Sunday, January 13, 2013

பொங்கல் விண்ணப்பம்


ஆரியம் திராவிடத்தைவிட்டு அடி யோடு அகன்றால் ஒழிய, திராவிடத்திற்கு மீட்சி இல்லை, வாழ்வு இல்லை, மானமில்லை, மனிதத் தன்மை இல்லை என்று தூக்குமேடையில் நின்று கிட்டியை மாட்டிக்கொண்டு கூடக் கூறுவோம்.
திருஇடம் என்னும் திராவிடம் இன்று தீண்டப்படாதத் தன்மை எய்தி, அதன் மகன் பிறவி சூத்திரன், பஞ்ச மன் என்னும் நிலை அடைந்ததற்கு ஆரியமல்லாமல் வேறு எதனை காரணமாகக்  கூறமுடியும்? ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற் பட்ட ஆராய்ச்சிச்  சுவடிகளில் இருந் தும், அதற்கும் முற்பட்டதான கண்டு பிடிப்புச் சின்னங்களில் இருந்தும் ஆரியத்தாலேயே திராவிடம் அழிந்து பட்டு  ஈன நிலைமைக்கு வந்தது என்பதைப் புலவர்கள், அறிஞர்கள், சாதாரண பகுத்தறிவாளர்கள் அய்ய மற அறிந்திருந்தும், அனுபவத்தில், நடைமுறையில் கண்டுவந்தும் வீழ்ந்து கிடக்கும் நிலையில் இருந்து திராவிடம் எழுச்சிபெற்ற நிலைக்கு வர வேண்டு மானால், ஆரியர் அருளால்தான் முடியும் என்று ஆரியருக்கு அனுமாராக அடிசுமந்து நிற்பதானால் இதைவிட மதியீனத்தன்மை வேறு என்ன இருக்கமுடியும்?
காட்டுமிராண்டித் தன்மையில் இருந்த நாடுகளும், காட்டுமிராண்டி மக்களும் இன்று மனிதத்தன்மை பெற்று மேன்மைவாழ்வு வாழ்கின்ற இந்தக் காலத்தில்  திராவிடம் சாதா ரண மனிதத்தன்மைபெற மக்களைக் கோவில்களுக்குள் நுழைப்பதும், அதையே மாபெரும் மனிதத் தொண் டாகக் கருதுவதுமாயிருந்தால் திராவி டத்திற்கு என்றாவது எழுச்சி ஏற்படும் என்று யார்தான்  கருதமுடியும்?
திராவிடத்தின் சமுதாய முயற்சி இதுவாய் இருந்தால் இனி அரசியல் முயற்சி எப்படி இருக்கின்றது என்று பார்ப்போமேயானால், அது மகாமகா மோசமான மடத்தன்மையதாய் இருக் கின்றது என்றுதான் சொல்ல வேண் டும். இன்றைய அரசியல் பிரச்சினை என்ன என்று பார்ப்போம். அதுபெரிதும் இந்துக்கள் - முஸ்லிம்கள் போராட்டம் என்பதல்லாமல் வேறு என்ன என்று சொல்லமுடியும்? இந்துக்கள் - முஸ்லிம் போராட்டம் என்ன என்று பார்ப்போமானால் ஆரியத்திற்கும் ஆரியமல்லாததற்கும் அல்லது ஆரியர் களுக்கும் ஆரியர்கள் அல்லாதவர் களுக்கும் போராட்டம் என்பதல்லாமல் வேறு உள் கருத்து என்ன என்று சொல்லமுடியும்?
இந்து - முஸ்லிம் என்பது  ஒரு மதத் தத்துவ வேறுபாடேயாகும். என்னவென் றால் ஒரு கடவுள் வழிபாடு - பல கடவுள் வழிபாடு; உருவக் கடவுள் வழிபாடு - அருவக் கடவுள் வழிபாடு; மக்கள் சமுதாயத்தில் ஒரு ஜாதி - மக்கள் சமுதாயத்தில் பல ஜாதி வகுப்பு; மக்கள் யாவரும்  பிறவியில் சமம் - மக்கள் யாவரும் பிறவியில் வேறுபட்டவர்கள் என்பனவாகிய இந்தத் தன்மை பேதங்கள்தான் முஸ்லிம் மதமாகிய இஸ்லாத்திற்கும் இந்து மதமாகிய ஆரியத்திற்கும் இருந்துவரும் அடிப்படை பேதங்கள் ஆகும். இந்த அடிப்படையை வைத்து நடத்தப்படும் ஆரியர்கள், ஆரியரல்லாதவர்கள் (முஸ்லிம்கள்) என்கின்ற மக்கள் போராட்டத்தில், திராவிடத்தின் - திராவிடரின் கடமை என்ன என்று கேட்கிறோம்.
இந்தப் போராட்டத்திற்குத் திராவிடன் ஆரியத் திற்கு அடிதாங்கி நிற்பது அறிவுடை மையா அல்லது எதிர்த்து நிற்பது அறிவுடைமையா என்று சிந்திக்கும்படி திராவிடப் புலவர்களையும் திராவிடக் காளைகளையும் இறைஞ்சு கின்றோம். இந்திய  அரசியல் போராட்டமானது இந்து - முஸ்லிம் போராட்டம் என்னும் தன்மையை வெளிப்படையாய் அடைந்த வுடன் உண்மைத்திராவிடர் இந்திய தேசிய அரசியலைவிட்டு உடனே விலகி இருக்க வேண்டியதல்லவா? மறத் திராவிடனின், மணிப் புலவனின் கடமையாக இருந்திருக்கவேண்டும்.
இஸ்லாம் மதம் அதாவது ஆரிய எதிர்ப்பு மதம் இன்று இந்தியாவில் இல்லாதிருக்குமானால், கிறிஸ்தவ மதம் இன்று  இந்தியாவில் இல்லாதிருந் திருக்குமானால், திராவிட தேசியத் தோழனே! இன்று உனது கதி, நிலை, வாழ்வு, மானம் எப்படி இருந்திருக்கும் என்பதை வெளிக் கண்ணை மூடிக் கொண்டு மனக்கண்ணால் சற்று உன்னையே பார். என்ன காணும்? நீ வேசிமகனாக, வைப்பாட்டி மகனாக, உண்மையில் அட்டியாக, அடிமையாக, இழிமகனாக, கடையனாக இருந்திருப் பாயா இல்லையா? இன்னமும் உன் உடன்பிறந்த சோதரிகள் பலர் வேசிகள் என்பதையும், சோதரர்கள் பலர் வேசி மக்களே என்பதையும், உறவினர் பஞ்சமர், சண்டாளர், இழிநிலையர் என்பதையும், பெயராக இடமாகக் கொண்டு உண்மை யிலேயே சட்டத்தில் சாத்திரத்தில் நடப்பின் அந்தப்படி நடத்தப்படு கிறார்களா? இல்லையா? சிந்தித்துப்பார். கோபப்படாமல் ஆத்திரப்படாமல் வெட்கப் பட்டுச் சிந்தித்துப்பார்.
ஆரிய இழிவில் இருந்து, கொடு மையில் இருந்து  திராவிடம் மீள வேண்டுமானால் திராவிடநாடு ஆரிய நாட்டுச் சம்பந்தத்தில், பிணையில் பிடிப்பில் இருந்து பிரியவேண்டும் என்று திராவிடர் கழகம் சொன்னால் கல்யாண சுந்தரங்களுக்கும், மீனாட்சி சுந்தரங் களுக்கும் மற்றும் புலவர் மணிக் குழாங் களுக்கும் ஏன் கோபம் வரவேண்டும்? கோபிப்பவர்கள் புலவர்களாக இருக்க முடியுமா? எங்களுக்குப் புலையர் பட்டம் வேண்டாம் என்று நாங்கள் சொல்லு வதைத் தடுப்பவர்கள் எப்படிப் புலவர் களாக இருக்க முடியும்? எப்படித் தேசிய வீரர்களாக இருக்கமுடியும்? ஆரியம் ஒழிந்தால் ஒழிய அல்லது ஆரியத்தில் இருந்து விடுபட்டால் விலகினால் ஒழியத் திராவிடர்களுக்கு எப்படிப் புலையர்ப்பட்டம் நீங்க முடியும்? தேசியக் காளைகளே! நீங்கள்தான் சிந்தித்துப் பாருங்கள்.
புலவர் தோழர்களே! தேசிய வீரத் தோழர்களே! இந்துஸ்தான் - பாகிஸ் தான் என்பது ஆரியஸ்தான ஆரியமல் லாதஸ்தான் என்பதல் லாமல் அதன் உண்மைக் கருத்து வேறு என்ன? ஆரிய மல்லாதஸ்தான் என்பதற்குப் பதிலாக அதாவது அல்லாத என்கின்ற வார்த்தை கூடாது என்பதற்காக அதாவது நாம் எப்படிப் பார்ப்பனர் அல்லாதார் என்று சொல்வது இழிவு என்று கருதித் திரா விடர் என்ற சரித்திர கால ஆராய்ச்சிப் பெயரைப் பயன்படுத்துகிறோமோ அதுபோல் ஆரியத்தை வெறுத்தவர்கள், ஆரியத்தை ஏற்காதவர்கள் பாகிஸ்தான் என்று பெயர் சொல்லுகிறார்கள். அதுபோல்தான் நாமும் ஆரியமல்லாத நாடு என்பதற்குப் பதிலாக திராவிட நாடு என்கின்றோம்.
ஆகவே பாகிஸ் தான் என்பதும் திராவிட நாடு என்பதும் ஒரே அடிப்படையை ஒரே கருத்தைக் கொண்ட சொற்களே தவிர வேறுவேறு கருத்துக்கள் இலட்சியங்கள் கொண்ட வைகள் அல்ல. அப்படி இருக்கத் திராவிட நாட்டில் திராவிட மக்கள் இடையில் பாகிஸ்தான் இந்துஸ்தான் பிரச்சினையைப் புகுத்தி அதன் சாக்கில் இந்து - முஸ்லிம் கலவரங்களை வெறுப் புகளை உண்டாக்கி இருப்பதானது ஆரியர்கள் சூழ்ச்சியே ஒழிய அதில் திராவிட நாட்டுக்கோ, திராவிட மக்களுக்கோ ஆகும் நலமான காரியம் ஒன்றுமே இல்லை; கேடேயாகும். பாகிஸ் தான் பிரச்சினை பற்றித் திராவிட நாட்டில் திராவிடர்கள் இடையில் எதிர்ப்புப் பேசப்படுவது வேண்டப்படாத காரியமேயாகும்.
இன்று திராவிடநாட்டில் அரசியல் பிரச்சினை உண்மையானதாகவும் யோக்கிய மானதாகவும் ஒன்று இருக்க வேண்டுமானால் அது ஆரியப்பிடியில், சம்பந்தத்தில் இருந்து திராவிடநாடு விலகவேண்டும், விடுபடவேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. திராவிடநாடு விடுபடுவதைத் தடுப்பதும் எதிர்ப் பதுமான காரியமே தான் திராவிடநாட்டில் பாகிஸ் தான் எதிர்ப்புப் பிரச்சினையைக் கொண்டு வந்து ஆரியர்கள் புகுத்தியதாகும். திராவிட மக்கள் உண்மை உழைப்பாளி களானால் ஆரியத்தில் இருந்து அடி யோடு விடுபடமுயலும். ஆரியரல்லா தார், ஆரியம் வேண்டாதார் ஆகிய எல்லோருடனும் ஒத்துழைத்து உதவி செய்யவேண்டியதுதான் யோக்கியமான தொண்டு ஆகும்.
ஆதலால் புத்தாண்டு நினைவுக் குறியாகவும், பொங்கல்விழா படிப்பினைக் குறியாகவும் திராவிட புலவர்களுக்கும் திராவிட காளை களுக்கும் நாம் மனம் நிறைந்த வேண்டுகோள் சேதியாக மகிழ்ச்சிப் பொங்கலோடு விண்ணப்பித்துக் கொள் ளுகிறோம்.
குடிஅரசு - தலையங்கம் - 18.01.1947

Saturday, January 12, 2013

நாம் பிரிந்து கிடக்கிறோம்


(தம் மனதில் உண்மை என்று படக் கூடிய விசயங்களைச் சமய சந்தர்ப்பம் தயவு தாட்சண்யம் முதலியவற்றைப் பார்க்காமல் மிகவும் தைரியமாக எடுத்துச் சொல்லுபவர் பெரியார் ஈ.வெ.ரா. அவருடைய பிரசங்கம் எவ்வளவு தெளிந்த நடையோடும். உணர்ச்சி யூட்டக் கூடியதாகவும் இருக் கிறதோ, அதேபோல அவருடைய கட்டுரையும் அமைந்திருப்பதைக் காணலாம்.  சாதி சமயப் பிரி வினைகளை வேரறுத்து, ஒவ் வொருவரும் தன் மதிப்போடு தானும் மனிதன் என்று தலை நிமிர்ந்து நடக்க இக்கட்டுரை வழிகாட்டட்டும் -_ (பிரசண்ட விகடன்)
தற்காலப் பிரச்சினை திராவிட மக்கள் இந்துக்கள் என்னும் தலைப்புக் கொண்ட கூட்டத்திற்குள் இருப்பதா அல்லது அதைவிட்டு விலகி வெளிவந்து, தங்கள் இனம், நாடு, இனநலன், நாட்டு நலன் தெரி யும்படியான தலைப்புடையவர்களாகி அன்னிய ஆதிக்கத்திலும் சுரண் டலிலும் இருந்து விடுபடுவதா என்பதேயாகும்.
உண்மையாகச் சொல்லுகிறேன், திராவிட மக்கள் இன்று தங்கள் முற்போக்குக்கும் விடுதலைக்குமாக முதலில் கவனிக்க வேண்டியது தங்கள் நாட்டினுடையவும் இனத் தினுடையவும் ஆன பிரச்சினையே யொழிய, அரசியல் பிரச்சினை அல்ல. நமக்கு இன்னும் அரசியல் பிரச் சினையைப் பற்றிப் பேசும்படியான தகுதி ஏற்படவில்லை. ஆரியர்களைப் போலவோ, முசுலீம்களைப் போலவோ நமக்குள் அரசியல் பிரச்  சினைக்கேற்ற ஒற்றுமையும், தகுதியும், திட்டமும் இன்றுவரை இல்லவே இல்லை.
ஆரியர்களுடைய அரசியல் பிரச்சினை, ஆரிய ஆதிக்கமுள்ள இந்து சட்டப்படி மனுமாந்தாதா, இராமன் கொள்கைப்படி ராஜ்ய பாரம் நடைபெற வேண்டியதே ஆகும். மற்றப்படி நாட்டை எவன் ஆண்டாலும் அவர்களுக்கு அக்கறை யில்லை. தங்கள் இஷ்டப்படி, தங்கள் நலனுக்கு ஏற்றவண்ணம் எவன் ஆட்சி நடத்துகிறானோ அவனை இருத்தி வைப்பதும்  மற்றவனை ஒழித்து விடுவதுமே அவர்களுடைய புராண காலம் முதற்கொண்டு நடந்து வந்த கொள்கை ஆகும். இராமா யணக் கதை இந்த நீதியைப் புகட் டுவதே ஆகும்.
இந்து தேச சரித்தி ரமும் இதைப் பெரிதும் மெய்ப்பிக் கும். இதற்கேற்ற ஒற்றுமையும், ஒன்று பட்ட உணர்ச்சியும், கட்டுப்பாடும்  அவர்களிடம் உண்டு. ஆதலால் இன் றைய நிலையில் பிரிட்டிஷார்கூட அல்லாமல் ஜப்பானியரோ, ஜெர் மானியரோ ஏன் அய்ரோபியரோ, ஆப்பிரிக்கரோ இந்நாட்டைக் கைப்பற்றி விட்ட போதிலுங்கூட, அவர்களிடம் தங்கள் நலனுக்குக் கேடில்லாமல், (ஆரிய மதத்தில் பிரவேசிப்பதில்லை என்பதால்) நடப்பதாக வாக்குறுதி வாங்கிக் கொள்ளுவார்கள். அல்லது அப்படி வாக்குறுதி கொடுக்காதவனையோ, கொடுத்த வாக்குறுதியைத் தவறுபவனையோ விரட்டிவிட்டு வேறொருவனை அழைத்து வந்து வாக்குறுதி வாங்கிக் கொண்டு ஆட்சியில் அமர வைப்பார்கள். இந்தச் சக்தி அவர்களுக்கும்,  அதுவே கொள்கையாக அவர்கள் மதத்திற்கும் அதற்குத் திட்டமாக அவர்களது புராண இதிகாசக் கதைகளுக்கும் இருக்கின்றன.
அதுபோலவே முசுலீம்களுக்குள் பெரிதும், பாகிஸ்தான் பிரச்சினை இந்துமத ஆட்சியை விட்டு மீண்டு கொள்ளுவதும், தங்கள் இஸ்லாம் கொள்கைக்கு ஏற்ற ஆட்சியே நடைபெற வேண்டும் என்பதுமாகும். அதற்கேற்ற மதமே அவர்களது மதமுமாகும். அதற்குத் தகுந்த ஒற்று மையும் கட்டுப்பாடும் அவர்களிடம் உண்டு.
ஆனால், திராவிடர்களுக்கு அதுபோல் என்ன இருக்கிறது? திரா விடர்களுக்கு வடநாட்டில் நூற்றுக்கு அய்ந்து பேருக்குக்கூடத் தாங்கள் திராவிடர்கள் என்றோ, தங்கள் நாடு திராவிட நாடு என்றோ தெரியாது. தென்னாட்டவர்களை வடநாட்டார் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றோ, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றோ கருதுகிறவர் வெகுவெகு அருமையே ஆகும்.
தென்னாட்டவர்களில் தானாகட் டும், திராவிடர்களில் தாங்கள் திராவிடர்கள் என்றும்,  தங்கள் நாடு திராவிட நாடு என்றும், தங்கள் நாட்டில் ஆரிய சமயமும், ஆரிய புராண இதிகாச காவியங்களும் வந்து தங்கள் நிலையைக் குலைத்து, தங்களை ஆரிய அடிமைகளாகவும், முஸ்லீம்களாகவும், கிறிஸ்தவர் களாகவும், கீழான ஜாதியார் ஆகவும், தீண்டாதவராகவும் செய்து விட்டதாக (திராவிடர்களில்) எத்தனை  பேருக்குத் தெரியும்? இந்த நிலையில் திராவிடர்கள் தங்களுக்கு அரசியல் கொள்கையாகவோ திட்டமாகவோ எதைக் கருத முடியும்? முதலாவது திராவிடர்களிடையில் ஆரியர்கள் போலவோ முஸ்லீம்கள் போலவோ சமுதாயத்திலும், சமயத்திலும் ஒன்றுபட்ட உணர்ச்சியும், தாங்கள் யாவரும் ஒன்றேயென்ற ஒற்றுமையும் குறித்துக் காட்டக், காரியத்திற்குத் தொண்டாற்றக் கட்டுப்பாடும் இருப்பதாக யாராவது கூற முடியுமா? ஆரியர்கள் போலவோ, திராவிடர் களுக்கு ஒரு பொது ஸ்தாபனம் எங்கே இருக்கிறது? ஆரியர்களுக்கு ஆரிய தர்மசபை, முஸ்லீம்களுக்கு முஸ்லீம் லீக், கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்தவர்கள் சங்கம் (கிறிஸ்டியன் அசோசியேஷன்) இருக்கின்றன.
திராவிடர்களுக்கோ என்றால் அந்தந்த ஜாதியின் பேரால், அதாவது விஸ்வப் பிராமணர் சங்கம், அக்கினி குல க்ஷத்திரியர்கள் சங்கம், வன்னிய குல க்ஷத்திரியர் சங்கம், நகரத்து வைசிய சங்கம், தொண்டை மண்டல வேளாளர் சங்கம், கார்காத்த வேளா ளர் சங்கம், கொங்கு வேளாளர் சங்கம், முக்குலத்தோர் சங்கம், நாடார் மஹாஜன சங்கம், செங்குந்தர் சங்கம், பேரி செட்டியார் சங்கம், 24 மனை வைசியர் சங்கம், ஆரிய வைசிய சங்கம், நாயுடு சங்கம், வெலம நாயுடு சங்கம், காபு நாயுடு சங்கம், கொல்ல நாயுடு சங்கம், நாயர் சமாஜம், தீயர் யோகம், புலையர் சங்கம், (இன்னும் பல கூறலாம்). இப்படியாகச் சின்னா பின்னப்பட்டுப் ப ல ஜாதிகளும் தங்களைப் பல இனங்களாகக்  கருதிக் கொண்டு, ஒருவருக்கொருவர் கொடுக்கல் வாங்கல் இல்லாமலும், உண்பன தின்பன தண்ணீர் குடித்தல் முதலியவை கூடத் தடுக்கப்பட்டுக் கட்டுக் குலைந்து நெல்லிக்காய் மூட் டையை அவிழ்த்துக் கொட்டியது போல் தனித்தனியாய் இருக்கிறோம்.
இதனால்தான் டாக்டர் அம் பேத்கர் அவர்கள் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தபோது, இன்றைய நிலையில் நமக்குச் சுயராஜ்ஜியம் வந்தால் இன்றைய ஆட்சிபோல ஆளும் ஜாதியார்தான் ஆளுவார்களே தவிர நம் போன்ற அடிமை ஜாதியார் அடிமைகளா கவே, ஆளப்படுபவர்களாகவே தான் இருப்போம்.
ஆதலால் சுயராஜ்ஜிய ஆட்சி இன்றைய ஆட்சியை விட மேலானதாக இருக்க முடியாது என்று சொன்னார். அதாவது ஒற்றுமையும் கட்டுப்பாடும் உள்ள ஜாதிதான் எந்தச் சுயராஜ்ஜியத்திலும் ஆட்சி புரியும் என்றும், அதில்லாத மக்கள் எப்படிப்பட்ட சுதந்திர ராஜ்ஜியத்திலும் ஆளப்படும் அடிமை ஜாதியாகத் தான் இருக்க வேண்டியதாகும் என்றும் அருமையாகச் சொன்னார்.
பிரசண்ட விகடன் மலரிலிருந்து  திராவிடநாடு 25.2.1945).