Sunday, April 29, 2012

மே தினம்


தோழர்களே!
மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.
மே தினம் என்பது இன்று உலகமெங் கும் எல்லா தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும், ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படு கின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவது போல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படு வது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.
அதுபோலவேதான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண் டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை.
ஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிட வில்லை.
ஆரம்ப திசையில் இருக்கிற தேசமும், முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.
இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொறுத்ததாகும்.
இங்கிலாந்து, பிரெஞ்சு முதலிய தேசங் களில் கொண்டாடுவதின் நோக்கம் ரஷியாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப் படுவதாகும்.
எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாதமான வித்தி யாசம் இருக்காது. அனேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளா தாரத்திலும் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலை மைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.
ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள்கூட ஒவ்வொரு தேசத் தில் ஒவ்வொரு விதமாகவே இருக் கிறார்கள். மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் பொறுத்து இருக்கிறார்கள்.
அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியென்றும், வகுப்புப் போர் என்றும் சொல்லப்படு கின்றது.
ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய் கொள் ளாமல், மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும் பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும், செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ, புரட்சியோ செய்வது முக்கிய மானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்றக் கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.
ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.
நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்வதன் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டதாகும்.
அய்ந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதி யான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண் டாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.
இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக்காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதியானுக்கு உண்டு. அதுவும் மத சாஸ்திர பூர்வமாகவே உண்டு.
இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானா லும், ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.
பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100-க்கு 99 பேர்கள் இன்று அடிமையாக, இழி மக்களாக நடத்தப்படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல் லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் - அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப்படுவது மாத்திரமல் லாமல், ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு, அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப் பார்களே தான் இன்று சரீரப் பிரயாசைக் காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப் பாளிகளாகவும், ஏவலாளர்களாகவும், தொழி லாளர்களாகவும் இருந்து வருகின்றார்களா இல்லையா? என்று பாருங்கள்.
மற்றும் ஜாதி காரணமாகவே, தொழி லாளிகளாகவோ, சரீர பிரயாசைப்படும் உழைப்பாளிகளாகவோ இல்லாமலும், சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும் படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக் கிறார்களா இல்லையா? என்றும் பாருங்கள்.
இந்தியாவில் தொழிலாளி, முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதான மாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், (சூத்திரன்) பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாடவேண்டியதாகும்.
இந்தியாவில் வகுப்புப் போர் என்ப தற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் ஒரு ஜாதியார் 100-க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும், ஏழைகளாகவும், மற்றவர் களுக்கே உழைத்துப் போடுகின்றவர் களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப் பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறு விதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி, முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.
இன்று முதலாளி, தொழிலாளி என்ப தற்கு நாம் என்ன வியாக்கியானம் செய் கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி, அந்தஸ்துடன் வாழ்வதையும், பாடுபடுகின்றவன் ஏழையாய், இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லு கின்றோம்.
ஆகவே, ஜாதியையும், அதற்கு ஆதார மான மதத் தன்மையையும்  அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழி லாளி தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையாய் அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.
இந்தியாவில் ஏழை மக்களுக்காக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரா னாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும், மதத் தன் மையையும் ஒழிக்க சம்மதிக்க வில்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர் களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.
ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நித்திய கூலிக்கோ, மாதச் சம்பளத்துக்கோ பாடுபடுகின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்து பேசிவிடுவதனாலேயே அல்லது அத்தொழிலாளிகள் விஷயமாய் பேசி விடுவதனாலேயே அல்லது அவர் களுக்குத் தலைமை வகிக்கும் பெரு மையைச் சம்பாதித்துக் கொண்ட தினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளிகளுக்குப் பாடுபட்டவர்களாக கருதிவிடக் கூடாது. அவர்களெல்லாம் அரசியல், தேசியம் ஆகியவற்றின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்துகின்றவர்களா கவே பாவிக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.
இந்து மக்களின் மதமும், அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி, முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தக் காரணத் தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும், இந்நாட்டு மே தினக்கொண்டாட்டத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லு கிறேன். இந்த முதலாளி, தொழிலாளி நிலை மைக்கு வெள்ளையர், கறுப்பர்கள் என்கின்ற நிற வித்தியாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், தொழி லாளி முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தியர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தவர்களே வெள்ளையர்களாகும். அந்த முறை மாற்றப் படக் கூடாது என்பதை மதமாகக் கொண் டிருக்கிறவர்களே கறுப்பர்களாகும்.
ஆகையால், இதில் வெள்ளையர், கறுப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்பதைத்தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.
இந்திய தேசியம் என்பதுகூட ஜாதி யையும், மதத்தையும் காப்பாற்றுவதையே முக்கியமாய்க் கொண்டிருக்கிறதினால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழி லாளி, முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி, முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். இன்று நம் நாட்டிலுள்ள பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி பெரிதும் தொழிலாளி, முதலாளி கிளர்ச் சியேயாகும். இந்தக் கிளர்ச்சியின் பயனா கவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி, முதலாளி வகுக் கப்பட்டிருப்பது ஒரு அளவு மாறி வரு கின்றது. இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அனேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும், தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.
இக்கிளர்ச்சியை வகுப்புத்துவேஷம் என்றுகூட சொல்லுகிறார்கள். பார்ப்பனர் கள், பார்ப்பனரல்லாதார்கள் என்கின்ற இரு ஜாதியார்களுக்கும் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற நிபந்தனைகளைப் பார்த் தால் வகுப்புத் துவேஷம், வகுப்புக் கொடுமை என்பவை யாரால் செய்யப் பட்டு இருக்கிறது, செய்யப்பட்டும் வருகிறது என்பது நன்றாய் விளங்கும்.
நிற்க, தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி, தொழிலாளி கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண், பெண் கொடுமையும் ஒழிய வேண்டி யதவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாக வும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப் பட்டிருக்கிற பேதங்கள், நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.
இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்யவேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.
நிற்க. இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண் டும். ஏனெனில், நமது பண்டிகைகளில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப் படுத்துவதேயாகும். தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும், வென்ற தன்மைகளையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர்கூட இப்பண்டிகைகளைக் கொண்டாடு வது இந்நாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவையோ அல்ல.
பெண்களையும், வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவை தான் சிறிது ஓய்வும், சந்தோஷமும் கொடுக்கின்றன.
தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில் விட சம்மதிக் கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவ தில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படு வதையும், கசக்கப்படுவதையும் பார்த்துக் கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமே யானால் மத சம்பந்தமான பண்டிகை, உற் சவம் ஆகியவைகளை மக்கள் கை விடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.
ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்கு சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.
                                                                                         (காரைக்குடியில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டத்தில் 
                                                                                                                      தலைவர் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய முடிவுரை)
                                                                                                                                        குடிஅரசு - சொற்பொழிவு - 12.05.1935

Sunday, April 15, 2012

வளமிக்க இந்நாட்டில் அறிவுக்குத்தானே பஞ்சம்?


பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே! இந்தக் கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பாக கூட்டப்பட்ட கூட்டமாகும்.
திராவிடர் கழகம் சட்டசபைக்கு நிற்பது அல்ல; கழகத்தின் பேரால் பொதுத் தொண்டால் வயிறு வளர்க்கும் ஸ்தாபனமும் அல்ல; பொதுமக்களுக்கு அறிவுப் பிரச்சாரம் செய்து வரும் இயக்கம் அறிவுறுத்த இவன் யார் என்று எண்ணலாம். நான் மக்களுக்கு அறிவுறுத்துவது எனது கடமையாகக் கொண்டவன்.
நமது மக்களுக்கு எந்தவிதமான குறையும் இல்லாத இயற்கை அமைப்பைக் கொண்ட நாடாகும், நமது நாடு. இப்படிப்பட்ட நாடு மற்ற நாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது காட்டுமிராண்டி நாடாக இருக்கக் காரணம் என்ன?
நாம் காட்டுமிராண்டியா என்ற அய்யம் பலருக்குப் பிறக்கும். சந்தேகம் இல்லாமல் நாம் காட்டு மிராண்டிகள்தான். இதை மெய்ப்பிக்க வேண்டுமா னால், உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஜாதி நம் நாட்டில்தானே உள்ளது? கழுதை, நாய் இவற்றிடம் கூட இல்லாத ஜாதி நம்மிடையே தான் உள்ளது.
அடுத்து நாம் காட்டுமிராண்டிகள் என்பதற்கு நமக்கு இருக்கின்ற மாதிரி கடவுள்கள் உலகில் வேறு எங்காவது உண்டா? எத்தனை கடவுள்? எவ்வளவு ஒழுக்கம், நாணயம் அற்றதுகள் எல்லாம் கடவுள்கள்? எவ்வளவு மடத்தனம்?
எனவே, இப்படிப்பட்ட ஜாதி, கடவுள் இவற்றைக் கட்டிக் கொண்டு அழுவது எவ்வளவு மகாமகா காட்டுமிராண்டித் தனம், நீங்கள் சிந்திக்க வேண்டும். நம் கடவுளோடு மட்டும் நிற்காதீர்கள். நமது மதம் எவ்வளவு முட்டாள்தனமான மதம்? மதம் என்றால் நாமம், சாம்பல் அடித்துக் கொள்ளத் தெரியும். இந்து மதம் என்றால் என்ன என்று எவனுக்காவது தெரியுமா?
இதுதான் நம் மதம், இதனை நாம் ஏற்றுக் கொண்டு இதன் பேரால் கீழ் ஜாதியாகவே உள்ளோம்.
அடுத்து நமது சாஸ்திரங்கள், நமக்கு இருக்கும் காட்டு மிராண்டி சாஸ்திரங்கள், புராணங்கள் உலகில் வேறு எங்காவது உண்டா?
பெண் ரொம்ப அழகுதான். 32 லட்சணத்தில் 30 இருக்கின்றது. மூக்கும், கண்ணும் இல்லாவிட்டால் என்ன பிரயோசனம்? அதுபோலத்தான் இவை ஆகும்.
இன்னும் சொல்லுகின்றேன், இந்த நாட்டில் உள்ள இத்தனைக் கோவில்கள் உலகில் எந்த நாட்டிலாவது உண்டா? இதன்பேரால் நடக்கின்ற மடத்தனம் உலகில் எங்காவது உண்டா? ஒவ்வொரு கோவிலிலும் 50 லட்சம்; 80 லட்சம்; கோடி இப்படிப் போட்டாலும் கட்ட முடியாது. இவைகளால் ஒரு காதொடிந்த ஊசி நன்மையாவது உண்டா?
தோழர்களே, நான் முன் கூறியதுபோல நமது நாடு எல்லா வளப்பமும் பொருந்திய இயற்கை அமைப்புடையது. ஆனால், அறிவு மட்டும்தான் குறைவாக உள்ளது. இதனை எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்வதுதான் எங்கள் தொண்டாகும். நான் இன்று நேற்று செய்யவில்லை. காங்கிரசை விட்டு வெளிவந்த 30, 35 வருஷத்திய தொண்டு இதுதான். நம்மை மடையர்களாக காட்டுமிராண்டிகளாக ஆக்கி வைத்துள்ள இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், ஜாதி இவற்றை எல்லாம் எதிர்த்துப் போராடுகின்றேன். 1926-இல் குடிஅரசுவில் என்ன கொள்கைகளை வைத்து எழுதினேனோ அதே கொள்கைப்படிதான் இன்றும் பாடுபடுகின்றேன். கொஞ்சங்கூட மாற்றிக் கொள்ளவில்லை.
இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்படிப்பட்ட கேடானவைகளைப் பற்றி எடுத்துச் சொல்லி மாற்றவும், அறிவுப் பிரச்சாரம் செய்யவும் எவருமே முன்வரவில்லை. 2,500 ஆண்டுகளுக்கு முன் புத்தர் தோன்றி அறிவுப் பிரச்சாரம் செய்தார். அவருக்குப் பிறகு அவரது மார்க்கமும், அவரைப் பின்பற்றியவர்களும் பார்ப்பனரால் ஒழிக்கப்பட்டு விட்டனர்.
அப்படி அறிவுப் பிரச்சாரம் செய்த புத்தனையும், சமணனையும் ஒழித்துக்கட்ட தலைசிறந்து விளங்கி யதுதான் இந்த காஞ்சிபுரம் ஆகும். புத்தருக்குப் பிறகு எவரும் தோன்றவே இல்லை. நாங்கள்தான் துணிந்து அறிவுப் பிரச்சாரம் செய்கிறோம்.
எங்களைப் போல வேறு எவரும் இந்த கடவுள், மதம், சாஸ்திரங்கள், மூடநம்பிக்கைகள், காட்டுமிராண்டித் தன்மைகள் இவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்றும், இதனால் நாம் அடைந்துள்ள காட்டு மிராண்டித் தனங்கள் ஒழிக்க வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துப் பேச மாட்டார்கள்.
எந்த பெரிய மனிதன் அறிவாளி என்பவர்களை எடுத்துக் கொண்டாலும் முன்னோர்கள் சொன்னது, மகான் சொன்னது, அவதார புருஷர்கள் சொன்னது, அதற்கு மாறாக நடக்கக் கூடாது என்பதில் தான் கருத்தைச் செலுத்தி எடுத்துச் சொல்வார்களே ஒழிய, இவற்றைக் கண்டிக்க மாட்டார்கள்.
இவற்றை எல்லாம் சுத்த மடத்தனம், காட்டுமிராண் டித்தனம் என்பது இப்படிப்பட்டவர்களுக்குத் தெரியாது என்பதல்ல. தெரிந்தும் எடுத்துச் சொல்ல அஞ்சு கின்றார்கள்.
இந்த 20-ஆம் நூற்றாண்டில் 1961-ஆம் ஆண்டிலும் விஞ் ஞான, அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து சந்திர மண்டலத்துக்குச் செல்லுகின்ற காலத்தில் இப்படிப்பட்ட 2,000, 3,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றி காட்டுமிராண்டிக் காலத்து கடவுள், மதம், சாஸ்திரம், நடப்புகள் இவற்றைக் கட்டிக் கொண்டு அழுவதா?
நாங்கள் இன்று எடுத்துக் கொண்டு பாடுபடும் துறையானது, இதுவரை எவனும் ஈடுபட்டு வெற்றி பெறாத துறையாகும். எவனும் ஈடுபட அஞ்சிய துறையாகும். இன்று நாங்கள் இந்தத் துறையில் துணிந்து பாடுபட்டு வரும் எங்கள் கொள்கைகள் வீண் போகவில்லை. நல்ல பலனை அளித்துத்தான் உள்ளது என்பதை நாங்கள் நன்கு உணருகிறோம்.
தோழர்களே, நான் அடுத்த அரசியலைப் பற்றி சில வார்த்தைக் கூற வேண்டும். அரசியலைப் பற்றி எனக் காகவோ, வேறு யாருக்காகவோ பேச வரவில்லை. உங்களுக்காகப் பேசுகின்றேன்.
எந்தக் கெட்டிக்காரனாக இருந்தாலும், யாராயி ருந்தாலும் உங்கள் மத்தியில் வந்து பேசுவார் களேயானால் பேசுவது எல்லாம் பேசிவிட்டு கடைசியில் தங்களுக்கோ, தங்கள் கட்சிக்கோ ஓட்டு கேட்பவர் களாகவே இருப்பார்கள்.
நான் பேசுகின்றேன் என்றால், நான் பேசிவிட்டு எனக்கோ, எங்கள் கட்சிக்கோ ஓட்டு கேட்கவில்லை. இப்படி இருக்க நீங்கள் யார் பேச்சைக் கேட்கணும்? எவன் ஒருவன் தனக்காகவோ, தங்கள் கட்சிக்காக வோ ஓட்டு கேட்காமல் ஓட்டுப் பற்றி பேசுகின்றானோ, அவனுடைய பேச்சைக் கேட்க வேண்டுமா அல்லது தனக்காக ஓட்டுக் கேட்பவர்கள் பேச்சைக் கேட்க வேண்டுமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தனக்காக ஓட்டுக் கேட்காத நாங்கள் சுயநலம் இல்லாமல் நடுநிலையில் இருந்து பேசுபவர்கள். நாங்கள், இன்னாருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூறுவதுகூட இன்னாருக்கு ஓட்டுப் பண்ணி கெட்டு விடாதீர்கள் என்பதற்காகத்தான் ஆகும்.
நமது கையில் சரித்திர ஆதாரங்கள் எல்லாம் உள்ளன. நமது நாட்டை மூவேந்தர்கள், பல்லவர்கள், மராட்டியவர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் ஆண்டு இருக்கின்றனர். வெள்ளைக்காரன் போன பிறகு பார்ப்பான் ஆண்டு இருக்கின்றான். அவனுக்குப் பிறகு தமிழன் ஆள்கின்றான்.
இத்தனை பேர்கள் ஆண்டதில் மனிதனுக்கு அறிவு வளர வழி வகுத்துக் கொடுத்திருப்பார்களா? அறிவு ஏற்பட வேண்டும், மானம் ஏற்படச் செய்ய வேண்டும் என்பது மிக மிக முக்கியம். இந்த மூவேந்தர்கள் காலம் முதல் பார்ப்பான் ஆட்சி வருகின்றவரை இந்த அறிவு வளர்ச்சிப் பற்றியோ, மானத்தைப்  பற்றியோ கவலைப்பட்டு ஆளப்பட்டு இருக்கின்றதா என எண்ணிப் பார்க்க வேண்டும்.
வெள்ளைக்காரன் இந்த நாட்டை ஆளத் தொடங் கின காலத்துக்கு முன்வரை எந்த அரசனாவது எந்த நாயக்கன், முஸ்லிம், மராட்டிய ராசாவாவது ஒரு பள்ளிக்கூடம் மக்கள் படிக்க ஏற்படுத்தினார்களா என்றால் இல்லையே! மாறாக ஏராளமான சமஸ்கிருதப் பள்ளிகள், கோவில், குட்டிச்சுவர்கள் சோம்பேறி களுக்கு மடங்கள் கட்டினார்களே ஒழிய, எழுத் தறிவுக்கு வகை செய்யவில்லையே!
ஏதோ வெள்ளைக்காரன் ஆட்சியில்தான் கொஞ் சம் பள்ளிகள் ஏற்படலாயின. இதுவும் பார்ப்பான் படிக்கப் பயன்பட்டனவே ஒழிய, நமது மக்களுக்குப் பயன்படவில்லை. பார்ப்பானுக்கு வைத்த பள்ளியா னாலும் நம்மை புகாதே என்று தடுக்க முடியவில்லை. அதற்காக நாம் படிக்காது இருப்பதற்கு என்ன என்ன வழியோ அதுகளெல்லாம் செய்யப்பட்டன. நாம் 100-க்கு 6-7 படித்தவர்களாக இருக்கும்போதே பார்ப்பான் மட்டும் 100-க்கு 100 வெள்ளைக்காரன் பள்ளிகளால் படித்து இருந்தார்கள். இந்த வெள்ளைக்காரன் 200 ஆண்டு ஆட்சி செய்து விட்டு அவன் போகும் போது நாம் 100-க்கு 12-14 பேர்கள்தான் படித்து இருந்தோம்.
வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போன பிற்பாடும் காமராஜர் பதவிக்கு வரும் வரையிலும் கூட நாம் 100-க்கு 16 பேர்களே படித்து இருந்தோம். இன்று காமராசர் ஆட்சியில்தான் 100-க்கு 32 பேர்கள் படித்து இருக்கின்றோம் என்று எடுத்துரைத்தார்.
மேலும் பேசுகையில், இன்றைய காமராசர் ஆட்சி மீண்டும் ஏற்பட நாம் காங்கிரசை ஆதரிக்க வேண்டிய அவசியம் பற்றியும், எதிர்க்கட்சிகளின் பித்தலாட்ட பிரச்சாரங்கள் பற்றியும் விளக்கும்போது மழையின் காரணமாக கூட்டம் நிறுத்த வேண்டி வந்தது.
(10.9.1961 அன்று காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 30.9.1961)


நீடாமங்கலத்துக்கு நீதி


நீடாமங்கலத்தில் 28-12-1937இல் நடைபெற்ற காங்கிரஸ்காரர்கள் மகாநாட்டில் நடந்த சாப்பாட்டு பந்தியில் சில ஆதிதிராவிட கிறிஸ்தவ தோழர்கள் உட்கார்ந்து சாப்பிட்டதற்காக அவர்களை அடித்துத் தொந்தரவு செய்து மொட்டை அடித்து அவமானப் படுத்தியதாக விடுதலைப் பத்திரிகையில் வந்த செய்தியை அம்மகாநாட்டை நடத்திய பிரமுகர்கள் பொய் என்று மறுத்ததுடன் அச்செய்தி வெளியானதால் தனக்கு மான நஷ்டம் ஏற்பட்டு விட்டதென்று விடுதலைப் பத்திரிகை பிரசுரிப்பவர் மீதும், ஆசிரியர் மீதும் டிப்டி மேஜிட்ரேட் கோர்ட்டில் பிராது கொடுத்திருந்ததும், அந்த வழக்கு சுமார் 4,5-மாதமாக நடந்து வந்ததும் வாசகர்கள் அறிந்த விஷயமேயாகும். இந்த 4,5-மாதமாக நடந்த வழக்கு சகல விசாரணையும் முடிந்த பிறகு இம்மாதம் 15தேதி முடிவு கூறப்பட்டது. அம்முடிவானது விடுதலை பிரசுரிப்பவரான தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர் களுக்கு ரூ. 200 அபராதமும் விடுதலை பத்திராதி பரான தோழர் பண்டித முத்துச்சாமிப்பிள்ளை அவர் களுக்கு ரூ. 200 அபராதமுமாக தண்டனை விதித்து முடிவு பெற்றுவிட்டது.
இந்த வழக்கின் முடிவு இப்படித்தான் முடியலாம் என்று ஏற்கனவே பலரால் எதிர்பார்க்கப்பட்டதென்றே சொல்லலாம். ஏனெனில் காங்கிரஸ் தலைவர்களால் நடத்தப்பட்ட நடவடிக்கைகள் எதுவாய் இருந்தாலும் அதைக் குற்றமானதென்று காங்கிரஸ் ராஜ்ஜியத்தில் ஒரு வேலை காயமில்லாத நீதிபதியிடம் இருந்து நீதி பெற்றுவிடலாம் என்று யாரும் கருதமாட்டார்கள். காங்கிரஸ் பார்லிமெண்டரி செகரட்டரி என்பவர் பெட்டியேறிச் சரியாகவோ, தப்பாகவோ ஒரு கட்சிக்குச் சார்பாய்ச் சாட்சி சொல்லி இருக்கும்போதும் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களும் ஒரு கட்சிக்கு அனுகூலமாய்ச் சாட்சி சொல்லியிருக்கும்போதும் ஒரு மேஜிஸ்ட்ரேட் நீதிபதி அதற்கு மாறாக முடிவு கூறுவ தென்றால் இது சராசரி யோக்கியதையுள்ளவர் களிடம் எதிர்பார்க்கக்கூடாத காரியமேயாகும். ஆதலால்தான் இந்த முடிவு ஏற்கனவே பலரால் எதிர்பார்க்கப்பட்ட தென்றே சொல்ல வேண்டியதாயிற்று. இந்த முடிவினால் யாரும் கலங்கவோ அல்லது நீடாமங்கலம் தோழர்களுக்கு காங்கிரஸ்காரர்கள் செய்த கொடுமை உண்மையற்றதாய் இருக்குமோ என்று யாராவது சந்தேகப்படவோ வேண்டிய தில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எந்தத் தைரியத்தைக்கொண்டு அப்படிச் சொல்லு கிறோமென்றால் நீடாமங்கலம் சம்பவம் நடந்ததாக விடுதலை, குடிஅரசு பத்திரிகைகளில் சேதி வந்தவுடன் அதன் உண்மையை விசாரிக்க சென்னை மாகாண தேவேந்திர வேளாள சங்கத்தார் உடனே ஒரு கூட்டம் கூடி இந்த விஷயத்தைப் பற்றி விசாரித்து முடிவு தெரிவிக்கும்படி ஒரு கமிட்டியை நியமித்து விட்டார்கள். அக்கமிட்டியில் சாதாரண ஆள்களை நியமிக்காமல் அச்சங்கத்தின் மாகாண பிரசிடெண்டான தோழர் எம். பாலசுந்தரராஜ் அவர்களையும், அச்சங்கத்தின் காரியதரிசி தோழர் விஜயராஜ் அவர்களையும், அக்கமிட்டியின் பொருளாளரும் காங்கிரஸ் எம்.எல். ஏயுமான தோழர் எ. சி. பாலகிருஷ்ணன் அவர்களையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மெம்பரான தோழர் ஏ. அய்யனார் அவர்களையும், தோழர் ஜே. தேவாசீர்வாதம், தோழர் எ.வி. அக்கினிமுத்து ஆகியவர்களையும் நியமித்தார்கள். அக்கமிட்டியார் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி நீடாமங்கலம் சென்று நீடாமங்கலத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அநேக சாட்சிகளை முறைப்படி விசாரித்து சாட்சி பதிவு செய்து கவலையோடு ஆராய்ந்து பார்த்து முடிவு எழுதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அவ்வறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் - இந்த கமிட்டியார் உடனே புறப்பட்டு போய் நீடாமங்கலம் முதலிய சுற்றுப் பக்கங்களில் விசாரித்ததில் தாழ்த்தப்பட்ட மக்களுக் குச் செய்யப்பட்டக் கொடுமைகள் உண்மையானவை என்று தெரிந்தார்கள் என்பதாகவும் மற்றும் கட்டி வைத்து அடித்ததைப் பற்றியும், மொட்டை அடிக்கப் பட்டதைப் பற்றியும், சாணிப்பால் ஊற்றி அவமானப்படுத்தப்பட்டதைப் பற்றியும் பலபேர் சாட்சி சொன்னார்கள் என்றும், இதை மறைக்க  பலர் முயல்வதாய்த் தெரிகிறதென்றும் சொல்லி இருக்கிறார்கள்.
எனவே, இந்த விஷயம் நடந்தது உண்மையா? பொய்யா? என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை என்பதோடு கோர்ட் நடவடிக்கையில் நியாயம் கிடைக்காத தால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மேற்படி கேஸ் சம்பந்த மான கோர்ட் ஜட்ஜ்மெண்டை நாம் பார்க்காததால் அதன் உள் விஷயங்களைப் பற்றி நாம் ஒன்றும் எழுத முற்படவில்லை என்றாலும், அந்த ஜட்ஜ்மெண்ட் எப்படிப் பட்டதாய் இருந்தாலும் நீடாமங்கலம் சம்பவம் சம்பந்தமாய் ஒரு முடிவுக்கு வருவதை அது தடுக்கவில்லை என்றே கருதுகிறோம். அதாவது, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து சமுகத்தில் ஒரு மனிதனாய் இருந்து கொண்டு மானத் துடன் வாழ முடியாது என்பதுடன் இம்மாதிரியான அவமானங்களுக்கும் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாது என்பதேயாகும். அவமானப்பட்டு, அடிபட்டு, உதைபட்டு, துன்பப்பட்ட ஆட்களில் கிறிஸ்துவர்கள் அதிகமாய் இருந்துங்கூட அவர்களுக்கும் நியாயம் கிடைக்க முடிய வில்லை. ஆனால், இவர்கள் முஸ்லிம்களாய் இருந்து இப்படிப்பட்ட அவமானம் நடந்திருந்தால் இதற்குப் பரிகாரம் கிடைக்காமல் இருந்திருக்குமா என்பதை நீடாமங்கலம் ஆதி திராவிட தோழர்கள் சிந்தித்துப் பார்க்கும்படி வேண் டிக் கொண்டு இதை இப்போது முடிக்கிறோம். மற்றவை ஜட்ஜ்மெண்ட் பார்த்தபிறகு விளக்குவோம்.
குடிஅரசு - தலையங்கம்  - 19.06.1938


Friday, April 13, 2012

கடவுளை நம்பும் முட்டாள்களே!


கடவுளை நம்பும் முட்டாள்களே!
அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து, காத்து, நடத்தி வருகிறார்; அவரன்றி ஓர் அணுவும் அசை யாது; அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார். என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே!
கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவகோடி களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?
கடவுள் இருக்கிறார் என்றால் ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்?
பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை?
இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?
கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும், எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும் வணங்கியும் வந்தும், யோக்கியனாகவோ கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காணமுடிவில்லையே. ஏன்?
கடவுள் பாதுகாப்பு இருந்தால் வீட்டிற்குக் கதவு, தாழ்போடா மலும், பெட்டிக்குப் பூட்டு போடாமலும் அவற்றில் பண்டங்கள் வைக்க முடியவில்லை, ஏன்? மனிதன் எதனால் கெட்ட காரியங்களைச் செய்கின்றான்?
ஒரு மனிதனால் மற்றொரு மனிதனுக்கு ஏன் தீங்குகள் செய்யப்படுகின்றன?
கடவுள் நம்பிக்கைக்காரர்களிடத்தில் காணப்படும் நற்குணங்கள் என்ன?
மனிதரிடம் காணப்படும் தீய குணத்திற்குக் காரணஸ்தர்கள் யார்?
ஒரு மனிதனுக்கு அவன் கெட்ட காரியம் செய்த பிறகு, செய்து விட்டுச் செத்த பிறகு அவனுக்குத் தண்டனையைக் கொடுக்கும் கடவுள், அந்த மனிதனைக் கெட்ட காரியம் செய்யாமல் தடுக்க முடியாமல் போவது ஏன்?
கெட்ட காரியம் செய்தவனுக்குத் தண்டனை கொடுப்பதானாலும், கெட்ட காரியம் செய்யப்பட்டதால் துன்பம், நட்டம், நோய், மரணம் அடைந்த வனுக்குக் கடவுள் என்ன பரிகாரம் செய்கிறார்?
மனிதனுக்கு நன்மை, தீமை, இலாபம், நஷ்டம், செல்வம், தரித்திரம், சுகம், துக்கம், திருப்தி, அதிருப்தி, கவலை, துன்பம் முதலிய அவஸ்தைகள் எதற்காக ஏற்பட்டும், இருந்தும் வரவேண்டும்?
மனிதன் படும் அவஸ் தைகள் கடவுளுக்குத் தெரி யாதா? தெரிந்திருந்தால் இவை கடவுளுக்குத் திரு விளையாடலா?
நரகத்தைப் பாவ காரியத்திற்குப் பரிகாரமாக, தண்டனையாகச் சிருஷ்டித்த கடவுளை விட அயோக்கியன், கொடியவன், துஷ்டன் உலகில் யாராவது இருக்க முடியுமா?
இப்படிப்பட்டவனை அன்புருவு, கருணையுருவு என்று சொல்லுகிறவனை விட வேறு மடையன் உலகில் இருக்க முடியுமா?
ஏன் இதைப்பற்றி இவ்வளவு சொல்லுகிறேனென்றால் என் அனுபவத்தில் கடவுளால் உலக முன்னேற்றமும், மனித சமுதாய ஒழுக்கமும், மனிதத்தன்மையும் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டு விட்டதுடன், கெட்டும் வருகிறது என்று உணர்ந்தாலும், இதை வெளிப்படுத்த வேறு ஆள் இல்லையென்று நான் காணுவதாலும், எனக்கு வயது எல்லைக்கு நெருங்குவதாலும் உணர்ந்ததை வெளிப்படுத்தி விடலாம் என்று கருதியதாலேயேயாகும்.
ஆகவே, மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கடவுளை மறுக்கிறானோ, மறக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு சமுதாய முன்னேற்றம் இருக்கிறது என்பது எனது உறுதி.
(14.7.1970 உண்மை இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்)

டாக்டர் அம்பேத்கர்


                                                                                  தந்தை பெரியார்


டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசாங்க நிர்வாக சபை மெம்பர் என்கின்ற முறையில் சென்னைக்கு வந்து 4, 5 நாள்கள் தங்கி இருந்து பல இடங்களில் பேசிவிட்டுப் போய் இருக்கிறார்.
அப்படி அவர்கள் பேசிய பேச்சுகளில் பார்ப்பனர்கள் பெரிய உத்தியோகங்களில் பதவிகளில் இருந்தால் எப்படி பார்ப்பனிய ஆதரவுக்கும் நலத்துக்கும் துணிகரமாய் வெள்ளையாய் பேசுவார்களோ அதுபோலவே பச்சையாய் பேசுகிறார் என்பது மிகுதியும், அதிசயப்படவும், பாரட்டத்தக்கதுமான காரியமாகும்.
நம் எதிரிகள் அவரை சர்க்கார்தாசர் என்று சொல்லக்கூடும்.  அதைப் பற்றி அவர் சிறிதும் பயப்படவில்லை.  பதவிக்கு அவர் வந்த உடன் இந்தப் பதவிக்கு நான் வந்ததின் பயனாய் என் இன மக்களின் நலத்துக்கு இப்பதவியைப் பயன்படுத்த முடியுமானால் - என் இன மக்களுக்கு ஏதாவது நலம் செய்ய முடியுமானால் நான் இதில் இருப்பேன் இல்லாவிட்டால் நான் வெளிவந்துவிடுவேன் என்று சொன்னார்.  அதுபோலவே பதவிக்கு அவர் சென்றது முதல் ஒவ்வொரு மூச்சிலும் தன் இனத்தின் பெயரையும் நிலைமையையும் எடுத்துச் சொல்லி சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் தன் இனத்தின் நலத்துக்கு ஏதாவது காரியங்கள் செய்து கொண்டு எதிரிகளை வெள்ளையாய் கண்டித்துப் பேசி நடுங்கச் செய்தும் வருகிறார்.
அவருக்கு அவருடைய வகுப்பாருடைய ஆதரவு இருக்கிறதா என்றால் அது பூஜ்ஜி யம் என்பதோடு இனத்தார் அத்தனை பேரும் தனக்கு ஆதரவளிக்கும்படியான வலிமை பொருந்திய ஸ்தாபனமும் இல்லை.  இனத்தின் தக்க செல்வமோ செல்வாக்கோ துணிந்து வெளிவந்து ஆதரவளிக்கக் கூடிய ஆளுகளும் மிகக்குறைவு. 100 க்கு 99 பேர் ஏழை, கூலி தரித்திர மக்கள்.  இப்படிப்பட்ட நிலையில் உள்ள அவர், உத்தியோகம் தனக்கு கிடைக்கத்தக்க விதமாக தனது வாழ்வில் பல அவதாரம் எடுக்காமலும் எதிரிகளிடம் நல்ல பேர் வாங்க - அவர்கள் மெச்சும் படி நடக்காமலும், இந்துக்களையும் இந்து மதத்தையும், இராமாயணம், மனுஸ்மிருதி முதலியவை களையும் பார்ப்பனர்களையும் பச்சையாய் வைது கண்டித்து சிலவற்றைக் கொளுத்த வேண்டும் என்றும், சிலவற்றை தீயில் கொளுத்தியும் நான் இந்து மதத்தை விட்டு வெளியே போய்விடுகிறேன் என்றும், தேசியம் என்பது புரட்டு, தேசிய சர்க்கார் என்பது பார்ப்பன ஆட்சி, தேசிய சர்க்காரை விட இன்றுள்ள சர்க்காரே மேல் என்றும், பேசி வருகிறார்.  மற்றும் தேசிய சர்க்கார் ஏன் கெடுதி என்றால்,  எந்த சுதந்திர தேசிய சர்க்கார் வந்தாலும் அது பார்ப்பன, வர்ணாசிரம, சர்க்காராகத்தான் இருக்கும் என்றும் வெடி வெடிக்கும் மாதிரியில் பேசி, தன் இன மக்களின் நம்பிக்கையையும், பாராட்டுதலையும் பெற்றுக் கொண்டு சட்டதிட்டங்களை லட்சியம் செய்யாமல் பேசி வருகிறார்.
இவரைப் பார்ப்பனர் சபிக்கலாம், காங் கிரசுக்காரர்கள் வையலாம், தேசியம் பத்திரிகைகள் யோக்கியப் பொறுப்பில் லாமல் எழுதலாம்; மற்றும் வகுப்புப் பேரால் பதவி பெற்று பதவிக்கு போய் வகுப்பை மறந்துவிட்டு தங்கள் குடும்ப நலத்திற்கு ஆக பதவி அனுபவிப்பவர்கள் பொறாமைப் பட்டு இந்தச் சனியன் பிடித்த டாக்டர் அம்பேத்கர் நம்ம யோக்கியதை வெளியாகும் படி நடக்கிறாரே என்று பொறாமையும் ஆத்திரமும் கொள்ளலாம்.  ஆனால், தோழர் அம்பேத்கர் மேற்கண்டபடி பேசுவதும் நடப்பதும் இந்த நாசமாய்ப் போன சுய மரியாதை அற்ற பார்ப்பனரல்லாத சமு தாயத்தைத் தவிர, மற்ற சமுதாயக்காரர் களின் பதவி பெற்ற எவ்வளவு தாழ்ந்த மனிதனும் செய்கிற காரியமே தவிர அம்பேத்கருக்கு மாத்திரம் புதிதல்ல.  ஆனால் மற்றவர்களை விட இவர் சற்று வெளிப் படையாய் பேசுகிறார், எழுதுகிறார் என்று சொல்லிக் கொள்ளலாம்.  உதாரணமாக டாக்டர் அம்பேத்கர் சென்னை நகரசபை வரவேற்புக்கு பதில் சொல்லும்போது பேசியதை கவனிப்போம்.
ஒரு கூட்டத்தார் எனக்கு வரவேற்புக் கொடுக்க சம்மதிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். அதற்கு ஆகவே இந்த வரவேற்பைப் பெற நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் எனில் இந்த வரவேற்பு சடங்குமுறை வரவேற்பல்ல என்பதும் எனக்கு வரவேற்பு கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பவர்கள் பிடிவாதமாய் இருந்து மெஜாரிட்டியாய் இருந்து வெற்றி பெற்று எனக்குக்காட்டிய அன்பென்றும் கருதுவதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசினார்.
அடுத்தாற்போல் தேசியப்பித்தலாட் டத்தை பட்டவர்த்தனமாக்கினார்.  என்ன வெனில், தேசிய சர்க்கார் என்றால் பார்ப்பன சர்க்கார்தானே!  1937 இல் தேசியம் வெற்றி பெற்ற 7 மாகாணங்களும் பார்ப்பன முதல் மந்திரிகள் ஆதிக்கத்தில்தானே இருந்து வந்திருக்கிறது.  நாளைக்கு எல்லா மக் களுக்கும் ஓட்டு கொடுத்து அதன்மூலம் ஒரு சர்க்காரை ஏற்படுத்தினாலும் அதிலும் பார்ப்பனர்கள் தானே ஆட்சி செலுத்து வார்கள்?  இது மாத்திரமா, பெண்களுக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதிலும் பார்ப் பனத்திகளே மெஜாரிட்டியாய் வருகிறார்கள்;  தொழிலாளருக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதற்கும் பார்ப்பனர்களே பிரதிநிதிகளாய் வருகிறார்கள்.  இதுமாத்திரமா தீண்டாத வகுப்பாருக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதிலும் பார்ப்பனர்கள் பிடித்துவைக்கிற ஆள்கள் தான் வருகிறார்களே தவிர வேறு யார் வருகிறார்கள்?  ஆகவே தேசிய சர்க்கார் என்னும் பித்தலாட்டத்திற்கும் இந்த நாட்டின் மானக்கேடான அரசியல் நிலைக்கும் இந்த உதாரணம் போதாதா என்று பேசுகிறார். இதற்குப் பார்ப்பனர்கள் தானாகட்டும் தேசியர்கள் தானாகட்டும் என்ன பதில் சொல்லக் கூடும்?  நான் சென்ஸ், ரப்பிஷ் என்று குரைத்து தங்கள் அயோக்கியத் தனங்களை மறைக்க முயற்சிக்கக் கூடுமே ஒழிய வேறு என்ன சமாதானம் சொல்ல முடியும்? சுயமரியாதை இயக்கம இல்லா விட்டால் இதெல்லாம் (இப்படி பார்ப்பனர் வெற்றிபெற்றது) கடவுள் செயல், அந்த ராத்மா கட்டளை என்று சொல்ல முடியும்.  இப்போது தலையைக் கவிழ்ந்துகொள்ள வேண்டியதைத் தவிர இதற்கு வேறு பதில் இல்லை.
தேசியர்களின் தன்மை இப்படி என்றால் பார்ப்பனரல்லாத கட்சியார் என்று தங்களை சொல்லிக் கொண்டு ஒரு நல்ல கொள் கையையும், பொறுப்பையும் பாழ் அடையும்படி தங்கள் சுயநலத்தையும், வயிறு வளர்ப்பையும், பட்டம் , பதவி, உத்தியோகம் முதலியவை களை மாத்திரம் வேட்டை ஆடுவதில் மூழ்கிக்கொண்டு மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவ லையற்ற அதிதீவிர சுயநலக்காரர்களுக்கும் சரியான சவுக்கடி கொடுத்து சிறிதாவது உறைக்கும்படி செய்திருக்கிறார்.  அதற்கு உதாரணமாக கன்னிமாரா ஓட்டலில் டாக்டர் அம்பேத்கரின் ஆசிபெற விருந்துகொடுத்து ஏமாற்ற நினைத்த சென்னைத் தோழர் களுக்கு டாக்டர் உறுத்திய அறிவுரையை கவனித்தால் விளக்கும்.
அவர் பேசியதின் தத்துவமாவது,
பார்ப்பனரல்லாத தோழர்களே! உங்களை நீங்கள் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்ளுகிறீர்களே!  அதில் உங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள பேதத்தைக் காட்டுவதற்குள்ள காரியங் கள் என்ன? அதற்கு உங்கள் கொள்கை என்ன?  திட்டங்கள் என்ன? எங்கள் கட்சி பார்ப்பனியத்திற்கு மாறான கட்சி என்று சொல்லிக்கொண்டு நெற்றியில் நாமம், வீட்டில் பார்ப்பன புரோகிதம், நடவடிக்கையில் பார்பனியத்தைப் பின்பற்றுதல், அவன் பூசை பண்ணும் கோவிலில் சென்று வெளியில் இருந்து வணங்குதல் ஆகியவைகளைச் செய்து உங்களையும் 2வது வகுப்பு பார்ப்பனர் மாதிரி ஆக்கிக்கொண்டு, முதலாவது வகுப்பு பார்ப்பனராக ஆக ஆவதற்கு ஏற்ற வண்ணம் நடந்துகொண்டு வருவீர் களானால் நீங்கள் எந்த தன்மையில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்ள அருகர்கள் ஆவீர்கள்?
பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு முதலா வதும் கடைசியானதுமான கொள்கை உத்தியோகம் தானா? அல்லது உத்தி யோகத்தில் சரி பங்கு என்பது மாத்திரம் தானா?  இதைத் தவிர வேறு என்ன கொள் கையை இதுவரை பின்பற்றி வந்தீர்கள்?  என்பது ஆகக் கேட்டிருக்கிறார்.
மேலும் அப்படியாவது உத்தியோகம் பதவி பட்டம் ஆகியவை அக்கட்சியின் மூலம் பெற்று வாழ்ந்தீர்களே அதற்கு ஆக அக் கட்சிக்கு நீங்கள் காட்டிய நன்றி அறிதல் விஸ்வாசம் என்ன?  என்பது ஆகவும் கேட்டிருக்கிறார்.  மேலும் மந்திரி வேலை பார்த்தவர்கள் எங்கே?  சேலம் கூட்டத் திற்குப் போனீர்களா?  அல்லது நிர்வாகசபை கூட்டங்களில் ஏதாவது ஒன்றுக்கு போனீர் களா?  மந்திரிகளின் காரியதரிசிகளாய் இருந்து மாதம் 500, 1000 மூட்டை கட்டியவர்கள் எங்கே?  இவர்கள் தேர்தலுக்கு நிற்பது, தேர்தலுக்கு பேசுவது தவிர வேறு ஏதாவது பொதுக் கூட்டம் கூட்டி இருப் பீர்களா அல்லது பொதுக் கூட்டத்தில் பேசி இருப்பார்களா?  இந்த மந்திரிகளும், அவர்களது காரியதரிசிகளும் சம்பளம் பெற்றது தவிர பார்ப்பனியத்தில் ஏதாவது ஒன்றை விட்டிருப்பீர்களா?  விட்டிருக்கா விட்டாலும் பார்ப்பனியத்தை வளர்க்காம லாவது இருந்திருப்பீர்களா?  இவை எல்லாம் நாசமாகப் போகட்டும் கட்சியின் பேரால் உத்தியோகம் பெற்ற பெரியவர்கள் யோக்கியதைதான் இப்படி என்றால், கட்சி பேரால் உத்தியோகம் பெற்ற வாலிபர்களிலாவது எவனாவது கட்சிக்கோ கட்சியில் உள்ள மற்ற மக்களுக்கோ ஏதாவது நன்மை செய்தானா என்பதும் விளங்கும்படி பேசினார்.
கட்சித் தலைவர்கள் பார்ப்பனரல்லாத கிராமத்தார்களைப் பற்றி நினைத்தார்களா?  எந்தக் கிராமத்திற்காவது எந்தத் தாலுக் காவுக்காவது போய் அங்குள்ள மக்களிடம் கலந்தார்களா?  கூட்டங்களுக்கு போய் பேச்சாளர்களாகப் பேசினார்களா?  என் றும் தைக்கும்படி பேசினார்.
மற்றும் கட்சி வீழ்ச்சி அடைந்த பின் மந் திரிகளும் பட்டம் பெற்றவர்களும் பிள்ளை குட்டிகளுக்குப் பதவியும், உத்தி யோகமும் பெற்றவர்களும், மந்திரிகளுக்குக் காரிய தரிசியாய் இருந்து பயன் பெற்றவர்களுமான தமிழர் ஆந்திராவுக்குப் போனார்களா?  இப்படிப்பட்ட ஆந்திரக்காரர் யாராவது தமிழ்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய் தார்களா?  அல்லது ஆந்திரர்கள் யாராவது ஆந்திராவில் ஒரு கூட்டத்தில் பேசி இருப் பார்களா?  தமிழர்கள் யாராவது தமிழ் நாட்டிலோ, மலையாளத்திலோ ஒரு பேச்சு பேசி இருப்பார்களா?  என்றும் பொருள்பட அறைந்தார்.  பதவி அடைந்து பட்டம் பெற்று பணம் சம்பாதித்துக் கொண்டு மேலும் மேலே போக ஆசைப்பட்டு வலை வீசிக்கொண்டு அலையும் நீங்கள், உங்கள்  நன்றிமறந்த தன்மைக்கும், கவலையற்ற தன்மைக்கும் வெட்கப்படாமல் வருத்தப்படாமல், ஓய்வொ ழிச்சல் இல்லாமல் ஏதோ ஒரு சிறிதாவது வேலை செய்து கொண்டு இருக்கிறவர் களையும், அதுபோன்ற கட்சித் தலை வனையும் குற்றம் கூறி வீரம் பேசுவதை கட்சி வேலை என்று கருதுகிறீர்களே இது ஒழுங்கா?
மற்றக் கட்சிகளைப் பாருங்கள், அக் கட்சித் தலைவர்களின் தன்மையைப் பாருங்கள்.  கட்சியின் மக்களை, பின்பற்று வோரைப் பாருங்கள்.  உங்களைப் போன்று குறைகூறித் திரியும் ஆள்கள் அங்கு எதிலாவது யாராவது இருக்கிறார்களா? என்றும் விளாசி இருக்கிறார்.  உங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் பேதம் காட்டி பார்ப்பனியத்தில் இருந்து நீங்கள் விலகாததாலேயே தோற்றீர்கள் அதனாலேயே உங்களுக்கு செல்வாக்கில்லை இப்படியே இருந்தால் இனியும் நீங்கள் என்றென்றும் உருப்படமாட்டீர்கள் என்றும் எச்சரிக்கையான அறிவுரை பகர்ந் திருக்கிறார்.
விருந்து நடத்தியவர்கள் இவ்வளவு அடியையும், இடியையும் பெற்றுக்கொண்டு டாக்டர் அம்பேத்கருக்கு நன்றி செலுத்தி விட்டு, நாங்கள் தலைவரிடம் முழு நம்பிக் கையுடனும் பக்தி விசுவாசத்துடனும் தலைவர் கட்டளைக்கு மறுமொழி கூறா மலும்தான் நடந்து கொள்ளுகிறோம் அதுதான் எங்கள் கட்சி சம்பிரதாயம் ஆனால் ஜனநாயகம் வேண்டும் என்று தான் சொல் லுகிறோம் என்று பதில் சொன்னார்களாம்.  அதுவும் யார் சொன்னார்கள் என்றால் சேலம் மாநாட்டுக்கு வந்து பெரியாரைத் தவிர உலகம் முழுவதும் தேடியும் வேறு தலைவர் கிடைக்கவில்லை.  நான் ஒரு காலத்தில் தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்த சர். சண்முகம் செட்டியார் முதலியவர்கள் கட்சிக்கு துரோகிகளாகவும், வஞ்சகர் களாகவும் ஆகிவிட்டார்கள்.  ஆதலால் பெரியாரே எங்கள் நிரந்தரத் தலைவர். அவரை நாங்கள் என்றும் பின்பற்றுவோம்.  அவரே லெனின்;  அவரே மார்க்ஸ்;  அவரே திராவிட நாட்டுக்கு பிரசிடெண்டு என்று கூறி மக்கள் கைதட்டுதலைப் பெற்றுக் கொண்டு பிழைத்தேன் என்று சொல்லிக் கொண்டு ஓடினவர்களும் ஊருக்கு இரண்டு மைல் தூரத்தில் போலிஸ் பந்தோபஸ்தை வைத்து தங்கள் ஆளுகளைத் தவிர, வேறு யாரையும் உள்ளே விடாமல் தடுத்து வேலைக்காரர்கள் உட்பட 20, 30 பேர்கள் இருந்து கொண்டு ஏதோ பேசி எதையோ எழுதிக் கொண்டு நாங்கள் தலைவரை நீக்கிவிட்டோம்;  வேறு தலைவரை நியமித்து விட்டோம் என்று வெளிப்படுத்தின மூன்றே முக்கால் பேர்வழிகள் தான் இந்த ஜனநாயகம் பேசியிருக்கிறார்கள்.
அது ஒருபுறமிருக்கட்டும். இவைகளி லிருந்து டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு தைரியசாலி என்பதும் மனதில் உள்ளதை தைரியமாய்ப் பேசுகிறவர் என்பதும், அவரது பொது வாழ்வு பட்டத்திற்கோ பதவிக்கோ பண சேகரிப்புக்கோ, விளம்பரத்திற்கோ அல்லாமல் ஒரு பொது இலட்சியத்திற்கு என்பதும் நன்றாய் விளங்கும்படி நடந்து வந்திருப்பதோடு சென்னைக்கு வந்ததிலும் அப்படியே நடந்துகொண்டிருக்கிறார் என்பதும் நன்றாய் விளங்கும்.
இதே சந்தர்ப்பத்தில் நம் நாட்டில் உள்ள பார்ப்பனரல்லாத தலைவர்கள் பிரமுகர்கள் மந்திரிகள், மந்திரிகளின் காரியதரிசிகள், மந்திரிகளுடன் சுற்றித் திரிந்து கொண்டு பயன்பெற்றும், பதவி பெற்றும், வயிற்றுப் பிழைப்பும் வாழ்க்கை நடத்திக்கொண்டும் இருந்த மக்களின் யோக்கியதையையும் நினைத்துப் பாருங்கள்.
குடிஅரசு  தலையங்கம் - 30.09.1944