாருக்கு தெய்வ பக்தி கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது நாயக்கரும் அம்மாள் சொன்னபடி ஆடியாகவேண்டும். பணத்தை அள்ளி இறைக்க ஆரம்பித்துவிட்டார்கள். கண்ட விடமெல்லாம் காடுமேடெல்லாம் கோவில், சத்திரம், சாவடி கட்ட ஆரம்பித்தார்கள். பார்ப்பனர்களின் புகழுக்கு அடிமைப்பட்டு பல குருமார்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
ஒவ்வொரு கல்யாணத்தின் போது தருமக் கல்யாணங்கள் செய்வார்கள். நன்றாய் இருக்கும் கோவிலுக்கும் கும்பாபிஷேகம் செய்வார்கள். நாயக்கர் (புருஷன்) ஏதாவது தட்டிச் சொன்னால் நீங்கள் பணம்கொடுக்க வேண்டியதில்லை. என் பணத்தில் செய்யுங்கள் என்று எடுத்தெறிந்தாற்போல் பேசிவிடுவார்கள். வீட்டில் வாரம் ஒரு காலட்சேபம், ராமாயண பாரத வாசகம், அங்குத் திரியும் சந்நியாசிகளுக்கும், பாகவதர்களுக்கும் சதாசர்வகாலம் உலையில் நீர் கொதித்த வண்ணமாய் இருக்கும் படியான தண்டச் சோத்து சத்திரம் போல் வீட்டை நடத்தி வந்தார்கள்.
இந்த நிலையில் ஒரு விஷயம் குறிப்பிடத்தகுந்தது. இளைய மகன் ராமனிடம் எவ்வளவு அன்பு காட்டினாலும் அம்மையார் ராமன் தொட்ட சொம்பு, டம்ளர், ஆகியவைகளை கழுவியே வைப்பார்கள். ராமனை சமையல் வீட்டிற்குள் விடமாட்டார்கள். அப்பொழுதே அவன் ஜாதி கெட்ட பயலாய் விளங்கினான். ராமனுக்கு ஆகவே சமையல் வீட்டிற்குள் வேறு யாரும் நுழையக்கூடாது என்பார்கள். இந்த லட்சணத்தில் அம்மையார் மாமிசம் சாப்பிடமாட்டார். ராமனுக்கு தினமும் வேண்டும். ஆதலால் ராமனுக்குக் கல்யாணமானவுடன் அவனுடைய அனாச்சாரத்துக்கு ஆகவே அம்மையார் ராமனை வேறு வைத்துவிட்டார்கள்.
சதா சர்வ காலம் தன் வயற்றில் இப்படிப்பட்ட பிள்ளை ராமன் பிறந்ததற்கு துக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். பொதுவில் சொல்லவேண்டுமானால், அம்மையார் பணத்தாசை இல்லாதவர்கள். நன்றாய் சம்பாதித்து நன்றாய் செலவு செய்தவர்கள். பார்ப்பனர்களுக்கு ஏராளமாய் அழுதவர்கள். அளவுக்கு மீறி ஆச்சாரங்களை அர்த்தமில்லாமல் பின்பற்றி வந்தவர்கள். எத்தனையோ பேரைத் திருத்திய ராமனால் அம்மையாரிடம் தன் கொள்கையை சொல்லுவதற்குக்கூட தைரியம் ஏற்படும்படியாய் அம்மையார் இடம் கொடுக்கவில்லை. கடைசி வயதில் கூட அம்மையாரைப் பார்க்க வந்தவர்களிடம் என் மகன் ராமனை சிறிது பார்த்துக் கொள்ளுங்கள் இளங்கன்று பயமறியாது என்பது போல் கண்டபடி திரிகிறான் என்று ஆவலாதி சொல்லியே வருவார்கள்.
ஒரு காலத்தில் மவுலானாக்கள் ஷவ்கத்தலி, மகமதலி அம்மையாரின் கையில் தங்கள் தலையை ஒட்ட வைத்து வாழ்த்தும்படி கேட்டபோது தன்னை அவர்கள் தொட்டுவிட்டதற்காக முகத்தை சுளித்துக்கொண்டார். இதை நான் வெளிப் படையாய் எடுத்துக்காட்டி கேலி செய்து அம்மையாரை மன்னிப்புச் சொல்லும்படிச் செய்தேன். அதனால் அரசியல் தலைவர்கள் காந்தி முதல் யார் வீட்டுக்கு வந்தாலும் அவர்கள் எங்கு தன்னை தொட்டுவிடுவார்களோ என்று பயந்து ஒடுங்கி ஒரு மூலையிலேயே நின்று தான் அவர்களுடன் பேசுவார். மூடநம்பிக்கைகளுக்கும். குருட்டு அனாச்சாரங்களுக்கும் தாயகமாய் இருந்தாலும் 95-வயது வாழ்ந்து முடிவெய்திவிட்டார். எனக்கு அவர் முடிவெய்தியதைப் பற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது. அந்த அம்மாளுடைய கோரிக்கை - எனக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்துவிட்டுச் சாகவேண்டுமென்பதே. எனது கோரிக்கை - எனக்கு முன்னதாகவே அம்மையார் முடிவெய்திட வேண்டுமென்பதே. என் இஷ்டம் நிறைவேறிற்று.
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! பூரண மகிழ்ச்சி!!
- தந்தை பெரியார்
- குடிஅரசு, (இரங்கல் கட்டுரை-2.08.1936)