Friday, March 11, 2011

கடவுள்


1. கடவுளைக் காப்பாற்ற மனிதன் புறப்பட்டதாலேயே கடவுளின் பலவீனம் விளங்குவதோடு கடவுள்களுக்கு வரவர பலவீனம் ஏற்பட்டு ஆபத்தும் பலப்பட்டு வருகிறது.
2. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லாவிட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றையொன்று பற்றிக் கொண்டிருக்கின்றன.
3. பெரும்பாலும் சுயநலக்காரர்களும் தந்திரக்காரர்களுமே கடவுளையும், வேதத்தையும், ஜாதியையும் உண்டாக்கு கிறார்கள்.
4. கடவுள் உண்டானால் பேய் உண்டு. பேய் உண்டானால் கடவுள் உண்டு. இரண்டும் ஒரே தத்துவங் கொண்டவை.
5. இந்தியாவில் காகிதம், புத்தகம், எழுத்து, எழுது கருவி எல்லாம் சரஸ்வதியாக பாவிக்கப்பட்டு வணங்கி வந்தாலும் 100-க்கு 5 பேர்களே படித்திருக்கின்றார்கள்.
6. மேல்நாட்டில் காகிதங்களினால் மலம் துடைத்து சரஸ்வதியை அலட்சியம் செய்தும் அங்கு 100-க்கு 90 பேர்கள் படித்திருக்கிறார்கள்.
7. கோயில்கள் சாமிக்காக கட்டியதல்ல. வேறெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக்காட்டி மக்களைத் தாழ்த்தவும், பணம் பறித்து ஒரு கூட்டத்தார் பிழைக் கவும், மக்களை அறியாமையில் வைத்து அடிமைகளாக்கவும் கட்டப்பட்டதாகும்.
8. எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கை இடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவர்களுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதத்தை வாயினால் உச்சரிக்கக் கூட யோக்கியதையற்ற வனாவான்.
9. சுயமரியாதைக்காரன் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனி தனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய்விட்டது.
ஆனால் நமது நாட்டில் அந்த செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டிருப்பதை எடுத்துப் புதைத்து, நாறின இடத்தை லோஷன் போட்டுக் கழுவி சுத்தம் செய்கின்ற வேலையைத்தான் சுய மரியாதைக்காரன் செய்து கொண்டிருக் கின்றான்.
10. பத்துமாதக் குழந்தையை கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.
11. கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பானைச் சாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.

Tuesday, March 8, 2011

வருணாசிரமமும் - சுயமரியாதையும்


இந்திய சட்டசபைத் தேர்தலில் வருணாசிரமக்காரர்களைச் சுயமரியாதைக்காரர்கள் ஆதரித்ததாகவும் அதனால் சுயமரியாதைக்காரர்களுக்கு யாதொரு கொள்கையும் இல்லை என்றும் சில பத்திரிகைகள் எழுதி வருகின்றன.


அது மாத்திரமல்லாமல் சில தோழிகளும் அந்தப்படியே பேசி வருகின்றார்கள்.

இதற்கு நம்மை சமாதானம் சொல்ல வேண்டுமென்று இரண் டொரு நண்பர்கள் எழுதியும் இருக்கிறார்கள்.

சுயமரியாதைக்காரர்கள் அந்தப்படி செய்தார்களா இல்லையா என்பது ஒரு புறமிருந்தாலும், எலக்ஷன் பிரச்சினை இன்னதென்றும் ஒவ்வொருவரும் என்ன பிரச்சினையின் மீது பிரச்சாரம் செய்தார்கள் என்றும் தெரிந்து கொண்டால் பிறகு யார் யாருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டுமென்பதையும் யார் யாருக்கு உதவி செய்ய வேண்டியது நியாயம் என்பதையும் ஒருவாறு முடிவு செய்து கொள்ளலாம்.

காங்கிரசுக்காரருடைய பிரச்சினையெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்பதும், அரசியலில் பார்ப்பனரல்லாதார் பெற்றிருக்கும் வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தை அழித்துவிட வேண்டும் என்பதும், மற்றும் பல துறைகளில் பார்ப்பனரல்லாதார் அடைந்திருக்கும் சிறிது முன்னேற்றத்தையும் கெடுத்து சகலதுறைகளிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதுமேயாகும்.

இந்தக் கொள்கைகளைப் பிரச்சினையாக வைத்தே தென்னாட்டில் உள்ள சகல பார்ப்பனரும் அதாவது உத்தியோகப் பார்ப்பனர், ஹைக்கோர்ட் ஜட்ஜு முதல் பெஞ்சு கோர்ட் வரை உள்ள அதிகாரிப் பார்ப்பனர்கள் சகல கீழ்வக்கீல் பார்ப்பனர்கள், டாக்டர் பார்ப்பனர்கள் உபாதானம் சவுண்டி, புரோகிதம், மாமா பார்ப்பனர்கள் எல்லோரும் மற்றும் காப்பிக்கடை, வக்கீல் குமாஸ்தா, ஓட்டல் பார்ப்பனர்கள் யாவரும் பள்ளிப் பார்ப்பனர் உள்பட ஒன்று சேர்ந்து ஒரே மூச்சாக காங்கிரசை ஆதரித்து இருக்கிறார்கள்.

அநேகப் பார்ப்பனர்கள் தங்கள் வருணாசிரமத்தை அனுசரிக்கின்றவர்களாயிருந்தும், காங்கிரசுக் கட்சியை - அனுசரிக்காதவர்களாயிருந்தும் எலக்ஷன் பிரச்சினையானது பார்ப்பனர்-பார்ப்பனரல் லாதார் என்கிற பிரச்சினையாகவே இருக்கின்றது என்று தெரிந்ததினாலேயே, காங்கிரஸ், காங்கிரஸ் என்று சொல்லிக் கொண்டு காங்கிரசில் கலந்து வேலை செய்து இருக்கிறார்கள். தென்னாட்டு பார்ப்பனர்கள் காங்கிரஸ் போர்வைக்குள் இருந்திருந்தாலும்கூட அவர்களுடைய கவலை எல்லாம் எப்படியாவது சர் சண்முகம் சட்டசபை மெம்பர் ஆகக்கூடாது என்பதும், ஒரு சமயம் சர். சண்முகம் சட்டசபை மெம்பர் ஆகிவிட்டாலும்கூட இந்திய சட்டசபையில் அவர் பிரசிடெண்டாக ஆகக்கூடாது என்றும் கவலை வைத்தே ஒவ்வொரு தொகுதிக்கும் வேலை செய்திருக்கிறார்கள்.

வருணாசிரமக்காரர்களோ காங்கிரசை எதிர்த்து காங்கிரசுக்காரரைத் தோற்கடிக்க வேண்டும் என்பதையே இந்தத் தேர்தலை பொருத்தமட்டில் முக்கிய கருத்தாய்க் கொண்டவர்களே தவிர ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப் புதைக்க வேண்டும் என்கின்ற பிரச்சினையையோ தேர்தல் பிரச்சாரமாகக் கொண்டவர்கள் அல்ல என்பது நமதபிப்பிராயம்.

அன்றியும், வருணாசிரமக்காரர் இந்திய சட்டசபையில் பார்ப்பனரல்லாதாருக்கோ சீர்திருத்தக்காரருக்கோ, காங்கிரசுக்காரரை விட அதிகமான கெடுதி ஒன்றும் செய்து விடமுடியாது.

ஏனென்றால் காங்கிரசுக்காரர் சமூக சீர்திருத்த சம்பந்தமான எவ்வித மசோதாவையும் கொண்டு வருவதில்லை என்றும், வேறு யாராவது கொண்டு வந்தாலும் அதை ஆதரிப்பதில்லை என்றும், எதிர்ப்பதாகவும் வாக்கு கொடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் வருணாசிரமக்காரர்கள் இந்திய சட்டசபையில் என்ன கெடுதி செய்துவிட முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.

அன்றியும் கொல்லங்கோடு ராஜா, ராஜா பகதூர், கிருஷ்ணமாச்சாரி முதலியவர்கள் தோழர் சண்முகத்தை ஆதரிப்பதாகவே ஜஸ்டிஸ் கட்சியிடம் தங்களுக்கு விரோதமோ துவேஷமோ இல்லையென்றும் வெளிப் படையாகச் சொல்லி இருப்பதுடன் சில சமயங்களில் சர். சண்முகத்தை ஆதரித்தும் இருக்கிறார்கள்.

வருணாசிரமம், சீர்திருத்தம் என்பவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான அபிப்பிராயமானாலும் இதில் வஞ்சம், சூது, சதி, மோட்சம், பித்தலாட்டம், ஏமாற்றம் நாணயக் குறைவு ஏதும் இல்லை என்றே கருதுகிறோம்.

ஆனால் காங்கிரசின் போர்வை போர்த்த பார்ப்பனர்களே இவை சகலத்தையும் அஸ்திவாரமாக வைத்தே ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப் புதைப்பது, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஒழிப்பது, சர். சண்முகத்தைக் கவிழ்ப்பது என்கின்ற பிரச்சினையை வைத்து வேலை செய்திருக்கிறார்களாம். இந்த நிலையில் அறிவுள்ள ஒருவன் காங்கிரசை ஆதரிப்பதா எப்படியாவது காங்கிரசை எதிர்ப்பதா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுமாய் வாசகர்களை வேண்டிக் கொள்ளு கின்றோம்.

காங்கிரசுக்காரர்கள் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் பேசிய பேச்சில் இருந்தே நாம் கூறுவது சரி என்று நன்றாய் விளங்கி இருக்கலாம். தோழர்கள் சத்தியமூர்த்தி அய்யர், ராஜகோபாலாச்சாரியார், டாக்டர். ராஜம் அய்யங்கார் ஆகியவர்கள் தாங்கள் வெற்றி பெற்றதன் மூலம் ஜஸ்டிஸ் கட்சி 500 கஜ ஆழத்தில் வெட்டிப் புதைக்கப்பட்டு விட்டதாகவும், வகுப்பு வாதம் என்னும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்னும் விஷயம் அடியோடு ஒழிந்துவிட்டது என்றும் பேசி மகிழ்ந்து இருக்கிறார்கள்.

சுயமரியாதைக்காரர்கள் தாங்கள் ஜஸ்டிஸ் கட்சியில் எவ்வித சம்பந்தமும் வைத்துக் கொண்டிருக்கவில்லை என்றோ அல்லது தங்களுக்கு இப்போது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற விஷயமே இல்லை என்றோ சொல்லிக் கொள்ளுவதானால் அவர்கள் தங்களைப் பொருத்தவரை எலக்ஷனில் கலந்து கொள்ளாதிருந்தது ஞாயம் என்று கருதிக் கொள்ளலாம்.

மற்றபடி சுயமரியாதைக்காரர்கள் என்பவர்கள் காங்கிரசுக்கு எதிராக இருந்ததோ, அல்லது காங்கிரசுக்கு எதிராக இருந்தவர்களை ஆதரித்தோ ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்ததோ எவ்விதத்திலும் தப்பிதம் என்று சொல்லிவிட முடியாது.

ஆகவே சுயமரியாதைக்காரர்கள் எலக்ஷனில் நடந்து கொண்டது எலக்ஷனில் நின்ற ஒவ்வொரு கட்சிக்காரரும் அவரவர்கள் என்ன பிரச்சினையின் மீது எலக்ஷன் பிரச்சாரம் செய்தார்களோ அந்தப் பிரச்சினையைப் பொருத்ததே ஒழிய மற்றபடி வேறு விதமான காரியங் களைக் குறித்து அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- பகுத்தறிவு -  2.12.1934