Saturday, December 29, 2012

ஆரியம் வேறு திராவிடம் வேறே!


திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்:
ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள்.
தமிழர்களே! தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே! பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று.
கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி?
தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம்.
தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
குடிஅரசு - கட்டுரை - 29.11.1947

என் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி!


என்னுடைய பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி விளையாட்டு உணர்ச்சியல்ல. காந்தியாரையே திருத்திய உணர்ச்சி. காந்தியைப் பார்ப்பனர் கொல்லச் செய்த உணர்ச்சி என்பது மாத்திரமல்ல.
தாம் மந்திரிப் பதவியை உதைத்துத் தள்ளிய உணர்ச்சியாகும். இது ராஜாஜிக்கும் ராஜா சர். முத்தையா செட்டியாருக்கும் தெரியும். ராவ்பகதூர் திவான் பகதூர் பட்டத்தையும், தினம் 100 ரூபாய் டபுள் பஸ்ட் கிளாஸ் பந்தா உள்ள கமிசன் பதவியையும் உதைத்துத் தள்ளிய உணர்ச்சியாகும். இதை 1919ஆம் ஆண்டு போர்ட் செயின்ட் ஜார்ஜ் கெசட்டில் பார்த்தால் தெரியும்.
- தந்தை பெரியார் (விடுதலை 2.5.1968)

Sunday, December 23, 2012

யார்? ஆரியரா? அவர் அடிமைகளா?


1. ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தவர் யார்?
2. திராவிட இராவணப் பெரியாரை இராமாவ தாரங்கொண்டு கொன்றது யார்?
3. திராவிட சூரபத்மனை முருகனாக வந்து கொன் றது யார்?
4. திராவிட இரணியனை நரசிம்ம ரூபம் கொண்டு கொன்றது யார்?
5. கம்சனைக் கிருட்டிணனாக வந்து கொன்றது யார்?
6. திராவிட நரகாசுரனை மகாவிஷ்ணு ரூபத்தில் கொன்றது யார்?
7. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?
8. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்?
9. திருப்பாணாழ்வாரைத் தீயிலிட்டுக் கொன்றது யார்?
10. யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி இவை களைச் சுட்டுத் தின்று சுராபானம்  அருந்தியது யார்?
11. வருணாசிரம தருமத்தைப் பிறப்பித்தவன் யார்?
12. மனுதர்ம சாத்திரம் எழுதி நம்மை ஏமாற்றி வந்த கூட்டம் எது?
13. புராண ஆபாசக்கதைகளை எழுதி நம்மை ஏய்த்து வந்தவன் யார்?
14. திருப்பதிக்குப் போய் மொட்டையடிக்காமல் திரும்பி வருபவன் யார்?
15. உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பவர்கள் யார்?
16. மோட்சலோகத்துக்கு வழிகாட்டி டிக்கெட்டு கொடுப்பவன் யார்?
17. திவசம், திதி, கருமாதி, கலியாணம், சடங்குகள் நடத்தி வைப்பவன் யார்?
18. திராவிடன் கட்டிய கோவில்களில் அதிகாரம் செலுத்துபவன் யார்?
19. திராவிடன் கட்டிய சத்திரமானிய வருமானத்தில் உண்டு களிப்பவன் யார்?
20. கஷ்டப்பட்டுக் கோயில் கட்டியவர் யார்? உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது யார்?
21. சத்திரம் கட்டியது யார்? மானிய சொத்தில் சாய்ந்து சாப்பிடுவது யார்?
22. பல ஜாதிகளையும், மதங்களையும் உண்டு பண்ணி யது யார்?
23. உடன் கட்டை ஏறும்படி செய்து பெண்களை வஞ்சித்தது யார்?
24. திராவிடன் ஆசாரத்துடன் பக்தி பண்ணினால் கண்ணைத் தோண்டிக் காட்டில் விட்டவன் யார்?
25. திராவிடன் ஆரியப்பாஷையைப் பேசியதற்காக நாக்கை அறுத்தது யார்?
26. திராவிடன் ஆரியப் பாஷையைக் காதால் கேட்டிருந்ததற்காகக் காதில் ஈயத்தைக் காய்ச்சி விட்டது யார்?
27. திராவிடனை அரக்கனாகவும், சூத்திரனாகவும், குரங்காகவும் எழுதி வைத்தவன் யார்?
28. திராவிட சோதரி சூர்ப்பநகையை மானபங்கம் செய்தவன் யார்?
29. வாலியைக் கொன்று மனைவியை சுக்ரீவனுக்குக் கூட்டி வைத்தது யார்?
30. இராவணனைக் கொன்று விபீடணனுக்குப் பட்டம் கட்டியது யார்?
31. சூரனைக் கொன்று சிங்கமுகனுக்குப் பட்ட மளித்தது யார்?
32. திராவிட இனத்தவரை முன்னுக்கு வரவொட்டாமல் முட்டுக்கட்டை போடுவது யார்?
33. திராவிட நாட்டுப் பிரிவினையைக் கூடாதென்று கொக்கரிப்பவர் யார்?
34. உழைப்பின்றி ஊரார் உழைப்பில் உண்டு களிப்பவன் யார்?
35. கடவுளைத் தரிசிக்க தரகனாக இருப்பவன் யார்?
36.    ஆரிய சமாஜம், ராஷ்டீரிய சேவாசங்கம், இந்து மகாசபை, கம்யூனிஸ்ட் கட்சி, சோஷியலிஸ்ட் கட்சி இவைகளுக்குத் தலைவன், காரியதரிசி யார்?
37. வெள்ளையனை வெளியேற்றி, தென்னாட்டானைச் சுரண்டுபவன் யார்?
38. மதவெறி பிடித்து மதிகெட்டுத் தகாத காரியம் செய்தலைபவன் யார்?
39. தர்ப்பைப் புல்லையும், பஞ்சாங்கத்தையும் காட்டி, இன்றும் ஏமாற்றுபவன் யார்?
40. நீ சுவாமி என்று கும்பிட்டால் இடது கையை நீட்டி உன்னை அவமதிப்பவன் யார்?
41. பெண்ணை ஆடல், பாடல் கற்பித்து சினிமாவில் சேர்த்துப் பணம் சம்பாதிப்பவன் யார்?
42. தமிழ்நாடு வெறுத்த இராஜாஜியை வங்காளக் கவர்னராக்கியது யார்? இன்று கவர்னர் ஜெனரலாக்கியது யார்?
43. கதர்வேட்டி கட்டிக் காங்கிரசில் தலைமைப் பதவியிலிருப்பவர் யார்?
44. கெஞ்சிக் கூத்தாடி லஞ்சம் கேட்கும் பஞ்சாங்கம் யார்?
45. இந்திப் படிப்பைக் கட்டாயப் பாடமாகக் கொணர்ந்தது யார்?
46. நான்கு ஜாதிகளை உண்டு பண்ணியவன் யார்?
47. மதவெறி பிடித்தலையும், மடையனும் முட்டாளும் யார்?
48. முதல் ஜாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் யார்?
49. ஜமீன் ஒழிப்பு மசோதாவைத் தடை செய்தது யார்?
50. தொழிலாளி கூலி கேட்டதற்கு மலபார் போலீசை விட்டு அடித்தது யார்?
51. வில்வித்தை கற்ற ஏகலைவன் கட்டை விரலை நறுக்கிக் கொடுக்கும்படி கேட்டவன் யார்?
52. காப்பி ஓட்டல் முதல் கலெக்டராபீஸ் வரை உயர்ந்த பதவியிலிருப்பவன் யார்?
53. உலகில் கோடீஸ்வரனாயும், ஜமீன்தாரியாயும் இருப்பவன் யார்?
54. தாசில் வந்தால் கொம்பு ராஜினாமாக் கொடுத்து விட்டால் சொம்பு என்று சொன்னது யார்?
55. வேதம் ஓதிப் பாதகம் விளைவிப்பவன் யார்?
56. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மிடம் வரி வாங்குபவன் யார்?
57. ஹரிஜன சகோதரரை அக்ரகாரத்துக்குள் விடாமல் தடுப்பவன் யார்?
58. ஜாதி வித்தியாசமேயில்லை எல்லோரும் ஒன்று எனக் கூறுபவன் யார்?
59. ஜாதி வேறு, சமயம் வேறு, கலை வேறு என்பவன் யார்?
60. ஜாதியைக் கடவுள் படைத்தார் என்று சொல்லி தர்ப்பை ஏந்தும் கை வாளேந்தும் என்றவன் யார்?
61. உலகம் போற்றும் உத்தமர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது யார்?
62. காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார்?
63. காந்தியார் சாம்பலை நதிகளில் கரைத்து விட்டது யார்?
64. காந்தியாருக்கு ராம்தூன் பசனை பண்ணி ஓலமிட்டழுதது யார்?
65. காந்தியார் மகனுக்குப் பெண் கொடுத்தது யார்?
66. காந்தியாரை மகானாக்கி, மகாத்மாவாக்கியது யார்?
67. காந்தியாருக்கு நிதி திரட்டி ஏப்பமிடுவது யார்?
68. காந்தியாருக்குக் கோயில் கட்ட ஏற்பாடு செய்வது யார்?
69. காந்தியார் கோயிலுக்கு அர்ச்சகனாக வரப் போகிறவர் யார்?
70. காந்தியார் கொலை வழக்குகளைப் பிரசுரிக்கக் கூடாதென்பவர் யார்?
71. பெரியார் சொன்ன காந்தி சகாப்தம், காந்தி மதம், காந்தி தேசம் வேண்டாமென்றது யார்?
72. திராவிடர் இழிவு நீங்க அணிந்திருந்த கருப்புச் சட்டைகளுக்குத் தடை விதித்தது யார்?
73. காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை இருட்டடிப்பு செய்து விட்டது யார்?
74. காந்தியார் கொலைக்கு நியாயம் வழங்கும்படி கேட்ட கழகத்தவர்களைத் தடை உத்திரவு போட்டுச் சோதனையிட்டவர் யார்?
75. சரித்திர ஆதாரப்படி அன்றிலிருந்து கொலை செய்து வரும் கூட்டம் எது?
76. திராவிடனைத் தலையெடுக்காமல் தட்டி விட்டுக் கொண்டிருப்பவன் யார்?
77. திராவிடச் சம்புகன் தலையை வெட்டி ஆரியப் பிள்ளையைப் பிழைக்க வைத்தது யார்?
78. சுதேசமித்திரன், தினமணி, பாரததேவி, தினசரிப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் யார்?
79. காந்தியாரைக் கொலை செய்த விநாயகக் கோட்சே கூட்டம் எது?
80. காந்தியார் சதியாலோசனை சம்பந்தப்பட்ட ரிக்கார்டுகளைக் களவாடியவன் யார்?
81. உலகம் போற்றும் உத்தமர் காந்தியார் உயிருக்கு உலை வைத்த கூட்டம் எது?
82. அடுத்துக் கெடுப்பதில் அசகாயசூரனாய், கூடியிருந்து குடி கெடுப்பவன் யார்?
83. தஞ்சை நாயக்கர் வம்சத்தை வேற்றரசரிடம் காட்டிக் கொடுத்தவன் யார்?
84. சமணர்களைக் கழுவேற்றியது யார்?
85. சந்திர குப்தனுக்கு சாம்ராஜ்யம் கிடைக்கும்படி செய்தது யார்?
86. நவ நந்தர்களின் ஆட்சியை வேரறுத்தவன் யார்?
87. சிறுத்தொண்டனைப் பிள்ளைக்கறி சமைத்துக் கேட்டது யார்?
88. வல்லாள மகாராசாவின் மனைவியை பெண்டாளக் கேட்டது யார்?
89. அசோக வம்சத்தாரை அழித்தவன் யார்?
90. சைவனுக்குக் கந்தபுராணமும், வைஷ்ணவனுக்கு இராமபுராணமும் கட்டியது யார்?
91. தேவடியாள் வீட்டில் தரகனாக இருப்பவன் யார்?
92. தாசிகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக்கொடுப்பவன் யார்?
93. அரிச்சந்திரனைப் பொய் சொல்லும்படி படாதபாடு படுத்தியவன் யார்?
94. திராவிட மக்களை ஏமாற்றிப் பிழைக்க வந்த கூட்டம் எது?
95. பல காமாந்தகாரக் கடவுளர்களை உண்டு பண்ணியது யார்?
96. நம்மைப் பல ஜாதிகளாக்கி மொழி, கலை, நாகரிகம், வாணிபம் ஆகிய பல துறைகளிலும் வீழ்ச்சியுறச் செய்தது யார்?
97. எண்ணத் தொலையாத இறைவனை உண்டாக்கி எழுதியது யார்?
98. கடவுளுக்கும் மனைவி, கூத்தி, பிள்ளைகுட்டிகள் இருப்பதாக எழுதியவன் யார்?
99. எவ்விதத் தொடர்புமின்றி சாஸ்திர ரீதியாகப் பிரித்து வைத்தது யார்?
100. காந்தியார் கொலைக்கு முன் திருவுளச் சீட்டுப் போட்டு ஒத்திகை நடத்திய கூட்டம் எது?
- குடிஅரசு - துணுக்குகள் - 22.01.1949

Sunday, December 16, 2012

பார்ப்பனர்களின் சிந்தனைக்கு


கூழுக்குப் போட உப்பு இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! பாலுக்குச் சர்க்கரை இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! காலுக்குச் (நடப்பதற்கு) செருப்பு இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! பல்லக்குக்கு (உட்காரு வதற்கு) பட்டு மெத்தை இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! கூழுக்கு உப்பு, பாலுக்குச் சர்க்கரை இரண்டும் நாக்கு ருசிக்காகத்தான்! காலுக்குச் செருப்பு, பல்லக்குக்குப் பட்டு மெத்தை இரண்டும் அங்கங்களின் நலத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான்! ஆனால், கூழுக்கு உப்பு, காலுக்குச் செருப்பு வேண்டுமென்கிற கவலை வேறு! பாலுக்குச் சர்க்கரை, பல்லக் குக்குப் பட்டுமெத்தை வேண்டுமென்கிற கவலைவேறு! முந்தியது, குறைந்த பட்சமான கூழைக்குடித்தாவது உயிர் வாழவேண்டுமே என்கிற முயற்சி; இறக்கும் வரையிலும் இடையறா துழைக்க எவ்வித இடையூறும் வந்து விடக்கூடாதே என்கிற முன்னெச் சரிக்கை! பிந்தியது, உயர்ந்த பட்சமாய், உணவுக்கு மேற்பட்டதாய், மேனி மினு மினுப்பை வேண்டி மேலான நறுமணத் தோடு தீஞ்சுவையையுடைய பாலுக்கு, மற்றொரு சுவையையும் ஊட்டி மகிழ்ச்சி யோடு பருகவேண்டும் என்கிற முயற்சி; தனக்காக நாலுபேர் நடந்து சுமக்க, தான் நடக்காமலே ஏறிச்சவாரி செய் தாலும், உட்கார்ந்து செல்லும் போது உடலுக்கு வாட்டம் வந்து விடுமே என்கிற முன்னெச்சரிக்கை!  கவலை, எச்சரிக்கை என்கிற பெயரளவில், இரண்டும் ஒன்றாகச் சொல்லப்படுவதாக இருந்தாலும், இந்த இரண்டு வகையாரின் கவலையும், எச்சரிக்கையும் வெவ்வேறு நிலையில் பிறந்தவை! வேறுவேறான போக்கில் வளர்பவை! முந்தியது, ஏமாறியதால். பிந்தியது, ஏமாற்றியதால், அந்த வகை யில் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடை யவை! இந்த இருவகையான நிலையும் இப்போதைய நிலைமைகள் அல்ல. பழங்காலத் தமிழ் நாட்டில் நெடுங் காலமாகப் பரிகாரஞ் செய்யப்படாமல் வளர்ந்து வந்த நிலைமைகள்! பின்பு இவ்விரண்டு போக்கும், அதனதன் வழியிலே, போதிய வளர்ச்சியடைந்து விட்ட நிலைமைகள்!  அதாவது கூழுக்கு உப்பு இல்லையே என்கிற நிலைமை வளர்ந்து, வளர்ந்து கூழே இல்லையே என்கிற நிலைமை! பாலுக்கு சர்க்கரை இல்லையே என்கிற நிலைமை வளர்ந்து, வளர்ந்து பல சுவை சேர்த்துப் பருகிய பாலுக்குப்பின், அது ஜீரணிக்க முடியவில்லையே என்கிற நிலைமை! ஒரு வகையில் இறக்கம்! மற்றொரு வகையில் ஏற்றம்!
இந்த இறக்கமும் ஏற்றமும் ஏன்? இவ்விரண்டையும் சமநிலைப்படுத்தும் வழி என்ன? என்கிற சிந்தனையில், இந்த ஏற்ற இறக்கத்தை அரசியல் துறையில் உத்தியோக விஷயங்களில் சமனிலைப்படுத்த முயன்ற முயற்சிதான் அந்த நாள் ஜஸ்டிஸ் கட்சி!
பல ஜாதிகள், பல வகுப்புகள் உள்ள இந்த நாட்டில், ஏகபோகமாய் ஒரு வகுப் பாரே உத்தியோகங்களில் ஆதிக்கஞ் செலுத்துவது உதவாது, ஒழிக்கப்பட வேண்டியது - எல்லா வகுப்பினரும் இடம் பெறவேண்டும் என்று இதமாக, நீதியைக் காட்டிக் கேட்டபோது புளியேப் பக்காரர்கள் செய்த புன்முறுவலினால் - பொச்சாப்புரைகளால் - திமிர் வாதத்தினால் விளைந்த வளர்ச்சி தான் இன்றையத் திராவிடர் கழகம்!
அறிவுத் துறையின் அதிபதிகள் என்று கூறிக் கொண்டு, அரசியல் உத்தியோக விஷயங்களில் நூற்றுக்கு நூறு தாங்களே இருப்பது சரியல்ல என்பதை, அந்த நாளில் நம் பார்ப்பனத் தோழர்கள் உணர்ந்து, ஏதோ மற்றவர் களும் இடம் பெறட்டுமே என்றெண்ணி இருப்பார்களே ஆனால் மற்றவர்களின் உரிமையை நாம் வஞ்சித்தாலும் வஞ்சனை யில் ஒரு நேர்மையைக் காட்டுவோம் என்று கருதியிருப்பார்களே ஆனால், நிச்சயமான முடிவு நீதிக்கட்சியே தோன்றியிருக்காது! அந்த வஞ்சனையில் வளர்ச்சியில்லா விட்டால், உத்தியோகங்களில் ஏதோ ஒரு பங்கு என்று கேட்ட நீதிக்கட்சி ஒழிந்து, உத்தியோகத்தில் மட்டுமல்ல, உலக வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் - ஊராட்சியின் முழுப்பகுதியிலும், எங் களுக்குப் பங்கு அல்ல, உரிமையுண்டு என்று முழங்கும் திராவிடர் கழகம் ஆகியிருக்க முடியாது! இவ்வுண்மையை நமது பார்ப்பனத் தோழர்கள் எண்ணிப் பார்க்கத் தவறுவது - வஞ்சனையை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு போவது நன்மையைத் தரக்கூடியது தானா? இதை எண்ண வேண்டியவர்கள் அவர்கள்!
அடுத்துக் கெடுப்பது! அணைத்துக் கொல்லுவது! காட்டிக் கொடுப்பது! கழுத்தை அறுப்பது! இதுதான் பார்ப்பனியத்தின் பரம்பரைப் போர் முறை என்பதைச் சுயமரியாதை உணர்ச்சியுடைய ஒவ்வொரு திராவி டரும், ஏன்? வரலாறு அறிந்த ஒவ்வொரு வரும் நன்கு அறிவர். இப்போக்கைப் பார்ப்பனியம் இன்னும் கைவிட்டு விடவில்லை என்பதைத்தான் இன்றைக்கும் பார்க்கின்றோம். இந்த நயவஞ்சக நடத்தை இனியும் வேண்டியதுதானா? இதை எண்ண வேண்டியவர்களும் அவர்கள்தான்! திராவிடர் கழகம் வகுப்புத் துவேஷத்தை வளர்ப்பது; திராவிடர் கழகத்தைத் தீர்த்துக்கட்டுக!! இது! ஒருபுறம் மத்திய ஏகாதிபத்திய யூனியனுக்குப் பார்ப் பனர்கள் செய்யும் வேண்டுகோள்! மற்றொருபுறம் மாகாணப் பார்ப்பன அடிமை சர்க்காருக்குச் செய்யும் கட்டளை! எங்கள் மீதுள்ள குறைகளைப் பற்றியே கூறிக்கொண்டிராதீர்கள்! உங்களுடைய பல திட்டங்களும் நாங்கள் உவந்து ஏற்றுக்கொள்ளக் கூடியன! அப்படியிருக்க, நீங்கள் கூறும் நாட்டு நலனுக்கு நாமெல் லோரும் சேர்ந்து ஏன் பாடுபடக் கூடாது! யோசியுங்கள்! இது, நம் கழகத்திற்கு, கழக தந்தை பெரியாருக்கு பார்ப்பனர் களால் செய்யப்படும் வேண்டுகோள்! இந்த இருவேறு முயற்சி, பார்ப்பனர்களின் நல்லெண்ணத்தை - நன்னடத்தையைக் காட்டுவதா? நயவஞ்சகத்தைப் படம் பிடித்துக் காட்டுவதா? சிந்திக்க வேண்டியவர்கள் அவர்கள்தான்! தோளோடு தோளிணைத்து நாட்டுக் குத் தொண்டாற்றுவோம் என்று நமக்குக் கூறும் நம் அருமைப் பார்ப்பனர்கள், இந்தமாதம் 19ஆம் தேதிதான் சேலத்தில் பார்ப்பன மாநாட்டைக் கூட்டியிருக் கிறார்கள். அப்போது பல தீர்மானங் களையும் செய்திருக்கிறார்கள். செய்யப்பட் டிருப்பதாய்ப் பார்ப்பனப் பத்திரிகைகள் கூறும் தீர்மானங்களிலிருந்து, பரம்பரை நரிக்குணத்தை எப்படிப் பாதுகாப்பது என்கிற ஒரு வழியில் தான் அந்தமாநாடு கவலைப்பட்டிருக்கிறது என்று சொல்லலாமே தவிர, நமக்கு அவர்கள் விடுக்கும் வேண்டுகோளுக்கு ஒத்ததாய் - மனிதப் பண்பைக் காட்டுவதாய் - நீதியையோ நேர்மையையோ விரும்புவ தாய் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. நாட்டு மக்களை இழிவு செய்வதாய், நாலாஞ் ஜாதி, அய்ந்தாம் ஜாதி என்று கூறி மனித உரிமையைச் சூறையாடும் வேதம், வளர்ந்து தழைத்தோங்க வேண் டும்! இது ஒரு தீர்மானம். மற்ற வகுப்பு மாணவர்கள் எக்கேடுகெட்டாலும் எங் களுக்கு கவலையில்லை; எங்கள் வகுப்பு மாணவர்கள் எல்லோருமே உயர்ந்த படிப்புப் படித்தாக வேண்டும். இதற்குத் தடையாய் இருப்பதைத் தகர்த்தெறிய வேண்டுமென்று கூறுவது ஒரு தீர்மானம். இப்படி நாங்கள் ஒரு பட்சமாய், எங்கள் நலனுக்கே அஸ்திவாரம் போட்டு வேலை செய்தாலும், எங்களைப் பற்றி யாரும் துவேஷங் கொள்ளக்கூடாது. எங்கள் மீது நாட்டோர் நல்லெண்ணங் கொள்ளச் செய்ய வேண்டியது இன்றைய மாகாண சர்க்காரின் முதல் வேலை என்கிற மற்றொரு தீர்மானம்.
இன்றைய மாகாண சர்க்காரில் பெரும்பாலோர் சூத்திரர்களாய் இருப்ப தினால்தான், பார்ப்பனர்களின் தனி வளர்ச்சிக்குப் பாதகமாய் இருக்கிறது. மாகாண சர்க்காரை ஆட்டிவைத்து அவர்களைக் கொண்டே முதலில் நம் எதிரிகளை அழித்தொழித்து, பிறகு அவர்களையும் ஒழித்துக்கட்டி, நமது நலத்தை நாம் பேணுவதென்றால், மத்திய சர்க்காரைப் பலப்படுத்துவதும், மத்திய சர்க்கார் செயலை விளம்பரப்படுத்துவதும், மத்திய சர்க்கார் பிடிப்பில் இந்நாட்டை நிலை நிறுத்துவதும் தான் நாம் செய்ய வேண்டிய திருப்பணி என்று கூறுவது இன்னொரு தீர்மானம்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பார்ப்பனோத்தமர்களின் பேச்சுக்கள் என்று, பார்ப்பனப் பத்திரிகைகள் வெளியிட்டிருக்கும் பேச்சுகளைப் பார்த்தாலும், தாங்கள் வேறானவர்கள், உயர்ந்தவர்கள் என்கிற திமிரையும், யார் எதனால், எப்படி அழிந்தாலும் இனநலம் செழித்து வளர வேண்டும் என்கிற சுயஜாதி வெறியையும், எவ்வளவு அயோக்கியத் தனம் செய்தாலும் எங்கள் மீது துவேஷம் கொள்ளாதீர்கள் என்கிற இதோபதேசத்தையும், எங்கள் இன நன்மைக்காக இந்த நாட்டை எவனுக்கும் காட்டிக் கொடுக்கத் தயங்கமாட்டோம் என்கிற கயமைக் குணத்தையும்தான் கண்டுகொள்ள வேண்டியதாயிருக்கிறது.
மாநாட்டுக்குப் பிறகு, அடுத்த படியாக, மாகாணத்திற்கு வந்திருக்கும் ஏகாதிபத் தியப் பட்டேலிடம் இவர்கள் காவடி தூக்கி இருக்கிறார்கள் என்பதைப் பட்டேல் பிரபு அவர்கள் பேச்சுகளி லிருந்து தெரிகிறது. பார்ப்பனியத்தின் அழிவு வேலைகளைப் பகிரங்கப்படுத்தி, நச்சுக் கிருமிகளால் நாசமாகாதீர் என்று நாட்டோரை எச்சரிக்கும் ஒரே ஒரு விடுதலையை ஒழித்து விட வேண்டுமென்கிற ரூபத்தில், நம்மை அண்டவரும் பார்ப்பனர்களின் காவடி ஆட்டம் நடந்திருக்கிறது. சென்னை சத்தியமூர்த்திக்குப் போட்டியாகப் பாம்பே சத்தியமூர்த்தி என்பதாகக் காங்கிரஸ்காரர்களால் புகழப்படுபவர் நம் பட்டேல் பெரு மான் அவர்கள். இந்தப் பெருமான் தான், சுரண்டும் கூட்டத்திற்குப் பாதுகாப்பாக, சுரண்டும் கும்பலின் பிரதிநிதியாக பவநகரை நமக்கு அருளியவர். இவரின் இப்போதையக் குணாதிசயங்கள் வேறு என்று கூறப்பட்டாலும், ஒரு ஏகாதிபத்திய வெறியைக்காட்டத் தவறவில்லை இவரின் சென்னைப் பேச்சுக்கள்! இத் தகைய குணாளர் சட்டத்தைக் காற்றில் பறக்கவிட்டு, நியாயத்தை உதறித்தள்ளி, நீதியைக் குழிதோண்டிப் புதைப்பீர்! என்பதாக பார்ப்பனிய அடிமை சர்க் காரான, மாகாண மந்திரிசபையின ருக்கு உபதேசம் புரிவாரானால் அது ஆச்சரியப்பட வேண்டியதல்ல. விடிந் தால் தெரிகிறது, வெள்ளை முட்டையா? கருப்பு முட்டையா என்கிற சங்கதி!
ஆனால், பார்ப்பனர்கள் பரம்பரை யாகவே நாம் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்று துணிந்து திட்டம் போட்டுச் செயல் செய்கிறார் களே, இதைக் கண்டு நாம் உண்மை யாகவே பச்சாதாபப் படுகிறோம்! பார்ப் பனர்களின் திட்டத்தால் - சூழ்ச்சியால் இன்று அவர்களின் எண்ணம் - திராவிடர் கழகம் ஒழிய வேண்டுமென் கிற விருப்பம் நிறைவேறலாம்; நிறைவேற்றியும் விடலாம்.
ஆனால், பின் விளைவு என்ன? அரசாங்க உத்தியோகத்தில் பங்கு கேட்ட நீதிக்கட்சியை, அய்ம்பதாயிரம் அடிகீழ் புதைக்கப்பட்டதாக அகமகிழ்ந் தனர் முன்பு! அந்தப் புதைகுழியிலிருந்து பெரும்பூதம் தோன்றிவிட்டதே; பங் கல்ல, உரிமை என்கிறதே! உத்தியோகத் திலல்ல, ஊராளும் ஆட்சியில் என்கிறதே! என்று இப்போது ஓலமிடு கின்றனர்! இதை ஒழித்துக் கட்டுவது எப்படி? இதற்குச் சமாதி எழுப்புவது எப்படி? என்று சதித்திட்டமிடுகின்றனர் இன்று! திட்டத்தின் வெற்றிக்குப் பின் சிந்தை பூரிக்கலாம், உண்மைதான்! ஆனால் சமாதியிலிருந்து மற்றொன்று தோன்றுமே; அது அன்பை அடிப் படையாகக் கொண்டு திராவிடர் கழகத்தைப்போல அகிம்சை வழியில் நில்லா திருக்குமானால், அதைத்தாங்கி நிற்கும் பார்ப்பனர்களின் எதிர்காலம் என்னவாகும்? இதை எண்ண வேண் டியவர்களும் அவர்கள்தான்!
குடிஅரசு - தலையங்கம் - 26.02.1949

Sunday, December 9, 2012

இந்தியா அடிமைப்பட காரணம்?


கேள்வி    :    நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும் படியான ஆகாரம்கூடக் கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடாவிட்டாலும் அவர்களுக்கு வயிறுபுடைக்கக் கிடைக் கின்றது. இதற்கு என்ன காரணம்?
பதில் :    நமது மதமும் ஜாதியும்.
கேள்வி    :    நாம் பாடுபட்டுச் சம்பாதித்தும் நம் பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90 பேருக்கு மேலாக தற்குறிகளாயிருக்கிறோம். ஆனால்,  பாடுபட்டுச் சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர்களில் 100க்கு 100பேர் படித்திருக்கிறார்கள். இதன் காரணம் என்ன?
பதில் : மதமும் ஜாதியும்.
கேள்வி    : நமது பணக்காரக் குடும்பங்கள் வரவரப் பாப்பராய்க் கொண்டே வருவதற்குக்  காரணமென்ன?
பதில் : வினையின் பயன். அதாவது நம்மவர்கள் தங்கள் சமுகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்குப் பணமும் கொடுத்து வந்த பாவமானது அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜுகளாகவும் வந்து, மேற்படி பார்ப்பனரல்லாதார்களைப் பாப்ப ராக்குகிறார்கள். அதற்கு யார் என்ன செய்யலாம்?
கேள்வி    : எந்தவிதமான விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்?
பதில் : வெளியார்க்கு தெரியும்படியாகச் செய்த விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்.
கேள்வி    :    கிறிஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?
பதில்:    ஒரு கெடுதியும் இல்லை. ஆனால், மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.
கேள்வி    : மகம்மதியனாவதில் என்ன கெடுதி?
பதில்: ஒரு கெடுதியுமில்லை. ஆனால் பெண்களுக்கு மூடிபோடாதே.
கேள்வி    :    உண்மையான கற்பு எது?
பதில்:    தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு.
கேள்வி    :    போலிக் கற்பு என்றால் எது?
பதில்:    ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனதிற்குப் பிடித்தமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக்கற்பு.
கேள்வி    :    மதம் என்றால் என்ன?
பதில்:    இயற்கையுடன் போராடுவதும், அதைக் கட்டுப்படுத்துவதும்தான் மதம்.
கேள்வி    :    தொழிலாளர்களுக்குப் பண்டிகை நாள் களில் ஏன் ஓய்வு(லீவு) கொடுக்கப் படுகின்றது?
பதில்:    பாடுபட்டுச் சம்பாதித்து மீதி வைத்ததைப் பாழாக்குவதற்காக.
கேள்வி    :    பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?
பதில்:    அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக.
கேள்வி    :    மனிதனுக்குக் கவலையும், பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
பதில்:    பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்து விட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்துபோகும்.
கேள்வி    :    பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டு மானால் என்ன செய்ய  வேண்டும்?
பதில்:    தலைமயிரை வெட்டி விட்டால் அதிக நேரம் மீதியாகும்.
கேள்வி    :    பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
பதில்:    அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்புச் சேலையை இழுத்து இழுத்துப் போடுவதே வேலையாகும்)
கேள்வி    :    எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன  செய்ய வேண்டும்?
பதில்:    ஒருவனும் தன் தேவைக்கு மேல் எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டிய அளவு கிடைத்துவிடும்.
கேள்வி    :    பெரிய மூடன் யார்?
பதில்:    தனது புத்திக்கும், பிரத்தியட்ச அனுபவத்திற் கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன், எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன்  பெரிய மூடன்.
கேள்வி    :    ஒழுக்கம் என்பது என்ன?
பதில் :    ஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்வதாகும்.
கேள்வி    :    சமயக் கட்டுப்பாடு - ஜாதிக்கட்டுப்பாடு என்றால் என்ன?
பதில்:    மனிதனைத் தன் மனச்சாட்சிக்கும், உண் மைக்கும் நேராய் நடக்க  முடியாமல் கட்டுப்படுத் துவதுதான் ஜாதி சமயக் கட்டுப்பாடாய் இருக்கின்றது.
கேள்வி    :    உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?
பதில்:    கடவுள் எங்கு மறைந்து போவாரோ என்று பயந்து, அவரைக்காக்க பிரயத்தனம் செய்வதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக்  காணப்படுகிறது.
கேள்வி    :    ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?
பதில்:    தடி எடுத்தவன் தண்டல்காரனென்பது தான் ஜனநாயக ஆட்சி.
கேள்வி    :    நம் நாட்டில் ஜனசங்கை பெருக வேண்டு மானால் என்ன செய்ய வேண்டும்?
பதில்:    அதிகமாக பிள்ளை பெறுவதை நிறுத்தி, விதவைகளுக்கு மறுமணம்  செய்தால் நல்ல திடகாத்திரமுள்ள ஜனசங்கை பெருகும்.
கேள்வி    :    நம் நாடு சீர்ப்பட என்ன வேண்டும்?
பதில் :    நம் நாடு சீர்ப்பட்டு நாமும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டுமானால், நாஸ்திகமும், நிபந் தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண் டியனவாகும்.
கேள்வி    :    இந்தியா அடிமையானதற்குக் காரணம் என்ன?
பதில் :    இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய்ப் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும், கடவுள்களுமேயாகும்.
கேள்வி    :    கிறிஸ்தவ மதத்தில் சில ஆபாசக் கொள் கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?
பதில்:    கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள்கைகளும்  இருந்த போதிலும் அதைப்பற்றி  நமக்குக் கவலை இல்லை.  ஏனெனில், அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாகி விட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன  உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமு மாகும்.
கேள்வி    ;    பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்குவர முடிந்தது?
பதில்:    மத விஷயத்தில் அவர்களுக்கு கிடைத் துள்ள உயர்ந்த நிலையால்  அவர்கள் (பார்ப் பனர்கள்) எல்லோரையும்விட முன்னேறியிருக்க முடிந்தது. மத விஷயத்தில் பார்ப்பனர்களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பாடுபடத்  தெரியாது. ஆகவே, சோம்பேறிகளின் கதியே அடைய வேண்டியவர்களாவார்கள்.
கேள்வி    :    ஆண் விபசாரர்கள் விபூதி பூசுவதின் மூலம் மோட்சத்திற்குப்போக நேர்ந்து விட்டால், அங்குபோய் தங்கள் விபசாரத்திற்கு என்ன செய்வார்கள்?
பதில்:    அதற்காக எந்த விபசாரகனும் விபூதி பூசுப வரும் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், அங்கு இந்த விபூதிப் பக்தர்களுக் கென்றே ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ ரம்பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும் சமையல் செய்யவேண்டிய வேலைகூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென்றால், காமதேனு, கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுத்துவிடும்.
கேள்வி    :    பார்ப்பனர்களில் ஒருவகையாருக்கு ஏன் முகம் சூப்பையாயிருக்கின்றது.
பதில்:    அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கை வீட்டில் அனுமார் படம் வைத்திருக்கின் றார்கள். அதனால், அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது.
கேள்வி    :    பெண் விபசாரிகள் விபூதி பூசியதன்மூலம் மோட்சத்திற்குப் போய்விட்டால் அங்கு அவர் களுக்கு வழி என்ன?
பதில் :    கடவுள் இருக்கிறார், போதாக்குறைக்கு அங்குள்ள மற்ற தேவர்களைக் கொண்டு சரிப் படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.
கேள்வி    :    கடவுள் ஏன் காண முடியாதவராயிருக் கிறார்?
பதில் :    அவர் பண்ணும் அக்கிரமத்திற்கு யார் கைக்காவது கிடைத்தால் நல்ல உதை கிடைக்கு மென்றுதான்.
கேள்வி    :    கடவுள் செய்த அக்கிரமம் என்ன?
பதில் :    ஏன்? மூட்டைபூச்சி, கொசு இரண்டை யும் அவர் உற்பத்தி செய்த அக்கிரமம் ஒன்றே போதாதா?
- சித்திர புத்திரன் எனும் புனைப்பெயரில் எழுதியது - குடிஅரசு - கேள்வி பதில் - 15.01.1949