Sunday, August 21, 2011

அம்பலத்து அதிசயம்! மறக்கமுடியாத பார்ப்பனக் கொடுமைகள்!


தேச விடுதலை விஷயத்தில் பார்ப்பனரல்லாதார் (திராவிடர்) பொது நன்மையை உத்தேசித்து அநேக பார்ப்பனர்களுடைய கொடுமைகளையும், சூழ்ச்சிகளையும் கூட்டாக்காமல், கபடமற்றுப் பார்ப்பனர்களுடன் ஒத் துழைத்து வந்திருந்தாலும், அவர்களுடைய உழைப்பை யெல்லாம், அவர்கள் தங்கள் வகுப்புச் சுயநலத்திற்கென்று அனுபவித்துக் கொள்வதல்லாமல், உழைக்கின்ற பார்ப் பனரல்லாதாருக்கு (திராவிடருக்கு) எவ்வளவுக்கெவ்வளவு கெடுதிகளையும், துரோகங்களையும் செய்து வந்திருக் கிறார்களென்பதை- செய்து வருகிறார்களென்பதைப் பொறுமையோடு படித்து அறிய வேண்டுமாய்க் கோருகிறோம்.
முதலாவது பழைய காலத்திய தேசீயவாதிகளில், சிறந்தவர்களில் தோழர் சர். சி. சங்கரன் நாயர் என்கிற திராவிடர் முக்கியமானவர் ஆவர். அவர் காங்கிரசிலும் தலைமை வகித்தார். அப்பேர்பட்டவரை முன்னுக்கு வரவொட்டாமல் தடுப்பதற்காகப் பார்ப்பனர்கள் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்துவந்தார்கள்.
அவருக்குக் கிடைக்கவிருந்த அய்க்கோர்ட் ஜட்ஜ் பதவியைக் கிடைக்கவொட்டாதபடிக்குச் செய்ய, எவ்விதப் பொதுநலத்திலும் ஈடுபட்டிராத தோழர் சர். வி. பாஷ்யம் அய்யங்கார் போன்றவர்களும் மற்றும் அநேக பார்ப்பன வக்கீல்களும் சீமைக்கெல்லாம் தந்தி கொடுத்த தோடல் லாமல், அவர்பேரில்  எவ்வளவோ பழிகளையெல்லாம் சுமத்திக் கஷ்டப்படுத்தினார்கள். அதன் காரணமாக நான்கு, அய்ந்து வருடங்களுக்கு முன்னதாகவே கிடைக்கவேண்டிய அய்க்கோர்ட் ஜட்ஜ் பதவி, வெகுகாலம் பொறுத்துத்தான் கிடைத்தது.
டாக்டர் டி. எம். நாயர் அக்காலத்திய தேசீயவாதிகளில் மிகவும் முக்கியமான திராவிடத் தேசீயவாதி. அவர் எவ்வளவோ பொதுக் காரியங்களில் ஈடுபட்டிருந்தவர். அவரையும் மைலாப்பூர் பார்ப்பனர்கள் ஒரு முனிசிபாலிட்டியில் கூட அவர் உட்காருவதைப் பொறுக்காமல், அவருக்கு விரோதமாகச் சூழ்ச்சிகளைச் செய்து, அவரையும் உபத்திரவப்படுத் தினார்கள். ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு நமது நாட்டில் ஏற்பட்ட முக்கியமான காரணங்களில் இவையிரண்டும் முதன்மையானதென்று, ஒரு காங்கிரஸ் பார்ப்பனப் பிரசிடெண்டே நம்மிடம் சொல்லியிருக்கிறார்.
இவ்வித மான கஷ்டங்களிலிருந்து பார்ப்பனரல்லாதாரைக் காப் பாற்றுவதற்காக வேண்டி, முக்கிய காங்கிரஸ்வாதிகளா யிருந்த டாக்டர், நாயர் போன்ற பார்ப்பனரல்லாத தலைவர்களால், ஜஸ்டிஸ் கட்சியென்று ஓர் ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது. அதை ஒழிப்பதற்காகப் பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து, அதற்கு, எதிரிடையாகப் பார்ப்பனரல் லாதார் சிலரைப் பிடித்தே சென்னை மாகாணச் சங்கம் என்று ஒன்றை ஆரம்பிக்கச் செய்து, அதற்கு வேண்டிய பொருளத்தனையும் பெரும்பான்மையாகப் பார்ப்பனரே உதவி தேசபக்தன் என்ற தமிழ்த் தினசரிப் பத்திரிகையும், இந்தியன் பேட்ரியட் என்ற ஆங்கிலத் தினசரிப் பத்திரிகையும், ஜஸ்டிஸ் கட்சியைக் கொல்லுவதற்காகவே பிரசாரம் செய்யும் பொருட்டு ஏற்பாடு செய்து கொடுத்து, ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும் செல்வாக்கில்லாமல் அடித்தார்கள். இந்தியன் பேட்ரியட் பத்திரிக்கையைத் தங்கள் வேலையை முடித்துக் கொண்டவுடனே, ஒழித்து விட்டார்கள். எஞ்சியிருந்த தேசபக்தன் பத்திரிகையை, தேசத்தில் அதற்குக் கொஞ்சம் செல்வாக்கு ஆரம்பித்தவுடனே அதில் தமிழ்ப் பெரியார் கலியாணசுந்தரமுதலியார் ஆசிரியராயிருப்பதை ஒழிக்க வேண்டுமென்னும் முக்கிய கருத்துடன், அவருக்கு விரோதமாகச் சில பார்ப்பனரல்லாதாரையே கிளப்பிவிட்டு, சில பார்ப்பனர்களும் இரகசியமாக, அப்பத்திரிகைக்கு விரோதமாகத் தமிழ் நாட்டில் பிரசாரம் செய்து, தமிழ்ப் பெரியார் முதலியாரவர்களே தேசபக்தனைவிட்டு ஓடிப்போகும்படியாகச் செய்துவிட்டார்கள். அதற்குப் பிறகு அப்பத்திரிகைக்குப் பார்ப்பனர்களே ஆசிரியர்களும், எஜமானர்களுமாகி மெதுவாக நழுவவிட்டுக் கொண் டார்கள். இந்த மாதிரியே சென்னை மாகாண சங்கத்திலும், பார்ப்பனர்களின் சொற்படி நடந்து கொண்டிருந்த சிலர் ஆதிக்கம் பெற்றிருந்ததை ஆதாரமாக வைத்து, அவர்களைக் கொண்டே தங்கள் காரியமெல்லாம் முடிந்து போனவுடன் மறையும்படி செய்துவிட்டார்கள்.
இவையெல்லாம் பழைய காங்கிரஸின் கொள்கைப்படி ஏற்பட்ட திருவிளையாடல்கள் என்றாலும், ஒத்துழையாமை ஏற்பட்ட காலத்தில் பார்ப்பனரல்லாத திராவிடத் தேசபக்தர்களுக்குச் செய்த கொடுமைகளில் சிலவற்றைக் கீழே குறிக்கிறோம்.
ஒத்துழையாமை ஆரம்பிப்பதற்குக் கொஞ்ச நாளைக்கு முன்பதாகச் சென்னையில் தேசீயவாதிகளின் சங்கம் (சூயவடிடேளைவள ஹளளடிஉயைவடி) என்று ஒன்றை ஆரம்பித்தார்கள். அதற்குத் தோழர் சி. விஜயராக வாச்சாரியார் அவர்களை அக்கிராசனராக வைத்து, உப அக்கிராசன ஸ்தானத் துக்குத் தோழர் வி. ஓ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் பெயரைப் பிரரேபித்தவுடன், அவருக்கு அந்த ஸ்தானத்தைக் கொடுக்க இஷ்டமில்லாதவர்களாகி, அதை அவர் அடையவிடாமற் செய்வதற்கு எவ்வளவோ பிரயத்தனங்களைப் பார்ப்பனர்கள் செய்தார்கள். இதைப் பார்ப்பனரல்லாதவர்களில்  சிலர் தெரிந்து, அப்போதே கூச்சல் போட்டதின்பலனாக, அநேக உப அக்ராசனாதி பதிகளை ஏற்பாடு செய்து, அந்த ஸ்தானத்திற்கே ஒரு மதிப்பில்லாமல் அடிக்கப்பார்த்தார்கள். இதன் பலனாக அதன் நிர்வாகசபைகளில் பார்ப்பனரல்லாதாரை அதிக மாகப் போடும்படி நேரிட்டது. இதன் காரணமாகத் தேசீயவாதிகளின் சங்கமென்பதைக் குழந்தைப் பருவத் திலேயே கழுத்தைத்திருகிக் கொன்றுபோட்டார்கள். பிறகு திருப்பூரில் கூடிய தமிழ்நாடு மாகாண மாநாட்டுக்குத் தோழர் வரதராஜூலு நாயுடு அவர்களைத் தலைமை வகிக்க வேண்டுமென்று சிலர் பிரேபித்தார்கள். அதற்கு விரோதமாக இந்து, சுதேசமித்திரன், சயராஜ்யா ஆகிய மூன்று பத்திரிகைகளும், அதுசமயம் நாயுடு அவர்கள் மாநாட்டில் தலைமை வகிக்கத் தகுதியற்றவர் என்று எழுதி வந்ததோடு, பிரரேபித்தவரும் இம்மாதிரி பிரேரேபித்தது தப்பிதமென்று சொல்லியும், அநேக ஜில்லாக்கள் பெரும்பான்மையாய்த் தோழர் வரதராஜூலு நாயுடுவையே தெரிந்தெடுத்திருந்தும், தோழர் ஆதி நாராயண செட்டியாரவர்களைக் கொண்டும், தோழர் ஏ. ரெங்கசாமி அய்யங்கார் திருப்பூருக்குச் சென்றதின் பலனாகவும், உபசரணைக் கமிட்டியாரை வசப்படுத்தி, இவருடைய தேர்தலை ஒப்புக்கொள்ளாமல் நிராகரிக்கும்படி செய்து விட்டார்கள். பிறகு மாகாணக் காங்கிரஸ் கமிட்டியார் பிரவேசித்து அவரை ஒப்புக்கொள்ள வேண்டுமென்று தங்களுடைய அதிகாரத்தைக் கொண்டு நிர்ப்பந்திக்கப் படுத்தினதின் பேரில் சுயமரியாதையுள்ளவர்கள் ஒப்புக் கொள்ள முடியாதவாறு உள்ள ஓர் தீர்மானத்தைப் போட்டு அவரையே ஒப்புக் கொண்ட மாதிரியாய்த் தெரியப் படுத்தினார்கள். இத்தீர்மானத்தின் போக்கு யோக்கியதை அற்றதாய் இருந்தபடியால் தோழர் நாயுடு அதைத் தமக்கு வேண்டாமென நிராகரிக்கும்படியாயிற்று. பிறகு திடீரென்று தோழர் எம். ஜி. வாசுதேவ அய்யாவர்களைக் கொண்டு அம்மாநாட்டை நடத்திக் கொண்டார்கள்.
அதற்கடுத்தாற்போல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அக்கிராசனாதிபதியாகப் பெரும்பான்மையோரால் என்னைத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தெரிந்தெடுத்த ஒரு மணி நேரத்திற்குள் , தோழர் வ. வே. சு. அய்யர் அவர்கள் நம்பிக்கையில்லை எனும் தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்தச் சமயத்தில் தமிழ்ப் பெரியார் கலியாணசுந்தர முதலியார் எழுத்து, இது ராஜூய நோக்கத்துடன் கொண்டுவந்த தீர்மானமல்ல என்றும், அது ஒரு பார்ப்பனரல்லாதார் இந்த ஸ்தானம்  பெறுவதை எப்படியாவது ஒழிக்கவே கொண்டு வரப்பட்ட தீர்மானம் என  பொருள்பட உக்கிரமாய் அப்பொழுதே பேசி இருக் கிறார்.
இத்தீர்மானம் தோழர் வ. வே. சு. அய்யர் கொண்டு வந்ததின் பலனாய் சில  நாட்களுக்குள் தோழர் எஸ். சீனிவாச அய்யங்காரால் மேற்படி அய்யர் அவர்களுக்குக் குருகுலத்திற்கென்று ரூ. 600 நன்கொடை அளிக்கப் பட்டது.
1925இல் காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ் மாகாண மாநாட்டிற்குத் தமிழ்ப் பெரியாரை சில ஜில்லாக் கமிட்டிகள் தெரிந்தெடுத்திருந்தும், அதை வெளியாருக்குத் தெரிவிக்காமல் இரகசியமாய் வைத்துக் கொண்டு, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஆகும்படி இரகசியப் பிரசாரங்களும் நடைபெற்றன. இதற்கு முன்னெல்லாம் யார் யாரை எந்தெந்த ஜில்லாக்கள் தெரிந்தெடுத்தன என்பது பத்திரிகைகளில்  வருவது வழக்கம். அப்பொழுது உபசர ணைக் கமிட்டியாரும் தெரிவிக்காமல் பத்திரிகை காரர்களும் தெரிவிக்காமல் இரகசியமாய் வைக்கப்பட்டது. தவிர, கும்பகோணம் காங்கிரஸ் கமிட்டி தோழர் வரதராஜூலு நாயுடு தமது காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினமாச் செய்யவேண்டுமென்று தீர்மானம் ஒன்று செய்தது. சென்னைக் காங்கிரஸ் கமிட்டியோ, என்னையும் சுரேந்திரனாத் ஆரியாவையும் கண்டித்து ஒரு தீர்மானம் செய்தது. நன்னிலம்  பொதுக்கூட்டத்தில் என்னையும், தமிழ்ப் பெரியார், ஆரியா ஆகியோரையும் காங்கிர சினின்று வெளியாக்க வேண்டுமெனத் தோழர் சீனுவாச அய்யங்கார் பேசினார். சட்டசபையில் காங்கிரஸ் பார்ப்பன மெம்பருடைய வேலை, பார்ப்பனரல்லாதவருடைய ஆதிக் கத்தை ஒழிக்க வேண்டுமென்பதும், பார்ப்பனரல்லா தாருக்கு எதிரிடையாய் நிற்க வேண்டுமென்பதுமே என்று, சட்டசபையில் எலெக்ஷன் ஆன உடனேயே சுதேச மித்திரன் பத்திரிகை எழுதியது. இந்த நேரத்தில் சட்ட சபையில் ஒரு பார்ப்பனர், எங்களுக்கு உத்தியோகம் கொடுக்காவிட்டால், ஒத்துழையாமைக் கட்சியில் சேர்ந்துவிடுவோமென சர்க்காரை மிரட்டினார். அன்றி சத்தியாக்கிரகத்தின் மூலமாய் அடைந்த  தண்டனை யிலிருந்து நான் விடுதலையாகித் தமிழ்நாட்டிற்கு வந்த உடன், மறுபடியும் வைக்கம் போகாமலிருப்பதற்காக வேண்டி ஒரு பார்ப்பனச் சட்ட மெம்பரையும், ஒரு பார்ப்பன அட்வகேட் ஜெனரலையும் கொண்ட கவர்ன்மெண்ட், எட்டு ஒன்பது மாதங்கட்கு முன்னால் பேசிய பழைய குப்பைகளை  ஆதாரமாக வைத்து, ராஜ துரோகம் முதலிய கேஸ் எடுத்து, அதன் மூலமாகக் கைதியாக்கிக் கொண்டு போனார்கள். பார்ப்பனர்களின் பொல்லாத வேளையாய் ஒரு பார்ப்பனரல்லாத மாஜிஸ்திரேட்டிடம் அந்தக் கேஸ் நடந்தபடியால், கேஸ் ஒழன்றும் ருஜுவாகவில்லை என்று அவர் கேசை முடித்துத் தண்டிக்காமல் ஒட்டி விட்டார். இவ்வளவுமல்லாமல் பார்ப்பனரல்லாத மந்திரிகள் பெரிய உத்தியோகஸ்தர்கள் லஞ்சகம் வாங்குகிறார்கள், லஞ்சம் வாங்குகிறவர்கள் அது செய்கிறார்கள், இது செய் கிறார்கள் என்று கிராமம் கிராமமாய், ஊர் ஊராய்ப் பிரசாரம் செய்வதற்குப் பணம் செலவு செய்து ஆட்களை ஏற்படுத்தி பிரசாரம் செய்து, அவர்கள் பேரில் தப்பிப்பிராயத்தைக் கற்பித்து வந்தார்கள்.
குருகுலம் சம்பந்தமாய் நடந்த கூட்டங்களில், பார்ப்பனர்கள் கல்லெடுத்துப் போட்டார்கள். சென்னைக் கார்ப்பரேஷன் தேர்தல்களில் தோழர் ஆரியாவை ஆட் களைவிட்டு அடித்தார்கள். பொதுவாய் ஏழைகளுக்கும், முக்கியமாய்ப் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் அவசிய மானதாகிய மது விலக்கு, தீண்டாமை முதலிய திட்டங் களைக் காங்கிரசைவிட்டு ஓட்டி விட்டார்கள்.
பார்ப்பனரல்லாதார், தெய்வத்தின் பேராலும் க்ஷேத்திரங்களின் பேராலும் காணிக்கை, வேண்டுதல் மூலமாகக் கொடுக்கின்ற பணங்கள், ஒழுங்கான வழியில் செலவழிப்பதற்காக ஏற்பட்ட தேவஸ்தான ஆக்டானது, பார்ப்பனர்களுடைய எவ்வளவோ எதிர்ப்புக்களுக்கும் கண்டனங்களுக்கும் தப்பி நிறைவேறி விட்டபடியினால், அந்த ஆக்டே செல்லாதென்றும், அதை எடுத்துவிட வேண்டுமென்றும், (இப்போது அதன் திருத்தத்தை எப்படி எதிர்க்கிறார்களோ அப்படியே) அதை அமலில் இல்லாமல் சஸ்பெண்டு செய்வதற்கு இன்சக்ஷன் தடை கோரி, அய்க்கோர்ட்டில் மகந்துக்கள் பேரால் வியாஜ்யந் தொடுத்தார்கள். இதற்கு வக்கீல்களோ தோழர்கள் எஸ். சீனிவாசய்யங்கார், டி. ரங்காச்சாரியார், டி. ராமச்சந்திர அய்யர் மகந்துப் பக்கமும், இதற்கு எதிர் வக்கீலாய் ஏற்பட்டவரோ அட்வகேட் ஜெனரலான தோழர் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரிகள் என்கிற பார்ப்பனருமே.
இந்த ஆக்ட் ஒழிய வேண்டுமென அய்க்கோர்ட்டில் பிராது தொடுத்திருந்தாலும், இந்த ஆக்டின் மூலமாய் ஏற்பட்ட உத்தியோகங்கள் எல்லாம் தங்களுக்கே கிடைக்க வேண்டுமென்று, தேவஸ்தான போர்டு ஆபீசையும், மந்திரி வீடுகளையும் பார்ப்பனர்கள் மற்றொரு பக்கம் சுற்றிக் கொண்டுதான் வந்தார்கள்.
இவையெல்லாமிருக்க, உலகப் பெரியார் காந்தி யாரையே ஒழிப்பதற்காக, ப்ராமணன் என்கிற ஒரு பத்திரிகையையும், சங்கராச்சாரியார்கள் மகந்துக்கள் முதலிய பார்ப்பன சிரேஷ்டர்கள் என்போரின் ஆதர ணையில் ஆரம்பித்ததும் இப்போதுதான். இதே நேரத்தில் மற்றொரு பக்கம் காந்தியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு பதவிகளையும், சட்டசபை ஸ்தானங்களையும் பெறுவதற்குப், பார்ப்பனரல்லாதாரை ஏமாற்றியும் அலைந்து கொண்டுதானிருந்தார்கள். இதற்குச் சில பார்ப்பனரல்லாதாரையும் மிரட்டிச் சுவாதீனப்படுத்திக் கொண்டார்கள்.
தினசரிப் பத்திரிகைகள் (இன்றைக்குப் போலவே அன்றைக்கும்) தங்கள் கைகளில் இருக்கிற காரணங் களால், பாமர ஜனங்களை ஏமாற்றித் தங்கள் வசப்படுத்திக் கொள்வதோடு, சில முக்கியமான பார்ப்பனரல்லாத திராவிடர்களைத் தலையெடுக்க வொட்டாதபடி, பத்திரி கைகளில் ஊர், பேர் தெரியாத பார்ப்பனரல்லாதாரின் பொய்ப் பெயர்களை இட்டு தூற்றுதலான வியாசங்களை எழுதுவதும், பார்ப்பன வக்கீல்களிடம் (அப்ரென்டிஸ்) அதாவது வேலை படிக்கும் பார்ப்பனரல்லாத வக்கீல் களான, வாலிபர்களின் கையெழுத்தைப் போடச் செய்து, அவர்கள் பெயரால் பார்ப்பனரல்லாதாரை வைது, பத்திரிகைகளில் எழுதுவதும் வயிற்றுக்கில்லாதவர் களினுடையவும், பணத்தாசை பிடித்தவர்களினுடையவும் தேச பக்தியையும் விலைக்கு வாங்கிக் கொண்டு, அவைகளைப் பார்ப்பனரல்லாதா ருக்கு விரோதமாக உபயோகப்படுத்திப் பணச்செருக்கால் செய்து வந்தது சென்னைத் தேர்தல்களிலும் மற்றத் தேர்தல்களிலும் அப்போது நன்றாக அம்பலமாகியது.
ஸ்தல ஸ்தாபனங்களில் பார்ப்பனரல்லாதாருக்குள் கட்சிப் பிரதி கட்சிகளை உண்டாக்கி, இவர்களைக் கோர்ட்டுக்குச் செல்லும்படி அப்போது செய்ததும் பார்ப்பனர்களேயாகும்.
தேசீயப் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாருக்குச் செய்துள்ள கொடுமைகள் இவ்வளவுதானென வரை யறுத்துவிட முடியாது. அவர்கள் செய்தவையும், இன்னும் செய்யப் போகின்றதுமான காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவைகளைச் சமயம் நேரும் போது வெளியிட நாம் பின் வாங்கப் போவதில்லை.
- (குடிஅரசு 14.5.1949)

Sunday, August 14, 2011

அய்யோ பாவம் பிராமணர்களை இதரர்கள் அவமரியாதையாகப் பேசுகிறார்களாம்!


சேலத்தில் 16.01.1945இல் பிரபல பார்ப்பனர்கள் ஒன்றுகூடி தமிழ்நாட்டில் சமீபகாலமாய்ப் பிராமணர் களை பிராமணரல்லாதார்கள் அவமரியாதையாகத் தாக்கிப் பேசுகிறார்கள், அகவுரவமாக நடத்துகிறார்கள், பிராமணர்களைத் தூஷிக்கும் முறையில் மேடைகளில் நாடகங்களும், கதைகளும் நடக்கின்றன, பள்ளிக் கூடங்களிலும் பிள்ளைகள் பிராமணர்களைத் தூஷிப்பதும், தூஷித்து நாடகங்களில் நடிப்பதும் ஆன காரியங்கள் நடக் கின்றன. இவைகள் ஒழிக்கப்படப் பிராமணர்கள் பாடுபட வேண்டும், அதற்கு ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்த வேண்டும் என்று பேசி இருக்கிறார்கள். இப்படிப் பேசியவர்களில் முக்கியமான பார்ப்பனர் திவான்பகதூர், ஆர்.வி.கிருஷ் ணன் என்று இதுவரை அழைக்கப்பட்டு பெருத்த உத்தியோகத்தில் 30 வருஷம் இருந்து வந்து பென்ஷன் பெற்ற திவான் பகதூர் ஆர். வி. கிருஷ்ணய்யர் என்று இப்போது அழைத்துக் கொள்ளப்படுகிறவர்களாவார்கள்.
அதாவது எப். ஜி. நடேசனாய், கிறிஸ்தவராய் இருந்து பெரிய உத்தியோகம் பெற்று பென்ஷன் வாங்கிய பின் இந்துவாகி எப். ஜி. நடேசய்யர் ஆனதுபோல் ஆனவர்.
மற்றும் அவர் அக்கூட்டத்தில் பேசியிருப்பது என்ன வென்றால், 100-க்கு 3 பேர்களுள்ள பிராமண சமுகத் திற்கு அவர்களது உரிமை கிடைக்கவில்லை, இஞ்சினீரிங், மெடிக்கல் முதலிய தொழில் காலேஜ் களில் பிராமணர் களுக்குப் பிரவேசனம் மறுக்கப் படுவது அநீதி என்றும், புத்திசாலிகளாக இருப்பவர் களை காலேஜில் சேர்க் காதது தேசத்துக்கு நஷ்டமான காரியம்.
என்றும் பேசி இருக்கிறார். ( இவை 20ஆம் தேதி, 23ஆம் தேதி மெயில், சுதேசமித்திரன் முதலிய தினசரிகளில் இருப்பவைகளாகும்)
இந்த மாதிரி பார்ப்பனர்கள் கூடிப்பேசவும், இதற்கு ஆகத் தங்களுக்கென ஒரு தனி ஸ்தாபனம் ஏற்படுத் திக்கொண்டு வேலை செய்ய முன் வரவும் ஆன நிலை இந்த 1945ஆம் ஆண்டிலாவது தோன்றியிருப்பது நாட்டிற்கு ஒரு பெரிய நல்ல காலமேயாகும். இவர்கள் சொல்லுவது உண்மையானாலும் சரி, பொய்யானாலும் சரி இப்படிப்பட்ட ஒரு காலம் எப்போது வரும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு காதுகுளிர்ந்த சேதி யாகவாவது இது இருக்கும் என்றே நாம் கருதுகிறோம்.
இந்தப் பார்ப்பனர்கள் தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்வதும், வேத சாஸ்திர புராண இதிகாசங்களின்படியும், இந்துமத தத்துவத்தின்படியும் பிராமணர்களுக்கு உள்ள மரியாதை தங்களுக்கு இருக்க வேண்டும் என்பதும், அதுபோலவே பிராமணரல்லாத வர்களைச் சூத்திரர், பஞ்சமர் என்று சொல்லி வேத சாஸ்திரப் புராண இதிகாசப்படியும், இந்து மத தத்துவப் படியும் அவர்களுக்குள்ள மரியாதைதான் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதும், அதற்குத் தகுந்தபடி மாநாடுகள் சமுதாய சம்பந்தப்பட்ட முறைகள், சட்டங்கள், நடப்புகள், நாடகங்கள், சினிமாக்கள், கதைகள், பள்ளிக் கூடங்களில் பாட நடப்புகள் முதலியவைகள் இருந்து வருவதும் என்றால் இந்த இரண்டையும் ஒழித்து மக்கள் யாவரும் சமமாகவும், மரியாதையாகவும் நடத்தப்பட இந்தக் காலத்து மக்கள் ஏதாவது ஒரு காரியம் செய்யத்தானே முயல்வார்கள். அதுவும் திவான் பகதூர் ஆர்.வி. கிருஷ் ணய்யர் போன்ற படித்த கூட்டத்தார்கூடத் திருந்தாமல் தன்னைப் பிராமணன் என்று துணிவாய்ச் சொல்லிக் கொண்டு பிராமண உரிமையை சாஸ்திரப் புராணப்படி காப்பாற்றிக் கொள்ளவும் அமல் நடத்தவும் முயற்சித்தால் அவர் அந்தக் கூட்டத்தில் சொல்லிக் கொண்டு அழுதது போன்ற காரியங்கள் நடப்பது அதிசயமா? அல்லது இத்தனை நாள் அவை நடக்காமல் இருந்தது அதிசயமா என்று கேட்கிறோம்.
அதிலும் அவர் அன்று பேசி இருப்பதில் குறும்புத் தனமான வார்த்தை என்னவென்றால் பிராமணர் களுக்குக் காலேஜுகளில் பிரவேசம் அளிக்காவிட்டால் புத்திசாலிகள் விலக்கப்பட்டதாக ஆகி தேசத்துக்கு நஷ்டமேற்படும் என்பது ஆகப் பேசி இருப்பதாகும்.
பிராமணர்கள் என்றால் புத்திசாலிகள் என்றும், மற்றவர்கள் என்றால் புத்தி இல்லாதவர்கள் என்றும் தனக்குள் கொண்டுள்ள அகம்பாவ உணர்ச்சியே அவரை அப்படிப் பேசச் செய்தது என்பதைத் தவிர வேறு என்ன சமாதானம் இதற்குச் சொல்லமுடியும்? உண்மையில் இந்த நாட்டு பார்ப்பனரல்லாத மக்களுக்கு கடுகளவாவது மான உணர்ச்சி வந்திருக்கிறது என்பதற்குக் கடுகளவாவது அறிகுறி வேண்டுமானால், எவன் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொண்டு தான்தான் புத்திசாலி என்று கருதிக்கொண்டு பிராமண உரிமை வேண்டுகிறானோ அவனை, சூத்திரன், பஞ்சமன் என்று சொல்லப்படுகிறவன், கான்பூர் மாநாட்டில் போதானந்தகுரு சாமியார் சொன்ன படியும், இவர்கள் பேசியபடியும் அவமரியாதையாகவே நடத்தப் பழக வேண்டும். அதனால் வரும் பயனை அடைய முந்த வேண்டும். இந்தப்படி ஒரு பத்து வருஷகாலமாவது நடந்தால்தான் சூத்திரப்பட்டமும், பஞ்சம (சண்டாள)ப் பட்டமும், புத்தி இல்லாதவர்கள் என்கின்ற பட்டமும் திராவிட மக்களைவிட்டு நீங்க வழி பிறக்கும்.
திவான்பகதூர் ஆர்.வி. கிருஷ்ணய்யர் போன்ற வர்களே பிராமணர் என்றால் புத்திசாலி மற்றவன் என்றால் மடையன் என்பது ஆக பேசத் துணிந்த பிறகு இனி மற்ற பார்ப்பனனிடம் யோக்கியமான எண்ணத்தையோ, நடத்தையையோ காணமுடியுமா? என்று கேட்கின்றோம். உலகத்தில் பார்ப்பனர்கள் இல்லாத நாடெல்லாம் பாழடைந்துவிட்டதாக இவரு டைய எண்ணமா? அல்லது தங்கள் இனத்தைத்தவிர மற்ற இனத்தார் இஞ்சினீர், வைத்தியர், வக்கீல் முதலிய கொள்ளை அடிக்கும் தொழிலுக்கு வரக்கூடாது என்பது இவரது எண்ணமா? என்பது விளங்கவில்லை.
இன்றைய தினம் இஞ்சினீர் இலாகாவை எடுத்துக் கொண்டால் அதில் பெரும் பதவியில் இருக்கும் ஆள்கள் கிருஷ்ணய்யர் ஜாதியாராகவே 100-க்கு 90 பேர்களுக்கு மேலாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன வென்று கேட்கிறோம். மற்றவர்கள் அந்த விகிதாச்சாரம் வரும்வரை அதிகமாக இருப்பவர்களை நிறுத்தித்தானே ஆகவேண்டும்? இதற்குச் சமாதானம் சொல்ல வேறுவகை இல்லாவிட்டால் மற்றவர்களுக்குப் புத்தி இல்லை; ஆதலால் அவர்கள் கூடாது என்று சொல்லுவது யோக் கியமான பேச்சாகுமா?
வகுப்பு விகிதாச்சாரத்தின் கோரிக்கைப்படி டிபுடி கலெக்டர், டிபுடி சூப்ரண்டுகள், ஜில்லா முன்சீப்புகள், ஜட்ஜுகள் முதலாகியவர்கள் பார்ப்பனரல்லாதவர்களில் நியமிக்கப்பட்டு வருகின்றார்களே, இதனால் இதுவரை ஏற்பட்ட கெடுதி என்ன என்று கேட்கிறோம். சுயராஜ்ஜியத்தின் பேரால், எஞ்சினீர் காலேஜில் மழைக்குக் கூட ஒதுங்கி இருந்திருக்காத யாகூப் உசேன்சேட் அவர்கள் அந்த இலாகா மந்திரியாக நியமிக்கப்பட்டிருந்தாரே அப்போது தேசத்துக்கு வந்த நஷ்டமென்ன?
பார்ப்பனர் இல்லாத ரஷ்யாவிலும், ஆப்பிரிக் காவிலும் எஞ்சினீர் வேலை, வைத்திய வேலை சரியாக நடக்கின்றதா இல்லையா? என்றும் கேட்கிறோம். நிற்க, ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் தன்னை அவனிலும் உயர்ந்த ஜாதிப் பிறவி என்று சொல்லிக் கொள்வானானால் கேட்டுக்கொண்டிருக்கிற மனிதன் முன்னவனை, அவமானப்படுத்தாமல், அவன் மனம் நோகும்படி பேசாமல் எப்படிப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும் என்று திவான் பகதூர் கருதினார் என்பது நமக்கு விளங்கவில்லை.
பிராமணர்களைத் தாக்கும் நாடகம் நடத்தியதற்கு ஆகத் திவான் பகதூர் மனவருத்தப்படுவது போல், மற்றவர்களைப் பிராமணர்கள் தாக்குவதுபோன்ற நாடகங்களைக் கண்டால் மற்றவர்களுக்கு மனம் புண்படும் என்கின்ற எண்ணம் ஏன் திவான் பகதூருக்குக் தோன்ற வில்லை. நவீன நந்தனாரில் பிராமணர்களைத் தாக்கிப் பேசப்படுவது உண்மையென்றே வைத்துக் கொள்ள லாம். ஆனால் புராதன நந்தனாரில் (பக்த நந்தனாரில்) பிராமணரல்லாதாரைத் தாக்கிப் பேசப்படுவதும், இழித்து, பழித்து, பறையா - மாடுதின்னும் புலையா - தீண்டப்படாத சண்டாளா - ஈன ஜாதியானே என்றெல்லாம் பேசப்படு வதும், இன்னும் அவன் கோவிலுக்குள் அனுமதிக்கப் படாதவன் என்று சொல்லப்படுவதும் ஆன பேச்சுக்கள் பறையருக்கு திவான்பகதூர் பட்டம் கிடைத்தது போன்ற மகிழ்ச்சியாய் இருக்கும் என்று கிருஷ்ணய்யர் அவர்கள் கருதுகிறாரா? என்று கேட்கிறோம். அப்படி இவர் இதுவரை கருதாதவராய் இருந்திருப்பாரானால் பார்ப்பனருடைய நலத்தையும், மரியாதையையும் காப்பாற்றப் பாடுபடுவது போல் அவர்களுடைய நலத்தையும், மரியாதையையும், கவுரவத்தையும் காப்பதற்கு ஆக இவர் என்ன பாடுபட்டார் என்று கேட்கின்றோம்.
இந்த நாடு யாருடையது? இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் யார்? திவான் பகதூர் கிருஷ்ணய்யருக்கோ அவருடைய இனத்தாருக்கோ இந்த நாட்டில் சொந்த மென்ன? அவருக்கு இந்த, நாட்டில் அந்தஸ்து என்ன? அவர் இந்த நாட்டாரானால் அவர் எப்படி பிராமணராவார்? பறையனைவிடச் சூத்திரனை விட இவர் எப்படி உயர்ந்த பிறவி ஆவார்? இவர் தன்னை உயர்ந்த ஜாதி என்றும், புத்திசாலி ஜாதி என்றும் சொல்லிக் கொள்ள அவருக்கு உரிமை எப்படி வந்தது? இவைகளை யோசித்துப் பார்ப் பாரேயானால் இதுவரை இல்லாவிட்டாலும் இனி மேலாவது அவரும் அவரது கூட்டமும் அவமரியாதை யும், அகவுரவமும் அடையாமல் எப்படி இருக்க முடியும்? கிருஷ்ணய்யருக்கு அவமரியாதைக்கும், அகவுரவத்திற்கும் உண்மையான அருத்தம் தெரியுமானால் இவருடைய வேதத்தில் சாஸ்திரத்தில், தஸ்யூக்கள் என்றும், சூத்திரர்கள் என்றும் குறிப்பிட்டிருப்பதற்கு அருத்தம் என்ன? அப்படிக் குறிப்பிட்டிருப்பது யாரை? அவர்களைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது? என்று யோசித்துப் பார்க்கட்டும், தேவாரங்களில் ஞானசம்பந்தய்யர் என்பவர் 9 பாட்டுகளுக்கு ஒரு பாட்டாக குண்டர்,மடையர், கயவர், ஈனப் பிறப்பர், முதலியன 100 வார்த்தைகள் சொல்லி வைதிருப்பதும், பெண்களைக் கற்பழிக்க வேண்டும் என்று சொல்லிப்பாடி இருப்பதுமான வார்த்தைகள் யாரைப் பற்றிச் சொல்லப்பட்டவைகள்? அவைகள் எல்லாம் கவுரவமான மரியாதையான வார்த்தைகளா? என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்க்கட்டும்.
இப்படி எல்லாம் சொல்லுவதற்கு, மதம் சாஸ்திரங்கள் இடம் கொடுக்கின்றன என்று கிருஷ்ணய்யர் சொல்வா ரானால் தயவுசெய்து அவர் பாகவதத்தைப் பார்க்கட்டும். இன்று மக்கள் பிராமணர்களைத் தாக்குவது போலவும், அதைவிட எண்மடங்காகவும் இரணியன் பிராமணர் களைத் தாக்கி பிராமணியம் மாத்திரம் அல்லாமல் பிராமணப் பூண்டையே அழித்துவிட்டு வாருங்கள் என்று தனது ஆள்களை கோடரி, மண்வெட்டி, கடப்பாரையுடன் அனுப்பி இருப்பதைக் காணலாம். அந்தப் பாகவதமும் ஒரு பிராமணரால் வெளியிடப்பட்டதேயாகும். பாகவதத் தில் உள்ளதைச் சொல்லி நாடகம் நடத்தினால் இவர்களுக்கு ஏன் மனவருத்தம் வரவேண்டும் என்று மற்றவர்கள் கேட்கமாட்டார்களா?
கிருஷ்ணய்யர் போன்ற பார்ப்பனர்கள் தமது சமுதாயத் திற்கு ஏதாவது யோக்கியமான தொண்டு செய்யவேண்டு மானால் முதலாவதாகப் பார்ப்பனரால் எந்த எந்தச் சமுதாயத்திற்கு இழிவு, தொல்லை, முன்னேற்றத்தடை, சுரண்டப்படும் தன்மை ஆகியவை இருக்கின்றனவோ அவை முதலியவைகள் ஒழிக்கப்பட பாடுபட்டால் பார்ப் பனரின் சாதாரண வாழ்வு இனி இந்த நாட்டில் இருக்க இடமேற்படும். அதை விட்டு விட்டு ராமராஜ்ஜிய சுயராஜ்ஜியமும், வருணாசிரம சுயராஜ்ஜியமும், மனுதர்ம ராஜ்ஜியமும், கீதை ராஜ்ஜியமும், தேவார, பிரபந்த பெரிய புராண ராஜ்ஜியமும், பெறவும் காப்பாற்றப்படவும் முயற்சி செய்வதனாலும், 1000 பார்ப்பனியப் பாதுகாப்புச் சங்கங்கள் ஏற்படுத்துவதனாலும், ஆயிரம் ஆர். வி. கிருஷ்ணய்யர்கள், ஸ்ரீனிவாச சாஸ்திரிகள், சிவசாமி அய்யர்கள், ராமசாமி சாஸ்திரிகள், சங்கராச்சாரிகள், ஜீயர்கள், ராஜகோபாலாச் சாரிகள் நரசிம்ம ஸ்வாமிகள், ரமண ரிஷிகள், காந்தி மகாத் மாக்கள் பாடுபட்டாலும் தாக்குதல்களை, அவமரியாதை களை அடக்கி விட முடியும் என்று எண்ணுவது அறியா மையேயாகும்.
சென்னை மாகாணத்தில் இன்று நடக்கும் பார்ப்பனத் தாக்குதல் மிக மிகக் கொஞ்சமாகும். பூனா, நாசிக், கான்பூர், லக்னௌ, லாகூர் முதலிய இடங்களில் சென்று பார்த்தால் சென்னை மாகாணத்தில் ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம்.
சேலத்தில் கிருஷ்ணய்யர் அவர்கள் இந்தக் கூட்டம் போட்டுப் பேசிக் கொண்டிருந்த சமயத் திலேயேதான் பம்பாய் மாகாண பூனா நகரத்தில் நடந்த இந்துமகா சபைக் கூட்டத்தில் புராதன நந்தனைச் சேர்ந்த நவீன நந்தன் மக்கள் புகுந்து, கூட்டம் நடக்காமல் கலவரம் செய்த தாகவும், நாங்கள் இந்துக்களல்ல எங்களுக்கும் இந்து (சங்கராந்தி) பண்டிகைக்கும் சம்பந்தமில்லை என்றும் ஆட்சேபித்துக் குழப்பம் விளைவித்தனர் என்றும் கல வரத்துக்குப் பின்பு கூட்டம் நடந்தது என்றும் (25.01.1945) விடுதலை பத்திரிகை அ.பி. யில் காணப்படுகிறது.
மற்றும் அதே பத்திரிகையில் அய்க்கிய மாகாணத் தில் அதாவது, இளவரசு காந்தியாரான பண்டித ஜவ ஹர்லால் நேரு வசிக்கும் ஊராகிய அலஹாபாத்தில் ஏறக்குறைய அதேசமயத்தில் தோழர் ஹரிகால் அய்ஸ்வர் அவர்கள் தலைமையில் ஒரு கூட்ட மக்கள் கூடி தாழ்த்தப்பட்ட வகுப்பு, உயர்ந்த ஜாதி வகுப்பு, முஸ்லிம்கள் என மூன்று பிரிவாக மக்கள் பிரிக்கப்பட்டு தொகுதி வழங்கும்படியான அரசியலமைப்பு ஏற்பட்டால்தான் தங்களால் அங்கீகரிக்க முடியும் என்று தீர்மானித்திருப்பதாக ஒரு சேதி காணப் படுகிறது.
இந்தப்படியே கான்பூர் எல்லா இந்திய பிற்படுத்தப் பட்ட வகுப்பார் மாநாட்டிலும் துவிஜார்கள் (பிராமணர், சத்திரியர், வைசியர் என்று சொல்லிக் கொள்கிற மூவர் கள்) சம்பந்தமற்ற தனித்தொகுதியும் தனிப் பிரதிநிதித் துவமும் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
40 லட்சம் மக்களான மலையாள நாட்டுத் தீயர் (ஈழவர்) சமுதாய மாநாட்டிலும் தாங்கள் இந்துக்களல்ல என்றும், தங்களுக்கும் இந்துமத சாஸ்திர புராணங்களுக்கும், கடவுள்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது.
இப்படி இன்னமும் எத்தனையோ கண்டனங்களும், வெறுப்புகளும், கலவரங்களும், குழப்பங்களும், அவமரி யாதைகளும், அகவுரவங்களும் நடந்த வண்ணமாகவே இருக்கின்றன. இதைப் பார்ப்பனப் பத்திரிகைகள் மறைத்துவிடுவதால் அதிகம் தெரிவ தில்லையே ஒழிய, எங்கும் ஒன்றுபோல் நடக்காமல் இருப்பதில்லை.
ஆதலால், கிருஷ்ணய்யர் அவர்கள் இதற்காக ஆத்திரப்படுவதன் மூலம் ஒருபலனும் அடைந்து விட முடியாது. ஆனால் புத்திசாலித்தனமாக தாங்கள் ஆரியர்கள் என்றும், தங்கள் மதம் கலை, ஆச்சாரம், அனுஷ்டானம் என்பவைகளுக்கும் , திராவிடர் களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் தாங்கள் தவிர்த்த மற்றவர்கள் சூத்திரர்கள் அல்ல வென்றும், பறையர் (சண்டாளர்) அல்லவென்றும் விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மற்ற ஜாதிகளின் தாக்குதல் இல்லாமல் வாழ முடியும், இல்லாவிட்டால் தங்களைக் கடவுளிடம் (இயற்கைக்கு) ஒப்படைக்க வேண்டியதுதான்.
இன்று கிறிஸ்தவர்கள் இந்துக்களை அஞ்ஞானிகள் என்று அழைக்கிறார்கள். முஸ்லிம்கள் இந்துக்களைக் காளர்கள் என்று அழைக்கிறார்கள். இந்தப்படியே தங்கள் ஆதாரங்களையும் செய்து வைத்துக் கொண்டிருக் கிறார்கள். அவர்களது கூட்டங்களிலும் நன்றாய் வெளுத்து வாங்குகிறார்கள். அவர்களை இதுவரை யாரால் என்ன செய்ய முடிந்தது? அவர்கள் அகவுரவப்படுத்துவதையும், இழிவுபடுத்துவதையும் மற்றவர்கள்தான் திருத்திக் கொள்ள முடிந்தது. அந்தப் புத்தி இந்தக் கூட்டத்திற்கு வந்தால்தான் தாக்குதல் குறையும், மற்றபடி கூட்டம் கூட்டி அழுவதால், ஸ்தாபனம் ஏற்படுத்துவதால் பயனில்லை என்பதை யும் புது வருஷ, பொங்கல் வாழ்த்துச் சேதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குடிஅரசு - தலையங்கம் - 27.01.1945

Sunday, August 7, 2011

இறுதிப் போராட்டத்திற்கு அழைப்பு


தோழர்களே,
நாம் இதுபோது மிக்க நெருக்கடியான நிலையில் பரிதபிக்கத்தக்க விதமாய் இருக்கிறோம். நாம் இன்று நாடு முழுவதும் மிக்க உற்சாகத்தோடு நடைபெறும் தேர்தல் காரியங்களில் அடியோடு விலகி நிற்க வேண் டியவர்களாக இருக்கிறோம்.
இதைப் பல அரசியல் வாதிகள் நாம் அரசியல் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லுகிறார்கள். உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம்.
அரசியலை வெறுத்து இப்படி இருக்கவில்லை. இன்றைய நம் தகுதிக்கு, நிலைக்கு இதுதான் சாத்யமானதும் ஏற்றதுமானது மான காரியமாகும். நாம் கட்டுப்பாடற்றதும் நாட் டுணர்ச்சி, இன உணர்ச்சி அற்றதுமான ஒரு சமுதாய மாக ஆக்கப்பட்டு விட்டோம். தேர்தலுக்கு நின்றால் என்ன செய்வது? வெற்றி பெறுவோமா? தேர்தல் செலவுக்கு நம்மிடம் பணமிருக்கிறதா? இருக்கிறவர் கள் முன் வருகிறார்களா? அவர்கள் நம்பத்தக்கவர் களா? இவை ஒருபுறம் இருக்கட்டும்.
இன்றைய தேர்தல் ஜனநாயகமானதாக இருக்கிறதா? நாம் 100க்கு 90 பேர்களாய் இருக்கிறோம். நம்மவர்களில் 100க்கு 10 பேருக்குத் தான் ஓட்டு. அந்த 10பேர்களும் மீதி 80 பேர்களுக்குப் பிரதிநிதிகளாக இருக்கத் தகுதி அற்றவர் கள் என்பது மாத்திரமல்லாமல் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதுகூடத் தெரியாதவர்கள். பெரிதும் தங்கள் சுயநலத்துக்கு எதையும் செய்யத் தயாராய் இருந்து கொண்டு அரசியல் வாழ்வில் புகுந்தவர்கள் - புகுகிறவர்கள்.
இன்று நம்மவர்கள் என்பவர்களில் அரசியலில் புகுந்த மக்களில் 100க்கு 75பேர் எதிரிகளுக்குக் கூலியானவர்கள். மீதி 25 பேர்களில் 20 பேர்கள் தங்கள் நலனுக்கு ஆக மற்றவர்களைக் காட்டிக் கொடுத்து, அந்தக் காட்டிக் கொடுக்கும் தன்மையை படிக்கட்டாக வைத்து மேலேறி பட்டம், பதவி, பணம் தேடிக் கொண்டவர்கள். இந்த நிலையில் நாம் தேர்தலுக்கு நிற்காதது தற்கொலை என்று சொல்லப்பட்டாலும் சரி, அதைப் புத்திசாலித்தனமான தற்கொலை என்றாவது சொல்லுவேன்.
அன்றியும், நமது சர்க்கார் நடந்து கொண்ட மாதிரியானது யோக்கியனுக்கும், உண்மையான தன்மையில் மக்கள் நலம் கோருபவருக்கும் தேர்தலில் இடமில்லாத படியாக நிலைமை ஏற்பட்டுவிட்டது.
இந்தச் சர்க்காரார் யோக்கியர்களை மதிப்பது மில்லை. அன்றியும் சர்க்காரார் நாணயம், நீதி, பொதுஜன அமைதி, சமாதானம் ஆகியவைகளைக் காப்பதில் மிக்க அலட்சியம் காட்டி நாட்டில் நாணயக் கேடும் காலித்தனமும் வளரும்படி விட்டுவிட்டார்கள்.
இன்று இந்தியா கண்டம் முழுவதும், நமது நாடு முழுவதும் பித்தலாட்டமும், காலித்தனமும் தாண்டவ மாடுகின்றன. கவர்னர்கள் கவலையற்ற சுகவாசிகளாக இருக்கிறார்கள். வைசிராய் அனுபவமற்றவரும் நிருவாகத் திறமை அற்றவருமாக இருக்கிறார். ஓலைக்குடிசைகளில் தீப்பற்றிக் கொண்டு பரவுவது போல் காலித்தனங்கள் வளர்ந்து நாடு முற்றும் பரவிக் கொண்டு இருப்பதைத் தடுக்க, பரவவொட்டாமல் செய்யப் பயனளிக்கும்படியான முயற்சி சர்க்காரால் செய்யப்படவே இல்லை. நம் எதிரிகள், காலிகள் இந்த நிலையை மிகுதியும் பயன்படுத்தி நலன்பெற்று வருகிறார்கள்.
இந்த தன்மைக்கோ அல்லது இதைச் சமாளிக்கும் தன்மைக்கோ நாம் நம்மை இன்னும் தகுதி ஆக்கிக் கொள்ளவில்லை. ஆதலாலும் தேர்தலில் நாம் விலகி இருப்பது தவிர இன்று நமக்கு வேறு வகை இல்லை.
நாட்டில் 4 வருடங்களுக்கு முன் நடந்த நாச வேலைகளான தண்டவாளம் பெயர்த்தல், தந்தி அறுத்தல், கட்டடங்கள் கொளுத்தல், அதிகாரிகளைக் கொல்லுதல் ஆகிய காரியங்களிலும், சர்க்கார் யுத்த முயற்சிக்கு ஆகச் செய்யப்பட்ட காரியங்களை எதிர்த்து ஒரு கூட்டத்தார் தடை செய்த காரியங்களிலும் நாம் கலவாமல் இருந்ததும், அக்காரியங்களை எதிர்த்ததும் இன்று நமக்குத் தேர்தலில் நிற்க யோக்கியதைக் குறைவாகி விட்டதுடன், அம்மாதிரி கெட்ட காரியம் செய்தவர்களுடன் குலாவ வேண்டிய தாழ்ந்த நிலை சர்க்காரிடம் ஏற்பட்டுவிட்டதாலும், (ஓட்டர்களால்) அப்படிப்பட்டவர்களே விரும்பப்படு கிறார்கள். சர்க்காரின் இந்தத் தன்மையை நாம் வெறுக்கிறோம் என்பதற்கு ஆகவே முக்கியமாய்த் தேர்தலில் விலகி இருக்க வேண்டியவர்களாகிறோம்.
ஆகையால், நாம் தேர்தலில் விலகி இருப்பது குறித்து வருந்த வேண்டியதில்லை. எதிரிகள் பதவிக்கு வரட்டும், அவர்களைக் கொண்டு இந்தச் சர்க்கார் தங்கள் நலத்தை பெருக்கிக் கொள்ளட்டும் நமக்குக் கவலையில்லை. ஆனால் நாம் இம்மாதிரி அலட்சியப் படுத்தப்படவும், புறக்கணிக்கப்படவும், ஏமாற்றப்படவும் தகுதி உடையவர்களாகவே நாம் வாழ்நாள் முழுவதும் இருப்பதா அல்லது நாம் ஒரு கட்டுப்பாடான மான வுணர்ச்சி உள்ளவர்களான, துணிவும், வீரமும், உயிரையும் கொடுத்து நம் உரிமையைப் பெறும்படியான ஒரு மனித சமுதாயமாக ஆகி நம் எதிரிகள் செய்ததை எல்லாம் நாமும் செய்யக்கூடியவர்கள் என்பதாக ஆகி நம் நாட்டை நாம் அடைந்து மனிதத் தன்மை பெறுவதா என்பதுதான் இன்றைய நமது பிரச்சனையாகும். இதை அடைய நம்மைத் தகுதியுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவும் நாம் இன்று வீண் வேலையில் ஈடுபடாமல் மக்களைத் தயாராக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறோம்.
தோழர்களே! முதலாவதாக நாம் ஒரு கட்டுப்பாட்டுக் குள் அடங்கியவர்களாக ஆகாமல் நம்மால் ஒரு காரியமுமாகாது. நமக்குப் புத்தி, பணம், சக்தி இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. சர்.ராமசாமி, சர்.சண்முகம் போன்ற டஜன் கணக்கான சர்கள், நாட்டுக்கோட்டை யார்கள், மில் முதலாளிகள், ஆயிரக்கணக்கான வேலி நிலம் கொண்ட நூற்றுக்கணக்கான மிராசுதார்கள், இராஜாக்கள், ஜமீன்தாரர்கள் ஆன கோடீவரர்கள் இல்லையா? மற்றும் நினைத்தால் தண்டவாளம் பெயர்க்க, கட்டடம் இடிக்க, கடையை மூட, பள்ளியை மறியல் செய்யச் சக்தி உள்ள நாசவேலை வீர ஆண்கள் இல்லையா? எதிரிகளுக்கு ஆதரவளித்து, அன்னக்காவடிகளையும் ஆட்சி பீடத்தில் அமர்த்தி தலைவர்களாக்கி நம்மை அடக்க கைதூக்கும் 5ஆம் படை இல்லையா? என்ன இல்லை நம்மிடம்? ஆனால் மானம், இன உணர்ச்சி, நாட்டுவுணர்ச்சி நம் சமுதாய இழிவைக் கண்டு வெட்கப்படும் தன்மை, பொது நலத்துக்கு ஆகச் சிறிதாவது தன்னலம் விட்டுப் பாடுபட வேண்டும் என்கின்ற மனிதத் தன்மை ஆகியவை இல்லை என்பது தான் நமக்கு பெருங்குறையாக இருக்கிறது.
இந்தக் குறை நமக்கு ஏற்பட்டதற்குக் காரணம் நமது மதம், நமது உயர்தரக் கல்வி நம் பண்டிதத் தன்மை என்பவை ஒருபுறமிருந்தாலும் நமக்குப் பயன்படாதவும் நம் எதிரிகளுக்கு கூலியாக, கையாளாக, ஒற்றர்களாக இருக்கத் துணிந்து, வாழ்க்கை நடத்தவும் துணிந்து நம் பிரதிநிதிகள் என்று வேஷம் போட்டு நம்மை ஏமாற்றும் ஆட்களை நாம் சரிவர வெறுப்பதில்லை. அவர்களைச் சரிவர மக்கள் உணர்ந்து வெறுக்கும்படி நாம் எடுத்துக் காட்டுவது இல்லை, அப்படிப்பட்ட ஆளுக்கொருவர் இடம் அற்ப காரணங்களுக்கு நமது மான உணர்ச்சி உள்ள மக்களும், மாணவர்களும், சலுகை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இது தான் நம் நாட்டில்  நம்மவர்களில் இத்தனை கேடானவர்கள், பயனற்றவர்கள் இருந்து கொண்டு நம் சமுதாயத்தின் பேரால் மதிப்பும், பயனும் அடையக் காரணமாகும்.
உதாரணமாகச் சென்ற மாதம் நமது நாட்டுக்கு வந்திருந்த தோழர் காந்தியாரை அவர் நம் எதிரிகளின் கைஆள் என்று யாருக்குத் தெரியாது? அவர் எதற்கு ஆக வந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்? எவ்வளவு லாபத்தோடு போனார்? என்பதெல்லாம் யாருக்குத் தெரியாத இரகசியம்? சொல்லுங்கள் பார்க்கலாம்.
அவரை அழைத்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர் இருமருங்கிலும் அர்த்தநாரி போல் ஓட்டிக்கொண்டிருந்த வர்கள் பார்ப்பனர்கள்; அவர் இறக்கப்பட்டது பார்ப்பனக் கோட்டையில்; அவர் உடலை ஒரு பார்ப்பனரிடம் சிகிச்சைக்கு விட்டுவிட்டார்; அவர் புத்தியை ஒரு பார்ப்பனரிடம் நடத்த விட்டுவிட்டார், அவர் பிரசாரம் செய்தது பார்ப்பன (இந்தி) மொழியில்; அவர் வேலை செய்தது பார்ப்பன உயர்வுக்கு ஏற்ற (இராம) பஜனை, அவர் உபதேசித்தது பார்ப்பனப் புராணம்; அவர் காட்சியளித்தது பார்ப்பன பக்த சிகாமணி (மகாத்மா)யாக; அவர் இந்தத் தமிழ்நாட்டில் நாணயமும் சக்தியும், திறமையும், தகுதியும் உடையவராக ஒருவர் இருக்கிறார் என்று எடுத்துக் காட்டியது ஒரு (ஆச்சாரிய) பார்ப்பனரை, அவரைக் கண்டு இரகசியம் பேசி அறிவுறுத்திவிட்டுப் போனவர்கள் யாவரும் பார்ப்பனர்கள்; அவரே (காந்தியாரே) நேராக இரண்டு மூன்று தடவை தேடிப்போய்ப் பேட்டி கண்டு மரியாதை செலுத்திப் பொதுமக்களுக்கும் காந்தியார் மரியாதை பெற்ற பிரம்மாண்டமான பெரிய மனிதர் என்று கருதும் படியான பெருமை கொடுக்கப்பட்டதும் ஒரு பார்ப்பன (ஸ்ரீனிவாச சாதிரியா)ருக்கு, அவர் காரியங்களில் கலந்து கொண்டது அத்தனைபேரும் பார்ப்பனர்கள், அவருக்கு ஆலாத்தி எடுத்து, குங்குமம் வைத்தது பார்ப்பனத்திகள் என்கின்ற இவைகள் யாருக்குத் தெரியாத இரகசியம் என்று கேட்கின்றேன்.
ஆனால் அவர் காலில் விழுந்தவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர் அல்லாத தமிழர்கள், அவர் காலைத்தொட்டு கும்பிட்டவர்கள் தமிழர்கள், பஜனையில் கலந்து கொண்டு சொரணை அற்றுச் சொக்கினவர்கள் தமிழர்கள், அவருக்கு மூட்டை மூட்டையாகப் பணம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றவர்கள் தமிழர்கள்; அதுவும் வெறும் தமிழர்கள் அல்ல, தமிழ் இனம் என்று சொல்லிக் கொள்ளும் நாட்டுக் கோட்டையார்கள், மில் முதலாளிகள், மிராசுதார்கள் ஆகிய தமிழர்கள். நகைகள் கழற்றிக் கொடுத்து விழுந்து கும்பிட்டு நல்வாக்குப் பெற்றவர்கள் இவர் (தமிழர்)களின் மனைவி மக்கள்மார்கள்.
இவ்வளவு மாத்திரமா, கண்ணில் படக்கூடிய தூரத்தில், காதுக்கு எட்டும் தூரத்தில்தான் நான் காத்துக்கிடந்தேன். என்னை ஏன் என்றுகூடச் சட்டை செய்யவில்லை, என் மீது என் எதிரி (பார்ப்பனர்)கள் சுமத்திய குற்றத்தை விசாரிக்கக் கூட என்னைச் சமாதானம் கேட்டுப் பார்க்கக் கூட கருணை காட்டாமல் ஒருதலைப் பட்சமாய் தண்டித்து விட்டாரே என்று அழுதவரும் (தமிழர் தலைவர், தமிழ்நாட்டு ராஷ்டிரபதி) தமிழரே ஆவார். காந்தியாரால் கெட்ட அர்த்தத்தில் படும்படியான (விஷமக்கும்பல் என்ற) கடுஞ்சொல் சொல்லப்பட்டவர்கள் தமிழர்கள், இதற்காகக் குறை இரந்து நின்றவர்கள் தமிழர்கள், ஆம் நான் அப்படித்தான் சொன்னேன், இனியும் சொல்லுவேன். இஷ்டமிருந்தால் தலைவராக இரு, இல்லாவிட்டால் போ என்று உதாசீனப்படுத்தப்பட்டவன் தமிழன்.
இவ்வளவு போதாதா காந்தியார் நம் எதிரிகள் கூலி என்பதற்கும் தமிழ் மக்கள் மானமற்றும் எதிரிகளுக்கு கையாட்களாக இருப்பதில் பெருமை கொள்ளுபவர்கள் என்பதற்கும் அத்தாட்சி என்று கேட்கிறேன்.
காங்கிரசில் இருக்கும் தமிழ் மக்களுக்குக் காங்கிரசும், காந்தியார் போலவே தமிழ் மக்களின் எதிரிகளது கையா யுதம் என்பது உண்மையிலேயே தெரியாதா என்று கேட்கிறேன்.
தமிழ்நாட்டில் தமிழன் சட்டசபை மெம்பர் ஆவதற்கோ மந்திரி ஆவதற்கோ பார்ப்பனர் கடாட்சம் இல்லாவிட்டால் பார்ப்பனர்களது அடிமையாய் இல்லாவிட்டால் முடியாது என்பது எந்தக் காங்கிர தமிழராவது தனக்குத் தெரியாது என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்.
பார்ப்பனரை விரோதித்துக் கொண்டால் தம்மால் வாழ முடியாது என்பது இந்த நாட்டில் எந்த சர் தமிழராவது, கோடீசுவரர் தமிழராவது, மில் முதலாளி தமிழராவது, மிராதார் தமிழராவது, இராஜா தமிழராவது, ஜமீன்தார் தமிழராவது அறியாததா என்று கேட்கிறேன். அல்லது இவர்களில் யாராவது காந்தியாரோ, பார்ப்பனரோ, காங்கிரசோ நம் இனத்திற்கு விரோதமானதென்றும் பார்ப்பன வாழ்வுக்கு ஏற்றதென்றும் தெரியாதவர்கள் உண்டா என்று கேட்கிறேன்.
இப்படிப்பட்ட மானமற்ற இன உணர்வற்ற இழிதன்மை யில் சுயநலம் தேடுகிற மக்கள் பார்ப்பனர்களில் யாராவது இருக்கிறார்களா என்று சொல்லுங்கள் பார்க்கலாம். முசுலிம்களில் யாராவது இருக்கிறார்களா? கிறிதவர்களில் யாராவது இருக்கிறார்களா? வெள்ளையர்களில்  யாராவது இருக்கிறார்களா? ஆங்கிலோ இந்தியர்களில் தானாகட்டும் யாராவது இருக்கிறார்களா?
உலகத்தில் இல்லாத இழிகுணங்கள், மானமற்ற தன்மைகள் தமிழனுக்குத் தானா, பிதுரார்ஜித சொத்தாக இருக்க வேண்டும்?
மாணவர்களே, இளைஞர்களே, இந்த இழிநிலை நீக்கப்படுவதற்கு ஆக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்; இந்த உங்கள் பிதுரார்ஜித சொத்தை தூ வென்று காரித்துப்புங்கள். இப்படிப்பட்ட உங்கள் பெற் றோர்களை மனித உருவம் தாங்கிய கீழ்த்தரப்பிராணி என்று கருதுங்கள். அவர்கள் யாராய் இருந்தாலும், சர் முதல் சாஹேப் வரை, கோடீவரர் முதல் மில்முதலாளி முதல் மிராசுதார் வரை மற்றும் எப்படிப்பட்ட பட்டம், பதவி, பணம், பெருமை, நாளைக்கு முதல் மந்திரி, கவர் னர் வைசிராய் ஆகக்கூடிய தன்மை உடையவர்களாக இருந்தாலும், வெறுத்துக் கொடும்பாவி கட்டி இழுங்கள். அவர்கள் வயிற்றில் பிறந்த இழிவுக்காக கொடும் பாவிக்கு முன் கொள்ளிச் சட்டி தூக்கிக் கொண்டு நடவுங்கள்.
நாம் யார்? நம் உண்மை சரித்திரம் எப்படிப்பட்டது? உலகில் நம் பழைய அந்தது என்ன? எதிரிக்கு ஜே போடுவது, எதிரியைக் கண்டு நடுங்கி நரித் தந்திரம் செய்வது,  எதிரியைக் கைகூப்பித் தொழுது ஈன வாழ்வு வாழுவது ஆகிய குணம் தானா நமக்கு நம் கடவுள் களும் மதமும் கலை காவியங்களும் கற்பித்தது? நம் சரித்திரத்தில் இதுதானா சொல்லி இருக்கிறது? கலை இரசிகர்களே, காவிய ரசிகர்களே, பாவம் கண்டு பரவசப்படுபவர்களே, இலக்கிய இரசிகர்களே, இராம பக்தர்களே, முருக பக்தர்களே, செந்தூர் வேலன் பக்தர் களே புராண காவியங்களுக்குப் புதுப்பொருள், கருப் பொருள் நுண்பொருள் கண்டு கலை இரசத்தில் மூழ்கி, கரை காணாமல் இருக்கும் பண்டிதர்களே இவை எல்லாம் உங்களுக்கு கற்றுக் கொடுத்ததும் இவை களால் எல்லாம் உங்களுக்கு ஏற்பட்டதுமான பிரசாத பாக்கியம் இதுதானா என்று கேட்கிறேன்.
இன மானம், தன்மானத்தினும் பெரிது, உண்மையில் பெரியது. அது பட்டம் பெற்ற கல்வியிலும் பெரிது. பணம் ஊற்றுள்ள உத்தியோக தடாகத்திலும் பெரிது. பரம்பரை மகாராஜா பட்டத்திலும், சர்ரிலும் பெரிது. மணிக்கு ஒரு லட்சம் வருவாய் குவியலுக்கும் பெரிது. இதை உணர வேண்டும் என்பதுதான் தேர்தலை வெறுத்ததின் பெரு நோக்கமாகும்.
ஆகவே இனி நம் வாழ்வு, மனித வாழ்வு ஆவ தற்கு மாணவர் இளைஞர்களே நீங்கள் மனம் வைத் தால்தான் உண்டு, உங்கள் எண்ணம் இதைவிடப் படிப் பிலும், பதவியிலும் பணம் தேடுவதிலும் செல்லுமே யானால் உங்கள் பெற்றோர்கள் கொண்டாடும் மதத்தில் பார்ப்பனர்கள் உங்களை வைத்து இருக்கும் இடம் மிகமிகப் பொருத்தமானது என்றே சொல்லுவேன். ஒருபுறம் நீங்கள் அந்த இடத்தை வாயில் வெறுத்துக் கொண்டு காரியத்தில் அந்த நடத்தையைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்தால் அது நம் இழிநிலையை வலியுறுத்துவதேயாகும்.
தோழர்களே வாருங்கள் வெளியில்! உங்களுக்கு கல்யாணமாகி இருந்தால் உங்கள் மனைவியையும் அழையுங்கள், வராவிட்டால் விட்டொழியுங்கள்!! பிள்ளை குட்டிகள் இருந்தால் அவற்றை அனாதை ஆசிரமத்தில் கொண்டு போய் விடுங்கள், ஆச்சிரமம் இல்லாவிட்டால் மகமதிய அனாதை காப்பு இடத்திலேயோ, கிறிதவ அனாதை காப்பு இடத்தி லேயோ விட்டுவிட்டு வாருங்கள்.
உங்களுக்கு இனி காலம் இல்லை. நாளை இப்படிப்பட்ட காலம் வராது, நாள் ஆக ஆக நீங்களும் உங்கள் பெற்றோர்கள் போல ஆகி உங்களைப் போன்ற பிள்ளைகளைப் பெற்று எதிரிக்கு கையாளான, அடிமையான பிள்ளைகளைப் பெற்று விடத்தான் நேரும்.
எதிரிகளின் அரண் இப் போது  கட்டப்படுகிறது. அதை முளையிலேயே இடித்துத் தள்ளத் தயாராகுங்கள், உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஒரு ஒப்பற்ற ஆயுதம் அணுக்குண்டையும் வெடிக் காமல் செய்துவிடும். ஆதலால் எழுங்கள் வரிந்து கட்டுங்கள் புறப்படத் தயாராகுங்கள், சங்கநாதம் ஒலிக்கப் போகிறது. என்பதாக வீர முழக்கம் செய்தார்.
(2.3.1946இல் திருச்சி உறையூரில் நடைபெற்ற திராவிடர் கழக ஆண்டுவிழாவிலும், 3.3.1946 காலை திருச்சி சோழங்கநல்லூரில் நடைபெற்ற திருச்சி ஜில்லா மாநாட்டிலும் 3.3.1946 மாலை திருச்சி புத்தூர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவுத் தொகுப்பு)
- குடிஅரசு - சொற்பொழிவு - 09.03.1946

Tuesday, August 2, 2011

பெரியபுராணம்

பெரியபுராணத்தில் உள்ள விஷ யங்கள் உண்மையாய் நடந்த செய் திகளா? அல்லது மக்களுக்குச் சிவபக்தி உண்டாக வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சைவ சமயவாதிகளால் கற்பனை செய்யப்பட்ட செய்திகளா? சிவனுக்கு மனித உருவமும் மாட்டு வாகனமும், பெண்ஜாதி - பிள்ளைகளும் உண்மையாகவே இருந்து வருகிறதா? அல்லது சிவபக்தர்கள் கற்பனை செய்த கருத்துக்களா? சிவன்தான் முழுமுதல் கடவுள் என்றால், முழுமுதல் கடவுள் என்பதற்கு உருவம், பெண்டு, பிள்ளை கற்பிப்பது பொருத்தமாகுமா?
கைலாயம் முதலிய இடங்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா? அல்லது சைவ மதவாதிகளின் கற் பனையா? உண்மையாய் கைலாயம் என் கின்ற இடம் ஒன்று இருக்குமானால் சாஸ்திரப்படி அதற்கு ஆதாரம் இருக்கிறதா? சிவன், விஷ்ணு, பிர்மா, இந்திரன் முதலியவர்கள் உண்மை யிலேயே அவர்களைப்பற்றிச் சொல்லப் படுகிற பெரிய புராணம் முதலிய மத ஆதாரங்களின்படி இருந்தவர்களா? அல்லது மதவாதிகளால் கற்பிக்கப்பட் டவர்களா?
அகஸ்தியனென்றும், நாரதனென்றும் மற்றும், மனிதத் தன்மைக்கும் விஞ்ஞான உண்மைக்கும் மேற்பட்டவர்கள் என்றும், சொல்லப்பட்டவர்களை யெல்லாம் உண்மையாய் இருந்தவர்கள் என்றும் அவர்கள் சங்கதி எல்லாம் உண்மையாய் நடந்தவைகள் என்றும் பெரிய புராணக்காரர்கள் நம்பு கிறார்களா?
பெரிய புராணச் செய்திகள் உண்மையாக நடந்தவைகள் என்றால் ஒரு ஆயிரம் வருஷங்களுக்குள்ளாகக் கடவுள்கள் நேரில் வந்து காட்சி கொடுத்ததாக அருத்தமாகவில்லையா!
கைலாயத்தில் இருந்து மாட்டின் மேல் வந்து பக்தனையும், அவன் மனைவியையும் அந்த மாட்டின் மேல் ஏற்றிக்கொண்டு கைலாயத்துக்குப் போய் விட்டார்கள் என்றால் அது உண்மையாகவே நடந்திருக்குமா?
மாடு இரண்டாகி வந்ததும், மாடு ஆகாயத்தில் ஏறிச் சென்றதும் கற் பனையா? அல்லது உண்மையா? உண்மையானால் அது கடவுள் தன்மைக்கு ஏற்றதா? அல்லது மனிதத் தன்மைக்கு ஏற்றதா?
இந்த மாதிரிக் கடவுள் அற்புதங்கள், பக்தர்கள் அற்புதங்கள் எல்லாம் இப்போது சைவத்தில் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?
சாயிபாபா, ராமகிருஷ்ணர், ரமண ரிஷி, காந்தியார், சொரக்காய் சாமியார், பாம்பன் சாமியார், மெய்வழி ஆண்ட வன், மௌன சாமியார், பட்டினத்தார், பத்திரகிரியார், அருணகிரியார் முதலியவர்களைப்பற்றிச் சொல்லப்படும் அற்புதங்கள் எல்லாம் பெரியபுராண பக்தர்களது அற்புதங்களோடு சேர்ந் தவைகளா? அல்லது அதைவிட மட்ட ரகமானவையா, அல்லது கற்பனைகளா?
அற்புதங்கள் இல்லாத கடவுள்களோ - மதமோ - பக்தர்களோ - மதித்து வணங்கத்தக்கவர்களோ - சைவத்தில் - பெரியபுராணத்தில் ஏன் இருப்பதில்லை.
பெரியபுராணம் நிஜமானால் பக்தலீலாமிருகமும் நிஜமாய்த்தான் இருக்கவேண்டுமா? அல்லது அது கற்பனையா? சிவன் என்கின்ற ஒரு கடவுள் ரிஷபாரூடராய்ப் பார்வதி சமேதராய்க் கைலாயத்தில் இருக்கின்றார் என்றால், விஷ்ணு என்பதாக ஒரு கடவுள் கருட ஆரூடராய், லட்சுமி சமேதராய் வைகுண்டத்தில் இருக்கிறார் என்பது மெய்யா? அல்லது கற்பனையா? நாயன்மார்கள் நால்வர்களுடைய கதையும் மெய்யானால், ஆழ்வாராதிகள் பன்னிருவர்கள் கதைகளும் மெய்யா? கற்பனையா?
தேவார திருவாசகங்களுக்கும், நாலாயிரப் பிரபந்தங்களுக்கும் என்ன வித்தியாசம்? எது முந்தியது? எது உண்மை? எது சிறந்தது? பெரிய புராணம் இன்றைய சைவர்களுக்குப் பொருத்தமானதா? இன்று அது சைவர்களுக்குள் பரப்பப்படுவது கடவுள் பெருமை, பக்தர் பெருமை ஆகியவை தெரிவதற்கு ஆகவா? அல்லது அதைப் பின்பற்றச் செய்வதற்கு ஆகவா? பெரியபுராணம் ஒழுக்க நூலாகுமா?
பெரிய புராண சிவன் முழுமுதற் கடவுளாக இருக்க முடியுமா?
முழுமுதற் கடவுள் என்பதற்கு ஏதாவது லட்சணம் உண்டா? அந்த லட்சணப்படி பெரியபுராண சிவன் இருக்கிறாரா?
சிவபிரான் முழுமுதற் கடவுள் என்பதை கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா?
அவர்கள் ஒப்புக் கொள்ளா விட்டாலும் வைணவர், மாத்துவர், ஸ்மார்த் தர்களாவது ஒப்புக் கொள்ளு கிறார்களா?
                                                                                                                                                                                     பெரியார் ஈ.வெ.ரா.
குடிஅரசு - கட்டுரை - 02-10-1943
(பெரிய புராணம் எனும் தலைப்பில் எழுதப்பட்டது)