Sunday, November 27, 2011

பகுத்தறிவை வளர்க்கப் படிப்பகங்கள் தேவை


இன்றைய தினம் நடை பெற்ற பாரம் தூக்குதல் மிகவும் பிரமாதமாக நடந் தது. இதை எல்லாம் சாதாரணமாக எல்லோரும் காண்பிக்க முடியாது. இதற்கு ரொம்பவும் பழக்கம் இருந் தால்தான் ஒரு சிலருக்கு முடியும். 120 பவுண்டு முதல் 246 பவுண்டு வரை தூக்கிக் காண்பித்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இதைக் கண்டு பகுத்தறிவு வாதிகள்தான் மிகவும் ஆச்சரியப்பட முடியும். ஆனால், புராண, இதிகாசங்களிலே, வைதீகத்திலே முழுகி இருக்கிற மக்களுக்கு இது ஆச்சரியமாகத் தோன்றாது. காரணமென்னவென்றால் அனுமான் சஞ்சீவி மலையைத் தூக்கியது அவர்களுக்குத் தெரியும். இன்னும் எத்தனையோ வகையான செய்கைகளை யெல்லாம் அவர்கள் புராணங்களில் கண்டிருப்பார்கள். அவற்றை அப்படியே நம்பக் கூடியவர்களுமாவார்கள். ஆனால், நாம் அதையெல்லாம் நம் பகுத்தறிவுக்குத் தப்பெனப்படுவதால் நம்பாமல் இருக்கிறோம். ஆகவே, இது நம் போன்றவர்களுக்கு மிகவும் ஆச்சரிய மானதுதான். 246 பவுண்டு என்றால் ஏறக்குறைய 100 கிலோவுக்கு குறையாத பாரம். அதாவது இரண்டு மனிதர்களைப் பொறுத்த பாரம். ஆகவே, இந்த பெரும் பாரத்தை ஒரு மனிதன் சர்வ சாதாரணமாகத் தூக்கிக் காண்பிப்பதென்றால் அது மிகவும் ஆச்சரியம்தான். இந்த பிரமாண்டமான பளுவைத் தூக்குவதற்கு இசையும்படியாக தங்களது உடலை வலுப் படுத்திப் பழக்கி வைத்திருக்கிறார்கள்.
மேலும், நமது நாட்டிலே இம்மாதிரியான காரியங்களிலே ஈடுபடுகிற மக்கள் மிகவும் குறைவு. அப்படியே ஒரு சிலர் ஈடுபட்டிருந்தாலும்கூட மற்றவர்கள் ஆதரவு கொடுப்பது கிடையாது. ஆனால், மேல்நாடு களிலே இந்த முறையை மிகவும் கூடுதலாகக் கையாண்டு வருகிறார்கள். இதை எவ்வளவோ சாதனையாகப் பழகி நான் மேல் நாடு சென்றிருந்தபோது ஒரு கூட்டத்திலே பலவிதமான வேடிக்கை செய்து காட்டினார்கள். அவற்றில் எல்லாம் இந்த மாதிரியான வேடிக்கைதான் முதலிடம் பெற்றது. தனது உடலை பலவிதமாக வளையும்படியாக பழக்கி வைத்திருக்கிறார்கள். உடலின் எந்த அவயவத்தையும் தன்னால் அசைத்துக் காட்ட முடியும். அந்த மாதிரியான வேலைகளில் அவர்கள் ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம் நாட்டிலே அதிகமாக அதைப் பற்றிய கவலை கிடையாது.
ஆகவே, இந்த மாதிரியான வேலைகளைச் செய்வ தனால் அவர்களது உடல் மிகவும் வலிவு பெறு கிறது. அதனால் அவர்களுக்கு ஒரு சிறு நோய் கூட வருவது கிடையாது. மற்றும் மனோதிடமும் ஏற்பட ஏதுவாகும். மக் களுக்கு மனவலிவு மிகவும் அவசியம். இந்த மாதிரியான காரியங்களினாலும், பழக்க வழக்கங்களினாலுமே மனிதனுக்கு மனோ திடம் ஏற்பட ஏதுவாகிறது. மனவலிவு குறைவாக உள்ள மனிதர்கள் யாரும் ஒழுங்காக நடந்து கொள்வது மிகவும் கஷ்டமான காரியம். ஆனால், மனவலிவு எவனொருவனுக்கு இருக்கிறதோ, அவன் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கிறான். ஆகவே, ஆங்கிலத்திலே கூட சொல்லு வார்கள் வீக்னஸ் என்று. அதாவது, உடல் பலம் இன்றி இருக்கிற ஒருவனைப் பார்த்தும் வீக்னஸ் என்றுதான் கூறுவார்கள். அதே மாதிரி கெட்ட செய்கைகளைக் கைக்கொள்ளு கிறவனைப் பார்த்தும் வீக்னஸ் உள்ளவன் என்று தான் கூறுவார்கள். ஒருவன் திருடினால் கூட அவனைப் பார்த்து வீக்னஸ் உள்ளவன், இல்லாமலிருந்தால் அவன் அப்படி செய்திருக்கமாட்டான் என்று தான் கூறுவார்கள்.
ஆகவே, மனிதனுக்கு மனவலிவு எவ்வளவு அவசியமோ, அதைப் போல் உடல் வலிவும் மிகவும் அவசியம்.
இவற்றை எல்லாம் நாம் பழகிக் கொள்கிற முறையிலே இயற்கையாக வந்து சேருகிறதுதான். நினைத்ததை எல்லாம் செய்ய ஆசைப்படுகிறவர்கள், நினைத்ததை எல்லாம் எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறவர்கள், சில காரியங்களிலே தவறி விடுகிறவர்கள் பெரும் பணக் காரர்கள் முதல் ஏழைகள் வரை சர்வசாதாரணமாக நடக் கிறது. இதன் காரணமென்ன வென்றால் தங்களுடை யதைச் சரியாகப் பக்குவப்படுத்தி வலிவுபெற வைக்காத தனால்தான் இந்தவிதமான சம்பவங்கள் ஏற்படுகின்றன. நம் நாட்டிலே மக்களிடையே தப்புத்தவறான கதைகளையும், புராணங்களையும் கூறி மக்களின் மனதை வலிவு பெறாமல் செய்து விட்டனர். ஆகவே, இதெல்லாம்தான் பழகி கொள் ளும் பழக்கத்தின்மூலம் ஏற்பட வேண்டியவை. ஆகவே, இந்த மாதிரியான மனோதிடமும், உடல் வலிமையும் உள்ளவர்களை நாம் மிகவும் பாராட்ட வேண்டியதுதான்.
மக்கள் எல்லோரும் படித்திருப்பார்களானால் மிகவும் அறிவு விருத்தி ஏற்பட முடியும். ஆனால், இன்றைய தினம் அரசாங்கத்தாராலே அளிக்கப்படும் கல்வியானது மிகவும் மோசமான முறையிலே தான் இருந்து வருகிறது. ஒரு சில காரியங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்யவே இன்றைய கல்வி முறை பயன்படுகிறது.
மேல்நாடுகளில் விஞ்ஞானத் துறைகளிலேயும் மற்றும் பூகோள முறையிலேயும் கல்வி விருத்தி அடைந்து கொண்டு வருகிறது. அவர்கள் புதுப்புது இயந்திரங்களையும், புதுப் புது சாதனங்களையும் செய்து காண்பிக்கும் போது நமது நாட்டுக் கல்வி முறை, படித்து மார்க் எடுப்பதற்கே அன்றி அறிவிற்கும் அதற்கும் சம்பந்தமில்லாமல்தான் அமைக்கப் பட்டிருக்கிறது.
நமது மக்களுக்கு அந்த மாதிரியான விஞ்ஞான அறிவு ஒன்றும் இல்லை என்று நான் கூறவில்லை. நமது பெரிய நிபுணர்கள் பொதுவாகக் கூறினால், உலகத்தில் எந்த பாகத்திலும் இருக்கிறார்கள் எனக் கூறலாம். ஆனால், இவர்களுக்கு 100-க்கு அய்ந்து பேருக்குக் கூட பகுத்தறிவு இருக்கிறதாக மட்டும் காண முடியாது. பொதுவான எல்லோருக்கும் தெரியும் முறையிலே கூறுவதாக இருந்தால், கிரகணம் வரும் கதையை எடுத்துக் கொள்வோம்.
விஞ்ஞானத்திலேயும், படிப்பிலேயும் உயர்வு பெற்ற உபாத்தியாயருக்குக் கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்று நன்றாகத் தெரியும். தனது பூகோள பாட சமயத்திலும் மாணவர் களுக்கும், குளோப்பை வைத்துக் கொண்டு, பூமி, சந்திரன், சூரியன் இவற்றின் சுற்றுதலால் ஏற்படுகிறதுதான் கிரகணம் என்று நன்றாகக் கூறுவார். ஆனால், அதே உபாத்தியாயர் புராணக் கதையை நம்பிக் கொண்டு தனது வீட்டில், கிரகணம் ஏற்படுகிற அன்றைய தினத்தில், உணவுகளில் அறுகம்புல்லைப் போடுவதும், குளித்துக் கொண்டு வருவதும், கர்ப்பப் பெண்களை வெளியே போகாமல் தடை செய்து வீட்டினுள் அடைத்து வைப்பதும் வழக்கமாக இருக்கிறது. காரணம், ராகு, கேது என்ற பாம்புகள் சூரியனையும், சந்திரனையும் கடிப்ப தால்தான் இந்த இரு கிரகணங்களும் ஏற்படுவதாகக் கூறும் கதையை நம்பிக் கொண்டு, அந்த விஷம் தனது உணவுகளையும், மற்ற காரியங்களையும் பாதிக்கக் கூடுமென நினைத்துக் கொண்டு அறுகம்புல்லைப் போடுவதும், குளித்து வருவதுமாக இருக்கின்றனர். ஆகவே, இவர்கள் எவ்வளவு தூரம் அறிவு பெற்றிருந்தும், படித்து இருந்தும், பட்டங்கள் பெற்றிருந்தும் பயன் இல்லை. பகுத்தறிவு என்பது சிறிதுகூட இல்லாத காரணத் தினால்தான் இது போன்ற பழைய கொள்கைகளைக் கூட நம்ப வேண்டியது ஏற்படுகிறது. மேலும் இதற்காகப் பள்ளிக்கூடங்களில் சென்று படிக்கும் மாணவர்களும்கூட தங்களது பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய் விடுகிறது.
அதே மாதிரி டாக்டராக இருப்பவர்கள் என்ன என்ன நோய் எப்படி எப்படி வருகிறது என்று நன்றாகத் தெரிந்தும்கூட சில காரியங்களில் தங்களது பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொள்வது கிடையாது. தங்களது உயர்ந்த படிப்பினாலும் பயனடையாமல் போகிறார்கள். உதாரணமாக, பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒரு தடவை வீட்டுக்கு விலக்கு ஏற்படுவது சகஜமாக நடக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது என்பது எல்லாம் படித்த டாக்டர்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் கூட தன் வீட்டுப் பெண்களுக்கு வீட்டுக்கு விலக்கு ஏற்பட்டால் அவர்களைத் தொடாதே எனவும் வீட்டை விட்டு ஒரு மூலையிலே ஒதுக்கி வைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. அதிலும் அவர்கள் அருகிலே நடந்து வந்தால் எதிரே ஒரு ஆண் மகன் வந்து விட்டால், அவனுக்கு வருகிற கோபம் சொல்லி முடியாது. இதைவிடக் கடின கொடூரமான செய்கை, சங்கராச் சாரியார், மடாதிபதிகள் போன்றவர்களின் நேருக்கு இந்த மாதிரியான பெண்கள் 10 மைல் தூரத்திற்கு அப்பால் கூட வர யோக்கியதை அற்றவர்களாக கருதப்படுகிறார்கள். ஆகவே, இவை எல்லாம் புராணக் கதைகளால் மக்களை மதி கெட்டு குட்டிச் சுவராய், காட்டு மிராண்டிகளாய்ப் போகும்படி செய்து வைத்து இருக்கிறது. ஆகையால், அவன் எவ்வளவு தூரம் படித்தும் பட்டம் பெற்று டாக்டராக வந்திருந்தும்கூட பயன் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. ஆகவே, மனிதன் எத்தனைத் தூரம் படித்து இருப்பினும் கூட அவனுக்குப் பகுத்தறிவு மிகவும் அவசியம்.
ஆகவே மக்களுக்கு வ.உ.சி. படிப்பகம் போன்ற படிப்பகங்கள் மிகவும் தேவை. அதன் மூலமாகத் தான் அறிவை வளரச் செய்து பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொள்ள வசதி கிடைக்கும். மென்மேலும் பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வசதியும் ஏற்படும். மேலும் தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தினுடைய கொள் கைகளை விளக்கி, அதனின்றும் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டிய விதங்களையும் எடுத்துக் கூறினார்கள்.
(27.10.1951 அன்று இராங்கியம் வ.உ.சி. உடற்பயிற்சி மன்ற ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய தலைமை உரை விடுதலை 1.11.1951.)

Sunday, November 20, 2011

பொது உடைமையா, பொது உரிமையா? எது முதலில் வேண்டும்?


இன்று நம்நாட்டில் காங்கிரஸ் பிரசாரம் அடக்கப்பட்டதும், பல காங்கிரஸ் வாலிபர் கள் பொது உடைமைப் போர்வையைப் போர்த்திக் கொண்டு காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்தப் பொது உடைமை வேடக்காரர் சர்க்காருக்குத் தாங்கள் யுத்த ஆதரவுப் பிரசாரம் செய்வதாகச் சொல்லி வாக்குக் கொடுத்திருக்கிறபடியால், சர்க்கார் மற்றப் பொது உடைமைப் பிரசாரர்களைப் போல் இவர்களைக் கருதாமல் இருக் கிறார்கள். ஆனால் இந்தக் காங்கிரஸ் வாலிபர்கள் பொது உடைமைக்காரர் என்று பெயர் வைத்துக்கொண்டு, மேடைகளில் உலக சண்டைக்கு ஆக சர்க்காருக்கு உதவி செய்ய வேண்டும் என்று இரண் டொரு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு காங்கிரஸையும், காந்தியாரையும் பற்றிப் புகழ்ந்துவிட்டு கடைசியாக ஜஸ்டிஸ், சுயமரியாதைக் கட்சிகளை வைவதையே முக்கிய வேலையாய்க் கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். சில இடங்களில் பொது உடைமைக்காரர்கள் பிரசாரங் களில் ஜஸ்டிஸ், சுயமரியாதைக் கட்சி களைப் பற்றிக் குறை கூறிப் பேசியதைக் கூட்டத்திலிருந்தவர்கள் கண்டித்ததோடு, பேசிய பேச்சுக்களையும் வாபீசு வாங்கிக் கொள்ளும்படி செய்திருப்பதாகவும் தெரி கிறது. அப்படி இருந்தும், பொதுஉடைமைப் பிரசாரக்காரர்கள் தட்டிப் பேச ஆளில்லாத கூட்டங்களில் தங்கள் இஷ்டப்படி பேசி ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றித் தாறுமாறாகப் பேசி இருப்பதாகவும் தெரிகிறது. தமிழ் நாட்டில் பொது உடைமைப் பிரசாரக் காரர்கள் பெரிதும் பார்ப்பனர்களாய் இருப்பதால் நாம் அவர்களிடம் இம்மாதிரி நடத்தையை விட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? காங்கிரஸ் என்றாலும், பொது உடைமை என்றாலும், இந்து மதம் என்றாலும், வேறு எந்தப் பொதுநலப் பேரை வைத்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் செய்யும் பிரசாரம் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதைக் கட்சியையும் பற்றி விஷமப் பிரசாரம் செய்வதல்லாமல், அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?
லண்டன் பார்லிமெண்டில் சென்ற மாதம் ஒரு மெம்பர் இந்திய மந்திரியை ஒரு கேள்வி அதாவது: உலகத்திலேயே எல்லா மக்களையும்விட தங்களை உயர்ந்த பிறவிகள் என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களை விட்டு விலகி தனித்து இருந்து கொண்டும் பாடுபடாமல் இராஜ போகம் அனுபவிக்கும் இந்தியப் பார்ப் பனர்கள் இந்த நாட்டுப் பொது உடைமைக் காரர்களுடன் சேர்ந்து இருக்கிறார்களே, இதன் அர்த்தமென்ன? என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு இந்திய மந்திரி சிரித்தாராம்.
அது போல் பார்ப்பனர்கள் பாடுபடா மலும், எவ்விதக் குறைபாடில்லாமலும் வாழ்ந்து கொண்டும் மற்ற மக்களுக்கும் மேலானவர்களாக இருந்து கொண்டும் பொது உடைமைப் பிரசாரத்தில் காங்கி ரசையும் பார்ப்பனியத்தையும் கண்டிக் காமல், அவற்றைக் கண்டிக் கும் ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதைக் கட்சியையும் ஏன் குறை கூறுகிறார்கள் என்றால் இந்த இரண்டு கட்சிகளும் வருணாசிரமக் காங்கிரசுக்கும் பார்ப்பனி யத்திற்கும் விரோதமாக இருப்பதால் தானே ஒழிய வேறில்லை.
பார்ப்பனர்களுக்கு நன் றாய் தெரியும். என்னவென் றால் வருணாசிரமத்தையும், பார்ப்பனியத்தையும் பத்திரப் படுத்திவிட்டு எப்படிப்பட்ட பொது உடை மையை ஏற்படுத்திவிட்டாலும் திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பனரிடம் தானாகவே வந்து விடும் என்றும், ஜாதி இருக்கிற வரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும், பார்ப்பனருக்கு ஒரு கடு களவு மாறுதலும் ஏற்படாமல் அவர்கள் வாழ்வு முன் போலவே நடைபெறுமென்றும் தைரியம் கொள்ளத் தெரியும்.
ஆதலால், பார்ப்பனர் பேசும் பொது வுடைமை, கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளை யாருக்கு உடைப்பதால் அவர்களுக்கு நட்டம் ஒன்றும் இல்லை என்பதோடு, உடைபட்ட தேங்காயும் அவர்களுக்கே போய்தான் சேரும். அத னால்தான் பார்ப்பனர்களுக்குப் பொது வுடைமைப் பிரசாரத்தில் அவ்வளவு உற்சாக மேற்படக் காரணமாகும்.
நம் தொழிலாளி மக்களும், ஏழை மக்களும், பொறுப்பற்ற வாலிபர்களும், யோசனை அற்றவர்களாதலால் இதில் சுலபத்தில் ஏமாந்து மயங்கி விடுகிறார்கள்.
பொதுவுடைமை வேறு பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும், பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.
இந்நாட்டில் பார்ப்பனியத்தால், ஜாதியால் கீழ்ப்படுத்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை இருந்தாலும், சம உடைமை (அனுபவம்) இல்லை என்பது குருடனுக்கும் தெரிந்த சங்கதியாகும். அதனாலேயே அவர்கள் உடைமை கரைந்துகொண்டே போகிறதுடன் உடைமைக்கு ஏற்ற அனுபவமும் இல்லாமல் இருக்கிறார்கள்.
உதாரணமாக ராஜா சர். அண்ணாமலை செட்டியார் கோடீஸ்வரர், சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் பல லட்சாதிபதி. இருவரும் பெரும் தனிவுடைமைக்காரர்கள். இவர்களுக்கு ஒரு சாதாரண பிச்சைக் காரப் பார்ப்பானுக்கு இருக்கும் பொது உரிமை இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். ஆனால் தனி உரிமை உள்ள ஒரு கீழ்த்தர பிச் சைக்காரப் பார்ப்பானுக்கு உடைமையே அடியோடு இல்லாவிட்டாலும் அவனு டைய போக போக்கியம் குறைபடுவதே இல்லை. அன்றியும் பாடுபடாமல், கை முதல் இல்லாமல் தனக்குள்ள தனி உரிமை காரணமாகவே தன் மகனை அய்.சி.எஸ். படிக்க வைத்து ஜில்லா கலெக்டர் ஜில்லா ஜட்ஜ், ஏன் அய்கோர்ட் ஜட்ஜாகவும் சங் கராச்சாரி, ஜீயர் ஆகவும் ஆக்க முடிகிறது.
இந்த நிலையில் தனி உரிமையை முதலில் ஒழித்து விட்டோமேயா னால் தனி உடைமையை மாற்ற அதிகப் பாடுபடா மலே இந்த நாட்டில் பொதுவுடைமை ஏற்பட வசதி உண்டாகும். உண்மையான பொதுவுடைமையும் நிலைத்து நிற்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஜாதி காரணமாகத்தான் பலர் மேன் மக்களாய், பணக்காரர்களாய் இருக்கிறார் கள்; இருக்கவும் முடிகிறது. ஜாதி காரண மாகத்தான் எல்லோரும் கீழ் மக்களாய் ஏழைகளாக இருக்கிறார்கள்; இருக்கவும் வேண்டி இருக்கிறது. இது இன்றைய பிரத்தியட்ச காட்சியாகும்.
ஆங்கிலத்தில் கேஸ்ட், கிளாஸ் (ஊயளவந, ஊடயளள) என்று இரண்டு வார்த்தைகள் உண்டு. அதாவது தமிழில் ஜாதி - வகுப்பு என்று சொல்வதாகும். ஜாதி பிறப்பினால் உள்ளது; வகுப்பு தொழில் அல்லது தன்மையினால் ஏற்படுவது. தொழிலும் தன்மையும் யாருக்கும் எதுவும் ஏற்படலாம். ஜாதி நிலை, அந்த ஜாதியில் பிறந்த வனுக்குத் தான் உண்டு; பிறக்காத வனுக்குக் கிடைக்கவே கிடைக்காது. மேல் நாட்டில் ஜாதி (ஊயளவந) இல்லாததால், அங்கு பொது உடைமைக்கு முதலில் வகுப்புச் சண்டை (ஊடயளள கபைவ) துவக்க வேண்டியதாயிற்று. இங்கு ஜாதி (ஊயளவந) இருப்பதால் பொது உடைமைக்கு முதலில் ஜாதிச் சண்டை (ஊயளவந கபைவ) துவக்க வேண்டியதாகும். பார்ப்பானும், பார்ப்பன சம்பந்தமும், பார்ப்பனிய உணர்ச்சியும் உள்ள மக்கள் பொது உடைமை வேஷம் போடுவதால் ஜாதி சங்கதியை மூடிவிட்டு ஆகாத காரியமான - ஆனாலும் தங்களுக்குக் கேடில்லாததான வகுப்பு (ஊடயளள) உணர்ச்சியைப் பற்றிப் பேசி ஜாதியை ஒழிக்கப் பாடுபடும் கட்சிகளோடு ஏழைகளை மோத விடுகிறார்கள். ஜாதியை ஒழிக்கச் செய்யப்படும் முயற்சியையும் அழிக்கப் பார்க்கிறார்கள். பார்ப்பனர் களுக்கும் மற்றும் மேல் ஜாதிக்காரர் களுக்கும் இருக்கும் உயர்வை முதலில் ஒழித்தாக வேண்டும். இதிலேயே அரை பாகம் பொது உடைமை நமக்கு ஏற்பட்டு விடும். அதாவது ஜாதியினால் அனுபவிக்கும் ஏழ்மைத் தன்மையும் ஜாதியி னால் சுரண்டப்படுகிறவர்களாக இருக்கும் கொடுமையும் நம் பெரும்பான்மை மக்களி டமிருந்து மறைந்து விடும்.
பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்துகொண்டே இருக்கும் என்பது பொதுவுடைமைத் தத்துவத்துக் குப் பாலபாடம் என்பதை மக்கள் உணரவேண்டும். இன்றுள்ள கோவில், குளம், உற்சவம், சடங்கு, பண்டிகை, சுபகாரியம், அசுப காரியம் என்பவை எல்லாம் பிறவி காரணமாகவே சிலருக்கு அதிக உரிமை இருப்பதாலும் சிலர் சுரண்டுபவர்களாய் இருப்பதாலும் ஏற்பட்டு இருந்து வருபவைகளே ஒழிய, அவர்களுக் காகவே இருந்து வருபவைகளே ஒழிய, இவற்றிற்கு வேறு காரணம் சுரண்டப்படும் ஜாதியாரிடத்தில் உள்ள ஜாதி இழிவை, மடமையை ஒழிக்க முயற்சிப்பார்களா? அல்லது ஒழியத்தான் சம்மதிப்பார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.
திராவிட நாடு பிரிந்து கிடைத்து, சுரண்டும் ஜாதி ஒழிக்கப்பட்டு, சம உரிமை எல்லோருக்கும் ஏற்படும்படியான உணர்ச்சி வந்துவிட்டால், பிறகு நாம் சுலபத்தில் எதுவும் செய்து கொள்ள முடியும். அந்தக் காரியத்திற்கு ஆகத்தான் ஜஸ்டிஸ், சுயமரியாதைக் கட்சிகள் முயலுகின்றன. இந்தக் கட்சிகளில் இன்று மேல் ஜாதி யானுக்கோ அல்லது ஜாதிப் பேய், பார்ப்பனியப் பேய் பிடித்த பெரிய மனிதர் கள் என்பவர்களுக்கோ எவ்வித அதிகப் படியான செல்வாக்கோ, ஆதிக்கமோ இல்லை என்பதையும், இவ்விரண்டு கட்சி களும் ஜாதியிலேயே தொழிலாளர்களாக வும் உண்மைத் தொழிலாளர்களாகவும் ஏழைக் கூலி மக்களாகவும் உள்ள பெரும் பான்மையான மக்களுடைய கட்சி என்ப தாக பாமர மக்கள் உணர வேண்டுமாய் வேண்டுகிறோம். ஆகவே நம் பாமர மக்கள் இக்கட்சிகள் தோல்வியுறும் படியாகவோ தங்கள் கையிலிருந்து போய்விடும்படியாகவோ அல்லது எதிரிகள் விஷமப் பிரசாரத்தால் அழியும்படியாகவோ விட்டுவிடுவார்களேயானால் பிறகு ஜாதியில், கல்வி யில், தொழிலில், செல்வத்தில் கீழ்நிலை யில் இருக்கும் சுயமரியாதையோடு வாழ்வதற்கு இடமில்லாத மக்களுக்கு விமோசனமே இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 25.03.1944

Sunday, November 13, 2011

நம் திருமணமுறை எது?


மணமக்களே! தாய்மார்களே!! தோழர்களே!!!
இத்திருமணத்திற்கு நான் வர வேண்டும் என்று 2 மாதமாக தோழர் ஆதி நாராயணன் விரும்பினார். நான் சென்ற வாரம் முழுவதும் தஞ்சை ஜில்லாவில் சுற்றுப் பிரயாணம் செய்த அலுப்பாலும், சிறிது காய்ச்சல் இருந்ததாலும் வாராமல் நின்று விடலாம் என்று கருதினேன். ஆனால் சேலம் மாநாட்டின் தீர்மானத்தின் படி இராமநாதபுரம் ஜில்லாவின் விகிதமான குறைந்த அளவு 1000 மெம்பர்கூட திராவிட கழகத்திற்கு அதாவது ஜஸ்டிஸ் கட்சிக்கு சேர்க்கப்படாமல் இருப்பதால் இதைப்பற்றி கவனித்துப்போக இதை சந்தர்ப்பமாகக் கொண்டு இவ்வளவு அசவுகரியத்தில் இங்கு வந்தேன்.
நீங்கள் அது தெரிந்து நான் இங்கு வந்ததுமே 216 அங்கத்தினர்கள் இரசீதும், இதற்கு சந்தா ரூ. 27-4-0 கொடுத்து இந்த ஜில்லாவிற்கு கோட்டா சேர்க்கப்பட வேண்டிய (விகிதம்) 1000க்கும் மேலாகவே ஆக்கப்பட்டு வெளியிடும்படியாக செய்து விட்டதால், என்னுடைய சுற்றுப் பிரயாண அலுப்பும், காய்ச்சலும், பலவீனமும் எங் கேயோ போய்விட்டது. அதற்காக உங் களுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால் இவ்வளவோடு நின்றுவிடாமல் இதை ஜில்லாவுக்கு 5000 மெம்பர்களாவது சேர்க்கப்பட வேண்டும். செட்டி நாட்டிலும் விருதுநகரிலும் தீவிரமாக அங்கத்தினர் சேர்க்கப்படுவது கேட்டு நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
மற்றும், நாம் எந்த தேர்தலில் வெற்றி பெற நினைத்தாலும், ஏன்? அபேட்சகராய் நிற்க நினைப்பதானாலும் அத்தொகுதி ஓட்டர்கள் எல்லோரும் அங்கத்தினர் களாகச் சேர்க்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதுதான் நமது கட்சியின் உண்மையான பலத்திற்கு ஆதாரமாகும். மற்றபடி பொது உடைமையும், போலி சுயராஜ்ஜியத்தையும், மதமூட நம்பிக்கை யையும் பாமர மக்களிடம் சொல்லி ஏமாற்றி ஓட்டு வாங்குவதோ அல்லது சர்க்காரைக் கெஞ்சி பதவி பெறுவதோ இனி ஆபத் தாகவும், தற்கொலையாகவும், பயனற்ற தாகவும், பரிகசிக்கத்தக்கதாகவும்தான் முடியும். அன்றியும் அதனால் சில தனிப்பட்டவர்கள் சுயநலம் அடையலாமே ஒழிய, ஓட்டுக் கொடுத்த ஓட்டர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது, ஆதலால் கூடு மானவரை வயது வந்தவர்களையெல்லாம் அங்கத்தினர்கள் ஆக்க முயற்சி செய் யுங்கள்.
திருமணம்
இத்திருமணத்தில் நான் என்ன புதிதாகப் பேசப் போகிறேன். இந்த முறை திருமணம் இப்போது நாட்டில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. அதிலும் இந்த நாடார் சமுதாயத்தில் இதுவே முறையும் உரிமையுமாக ஆகிவிட்டது. ஆதலால் இந்தத் திருமண முறையைப் பற்றி என்ன பேசுவது என்பது தோன்ற வில்லை. பொதுவாகவே திருமணம் என்ப தற்கு எந்த முறை தகுதியானது என்று சொல்லுவதற்கு ஒரு முறையுமே கிடை யாது. ஏதோ பழக்க வழக்கம் பெரியோர் நடத்திய என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது! அதிலும் திராவிடர் களாகிய நமக்கு எந்தமுறை இருந்தது, எது சரி என்று எடுத்துக்காட்ட ஒன்றுமே யில்லை. புலவர்கள் ஏதாவது பிதற்றலாம், ஆனால் அது அவர்களுக்கே புரியாத தாகத்தான் இருக்கும்.
திருமணத்தின் அவசியம்
இந்த உலகத்தில் சொத்தைப் பற்றியும், மேல் உலகம் என்பதில் மோட்சம் என்பதைப் பற்றியும் லட்சியம் இல்லாவிட்டால் திருமணம் என்பதாக, வாழ்க்கை ஒப்பந்தம் என்பதாகக்கூட எதுவும் தேவையில்லை. நாம் தேடிய சொத்துக்கு நாம் பெற்ற பிள்ளை இருக்க வேண்டும் என்பதே திருமணத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்கும் அந்தந்த சமுதாயப்படி சொத்தை அனுபவிக்க சிலருக்கு ஆண் பிள்ளை வேண்டும், சிலருக்கு பெண்பிள்ளை வேண்டும். தேவதாசிகளும், மருமக்கட் தாயம் உள்ளவர்களும், தங்கள் சொத் துக்குப் பின் சந்ததியாக உரிமைக்கு பெண் குழந்தைகள் பெறவும், இல்லாவிட்டால் பெண்குழந்தையை தத்துக்கு எடுக்கவும் ஆசைப்படுகிறார்கள்; மற்றவர்கள் நம் போன்றவர்கள் ஆண் குழந்தை பெறவும், பிறக்காவிட்டால் ஆண்குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்ளவும் செய்கிறோம். இதற்காகவேதான், திருமணம் பெரிதும் சடங்காக, ஒப்பந்தமாக, பதிவாக சட்டத் திற்குள் அடங்கியதாகச் செய்ய வேண்டி யிருக்கிறது. இந்த நிலை மாறிவிட்டால் திருமணம் என்கின்ற வார்த்தையே மறைந்துபோகும்.
அதனால்தான் நான் இந்த முறைகூட முடிந்த முடிவல்ல என்று அடிக்கடி சொல்லி வருகிறேன். இனி 40, 50 வருஷங்கழிந்த பின்பு  அதாவது இந்த சொத்து முறைகள் மாறி பொது உடைமைமுறை வந்து தாண்டவமாடும்போது இந்த முறைகூட இருக்காது என்பதோடு இதை ஒரு மூட நம்பிக்கை; காட்டுமிராண்டிக் காலமுறை என்று சொல்ல வேண்டி வரும் என்ப தோடல்லாமல் இன்று உங்களில் பலரால் புரட்சிக்காரன் என்று கூறப்படுகிற என்னை ஒரு மூட நம்பிக்கைக்காரனான வைதிகப்பிடுங்கல் ராமசாமி என்று ஒருவன் இருந்தான் என்று என்னை உங்கள்  பிள்ளைகள் பேரன்மார்கள் சொல்லும் படியான  நிலைகூட வந்துவிடும் என்று நான் சொல்லுவதுண்டு.
நம் திருமண முறை ஏது?
ஆகையால் திருமணத்திற்கு ஒரு கட்டுப்பாடுதான் வேண்டியிருக்கிறதே ஒழிய, முறை ஒன்றும் இன்று தேவை யில்லை இங்கு கட்டுப்பாடே வேண்டாத காலம் வருமென்றால் முறை வேண்டிய காலம் எதற்காக வேண்டியிருக்கும்? ஒரு சமயம் கட்டுப்பாடு வேண்டியதில்லை என்கின்ற தன்மை நடைபெற, கட்டுப்பாடும் முறையும் வேண்டியதாக இருக்கலாம். இன்று நாமாகிய திராவிடர்களுக்கு நம்மைப் பற்றிய சரித்திரமும், நம் நாட்டைப் பற்றிய தன்மைகளும்கூடத் தெரியவில்லை யானால், நம் திருமணத்திற்கு என்ன முறை சிறந்தது என்று எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? அப்படித்தான் ஒன்று இருந் திருந்தாலும் அதைப் பற்றி இன்று பேசுவது எப்படி அறிவுடைமையும், பொருத்த முடையதுமாகும்? இன்று நாம் எலக்ட்டிரிக் (மின்சார) விளக்கு வெளிச்சத்தில் இருந்துகொண்டு, திராவிடர்களுக்கு முன்காலத்தில் விளக்கு எப்படி இருந்தது என்று ஆராய்ச்சி செய்தால், அது பழங் காலத்து மக்களுக்கு இருந்த அறிவைப் பற்றி குறிக்க உதவுமே தவிர அதைப் பயன்படுத்த முடியுமா? நாம் ஆகாயக் கப்பலில் பறந்து கொண்டு பழங்கால திராவிடர் எப்படிப் பிரயாணம் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க ஆராய்ச்சி நடத்தி னால் அது பழங்கால மக்கள் தன்மையை அறிந்து கொள்ள முடியுமே தவிர, அந்தக் காலத்து வாகனத்துக்குப் போக முடியுமா?
காலப்போக்கு
இதுபோல்தான் நம்முடைய ஒவ்வொரு பழங்கால சொந்தமும் ஆகும். நம் கடவுள், மதம், ஒழுக்கம், கடவுள், மத, ஒழுக்க நூல்கள் ஆகியவைகூட அப்படித் தானே இருக்கமுடியும்? மற்ற துறைகளில் அக்கால மக்களுக்கு என்ன அறிவு அனுபவமும் இருந்ததோ அதுதானே இந்தத் துறை களிலும் இருந்திருக்கும்? உதாரணமாக அந்தக் காலத்தில் பொய் பேசுகிற மனிதன் இருப்பது அதிசயிக்கத் தக்கதாக இருந் திருக்கும். ஆனால் இந்தக் காலத்தில் பொய் பேசாத மனிதன் இருப்பது அதிசயமாக இருக்கிறது. ஏனென்றால் காலம் மக்களை அப்படித் தள்ளிக்கொண்டு போகிறது. காலப் போக்குக்கு மனிதன் கட்டுப்பட்டாக வேண்டும். இல்லாவிட்டால் காட்டுக்குப் போய்விடவேண்டும். அங்கும் கூட காலம் அவனை தொடர்ந்து கொண்டுதான் போகும். பள்ளத்தை நோக்கித் தண்ணீர் ஓடுவது போல் காலத்தை நோக்கி மனிதன் போய்த்தான் தீருவான். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை. என் பேச்சும் இந்தக் கூட்டமும் உங்கள் இருக்கையும், காலப்போக்கைப் பொறுத்ததே தவிர, என்னையோ உங்களையோ பொறுத்த தல்ல. காலப்போக்கை அறியாத பட்டிக் காட்டார், பாமரத்தனம் கொண்டவர்கள் ஆகியவர்கள்தான் மாறுதல், என்னாலும் உங்களாலும் ஆனதாகக் கருதுவார்கள். ஆனால் அவர்களும் அறிவு அனுபவம்  பெற்றவுடன் காலப்போக்கு தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்ளுவார்கள். ஆனால் அதற்கு கொஞ்ச நாள் பிடிக்கும். உதாரணமாக அந்தக் கொஞ்ச நாள் பிடிக்கும் என்பதுதான் புரட்சிக்காரர்கள் என்பவர்களுக்கும், வைதிகர்கள் மாறுதல் வேண்டாதவர்கள், பழமை விரும்பிகள் என்பதற்கும் உள்ள பேதமாகும். அதுவே தான் வாலிபர்கள் என்பவர்களுக்கும், வயோதிகர்கள் என்பவர்களுக்கும் உள்ள பேதமாகும். அதாவது வாலிபர்களுக்கு புதுமை சீக்கிரம் தோன்றும், சீக்கிரம் பிடிக்கும். காரணம் அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள்  உள்ளம் பல சங்கதிகள் எழுதப் பெற்றது. புதிய தன்மைகள் பதியப் பட வேண்டுமானால் முன்னால் பதிந்தவை கள் அழிக்கப்படவேண்டும். அவை சுலபத் தில் அழிக்க முடியாத மாதிரி ஆழப்பதிந்து போயுமிருக்கும்.
காந்தி - சங்கராச்சாரி
இதைத்தான் வைதிகம் என்றும், பிடிவாதம் என்றும், காலத்திற்குத் தகுந்த படி, மாற்றிக் கொள்ள முடியாமை என்றும் பெரிதும் சொல்லுகிறோம். உதாரணமாக காந்தியாரையோ, சங்கராச்சாரியாரையோ பகுத்தறிவுக்கும், பிரத்தியட்ச அனுபவத் திற்கும், இயற்கைக்கும் இணங்கும்படி செய்துவிட எப்போதாவது யாராலாவது ஆர்குமெண்ட் (எடுத்துச் சொல்லுவது) மூலம் முடியுமா என்று பாருங்கள். ஒரு நாளும் முடியாது. ஏன் அந்த உள்ளங்கள் பழமையினால் நிறைந்து போய்விட்டன. ஆழப் பதிப்பிக்கப்பட்டும் போய்விட்டன. அதோடு அவர்களுக்கு ஒரு அளவுக்கு அவசியமும் ஏற்பட்டு விட்டது. ஆதலால் நிர்ப்பந்தமில்லாமல் அவர்கள் பகுத்தறிவுக் கும், காலப் போக்குக்கும், முற்போக்குக்கும் சுலபத்தில் இணங்கமாட்டார்கள். அது போல்தான் அந்தத் தன்மையுள்ள மற்றவர் களும் ஆவார்கள், எனவே இந்தத் திரு மணம் இன்றைய காலப் போக்குக்கு என்பதோடு சரி.
இதுவே போதும்
இங்கு இன்று திருமணத்தில் தாலி கட்டினாலும்கூட இது பெரிதும் சுயமரி யாதைத் திருமணம் தான் என்கின்றேன். ஏன் என்றால் இத்திருமணத்திற்கு பார்ப் பான் இல்லை. குறைந்த அளவு சுயமரி யாதைத் திருமணத்திற்கு அதுவே போதும். ஏனெனில் நம்மை இழிவுபடுத்துபவனை நாம் மதிக்கவில்லை. அதோடு அவனை இன்று பகிஷ்கரித்திருக்கிறோம். நெருப்பு, விளக்கு, சட்டிபானை பொருளற்ற சடங்கு, சப்பையான காரியம் முதலியவை இல்லை. இதனால் இது பெரிதும் பகுத்தறிவு திருமணமாகும். இன்றோடு, ஒரு சிறு விருந்தோடு இத்திருமணம் தீர்ந்துவிடுவதால், இது சிக்கனத் திருமணமுமாகும். புராணக் கதை, புராணப் பாட்டு, பஜனைக் கச்சேரி முதலியவை இல்லாமல் இந்த மாதிரி பகுத்தறிவுச் சொற்பொழிவு வைத்ததால் இதை சீர்திருத்தத் திருமணம் என்றும் சொல்லலாம். மற்றும் சில காரியங்கள் அதாவது தாலி கட்டுவது, அதிக பணம் போட்டு சேலை துணி வாங்குவது முதலி யவை இன்று தவறானதாக இருந்தாலும் அவை காலப்போக்கில் அதாவது பெண் களுக்கு பகுத்தறிவும், சுயமரியாதையும், மான உணர்ச்சியும் ஏற்பட்ட உடன் தானாகவே நின்றுவிடும்.
ஆதலால் வாலிபர்களே, தாய்மார்களே, காலப்போக்கில் கலந்து உங்கள் இழிவு, ஏழ்மை (குறைபாடு), அறியாமை ஆகியவை  நீங்கும்படியாக அதைப் பயன்படுத்திப் புதிய உலகை சித்தரியுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
(6.12.1944 அன்று இராமநாதபுரம் ஜில்லா ராஜபாளையத்தில் நடந்த தோழர்கள் பாலராஜு - சிவபாக்கியம் வாழ்க்கை ஒப்பந்ததிற்கு தலைமை வகித்த பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)
- குடிஅரசு - சொற்பொழிவு - 16.12.1944

அறிவு வளர்ந்தால் மடமை மறையும்


நம் மக்களின் பொருளாதார நிலை கூட கொஞ்சங்கூட முற்போக்கு இல்லாமல்தான் இருந்து வருகிறது. ஏதோ சில பேர் வேண்டுமானால் மில் தொழிலிலும், சினிமா தொழிலிலும், ஓட்டல் தொழிலிலும் கொள்ளை லாபம் அடைந்து கொழுத்த பணக்காரர்களாகி இருக்கலாமே ஒழிய, சாதாரண மக்களாகிய   100-க்கு 90 பேருடைய வாழ்க்கைத் தரம் அப்படியேதான் இருந்து வருகிறது. முன்பு இரண்டு அணா சாப்பாடு சாப்பிட்டவன் இன்று ஒரு ரூபாய் சாப்பாடு சாப்பிடலாம். ஆனாலும், மூன்று அணாவுக்கு அன்று கிடைத்த அளவு உணவு இன்று ஒரு ரூபாய்க்குக் கிடைப்பதில்லையே. முன்பு ஆறு அணா கூலி சம்பாதித்தவர்கள், இன்று ஒரு ரூபாய் சம்பாதிக்கலாம். அவ்வளவுதான். ஆனால், மூன்று ரூபாய் சம்பாதித்தாலும் பழைய ஆறு அணா வசதி இல்லை. சில அணா அளவில் தான் கூலி உயர்ந்ததே யொழிய, ஏழை மக்களுக்கு, பாட்டாளிகளுக்கு வாழ்க்கைத் தரமொன்றும் உயர்ந்து விடவில்லை. ஆனால், முதலாளிகள் கோடீஸ்வரர்களாகி விட்டார்கள். இராஜபோகம் அனுபவிக்கிறார்கள். மற்ற தேசங்களில் எத்தனையோ புதுப் புது கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நம்நாட்டில் ஒன்றுகூட கண்டுபிடிக்க வசதி ஏற்படவில்லை. மற்ற நாட்டினரின் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தியாவது அதிகமான பலன் பெற்றிருக்கிறோமா என்றால் அதுவும் பொதுமக்களுக்கு இல்லை.
அவற்றைச் சரிவர உபயோகிக்கக் கூட நம் நாட்டில் வசதி செய்து தரப்படுவதில்லை. நம் அறிவு முன்னேற்றத்துக்கும், நம் ஆட்சிக்கும் அவ்வளவு தூரம் பாமர மக்களின் நன்மையைப் பற்றி, அவர்களது வாழ்க்கையும் சிறிதாவது உயர்வடைய வேண் டும் என்பது பற்றி யாரும் கவலை எடுத்துக் கொள்வதில்லை. கோவையிலுள்ள ஒரு சாதாரண தொழிலாளிகூட தனக்குப் போதிய வருவாய் இருந்தால் தன் மகனை கல்லூரிப் படிப்பு வரை படிக்க வைக்க முடியும். கோவை ஜில்லாவைச் சேர்ந்த ஆனைமலையிலுள்ள பெரிய மிராசுதாரர்கூட பண வசதியிருந்தும் தன் மகனை கல்லூரிப் படிப்புக்கு அனுப்ப முடியாது. காரணம், மகனை நகரத்திற்கு அனுப்பினால் தக்க கண்காணிப்பு இல்லாததால் அவன் சிகரெட்டுக் குடிக்கிறான், சினிமா பார்க்கிறான், கண்ட பெண்களைக் காதலிக்கிறான், கடைசியில் காலியாக வீடு திரும்புகிறான். எனவே கிராமத்திய மக்களுக்குப் படிக்க வசதியில்லாமல் போய் விடுகிறது.
சுதந்திரம் எப்படி - சிலபேருக்கே சுகம் அனுபவிக்கும் வாய்ப்பாக ஆக்கப்பட்டுவிட்டதோ, அப்படியே மற்ற வசதிகளும் சில பேருக்கே உரியதாக ஆக்கப்பட்டு விட்டன. சுதந்திரம் வந்தும் இன்னும் ஒருவன் பட்டதாரியாக, 22 வயது ஆக வேண்டியிருக்கிறது.
அந்தப்படியும் அவன் செய்யப் போகும் உத்தியோகத் திற்கு எவ்வகையிலும் உபயோகப்படாத படிப்பாக இருக் கிறது. 22 வயதுவரை படிக்க வைத்தும் அது வீண் செலவாகவே ஆகி விடுகிறது. கல்லூரிப் படிப்புக்குப் பணம் செலவழிக்க முடியாதவனாகவே பல குடியானவர்கள் தங்கள் மக்களைக் கல்லூரிகளுக்கு அனுப்புவதில்லை.  எப்படியேனும் படிப்புச் செலவு குறைக்கப்பட்டாக வேண்டும். குறைந்த செலவில், குறைந்த காலத்தில் அவனவனது வாழ்க்கைக்குப் பயன்தரத் தக்கதான படிப்பு கற்பிக்கப்பட வசதி செய்து தரப்பட வேண்டும். சாதாரணமாக ஆபீஸில் குமாஸ்தா வேலை பார்க்க வேண்டிய ஒருவனுக்குச் சரித் திரமோ, பூகோளமோ, அல்ஜிப்ரா, டிரிக்னா மெட்ரியோ தேவையில்லை அல்லவா? சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு ஒருவன் கேல்குலஸ் ஏன் படிக்க வேண்டும்? தாசில்தார் உத்தியோகத்திற்கு அகாடமி ஏன்? இருந்தாலும் எந்த உத்தியோகத்துக்கென்றாலும் குறைந்தது பி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டுமாம்.
ஏனப்பா இது அவசியமா என்று கேட்க யாரும் துணிவதில்லை. ஒரு வருடத்திற்கு 365 நாள் என்றால், அதில் கல்லூரி வேலை செய்வதெல்லாம் 150 நாள் தான். மற்ற 200 நாளும் வீண்தான். ஆசிரியர் களுக்குத் தரும் சம்பளமும் வீண்தான். ஏனப்பா இப்படிப் பிள்ளைகளின் நல்ல காலத்தை வீணாக்க வேண்டும் என்று கேட்டால், கேட்பவனுக்கு ஆதரவு கிடையாது. ஓட்டும் கிடைக்காது. பி.ஏ. படித்துத்தான் என்ன லாபம்? விஞ்ஞானம் படித்த பட்டதாரியே நெற்றியில் விபூதியும், நாமமும், பொட்டும், குங்குமமும் அப்பிக் கொண்டு திரிகிறானே. அது மட்டுமா? காவடி தூக்கிக் கொண்டு குதித்தாடும் பட்டதாரிகளும் கூட இருக்கிறார்களே இன்னும். பாமர மக்கள், பாட்டாளி மக்கள் இவர்களைப் பார்த்தே இன்னும் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆகி விடுவார்கள்போல் இருக்கிறதே.
எனவே தோழர்களே, தொழிலில் முன்னேற்ற மில்லை, விவசாயத்தில் முன்னேற்றமில்லை, பொருளாதாரத்தில் முன்னேற்றமில்லை. கல்வியிலும் முன்னேற்றமில்லை. ஏன் மக்கள் முன்னேற்றத்திற்குத் தயாரிக்கப்படவில்லை? மக்கள் தயாராகாதவரை ஆட்சியும் பயன் பெறும் காரியம் செய்தல் கூடாது. எனவேதான் நாம் அன்று முதலே கூறி வருகிறோம்; நாங்கள் அரசாங்கத்திற்கு விரோதிகள் அல்ல. காங்கிரஸ் ஆட்சியை ஒழிக்கவும் நாங்கள் ஒன்றும் ஆசைப்படுபவர்களல்ல. ஆட்சியிலுள்ளவர்களைக் கொண் டேதான் மக்களுக்கு நலமானதைச் செய்ய விரும்புகிறோம் என்று. அரசாங்கம் நடத்துவோரும் அரசாங்கத்தின் குறை காண்போரும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பாக தேர்தலில் நிற்போரும் முதலில் மக்களின் அறிவைப் பயன்படுத்துவதில் தம் கவனத்தைச் செலுத்த வேண்டும். மக்களைத் திருத்துவதில், அவர்களுக்குத் தெளிவு ஏற்படுத்துவதில் முழுக் கவலையும் செலுத்த வேண்டும். படிப்பினால் மட்டுமே மக்களைத் தெளிவுள்ளவர்களாக ஆக்கிவிட முடியாது. பரீட்சையில் நல்ல மார்க் வாங்கி விட்டதாலேயே ஒருவனைப் பகுத்தறிவாளியென்று நம்மால் ஒப்புக் கொள்ள முடியாது. மக்களிடையே பகுத்தறிவுப் பிரசாரம் நடத்தப்பட வேண்டும். அப் பிரசாரம் மூலம்தான் ஏதேனும் இன்றைய கஷ்டங்களுக்குப் பரிகாரம் காண முடியும். இன்று பெரும்பாலான மக்கள் பெரும் மனக்கஷ்டத்திற்கு பலியாகி இருக்கின்றனர். வாழ்க்கையில் எவ்வித உற்சாகமும் அவர்களால் காண முடியவில்லை. சிலர் சுகம் அனுபவிப்பதைப் பார்த்து பலர் கஷ்டப்படு கின்றனர். தங்களுக்குப் போதுமானது கிடைக்க வில் லையே என்பது மட்டுமே கஷ்டத்திற்குக் காரணம் இல்லை. பிறர் தம்மைவிட அதிகம் அடைகிறார்களே என்ற கஷ்டமும் அதிகமாக இருந்து வருகிறது. வாழ்க்கையிலுள்ள மடுவுக்கும் மலைக்கும் போன்ற அளவு வித்தியாசம்தான் பெரிதும் கஷ்டத்திற்குக் காரணமாய் அமைந்திருக்கிறது.
இது மாற்றப்பட வேண்டுமானால் பகுத்தறிவுப் பிரசாரம் தான் செய்ய வேண்டும். சகல துறைகளிலும் மக்களுக்கு அறிவு புகட்டப்படல் வேண்டும் இது நம் தென்னாட்டுக்கு மட்டுமே அல்ல. அகில இந்தியாவுக்குமே தேவையான தாகும். என்றாலும் நம் தென்னாடு தான் பகுத்தறிவுப் பிரசாரம் நன்கு செழித்து வளர்வதற்கான பண்பாடு பெற்றிருக்கிறது.
எனவே முதலில் நம் தென்னாட்டைப் பற்றி கவலை எடுத்து கொள்ள வேண்டும் என்கிறோம். வடநாட்டில் பகுத்தறிவு பிரசாரம் செய்வதெல்லாம் எதிர்நீச்சல் வேலையாகும். உயர்மேடு ஏறும் வேலையாகும். நான் உலகத்தைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். இந்தியாவையும் இரண்டு மூன்று முறைக்கு மேலாகவே சுற்றிப் பார்த்திருக்கிறேன். அதுவும் சுமார் 40 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தியாவைச் சுற்றிப் பார்த்து வந்திருக் கிறேன். சாதாரண மனிதனாகவே சுற்றி மக்களோ டெல்லாம் பழகியும் பார்த்திருக்கிறேன். அய்ரோப்பாவிலும், ரஷ்யா முதற்கொண்டு பல நாடுகளுக்கும் சென்று அந்தந்த நாட்டுமக்களைப் பார்த்தும் அவர்களுடன் பழகியும் இருக்கிறேன். 1903, 1904-இல் இந்தியா பூராவும் பிச்சை எடுத்துத் திரிந்து பார்த்திருக்கிறேன்.
அய்ரோப்பாவோடும், வடநாட்டோடும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம் தென்னிந்தியாதான் அறிவில் சிறந்த நாடாக எனக்குப் படுகிறது. அதிலும் மற்றவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஆந்திரர்களையும், மலையாளிகளையும், கன்னடி யர்களையும் காட்டிலும் தமிழர்கள்தான் அறிவில் சிறந்த வர்களாக எனக்குத் தோன்றுகிறார்கள். சூத்திரர் என்றால் தமிழர்கள் ரோஷப்படும் அளவுக்கு எந்த வடநாட்டானும் எந்த ஆந்திரனும் மலையாளியும்கூட ரோஷப்படுவதில்லை.
சூத்திரன் என்று சொல்லிக் கொண்டுதான் போகட்டுமே. அதனால் என்ன குடிமுழுகிப் போய்விடும் என்றுதான் பம்பாய்காரன் சொல்வான். மைசூர் ராஜ்யமும் அப்படித் தான். நம் நாட்டிலோ 100-க்கு 60 பேராவது சூத்திரர் என்றால் ஆத்திரப்படுவார்கள்; கோபப்படுவார்கள். மேலும் மூட நம்பிக்கை ஒழிய வேண்டும் என்பதிலும் அதன் அவசியத்திலும் நமக்குத்தான் சற்று விளக்கம் ஏற்பட்டி ருக்கிறது.
பெருமை, புகழ், தொழில் வளம் முதலியவற்றைப் பற்றி எடுத்துக் கொண்டாலும் நம் மாகாண மக்கள்தான் மற்ற மாகாணக்காரர்களை விட சற்று அதிகமான கவலை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். மற்ற மாகாணக்காரர் களெல்லாம் நம் மாகாணத்தைக் கொண்டு நாம் பிழைக்கலாம் என்று ஆசைப்படுகிறார்களேயொழிய, நம்மைப் போல் நம் மாகாணத்திலிருந்தே சகலத்தையும் உண்டாக்கி தம் மக்களை வாழ்விக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை. அவ்விதம் நினைக்கும் அறிவும், தெளிவும், வசதியும் அவர்களுக்கு இல்லை. நமக்குத்தான் உண்டு. நம் தென்னிந்தியா இயல்பாகவே தான் பெற்றுள்ள இயற்கை வசதிகளால் பிறர் கண்களை உறுத்தி வருகிறது. அதனால்தான் வடநாட்டவர் நம்மைப் பிரிய விடாமல் கண்காணிப்பாக இருந்து வருகிறார்கள். தேசிய ஒற்றுமை பறி போய்விடும் என்று கூப்பாடு போட்டு நம்மை முன்னேற்றமடையவொட்டாமல் தடுத்து வருகிறார்கள்.
(3.8.1949 அன்று கோவையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - விடுதலை 20.8.1949)

Sunday, November 6, 2011

மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டவை?

ஆத்திகன்: மதங்கள் கடவுள் களால் உண்டாக்கப்பட்டவை
பகுத்தறிவுவாதி: அல்ல; அவை மனிதர்களால் உண்டாகி யவை.
பகுத்தறிவுவாதி: மதங்கள் எத்தனை உண்டு?
ஆத்திகன்: பல மதங்கள் உண்டு
பகுத்தறிவுவாதி: உதாரணமாகச் சில சொல்லும்.
ஆத்திகன்: எடுத்துக்காட்டாக இந்து மதம், புத்தமதம், கிருத்துவ மதம், முகமது மதம், சீக் மதம், பார்சி மதம், சவுராட்டிர மதம் முதலியவைகளும் இவற்றுள் பல உட்பிரிவுகளும் உண்டு.
பகுத்தறிவுவாதி: கடவுள்கள் எத்தனை உண்டு?
ஆத்திகன்: ஒரே கடவுள்தான் உண்டு
பகுத்தறிவுவாதி:  இவ்வளவு மதங்களும் யாருக்காக உண்டாக்கப்பட்டவை
ஆத்திகன்: மனித வர்க்கத்துக்காகத்தான்.
பகுத்தறிவுவாதி: மதத்தால் ஏற்படும் பயன் என்ன?
ஆத்திகன்: மனிதன். கடவுளை அறியவும், கடவுளுக்கும், தனக்கும் சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளவும், ஆத்ம ஞானம் பெறவும் கடவுள் கருணைக்குப் பாத்திரனாகவும் பயன்படுவதாகும்.
பகுத்தறிவுவாதி: அப்படியானால் ஒரே கடவுள் மனித வர்க்கத்துக்கு இத்தனை மதங்களை ஏற்படுத்துவானேன்?
ஆத்திகன்: அது மிகவும் சிரமமான கேள்வியாக இருக் கிறது. பெரியார் மதங்களைக் கண்டு பேசிய பிறகு பதில் சொல்லுகிறேன்.
மத விவரம்
பகுத்தறிவுவாதி: அதுதான் போகட்டும். இந்துமதம் என்பது என்ன? அது கடவுளால் எப்படி ஏற்படுத்தப்பட்டது.
ஆத்திகன்: இந்து மதம் என்றால் வேதமதம் என்றும் பெயர்.
பகுத்தறிவுவாதி: வேதம் என்றால் என்ன?
ரிக்-யசுர்
ஆத்திகன்: ரிக், யசுர், சாமம், அதர்வணம் என 4 வேதம் உண்டு. அவ்வேத முறைதான் இந்து மதம் என்பது.
பகுத்தறிவுவாதி: இவ்வேதங்கள் யாரால் ஏற்படுத்தப் பட்டவை?
ஆத்திகன்: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை
பகுத்தறிவுவாதி: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்வை என்று யார் சொன்னார்கள்?
ஆத்திகன்: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை என்று வேதம் சொல்லுகிறது. வேதம் கடவுள் வாக்கு என்று வேதம் சொல்லுகிறது.
பகுத்தறிவுவாதி: இதற்கு ஏதாவது சாட்சியோ ஆதாரமோ உண்டா?
ஆத்திகன்: வேதத்துக்கும், கடவுள் வாக்குக்கும் ஆதார மோ, சாட்சியோ கேட்பது என்றால் அது பாபமான காரியமேயாகும்.
பகுத்தறிவுவாதி: அது பாபமாக இருக்கலாம்.  ஆனால் ஆதாரம் ருசு இல்லாமல் ஒன்றை ஒருவர் நம்புவது என்றால் அது குற்றமாகாதா?
ஆத்திகன்: இதுவும் கடினமான பிரச்சினையாகத்தான் இருக்கின்றது. பெரியவர்களைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.
பகுத்தறிவுவாதி: புத்தமதம் என்றால் என்ன?
ஆத்திகன்: புத்தர் என்கிறவர் காலத்தில் ஏற்பட்டது.
பகுத்தறிவுவாதி: அதற்கு என்ன ஆதாரம்?
ஆத்திகன்: புத்தர் என்கிறவர் சொன்னதாகச் சொல்லப் படும் வாக்குகள்தான்.
பகுத்தறிவுவாதி: புத்தர்தான் சொன்னார் என்பதற்கு ஆதாரம் என்ன?
ஆத்திகன்: புத்தர் சங்கதி சரித்திரத்தில் பட்டதாய் இருக் கிறது. அன்றியும் அதில் இன்றைய நிலையில் மற்ற மதங் களைப் போலக் கடவுள், கடவுள் வாக்கு, பல அற்புதங்கள் முதலியவை இல்லை என்பதோடு ஆலோசனைக்கும், அறிவுக்கும் பொருத்தமானதை எடுத்துக் கொண்டு மற்றவைகளைத் தள்ளி விடுவதில் பாவமோ, குற்றமோ, கடவுள் தண்டனையோ இல்லை. ஆகையால், அதற்கு ஆதாரம் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
ப-தி: சரி மிக நல்ல மாதிரி சமாதானம் சொன்னீர்கள். அப்படியானால் அம்மதத்தைப் பற்றி நமக்குக் கவலை இல்லை.
ப-தி: கிருத்துவ மதம் என்பது என்ன?
ஆ-ன்: கிருத்துவ மதம் என்பது கிருத்துவால் சொல்லப்பட்ட கொள்கை.
ப-தி: அது எது?
ஆ-ன்: பைபிள்
ப-தி: கிருத்து என்பவர் யார்?
ஆ-ன்: கிருத்து கடவுள் குமாரர்.
ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?
ஆ-ன்: கிருத்து சொல்லி இருக்கிறார்
ப-தி: ஒருவர் தன்னை இன்னான் என்று நிரூபிக்க அவரது வாக்கு மூலமே
போதுமா?
ஆ-ன்: ஏன் போதாது?
ப-தி: அப்படியானால் இப்போது ஒருவன் வந்து உம்மிடம் தான் கடவுள் என்று சொன்னால் ஒப்புக் கொள்ளுவீரா?
ஆ-ன்: இதுவும் கடினமான பிரச்சினைதான் பெரியவர் களைக் கேட்க வேண்டும்!
முகமதிய மதம்
ப-தி: முகமதிய மதம் என்றால் என்ன?
ஆ-ன்: முகமது நபி என்பவரால் சொல்லப்பட்ட கொள்கைகள்.
ப-தி: அதற்கு என்ன ஆதாரம்?
ஆ-ன்: குரான் என்னும் வாக்கியம்.
ப-தி: அது யாரால் சொல்லப்பட்டது?
ஆ-ன்: கடவுள்களால் முகம்மது நபி அவர்கள் மூலம் வெளியாக்கப்பட்டது.
ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?
ஆ-ன்: நபி அவர்கள் சொன்னார்.
ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?
ஆ-ன்: குரான் வாக்கியங்களில் இருக்கிறதுடன், வேறுபல சாட்சியங்களுமிருக்கின்றன.
ப-தி: வேறு பல சாட்சியங்கள் என்பது எவை?
ஆ-ன்: அந்தக் காலத்தில் நபி அவர்களுடன் இருந்த பல பெரியவர்கள் வாக்கு இருக்கிறது.
ப-தி: அவை உண்மை என்பது ஆதாரம் என்ன?
ஆ-ன்: அந்தப்படி இருக்கும் ஆதாரங்களை நம்ப வேண்டியது தான்.
ப-தி: மற்ற மதங்களும் இதுபோல் தானே?
ஆ-ன்: ஆம்!
ப-தி: அனேகமாக கடவுள் வாக்கு. கடவுளால் அனுப்பப் பட்டவர்கள். கடவுள் அவதாரங்கள் என்பவர்கள் அவர் களது வாக்குகள் சம்பந்தப்பட்ட மதங்கள் ஆகிய எல்லோரையும், ஒரே கடவுள் சொன்னார் சிருட்டித்தார் என்பதும் நியாயமாகுமா? ஆதலால் இதுமாதிரி மதம் என்பது வியாபாரம் மதகர்த்தர் வேதம் புராணம் என்பவை  வியாபாரச்சரக்குகள் என்பது பகுத்தறிவுக்காரர் களுக்கும் படும் விடயம். இது ஒரு சமயம் தப்பாக இருந்தாலும் இருக்கலாம்.
ஆ-ன்: ஆம் எல்லாம் இப்படிப்பட்டதுதான்.
ப-தி: அப்படியிருக்க இவ்வளவு மதங்களையும் ஒரே கடவுள் உண்டாக்கி இருப்பார் என்று நீரே நம்புகிறீரா? அதனால் தான் இவை ஒவ்வொரு சீர்திருத்தக்காரர்களால் அறிவாளி களால் முன்பின் ஆராய்ந்து பார்த்து மனித சமூகத்துக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற கவலை கொண்டவர் களால் (மனிதர்களால்) உண்டாக்கப்பட்டது என்று எண்ண வேண்டியிருக்கிறது. அப்படிக்கில்லாமல் ஒரே கடவுள் இருந்து அவரே இவ்வளவு மதத்துக்கும், மதகர்த்தருக்கும் ஆதார புருடர் என்றால் அப்போது கடவுளின் மேன்மைக் குணம் பாதிக்கப்படவில்லையா? யாரோ சில மனிதர் களுக்கு மேன்மை கொடுப்பதற்காகக் கடவுளை முட்டா ளாக்குவதும் பல கடவுள்களைச் சிருட்டிப்பதும் பல வேதங் களைச் சிருட்டிப்பதும் சரியா?
நாம் இருவரும் இவ்விசயங்களில் ஒரே கருத்துடையவர் களாகி இவை எல்லாம் சற்று நேரத்துக்கு உண்மை என்றே ஒப்புக் கொள்வோம். அதாவது இந்துமதம் கடவுளால் உண்டாக்கப்பட்டது என்பதையும், வேதம் கடவுள் வாக்கு என்பதையும், முகமது நபி கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதையும், குரானையும் மற்ற மதத்தையும் ஒப்புக் கொள்வோம். ஆனால் அவை எல்லாம் இன்று ஒன்றாய் இல்லாமல் வேறு அபிப்பிராயங்களாகவும் சில முரணானவையாகவும்  ஒரு மத தத்துவத்துக்கும் மற்றத் தலைவருக்கும் மாறாக இருப்பானேன்? ஒன்றுக்கொன்று இன்றைய அனுபவத்தில் அதிருப்தி: வெறுப்பு துவேசம் உடையவைகளாக இருப்பானேன்?
ஆ-ன்: இதுவும் சிரமமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. பெரியவர்களை கேட்க வேண்டும்.
ப-தி: சாவகாசமாய்ப் பெரியவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இன்று நாம் எதை நம்பி எப்படி நடந்து கொள்வது?
ஆ-ன்: இவை எல்லாம் உண்மை என்றோ அல்லது உண் மை அல்லது என்றோ எப்படியோ இருக்கட்டும். அதற்கு ஆக நாம் கவலைப்பட வேண்டா. உலகில் மனிதன் உயி ருள்ளவரை நல்லது எண்ணு நல்லது செய் அவ்வளவு தான்.
ப-தி: நல்லது எது? தீயது எது? என்பதற்கு அளவு கருவி என்ன?
ஆ-ன்: இது மிகவும் கடினமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் பெரியவர்கள் நடந்து காட்டியது, சொல்லியிருப்பது இவைகளைக் கொண்டு தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.
ப-தி: பெரியவர் யார் என்பதற்கு அளவு கருவி என்ன? ஒருவர் ஒருவரைப் பெரியவர் என்றால் மற்றொருவர் அவரை ஒப்புக் கொள்வதில்லை. அவருக்கு மாறாக அல்லது வேறொன்றைச் சொன்னவர்களைப் பெரியவர் என்கிறான் இதற்கு ஒரு பரீட்சை குறிப்பு வேண்டுமே?
ஆ-ன்: இதுவும் கடினமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. இதற்கெல்லாம் உம்முடைய சமாதானம்தான் என்ன சொல்லு பார்ப்போம்.
ப-தி: என் சமாதானம் என்ன? நான்தான் மதத்துவேசி. பார்ப்பனத்துவேசி, நாத்திகன், சுயமரியாதைக்காரன் என்றெல்லாம் பெயர் வாங்கினவனாய் விட்டேனே, என் பேச்சை யார் கேட்பார்கள். நீர் ஆத்திகராயிற்றே. உமக்குத் தெரியுமென்றும், தெரியாவிட்டாலும் உம்முடைய உள்ளத் தில் சதா குடிகொண்டிருக்கிற கடவுள் உணர்த்துவார் என்றும் கருதி உண்மையான சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காகக் கேட்டேன். நல்ல வேளையாக நீர் பதில் சொல்லாவிட்டாலும் என்னை வையாமல் பெரியவர்களைக் கேட்டுச் சொல்லுகிறேன் என்று சொன் னீரே. அதுவே எனக்கு மிகவும் திருப்தி ஆத்திகர்களில் இப்படிப்பட்டவர்கள் அருமை மிக மிக அருமை: சந்தேகம் கேட்டால் அடி, உதை, நாத்திகன், பிராமண துவேசி, ஆரிய துவேசி என்றெல்லாம் வெறி பிடித்தவர்கள் போல் ஆடுவார்கள். ஆதலால், உம்மைப் பற்றிக் கூட எனக்கு சந்தேகம்தான்.
ஆ-ன்: என்ன சந்தேகம்?
ப-தி: நீர் ஆத்திகரோ என்னவோ என்று.
ஆ-ன்: நான் உண்மையில் ஆத்திகன்தான். அதாவது ஒரு கடவுள் இருப்பார் என்று நம்புகிறவன்.  ஆனால் இத்தனை மதங்களையும், மத கர்த்தாக்களையும், அந்தந்த மதவேதங்களையும், அவையெல்லாம் கடவுளால் சொல்லப் பட்டவை என்பதிலும் அவ்வேதக்கதைகள், புராணங்கள் ஆகியவை உண்மை என்பவைகளையும் பற்றி அவ நம்பிக்கை கொண்டவன்தான்.
ப-தி: அப்படியானால் நீர். இருப்பார் என்ற கடவுள் நம்பிக்கையை யார் எந்த ஆத்திகர் இலட்சியம் செய்வார்? ஒரு குறிப்பிட்ட கடவுள் அல்லது ஒரு குறிப்பிட்ட மதகர்த்தா அல்லது ஒரு குறிப்பிட்ட மதம் என்பவைகளை ஏற்றுக் கொள்ளாதவர் நம்பாதவர் எல்லோரும் மற்ற மதக் காரனுக்கு நாத்திகனே - நம்பிக்கை யற்றவனே யாவான் நாத்திகம் என்பதும் நம்பிக்கையற்றது என்பதாக எல்லாம் ஆத்திகர்களுக்கும் ஒரே பொருள்தான்.
ஆ-ன்: யாரோ எப்படியோ போகட்டும் எனக்கென்ன? என் புத்திக்கு சரி என்று பட்டதை செய்து விட்டு செத்துப் போகிறேன்.
ப-தி: ஏன் சாகிறீர். உயிருடன்தான் இருமே உமக்கு சரி என்று பட்டதைத்தான் செய்யுமே எனக்கென்ன கவலை? எப்படி இருந்தாலும் ஆத்திகர்கள் வைது கொண்டு தானிருப்பார்கள்.
                                                                                                                                                                       (குடிஅரசு, 20.3.1938)
                                                                                      சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் பெரியார் எழுதியது.