Saturday, November 27, 2010

என்னைப் பற்றி...

மக்களை அறிவாளியாக்கும், துறையில் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் துறையில் யார் பாடுபட்டாலும் அவர்கள் பொது மக்களால் வெறுக்கப்படவும், நாத்திகர்கள் என்று கூறப்படவும், தொல்லைக்கு ஆளாக்கப்படவும், கொல்லப்படவுமான தன்மை உலகிலேயே இயற்கையாக இருந்து வருகிறபோது, அந்த நிலை நம் நாட்டில், நம் மக்கள் இருக்கும் யோக்கியதையில் ஏற்படாமல் இருக்க முடியுமா? அதலால், அந்த நிலைக்கு ஆளாகும் தன்மையை எதிர்பார்த்தே நான் இந்தக் காரியத்தில் பிரவேசித்துத் தொண்டாற்றி வருகிறேன்.
இதன் பயனாக நான் பலமுறை சிறை சென்றிருக்கிறேன்; வாழ்க்கையில் பல இன்னல்களை அடைந்திருக்கிறேன்; இதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கத்திற்கு என் பெயராலும், இயக்கத்தின் பெயராலும் அரசாங்கத்தாராலோ, அரசாங்கத்தில் உள்ள மேல் ஜாதி மக்களாலோ அல்லது இந்தக் கருத்துக்கு மாறுபட்டவர்கள் என்பவர்களாலோ எனது முயற்சியைத் தடுக்கவும், ஸ்தாபனத்தை ஒழிக்கவுமான தன்மையாக ரூபாய் 15,00,000 (பதினைந்து இலட்ச ரூபாய்)க்கு மேல் கடந்த காலத்துக்கு என்று இன்கம் டாக்ஸ் வரி (வருமானவரி) போடப்பட்டிருக்கிறது என்பதுடன் நிகழ்காலத்திற்கும் ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய் போல் இன்கம்டாக்சும் போடப்பட்டும் வருகிறது.
இவை தவிர நம் நாட்டில் உள்ள எல்லாப் பார்ப்பனராலும் வெறுக்கப்பட்டிருக்கிறேன். மேல் ஜாதியார் என்று பார்ப்பனரைப் போல் தங்களைக் கருதிக் கொண்டிருக்கும் எல்லாச் சைவர்கள் என்பவர்களாலும் பெரிதும் வெறுக்கப்பட்டிருக்கிறேன். இவை மாத்திரமா? 100 க்கு 90 கிறிஸ்துவர்களாலும் வெறுக்கப்படுகிறேன். இஸலாமியர்களாலும் வெளிப்படையாய் வெறுக்கப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
இவற்றுள் ஒரு அதிசயமென்னவென்றால் ஆதி திராவிட மக்களுக்குள் பதவியில் உள்ள சிலர் தவிர, ஒருவர்கூட எனக்கு ஆதரவாளர் கிடையாது. யாராவது சிலர் அவர்கள் சொந்த சுயநல காரியங்களுக்கு வருவார்கள். அவ்வளவுதான். சிலர் எதிரிகளாகவே, அலட்சியப்படுத்துபவர்களாகவே ஆகிவிட்டார்கள். எதற்கு இவற்றைச் சொல்கிறேன் என்றால் என் இந்தத் தொண்டுக்கு ஆதரவாளர்களாக, பாராட்டுபவர்களாகப் பெரும்பாலான மக்கள் இல்லை என்பதைக் காட்டுவதற்காகவேயாகும்.
இதில் நான் மகிழ்ச்சியும், பெருமையும் அடையத்தக்கதும், குறிப்பிடத்தக்கதுமான காரியம் என்னவென்றால் என் இயக்கத்தில் (இந்தத் தொண்டுக்கு ஏற்பட்ட இந்த இயக்கத்தில்) வேறு எந்த இயக்கத்தையும் விடக் கட்டுப்பாடும், அதற்கேற்ற கடமைப்பாடும் நல்ல அளவுக்கு இருந்துவருகின்றன. இயக்கத் தோழர்கள் யாராயிருந்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்கள் வெளியே போய்விடுகிறார்கள் என்பதுதான். நாத்திகர் என்பதற்காக யாரும் பயப்படாதீர்கள். சாக்ரட்டீஸ் நாத்திகர்; பெர்ட்ரண்ட் ரஸல் நாத்திகர்; பெர்னாட்ஷா நாத்திகர்; இங்கர்சால் நாத்திகர்; நேரு நாத்திகர். மற்றும், இயேசுநாதரும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டு கொலையுண்டார்; முகமது நபியும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டு அடித்து விரட்டப்பட்டார். புத்தர்களும், சமணர்களும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டு அவர்களின் வீடுகள், மடங்கள் கொளுத்தப்பட்டு வெகுபேர் கொல்லப்பட்டு, கழுவேற்றப்பட்டு, அவர்கள் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு அல்லலுற்றனர். இவர்கள் தவிர, அமெரிக்காவில் பல நாத்திகச் சங்கங்களில் மூன்று கோடிக்கு மேல் வெளிப்படையான நாத்திகர்கள். இங்கிலாந்திலும் அதுபோலவே அரைக்கோடிக்கு மேலும், ஜெர்மனியில் ஒரு கோடியும், சைனாவில் 60 கோடியும், ரஷ்யாவில் 25 கோடியும், ஸ்பெயினில் முக்கால் கோடியும், பிரான்சில் முக்கால் கோடியும், பர்மாவில் அரைக்கோடியும், சயாமில் ஒரு கோடியும் இருக்கிறார்கள்.
இப்படியாக நூற்றுக்கணக்கான கோடி மக்கள் நாத்திகர்களாக இருக்கிறார்கள். பல தேசங்கள் நாத்திக தேசங்களாகவே இருந்து வருகின்றன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் பகுத்தறிவு கொண்ட தேச மக்கள் ஆவார்கள்.
(விடுதலை தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் - 1973 இல் பெரியார் எழுதியது)


சர்க்கார், காங்கிரஸை விட மோசமானதா?

பட்டேலின் ஸ்ரீ முகம்
தோழர் வல்லபாய் பட்டேல் அவர்கள் சென்னை மாகாண காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் முனைந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதாகவும், சென்னை மாகாணக்காரர்கள் காங்கிரஸ் காரருக்கே ஓட்டு செய்ய வேண்டும் என்றும் அதற்குக் காரணம் அடக்கு முறையைக் கண்டிக்க வேண்டியும், வெள்ளை அறிக்கையை நிராகரிக்க வேண்டியும் காங்கிரஸ்காரர்களே தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். மற்றும் காங்கிரஸ்வாதி அல்லாத மற்றவருக்குக் கொடுக்கும் ஓட்டு சர்க்காருக்குக் கொடுத்தது போல் ஆகுமென்றும் சொல்லுகிறார். முதல் விஷயத்தை ஒப்புக் கொண்டாலும் இரண்டாவது விஷயம் ஒப்புக் கொள்ளப்படாதது என்பதுடன், அதில் நாணயமும் நியாயமுமில்லை என்று சொல்ல வேண்டியிருப் பதற்கு வருந்துகிறோம்.
ஏனெனில் இந்த நாட்டிலுள்ள சுமார் 35 கோடி மக்களில் காங்கிரசில் அங்கத்தினர்களாய் இருக்கிற சுமார் ஒரு பத்தாயிரம் அல்லது இருபதாயிரம் மக்களைத்தவிர மற்றவர்கள் எல்லாம் சர்க்காரைச் சேர்ந்தவர்கள், தேசத்துரோகிகள் என்பது தோழர் பட்டேல் அவர்களின் ஸ்ரீமுகத்தின் கருத்தாகிறது.
தோழர் சண்முகம் அவர்கள் விருதுநகரில் தெரிவித்தது போல் தேசபக்தி என்பது தோழர்கள் பட்டேல், ஆச்சாரியார்கள் ஆகியவர்களின் பிதுரார்ஜித சொத்துப்போலவும் அந்தக் கூட்டத்தில் இவர்களுடைய சிஷ்யர்களும், அடிமைகளும் தவிர மற்றவர்களுக்கு இடம் கிடையாது என்பது போலவும் இவர்களுடைய ஆதிக்கம் இருந்து வருகிறது.
அந்த சிஷ்யர்களும், அடிமைகளும் கூட தங்கள் தேசபக்தியைக் காட்டவேண்டுமானால் ஒரு முறைக்கு நாலுமுறை சிறை சென்று இருந்தாலும் போதாது. பத்து ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொண்ட தங்கள் வரும்படிகளையும் துறந்து கை முதல்களையும் இழந்து ராஜபோகத்தையும் விடுத்து, சன்னியாசியாய், கடன்காரனாய் தெருவில் நின்று தவிப்பவனாய் இருந்தாலும் போதாது. மற்றபடி எவ்வளவு அயோக்கியனாய், குடிகாரனாய், ஜாதி ஆணவம் பிடித்தவனாய், தாசி லோலனாய், ஊரை ஏமாற்றி கொள்ளையடிப்பவனாய், சர்க்காருக்கு ஊ.ஐ.னு. யாய் ஒரு மணி நேர வேலைக்கு 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய், வீதம் மக்களிடம் இருந்து கறந்துபோக யோக்கியங்கள் அனுபவிப்பவனாய் இருந்து கொண்டு, கதர் துணியைக் கட்டுபவனாக வும், ராட்டினத்தில் நூற்பவனாகவும், காந்திக்கும் பட்டேலுக்கும், ஆச்சாரிக்கும் ஜே போட்டு மகாத்மா என்று கூப்பிடுபவனாகவும் இருந்தால், பெரிதும் அவன்தான் தேசபக்தன், சர்க்கார் மனிதனல்லா தவன், பாமர மக்கள் ஓட்டைப் பெற தகுதியுடையவன் என்றால் இது யோக்கியமா என்று கேட்கின்றோம்.
மத விஷயத்தில் பழி தொழிலும் இழிகுலமும் படைத்தாரேனும் அரவணையாய் என்பாராகில் அவர் கண்டீர் யாம் வணங்கும் அடிகள் (கடவுள்) ஆவார் என்றும், சாதியால் ஒழுக்கத்தால் தக்காரேனும் - பொன்னரங்கம் போற்றாதார் புலையர் ஆவார் என்றும் சொல்லப்படுவது போலவே, ஆச்சாரியா ரையும் பட்டேலையும் போற்றாதார் எவ்வளவு ஒழுக்கம் உள்ளவராய் இருந்தாலும் தேசத்துக்காக எவ்வளவு தியாகம் செய்தவர்களானாலும் தேசத்துரோகிகள் ஆவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதற்குக் காரணம் காங்கிரஸ் தேசபக்தி என்பவற்றின் பேரால் ஏராளமான ஜனங்களைப் பாமர மக்களிடமிருந்து கொள்ளை கொண்டு அதன் பயனாய் உடல் உழைப்பில் சோம்பேறித்தனம் கொண்ட மக்களைக் கூலிகளாய் அமர்த்தி அவர்களை விட்டுக் கூலிப் பிரச்சாரம் செய்து வருவதால் இவ்வளவு தைரியமாகப் பேச இவர்களுக்கு இடமேற்பட்டு விட்டது.
1917 முதல் 1922 வரையில் தோழர் வரதராஜுலு அவர்கள் இந்தப் பார்ப்பனர்களுக்குச் சங்கராச்சாரி போலவும் ஜீயர் போலவும் விளங்கியதை யாராவது மறுக்கமுடியுமா என்று கேட்கின்றோம். அதற்கு பிறகு எவ்வளவோ தரம் சிறை சென்றும் பத்தாயிரக் கணக்காகக் காசு பணம் செலவு செய்தும் தேசியம், தேசாபிமானம் என்று கோடிக்கணக்கான தடவை உருச்செபித்து குடும்பசகிதம் கதரே உடுத்தி வந்தும், இன்று அவர் தேச பக்தர்கள் கூட்டத்தில் சேர்க்கப்படாமல் தேசத் துரோகிகள் கூட்டத்தில் சேர்க்கப்பட்டதன் காரணம் என்ன என்பதை யோசித்தால் தோழர் ஆச்சாரியார் பேரிலும், பட்டேல் பேரிலும் தோத்திரம், தாண்டகம் முதலிய பிரபந்தம் பாடாதது தான் காரணம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லக்கூடும் என்பது நமக்கு விளங்க வில்லை.
தவிரவும் காங்கிரஸ்காரருக்குக் கொடுக்காத ஓட்டு சர்க்காருக்குக் கொடுத்ததாகப் பாவிக்கப் படும் என்று அடிக்கடி பல்லவி பாடுவதின் யோக்கியதையைச் சற்று விளக்கிப் பார்ப்போம்.
இன்றைய தினம் காங்கிரஸை விட சர்க்கார் எந்த விதத்தில் யோக்கியதைக் குறைவானது என்பது நமக்கு விளங்கவில்லை.
சர்க்காரில் அண்ணன் இருந்தால், காங்கிரசில் தம்பி இருக்கிறான். காங்கிரசில் மகன் இருந்தால், சர்க்காரில் தகப்பன் இருக்கிறான். காங்கிரசில் மாமனார் இருந்தால், சர்க்காரில் மருமகன் இருக்கிறான். காங்கிரசில் அண்ணன் மகன் இருந்தால், சர்க்காரில் சிற்றப்பன் இருக்கிறான். காங்கிரசையும் சர்க்காரையும் ஒரு ஜீவனோ பாயமாய்க் கொண்டவர்களே இந்த இரண்டு தாபனங்களிலும் மிகுந்து இருக்கிறார்கள். இரண்டு கூட்டமும் பெரிதும் பொது ஜனங்கள் பணத்திலேயே வாழுகின்றார்கள். சர்க்கார் அடக்கு முறைச் சட்டங்கள் போலவே காங்கிரசிலும் அடக்கு முறைச் சட்டங்கள் இருந்து கொண்டுதான் வருகின்றன. சர்க்கார் உத்தியோகஸ்தர்கள், அதிகாரிகள் ஆகியவர்களிடத்தில் இருக்கும் நாணயக் குறைவு, புரட்டு, பித்தலாட்டம், சமயத்துக்கு ஏற்ற வேஷம் வாக்குவாதம் தவறுதல் ஆகியவை காங்கிரசிலும் இருந்துதான் வருகின்றன. சர்க்கார் எதேச் சதிகாரத்தைப் போலவே காங்கிரசிலும் எதேச் சதிகாரம் இருந்துதான் வருகிறது.
சர்க்காரில் இருப்பது பொய் ஜனநாயகத் தத்துவமே! ஏன்? அதைவிட மோசமான ஜன நாயகத் தத்துவமே காங்கிரசிலும் இருந்து வரு கின்றது. சர்க்கார் தங்களுக்கு இஷ்டமில்லாத வர்களை, தங்கள் அடிமை அல்லாதவர்களை ராஜத் துரோகியென்று கூப்பிட்டால், காங்கிரஸ் தங் களுக்கு அடிமைகள் அல்லாதவர்களை தேசத்து ரோகிகள் என்று விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். எந்த விதத்தில் காங்கிரஸ், சர்க்காரை விட யோக்கியதை உடையது என்று கேட்கின்றோம்.
ஆகவே, பாமர மக்கள் இனியாவது இந்தப் பொய் மிரட்டலை உணர்ந்து, தங்களுடைய பகுத் தறிவுக்குச் சரியென்று தோன்றிய மார்க்கத்தில் நடந்து கொள்ள வேண்டுமாய் வேண்டிக் கொள்ளு கிறோம்.
- பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 30.9.1934
                                                                 தேர்தல் பிரச்சாரப் போக்கு
தோழர் சத்தியமூர்த்தி புகார்களுக்குப் பதில்,
தேர்தலில் போட்டி அபேட்சகர்கள் ஒருவரை யொருவர் இகழ்வதும், எதிர் அபேட்சகர் மீது வாக்காளர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும்படி செய்வதும் உலகம் முழுதும் சகஜமாகிவிட்டது. ஆனால் அவ்விதம் செய்வதற்கும் ஓர் எல்லையுண்டு. இப்போது சென்னை நகர் சம்பந்தப்பட்ட வரையில், காங்கிரஸ் பெயரைக் கூறிக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அபேட்சகராக நிற்கும் ஆளைக் கவனிக்காதீர்கள். மகாத்மா காந்திக்காக ஓட்டு போடுங்கள் எனக் கூறுகிறார்கள். இது நாமம் போட்ட சோம்பேறிகள் திருப்பதி வெங்கிடாசலபதிக்கு உண்டியல் பிச்சை கேட்பது போலாகும். ஆனால் நான் அவ்விதம் எதுவும் கூற விரும்பவில்லை. சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட வரையில் பார்ப்பனர் - அல்லாதார் ஜாதியை ஆதாரமாகக் கொண்டே தேர்தல் இயக்கம் நடந்து வருகிற நீங்களெல்லோரும் சென்னை நகரத்துக்கு அபேட்சகராக நிற்கும் தோழர் ராமசாமி முதலியாரின் அந்தஸ்தையும், யோக்கியதாம்சங்களையும் தோழர் சத்தியமூர்த்தி யோக்கியதாம்சத்தையுமே கவனிக்க வேண்டும். அபேட் சகர்களில் யார் செய்வது சரி, யார் செய்து தப்பு என்பதைப் பகுத்தறிந்து, உங்களிஷ்டம் போல் ஒருவருக்கு ஓட்டு போடும் உரிமை உங்களுக்குண்டு. எனவே, வீண் புரட்டு களைக் கேட்டு நீங்கள் ஏமாற மாட்டீர்களென்பது நிச்சயம்.
காங்கிரஸ் பெயரால் நடந்து வரும் பிரச்சாரத்தை நீங்கள் கவனிக்கக் கூடாது. காங்கிரஸ் அரசியலில் இன்னும் சிறிது காலத்தில் மிகுந்த மாறுதலேற்படலாம். ஏனெனில் காந்தியார் காங்கிரசிலிருந்து விலகிவிட உத்தேசித் துள்ளார். அப்படியிருந்தும் காங்கிரஸ்வாதிகள் தேர்தலுக்காக மகாத்மா பெயரை உபயோகித்து வருகிறார்கள். தோழர் சத்தியமூர்த்திக்கு 4000 பிராமணரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கிறதென்றும், அதற்கு மேல்தான் அவர் இப்போது கணக்கிட வேண்டுமென்றும் அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர். அப்படியாயின், தோழர் ராமசாமி முதலியாருக்கு 11,000 பிராமணரல்லாதாரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கின்றன வென்று நீங்கள் தைரியமாகக் கூற வேண்டும். இப்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் தோழர் சத்தியமூர்த்தி, தோழர் முதலியாருக்கு விரோதமாக பல பொய்யான விஷயங்களைக் கூறியிருக்கிறார். அவைகளால் பொதுஜன அபிப்பிராயம் மாறக்கூடு மோவென்றே, இப்போது தோழர் முதலியார் அவைகளுக்குப் பதில் கூற வேண்டியிருக்கிறது.
(20-10-1934) மாலை சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் தலைமை தாங்கி காங்கிரஸ் புரட்டுகளும், வஞ்சகங்களும் என்பது பற்றி தந்தை பெரியார் ஆற்றிய உரை.)
- - பகுத்தறிவு - சொற்பொழிவு - 28.10.1934

Thursday, November 25, 2010

சாஸ்திரங்கள் கூறும் ஜாதிகளின் கதை


ஒரே நாட்டு மக்கள் பிறவியில் பல ஜாதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் தான் இருக்கின்றதே தவிர வேறு எங்கும் இல்லை.

பொதுவாக ‘ஜாதிஎன்பது, இந்துக்கள் என்பவர் களுக்குள் - ஆரியக் கொள்கைகளுக்கு அடிமைப்படுபவர்களுக்குள் மாத்திரம் தான் - கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதுஎன்கின்ற கொள்கையின் மீது நாலு ஜாதிகளாக, அதுவும் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. இவை முறையே ஒன்றுக்கொன்று தாழ்ந்ததாகவும் - கடைசி ஜாதி மிக்க இழிவானதாகவும் கருதப்படுவதாகக் குறிக்கப்பட்டிருக்கின்ற விவரம் யாவரும் அறிந்ததேயாகும். இப்படி இருந்தாலும், இப்போது அனேக ஜாதிகள் இருப்பதற்கு என்ன காரணம்? அதாவது, “ஆதியில் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான்கு வருணத்தாரும் தங்களில் ஜாதி முறை தவறிக் கலப்பு’, ‘விபச்சாரம்செய்து கொண்டதால் ஏற்பட்ட பிரிவுகளென்றும் அப்படிப்பட்ட பிரிவுகளுக்குப் பஞ்சம ஜாதி யார்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் ஆதாரங்களில் இருக்கின்றன.

அப்படிச் சொல்லப்படுவதிலும் இப் பஞ்சம ஜாதிகள்என்பது, இப்போது நமது நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கும் பல முக்கியமான ஜாதிக்காரர்கள் என்பவர்களே பெரிதும் இந்த விபச்சாரப் பெருக்கால் ஏற்பட்ட பஞ்சம ஜாதிகள் என்றே காட்டப்பட்டிருக்கின்றது. ஆகவே, அதில் உதாரணமாக இன்று தமிழ்நாட்டில் பிரபல ஜாதியும் பிரமுக ஜாதியும் என்று சொல்லிக் கொள்ளப்படுவதான வேளாள ஜாதியார் எனப்படுபவர்களே பஞ்சம ஜாதியில் சேர்ந்தவர்கள் என்றும், பஞ்சம ஜாதியிலும் பிராமணன், க்ஷத்திரியப் பெண்ணைச் சோரத்தால் கலந்ததால் பிறந்தவர்கள் என்று குறிக்கப்பட்டிருக்கின்றது.

இவர்களில் - இந்தப்படியான வேளாளர் என்பவர்களில், விவசாயம் செய்பவர்களாக இருந்தால் அவர்களுக்குக் காணியாளர்என்றும் பதவிகளில் இருந்தால் வேளாண் சாமந்தர்என்றும் குறிக்கப்பட்டிருப்பதுடன், இவற்றிற்கு ஆதாரம் சுப்ரபோதகம், பிரம்ம புராணம், வைகாநசம், மாத வியம், ஜாதி விளக்கம் என்கின்ற நூல்கள் என்றும் உள்ளது.

பிராமணன் - வைசியப் பெண்ணுடன் கலியாணத்தால் பிறந்த பிள்ளை அம்பட்டன் என்றும், சோரத்தால் பிறந்த பிள்ளைகள் குயவர், நாவிதர் என்றும் உள்ளது.

அதுபோலவே, பிராமணன் - சூத்திரப் பெண்ணுடன் கலியாணத்தால் பிறந்த பிள்ளை பரதவர்அல்லது செம்படவர்என்றும் சோரத்தால் பிறந்த பிள்ளை வேட்டைக்காரன்அல்லது வேடுவர்என்றும் உள்ளது.
அதுபோலவே, பிராமணன் க்ஷத்திரிய ஜாதிப் பெண்ணை விவாகம் செய்து கொண்டதால் பிறந்த பிள்ளைகளே சவர்ணர்எனவும், ‘தெலுங்கர்எனவும் உள்ளது.

பிராமணப் பெண்ணுடன் சூத்திரன் விபச்சாரம் செய்ததால் பிறந்தவர்கள் சண்டாளர்கள்என்றும் உள்ளது.
பிராமணகுலப் பெண்ணுடன் சண்டாளர் கூடிப் பிறந்த பிள்ளைகள் சருமக்காரர்அதாவது சக்கிலியர்என்றும், க்ஷத்திரிய குலப் பெண்ணுடன் சண்டாளர்கள் சேர்வதால் பிறந்த மக்கள் வேணுகர்’ (வேணுகானம் செய்பவர்கள்), ‘கனகர்’ (தங்கவேலை செய்பவர்), ‘சாலியர்’ (நெசவு வேலை செய்பவர்) ஆவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதிரி கீழ் மேல் ஜாதிகள் கலந்து வந்ததால் ஏற்பட்ட ஜாதிகளில் ஒன்றாகிய அயோவக ஜாதிப் பெண்ணிடம், நிடாதனுக்குப் பிறந்த பிள்ளைகள் பார்க்கவர்கள்என்றும் உள்ளது. இந்தப்படியே, இப்போது அமுலில் உள்ள ஜாதிகளெல்லாம் குறிக்கும்படியாகவே இன்னும் அனேக விஷயங்கள் காணப்படுகின்றன. அபிதான கோசம், அபிதான சிந்தாமணி முதலிய எல்லா இந்துப் பண்டிதர்களாலும் ஆதாரமாய்க் கொண்டாடப்படும் புத்தகங்களிலும் மற்றும் பல ஜாதிகளை இதைவிடக் கேவலமாகவும் குறிக்கப்பட்டிருக்கின்றதோடு நான்கு ஜாதிகள் தவிர, மற்ற ஜாதிகள் எல்லாம் மேற்கண்ட நான்கு ஜாதிக்குள் மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் கலியாணம் செய்தும், விபச்சாரம் செய்தும் பிறந்த பிள்ளைகளாக ஏற்பட்டவர்கள். செட்டியார், ஆச்சாரியார் இவர்களைப் பற்றியும் மிக மிக இழிவாகக் கூறப்படுகின்றது.

ஆகவே, ஜாதியைக் கட்டிக் கொண்டு அழுவது இவ் விழிவுகளை மறைமுகமாய் ஏற்றுக் கொள்வதையே ஒக்கும்.
(‘குடிஅரசு’- தலையங்கம் 16.11.1930)

Sunday, November 21, 2010

வைக்கம் சத்தியாக்கிரக வெற்றி



சத்தியாக்கிரகம் ராஜிக்கு உட்படாது

வைக்கம் சத்தியாக்கிரகத்தின் வரலாற்றினை ஈண்டுச் சுருக்கமாக நினைவு கூர்தல் இன்றியமையாதது. வைக்கம் கோவிலின் மதிற் சுவர்களைச் சுற்றிலுமுள்ள நான்கு வீதிகளிலும் தாழ்ந்தவகுப்பினர் எனப்படுவோராகிய ஈழவர் முதலானோர் செல்லுதல் கூடாதென்றிருந்த கொடிய சமூக வழக்கத்தை ஒழித்து, மக்கள் யாவருக்கும் பொதுவான பாதைகளில் எல்லாச் சாதியினரும், சமயத்தினரும் செல்லும் உரிமையை நிலை நாட்ட எழுந்ததாகும் இவ்வைக்கம் சத்தியாக் கிரகப் போர், இப்போரினை எதிர்த்து நின்ற வைதீகக் கூட்டத்தினருக்கு திருவாங்கூர் அரசினர் முதலில் துணை போந்து தலைவர்களைச் சிறைக்கனுப்பிவிட்டு, கோஷா வீதிகளுக்கும் கொண்டுவிடும் நான்கு வீதிகளையும் நடுவில் நடுவில் கழிகள்கொண்டு அடைத்து., போலீ காவலர்களைக் காவல் செய்யநியமித்து சத்தியாக்கிரகிகள் மேற் செல்லாவாறும் மறித்தனர். சத்தியாக்கிரகிகள் நாடோறும் கூட்டம் கூட்டமாகச் சென்று வழி மறித்துள்ள விடத்தில் நின்று மழையென்றும், வெயிலென்றும் கருதாமல் சத்தியாக்கிரகம் புரிந்து வந்தனர். வைதீகக் கூட்டத்தினரால் பல்வித அல்லல்களுக்கு ஆளாகியும் சத்தியாக்கிரகிகள் அன்பு நெறி அறநெறிகளினின்றும் ஒரு சிறிதும் வழுவாது காந்தியடிகளின் ஆணையின்படி ஒழுகி வந்ததும், வருவதும் பெரிதும் போற்றத்தக்கது. உள்ளன்புடனும், உண்மையாகவும் உழைத்து வரும் சத்தியாக்கிரகிகள் இறுதியில் வெற்றி பெறுவார்கள் என்பது திண்ணம்.பல்லூழிகளாக நின்று நிலவி வரும் இந்து சமயத்தின் நற்பெயரைக் கெடுப்பான் பிற்காலத்தில் ஒரு சில அறிவிலிகளால் அதனுள் புகுத்தப்பட்ட தீண்டாமை என்னும் கொடிய பேயை நாட்டினின்றும் ஓட்டி, இந்து சமயத்தின் தூய தன்மையையும், மக்களின் உரிமைகளையும், சமத்துவத் தன்மையும் நிலைநாட்டவேண்டுமென்ற உயரிய எண்ணங்கொண்டு திருவாங்கூர் சமதானத்திலுள்ள வைக்கம் என்னும் ஊரில் சத்தியாக்கிரகம் தொடங்கப் பெற்று நடைபெற்று வருவது நேயர்கள் நன்கு அறிவார்கள். இவ்வுண்மைப் போர் ஓராண்டாக நடைபெற்று வருகிறது; இன்னும் வெற்றிபெறவில்லை; ஆனால், விரைவில் வெற்றியுறும் என்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. இச்சத்தியாக்கிரக நிகழ்ச்சியைப் பற்றி இவ்வொரு வாரமாக ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகள் வெளிப்போந்து ஒரு காலை இன்ப மூட்டியும் மற்றொரு காலை துன்ப மூட்டியும், இறுதியில் மக்களைப் பெருங்கவலையில் ஆழ்த்திவிட்டன என்பதே எமது கருத்து மக்களுக்குள் பிறப்பினால் உயர்வு, தாழ்வு எவ்வாறெனும் இல்லை என்ற உயரிய சிறந்த உண்மையை உலகினர்க்கு அறிவுறுத்தும் பெரும்பேறு-ஒரு பெண்ணரசிக்கும் வாய்க்கும் என்று யாம் கொண்டிருந்தபேரவா நிறைவுறுங்காலம் நீடிக்கப்பட்டமை காணக் கவற்சியுறுகின்றோம். இத்தகைய பெருமையினை திருவாங்கூர் பெண்ணரசியார் பெறுதற்கில்லாமற்போய் விடுமோ என்றும் அஞ்சுகின்றோம் இது கிடக்க இதுகாறும் வெளிப்போந்த செய்தி களில், சத்தியாக்கிரகிகள் காந்தியின் உடன்படிக்கையைப் புறக்கணித்து வரம்பு மீறி ஒழுகத் தலைப்பட்டுவிட்டனர் என்ற செய்தி பொய் ஆயினமை கண்டுமகிழ்ச்சி உறுகின்றோம்.
இவ்வாண்டின் தொடக்கத்தில், சத்தியாக்கிரகிகளுக்கு ஊக்கமும், உண்மை நெறியும் ஊட்ட காந்தியடிகள் வைக்கம் போந்தார். திருவாங்கூர் பெண்ணரசியையும் இளவரசரையும். நேரில் கண்டு வைக்கம் சத்தியாக்கிரகத்தின் உண்மையையும் அதனை அவர்கள் ஆதரிக்க வேண்டிய கடமையினையும் உள்ளத்தில் பதியும்படி எடுத்துரைத்தனர் வைக்கம் சத்தியாக்கிரகம் தற்காலம் உற்ற நிலைமைக்கு காந்தியடிகள் வைக்கம் போந்ததே ஆகும் எனக் கூறுதல் மிகையாகாது. திருவாங்கூர் அரசாங்கத்தின் போலீ கமிஷனர் பிட் என்பாருடன் காந்தியடிகள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். சத்தியாக்கிரகிகள் முன்னேறாவண்ணம் தடுப்பதற்கென வைக்கப்பட் டிருக்கும் போலீ காவலை அரசினர் எடுத்துவிடவேண்டுமென்பதும், சத்தியாக்கிரகிகள் அரசினர் அனுமதியின்றி முன்னேறுதல் கூடாதென்பதும் தான் அவ்வுடன்படிக்கையின் முடிவுகள். இம்முடிவுகள் இரு கட்சியினரும் ஏற்று அவ்வாறே நாளிதுவரை ஒழுகி வந்தனர்.
வைக்கம் கோவிலைச்சுற்றிலும் உள்ள நான்கு வீதிகளில் கீழ் வீதி ஒன்றினைத் தவிர மற்றை மூன்று வீதிகளிலும் தாழ்ந்த வகுப்பினர் எவ்வித தடையுமின்றிச் செல்லலாமென்று திருவாங்கூர் அரசினர் உத்தரவு செய்திருப்பதாக இதுகாலை யாம் அறிகின்றோம். இச்செய்தியில் யாம் ஒரு சிறிதும் மகிழ்ச்சி உறவில்லை. அது சத்தியாக்கிரகத்தின் வெற்றியுமாகாது. சத்தியாக்கிரகத்தின் உண்மையினை அறியாதாரே இதனை வெற்றியெனக் கொள்வர்.
சத்தியாக்கிரகத்தின் உண்மை யாது? சத்தியாக்கிரகம், உண்மை என்பன ஒரு பொருட் கிளவிகள். சத்தியாக்கிரகம் வெற்றிபெற்றதெனக் கூறின் உண்மை வெற்றி பெற்றதெனப் பொருள். உண்மை எக்காலத்தும் வெற்றி உறும் என்பதில் எட்டுணையும், ஐயமின்று; உண்மைக்குத் தோல்வி என்பது எக்காலத்தும் இல்லை. ஆதலால், சத்தியாக்கிரகத்தில் உண்மையில் ராஜி என்பதே கிடையாது. அரசினர் மூன்று வழிகளில் சத்தியாக்கிரகிகள் செல்லலாமெனக் கூறியது சத்தியாகிரகம் அவர்தம் உள்ளத்தைக் கரையச் செய்து விட்டது என்பதைக் காட்டுகிறதேயன்றிச் சத்தியாக்கிரகம் வெற்றிபெற்றது என்பதை ஒரு சிறிதும், குறிக்கவில்லை என்ற உண்மையை ஒவ்வொரு சத்தியாக்கிரகியும் உளத்தமைத்தல் வேண்டும்.
ஆகவே, உண்மை முழுவெற்றியுறும் வரை சத்தியாக்கிரகிகள் உழைத்தல் கடனாகும். சத்தியாக்கிரகத்தின் ஆற்றலை அறியாது. மயங்கினவர்கள் கண்முன் அதன் ஆற்றலைக் கண்டபின்னரும் எவ்வித மயக்கமும் உறுதல் வேண்டுவதின்று. அரசினர் குழாத்தினர் உளங்கரையைச் செய்த உண்மைப் போர் வைதிகக் கூட்டத்தாரின் உள்ளத்தையும் கரைத்து உண்மையை உணர்ந்து ஒழுகச் செய்யும் என்பதில் ஐயப்பாடில்லை. சத்தியாக்கிரகிகளின் பொறுப்பு முன்னைவிட இதுகாலை பெருகி நிற்கிறதென்றே கூறுவோம். சிறு வெற்றியினைக் கண்டு தலை தடுமாறிப் பேய்க்கூத்தில் வீழ்ந்து மாயாவண்ணம் சத்தியாக்கிரகிகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அன்பு நெறியையும், அறநெறியையும் ஒரு சிறிதும் கைநெகிழவிடாமல் காந்தியடிகளின் ஆணைக்கடங்கி நின்றும், காந்தி-பிட் உடன்படிக்கைக்கு உட்பட்டும் சத்தியாக்கிரகத்தை மிக்க ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் சத்தியாக்கிரகிகள் நடாத்திவரும்படியாகக் கேட்டுக்கொள்ளுகிறோம். உண்மையின் வலிமையை உணராமல் எள்ளி நகையாடி ஒதுங்கி நின்ற பொது மக்களும் தமது குறுகிய நோக்கத்தை அறவே நீக்கிவிட்டுச் சத்தியாக்கிரகி களுக்குத் தம்மாலியன்ற உடல் உதவியும், பொருள் உதவியும் புரிவார்களென எதிர்பார்க்கிறோம்.
- குடிஅரசு தலையங்கம் - 28.06.1925

வைக்கம் சத்தியாக்கிரகம்
திருவாங்கூர் அரசாங்கத்தார் வைக்கம் சத்தியாக்கிரகத்தை விரைவில் முடித்துவிட ஆவலாய் இருப்பதாகத் தெரிகிறது. அதாவது அச்சமதானத்து திவான் ஆன ஸ்ரீமான் ஆர். கிருஷ்ணப்பிள்ளை அவர்களை சமதானத்து மகாராணி அவர்கள் வைக்கம் சத்தியாக்கிரக சம்பந்தமாகத் தமது அபிப்பிராயமென்னவென்று கேட்டிருப்பதாகவும், அதற்குத் திவான் அவர்கள் கீழ்க்கண்ட பதில் பகர்ந்திருப்பதாவும் அறிகிறோம்.
இவ்விவகாரத்திலுள்ள ரோடுகளை ஜாதிமத வித்தியாசமில்லாமல் எல்லாப் பிரஜைகளும் உபயோகப்படுத்திக் கொள்ளும்படி விட்டுவிட வேண்டிய தென்று யான் அபிப்பிராயப்படுகிறேன். அம்மாதிரி செய்வதை சமதான அரசாங்கத்தார் எப்பொழுதுமே எதிர்க்கவில்லை. இந்த உரிமையைச் சிலர் பலாத்காரத்தினால் அடைய முயற்சி செய்தால் கலகம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சியே அரசாங்கத்தார் தடை உத்தரவு போட்டனர். இந்த உரிமையை அவர்களுக்கு கொடுக்கக்கூடாதென்று ஸநாதன இந்துமதம் கூறவில்லை. தாழ்ந்த நிலையிலுள்ள இந்துக்களல்லாத வர்கள் அந்த ரதாக்களின் வழியாக நடக்கச் சம்மதம் கொடுத்திருக்கின்ற பொழுது இந்துமதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த உரிமையைக் கொடுக்க மறுப்பதில் கொஞ்சமும் ஒழுங்கிருப்பதாகக் காணப்படவில்லை. கூடிய விரைவில் ஒரு அரச விளம்பரத்தின் மூலம் இந்த வித்தியாசத்தைப் போக்க வேண்டுவது அவசியமென்று யான் அபிப்பிராயப்படுகிறேன்.
இவ்வண்ணமாக திவான் அவர்கள் அபிப்பிராயம் கொடுத்த பிறகு, கூடிய விரைவில் மகாராணி அவர்களுடைய அனுகூலமான ஸ்ரீமுகம் எதிர் பார்ப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை. ஆனால் இதிலிருந்தே நமது முயற்சிகளை விட்டுவிட வேண்டுமென யாரும் நினைத்தல் கூடாது. திருவாங்கூர் அரசாங்கத்தாரிடமிருந்தே ஒருவேளை அரைகுறையான ஸ்ரீமுகம் வெளியாயினும் ஆகலாம். ஏனெனில் இரண்டு கட்சியாரையும் சமாதானப்படுத்த வேண்டுமென நினைத்து அவர்கள் முயற்சி செய்து கொண்டிருந்ததை யாம் அறிவோம். அம்மாதிரி திருடருக்கும் - திருட்டுக் கொடுத்தவருக்கும் நல்லவர்களாக வேண்டுமென நினைத்து ஏதாவது கொஞ்சம் இடம் வைத்துக் கொண்டு மேற்சொல்லியபடி ஸ்ரீமுகம் வெளியாகுமேயாகில் பூரண வெற்றி பெறும்வரை நமது நிலையினின்றும் தளரக்கூடாது. ஒருவேளை பூரணவெற்றி கிடைத்துவிடினும், அதனுடன் உலகத்தினிடை இம்மாதிரி நிறைந்துள்ள அக்கிரமங்களெல்லாம் ஒழிந்து விட்டனவென்று நினைக்கக் கூடாது. எங்கு எங்கு இவ்விதக் கொடுமைகள் உள்ளனவோ ஆங்காங்குச் சென்று நமது சத்தியாக்கிரகக் கொடியை நாட்டி இக்கொடிய வழக்கத்தை ஒழிக்க அஹிம்சையுடன் பாடுபடுதல் வேண்டுமென்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
- குடி அரசு கட்டுரை, 07.06.1925

வைக்கம் சத்தியாக்கிரக வெற்றிக் கொண்டாட்டம்
ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் உரை
முடிவுரையில், தனக்கும் தமது மனைவிக்கும் செய்த உபச்சாரத் திற்காக நன்றி செலுத்துவதோடு சத்தியாகிரக இயக்கத்தின் ஜெயிப்பைப் பற்றியும், தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள் காலம் வந்து விடவில்லை தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களைச் சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாகிரகத்திற்கும், மகாத்மாவிற்கும் எவ்வளவு சக்தி இருக்கிறதென்பது விளங்குமென்றும். சத்தியாகிரக ஆரம்பத்தில் பிராமணர்கள் கட்சியில் இருந்த அரசாங்கத்தார், இப்போது பிராமணர்களுக்கு விரோதமாகவே தீண்டாதாரென்போரை கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சர்க்காரார் செல்லுவதை நாம் பார்க்கிறபோது நமக்கே சத்தியாகிரகத்தின் தன்மையைப் பற்றி ஆச்சரியப் படத்தக்கதாய் இருக்கிறது.
சத்தியாகிரகத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் பொறுமையாய் அனுப வித்து வந்ததால் இவ்வித சக்தியை இங்கு காண்கிறோம். பலாத்காரத்திலோ, கோபத்திலோ, துவேஷத்திலோ, நாம் இறங்கியிருப்போமேயானால் இச்சக்திகளை நாம் ஒருக்காலும் கண்டிருக்கவே மாட்டோம். சத்தியாகிரகத்தின் உத்தேசம், கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டுமென்பதல்ல. மனிதனுக்கு மனிதன் பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாதென்பதுதான். அந்த தத்துவம் இந்த தெருவில் நடந்ததோடு முடிந்துவிடவில்லை. ஆகையால், தெருவில் நிரூபித்த சுதந்திரத்தை கோவிலுக்குள்ளும் நிரூபிக்க வேண்டியது மனிதர் கடமை. மகாத்மா காந்தியும், மகாராணியாரைக் கண்டு பேசிய காலத்தில் மகாராணியார் மகாத்மாவைப் பார்த்து இப்பொழுது தெருவைத் திறந்து விட்டுவிட்டால் உடனே கோயிலுக்குள் செல்ல பிரயத்தனப்படுவீர்களேயென்று கேட்டார்கள். மகாத்மா அவர்கள் ஆம், இதுதான் என்னுடைய குறியென்றும், ஆனால் கோயிலுக்குள் செல்ல உரிமை வேண்டி ஜனங்கள், போதுமான பொறுமையும், சாந்தமும் அவசியமான தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார்களாவென்று நான் அறியும் வரையில் அக் காரியத்தில் பிரவேசிக்க மாட்டேனென்றும், அதற்கு வேண்டிய காரியங்களை அது வரையில் செய்து கொண்டிருப்பே னென்றும் சொன்னார்.
வைக்கம் சத்தியாகிரகத்திற்கு விரோதியாயிருந்தவர்கள் பிராமணர்களே ஒழிய அரசாங்கத்தார் அல்லவென்பதை அரசாங்கத்தார் நிரூபித்துக் காட்டி விட்டார்கள். மனித உரிமை அடைய அந்நிய மதங்களுக்குப் போவது மிகவும் இழிவான காரியமாகும். அப்படி அவசியமிருந்தாலும் கிருதுவ மதத்திற்காவது, மகமதிய மதத்திற்காவது செல்லலாமேயொழிய ஆரிய சமாஜத்திற்குப் போவது எனக்கு இஷ்டமில்லை. ஏனென்றால், ஆரிய சமாஜத்திற்குப் போவதனால் பொருளில்லாத அர்த்தமற்ற, பூணூல் போட்டுக் கொள்வதோடு பொருளறியாத சந்தியாவந்தனமும் செய்து கொள்ள வேண்டும்.
இப்படி ஒரு காலத்தில் பூணூல் போட்டுக் கொண்டு சந்தியாவந்தனம் பண்ணினவர்கள்தான் இன்றையத் தினம் நமது சுதந்திரத்திற்கும், சீர்திருத்தத்திற்கும் விரோதிகளாயிருக்கின்றார்கள். அந்த நிலைமைக்கு நீங்களும் வரக்கூடாதென்று நினைப்பீர்களேயானால் கண்டிப்பாய் அந்தக் கூட்டத்தில் சேராதீர்கள்.
(வைக்கத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் தந்தை பெரியார்
29.11.25 ஆம் தேதி ஆற்றிய தலைமைச் சொற்பொழிவு) குடிஅரசு - 06.12.1925


வைக்கம் போராட்டம்-சிறையில் பெரியார்!

“With fetters on his legs, a Convict’s cap on his head. A loin cloth reaching down his knee and a wooden number plate around his neck, E.V. Ramaswamy is working with murderers and dacoits. He is doing double the work that is generally done by a convict. This sacrifice of a caste Hindu for the freedom of the untouchables of kerala gave us new life. The noble mission of this great movement has prompted him to sacrifice his all.
Is there not anybody here with the maturity, magnanimity, experience, enthusiasm and patriotism that E.V.R. has? Are they not ashamed of themselves
   when they see this great leader who has come to suffer for the sake of the people of this state? is it not time for the elderly and experienced people of Kerala to rise from their easy chairs ”
இதன் தமிழாக்கம்:

கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய் முழங்காலுக் குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை. இவற்றோடு ஈ.வெ. ராமசாமி கொலைகாரர்களோடும், கொள்ளைக் காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கின்றார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அதுபோல் இருமடங்கு வேலை செய்கிறார்.
ஒரு ஜாதி இந்து என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்திலுள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்கு புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார். ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப்பற்று, உற்சாகம், அனுபவம் பெருந்தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன் னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காணமுடியுமா? இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நீக்கவேண்டும் என்பதற்காகத் தாம் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை வேண்டுமானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே _ அதைப் பார்த்து இந்த மாநில மக்களாக இருக்கிற யாருக்குமே வெட்க மேற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவ மிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கியெறிந்துவிட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வர வேண்டாமா?
(கே.பி.கேசவ மேனன்-மலையாளத்தில் எழுதிய தன் வரலாறு-பக்கம் 108) 

                           வைக்கம்
வைக்கம் நிலைமையைப் பற்றி முரண்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கோவில் வீதிகளில் எல்லாச் ஜாதியாரும் தடையின்றிச் செல்லலாமென்று மகாராணியார் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக முதலில் செய்தி கிடைத்தது. ஆனால் அதற்குள் மகிழ்ந்து விடுவதற்கிடமில்லை யென்றும், இன்னும் பேச்சளவில்தான் இருந்து வருகிறதென்றும், மூன்று வீதிகளில் தீண்டாதார் செல்வதற்கு மட்டுமே கட்டளை பிறப்பிக்க சமஸ்தான அரசாங்கத்தார் செய்திருக்கிறார்களென்றும் கடைசியாக வைக்கத்திலிருந்து வந்த செய்தியால் தெரியவருகின்றன. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் மற்ற சமஸ்தானங்களுக்கும் வழிகாட்டியாயிருக்கும் பெருமை திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு கிடைக்காமலே போய் விடுமோவென அய்யுறுகிறோம்.   சத்தியாக் கிரஹிகளின் கடமை என்னவோ தெளிவாய் இருக்கிறது. பூரண வெற்றி கிடைக்கும் வரையில் அவர்கள் சத்தியத்தையும் அஹிம்சையையும் உறுதுணைகளாகக் கொண்டு போராட்டத்தை நடத்திவர வேண்டும்.
- குடிஅரசு செய்தி -21.06.1925