Saturday, September 28, 2013

பாரதத்தாயின் துயரம்

ஏ காங்கிரசே! நீ என்று ஒழிகிறாயோ அன்றுதான் நான் விடுதலை அடைவேன். நீ இப்போது பாரதத் தாயாகிய என்னை மீளா நரகத்திலாழ்த்தி விட்டாய்.
என் மக்களில் பெரும்பாலோரை அயோக் கியர்களாக்கி விட்டாய். யோக்கியமான மக்களை குறைத்து விட்டாய். நீ இல்லாமலிருந்தால் இப்போது தலைவர்கள், தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அநேக அயோக்கி யர்கள் என் சார்பாய் பேசி வயிறு வளர்க்க முடியுமா? நீ இல்லாவிட்டால், எனது அருமைப் புத்திரனான காந்திமகான் எனக்காகச் செய்த தவமும், தியாகமும், ஆத்ம சக்திப் பிரயோகமும் பலனற்றுப் போகுமா?
நீ இல்லாவிட்டால் உன்னுடைய உபத்திரவம் இல்லாவிட்டால், எனது அருமை மகன் மகாத்மா மூலையில் உட்கார முடியுமா? நீ இல்லாவிட்டால் பம்பாயில் கூடிப்பேசிய அயோக்கியர்களும், சுயநலக்காரர்களும், துரோகிகளும் ஜனப்பிரதிநிதிகள் ஆவார்களா? என் பெயரைச் சொல்லி என்னைக் காட்டிக் கொடுத்து மாதம் 1- க்கு 1000, 2000, 3000, 4000, 5000, 6000 வீதம் எனது ஏழைகளின் பணத்தைக் கொள்ளை கொள்ளுவார்களா? என்னை மானபங்கப்படுத்த இத்தனை வக்கீல்கள் வருவார்களா? எனது கற்பை அழிக்க இத்தனை கோர்ட்டுகள் ஏற்படுமா? இவற்றிற்கு எல்லாம் யார் பொறுப்பாளி?
காங்கிரஸ் பாவியாகிய அரக்கி நீ அல்லவா எனக்கு எமனாய்த் தோன்றி இருக்கிறாய்? என்று நீ ஒழிவாய்? அன்று நான் நரகத்தில் இருந்து எழுவேன். விடுதலை பெறுவேன். சுயமரியாதை அடைவேன். இது சத்தியம்.
பாரதத்தாய் தனது மக்களுக்குச் சொல்வது.
ஏ மக்களே! உங்கள் மூடபுத்தி என்று ஒழியும், உங்கள் மூட புத்தியாலல்லவா நாட்டில் பிளேக்கு, காலரா, வைசூரி முதலிய தொத்து வியாதிகள் இருப்பது போல் காங்கிரஸ், சுயராஜ்யம், தேசியம் முதலிய தொத்து வியாதிகள் பரவி என்னைப் பாழாக்குகிறது. காலரா, பிளேக், வைசூரி ஒவ்வொன்றும் மனிதனின் சரீரத்தையும் உயிரையும் மாத்திரம் பற்றி கொள்ளை கொள்ளக் கூடியது,
ஆனால் காங்கிரஸ்  சுயராஜ்யம் தேசியம் என்னும் வியாதிகளோ எனது, முப்பத்து முக்கோடி மக்களையும், அவர்கள் வாழும் தேசமாகிய என்னையும், அவர்களது அறிவையும், செல்வங்களையும், ஒழுக்கங்களையும், என் உயிர் போன்ற சுயமரியாதையையும் கொள்ளைகொண்டு பாழ்பண்ணிக் கொண்டு வருகிறதே, இதை கவனிப்ப தில்லையா? மக்களே! நீங்கள் மாக்கள் அல்ல என்பதற்கு இது தானா அடையாளம்?
இவ்வியாதிகளின் பேரால் வைத்த பாரமெல்லாம் சுமக்கிறேன் இன்னும் வை இன்னும் வை என்று உங்கள் முதுகைக் குனிந்து கொடுக்கிறீர்களே இதுதான் உங்கள் மக்கள் தன்மையா?
எவனாவது ஒரு காங்கிரஸ்காரன், இந்த ஊருக்கு ஒரு கோர்ட்டு வேண்டுமென்று விண்ணப்பம் எழுதிக்கொண்டு வந்தால் உடனே நீங்கள் அப்பன், மக்கள் எல்லோரும் கையெழுத்து போட்டு விடுகிறீர்கள். கோர்ட்டு வைத்த மறுநாளே நீங்கள் அப்பன், மக்கள், அண்ணன், தம்பி, எஜமான், குமாஸ்தா, குடியானவன், மிராஸ்தார் என்கிற முறையில் கோர்ட்டுக்குப் போக வேண்டியுள்ள வர்களாகிறீர்கள்.
பிராமணியம், பிரிட்டாணியம் இந்த இரண்டைவிட தேசியமே பெரிய ஆபத்தானது. பிரிட்டாணியத்தை கடுகளவாவது அசைக்க வேண்டுமானால் முதலில் இந்த தேசியமும், இரண்டாவது ஆக பிராமணியத்தையும் தொலைக்க வேண்டும்.  பிராமணியத்தை நிதானமாகக்கூட ஒழிக்கலாம்.
அவசரமாக தேசியத்தைத் ஒழிக்க வேண்டும். ஏனெனில், தேசியமே பிரிட்டானியத்திற்கு அஸ்திவாரமாயிருக்கிறது. தேசியத்தை இடித்து விட்டால் பிரிட்டானியம் ஆடிப்போகும். தேசியமில்லாதிருக்குமானால் வெகு நாளைக்கு முன்பே பிரிட்டானியம் உண்மையான சுதேசியமாய் விட்டிருக்கும்.
- சித்திரப்புத்திரன்
- குடிஅரசு - கட்டுரை -  05.06.1927

Sunday, September 8, 2013

கடவுள் ஒருவராம் - ஆனால் பிறப்பு நான்காம்!

இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காது என்பது போல் எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பதும் அத் தனை கடவுள்களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியவை ஏற்படுத்தி இருப் பவை அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக் கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான நேரங்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாகிக்கொண்டே வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக் கூடிய காரியமல்ல.
இக்கடவுள்களில் முதன்மை பெற்றதும் மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும் இந்துக்கள் என்பவர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக் கொண்டு வணங் கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனைக் கணபதி என்றும் விநாயகன் என்றும் விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதுண்டு.
நிற்க, இந்தப் பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும் கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங்குவதுமாக இப்போது அமலில் இருக்கும் பழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக்கொள்ளக்கூடியதும் அதிக செல் வாக்குள்ளதும் முதற்கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைப்பற்றி சற்று கவனிப்போம்.
1. ஒரு நாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதிதேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து நான் குளித்து விட்டு வெளியில் வரும் வரை வேறு யாரையும் உள்ளே விடாதே என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும் அந்த சமயத்தில் பார்வதி புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண் டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனையும் பார்த்து பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கு, கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத் தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய் என்று கேட்டதாகவும் அதற்கு சிவன் காவல்காரன் தலையை வெட்டி உருட்டி விட்டு வந்தேன் என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெண்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதி யின் துக்கத்தை தணிக்க வேண்டி வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்டவைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலி ருந்த ஒரு யானையின் தலையை வெட்டி முண்டமாக கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து அதற்கு உயிரைக் கொடுத்து பார்வதியை திருப்தி செய்த தாகவும் கதை சொல்லப்படுகின்றது. இக் கதைக்கு சிவ புராணத்திலும், கந்த புராணத் திலும் ஆதாரங்களுமிருக்கின்றனவாம்.
2. ஒரு காட்டில் ஆண் பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகமேற் பட்டுக் கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.
3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றி ருக்கையில் ஒரு அசுரன் அக்கருப் பைக்குள் காற்று வடிவமாக சென்று அக் கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும் அதற்கு பரிகாரமாகப் பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.
4. தக்கனுடைய யாகத்தை அழிப்ப தற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும் தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்ட தாகவும் சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பி னதாகவும், அவன் போய்ப்பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும் உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்த தாகவும் மற்றொரு கதை சொல்லப்படு கின்றது. இது தக்க யாகப்பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.
5. இன்னும் பல வழிகள் சொல்லப்படு கின்றன. அதனைப் பற்றியும் இப்பிள்ளை யாரின் மற்ற கதைகளைப் பற்றியும் மற்றொரு சமயம் கவனிக்கலாம்.
எனவே பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும் அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற் கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப்பல வித மாகச் சொல்லப்படுவதும். அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதா யிருந்தால் மற்ற கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க, ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால் அந்தத் தாய் தகப்பன்களான கடவுள் களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டு தானே தீரும் (இவைகளைப் பார்க்கும் போது கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஆகவே இந்தக் கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கின்றது. இதனைப் பின்னால் கவனிக்கலாம்)
கடவுளைப் பற்றிய விவகாரங்களோ சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் கடவுள் ஒருவர்தான் அவர் நாம ரூப குணமற்றவர், ஆதியந்தமற்றவர், பிறப்பு இறப்பு அற்றவர் தானாயுண்டானவர் என்று சொல்லுவதும் மற்றும் அது ஒரு சக்தி என்றும், ஒரு தன்மை அல்லது குணம் என்றும் பேசி அந்த சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொண்டு பிறகு இம்மாதிரிக் கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இதுபோன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய் கற்பித்து அவற்றை யெல்லாம் மக்களை நம்பவும் வணங்க வும் பூசை செய்யவும் உற்சவம் முதலியன செய் யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும் புரட்டும் கஷ்டமும் நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.
உதாரணமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம். சிதம்பரம் கோவிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து அதன் தும்பிக்கையை மற்றொரு பெண்சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்ப துடன் இந்தக் காட்சிக்கு தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது. பல ஆண் பெண் பக்தர்கள் அதை தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள்.
சில தேர்களிலும் ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண்குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும் அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத் தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டி ருக்கின்றது. இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும், புராணமும் இருப்பதாகவும் சொல்லப் படுகிறது.
அதாவது ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும் அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களை யெல்லாம் அந்த கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியில் இருந்து ஈசல் புற்றிலிருந்து ஈசல்கள் புறப்படுவது போல் பல லட்சக் கணக்காய் வந்து கொண்டே இருந்த தாகவும், இதை அறிந்த அந்தக் கடவுள், பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும் உடனே பிள்ளையா ரானவர்  ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல் களை உறிஞ்சுவதுபோல் தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள்விட்டு அங்கிருந்த அசுரர்களை யெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாகச் சொல்லப்படுகின்றது. எனவே இம்மாதிரியான காட்டுமிராண்டித் தன்மை யான ஆபாசங் களுக்கு கண்டவை களையெல்லாம் கடவுள் என்று சொல்லும் ஆஸ்திகர்கள் என்ன பதில் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்.
எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான் என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா?
இன்றைய தினமும் அவ்வெ ழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப் படவில்லையா அன்றியும் பல கோவில்களில் உருவங்களாகத் தோன்ற வில்லையா? இதை எவனோ ஒருவன் செய்து விட்டான் என்று சொல்வதனால் இவைகளுக்குத் தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்கவில்லையா? என்பது போன்றவை களைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கின்றோம்.
சீர்திருத்தக்காரர்கள் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்றும் மதத்திற்கு ஆபத்து, சமயத்துக்கு ஆபத்து கடவுள்களுக்கு ஆபத்து என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும் கடவுளையும் காப்பாற்ற வென்று அவைகளிடம் வக்காலத்து பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம்.
இவற்றையெல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகாமணிகளுக்கும் ஒரு சிறிதும் கவலை யில்லாவிட்டாலும் பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் குறைவில்லை என்று சொல்வதோடு இந்த ஆபாசங்களையெல் லாம் ஒழிக்க முயற்சிக்காமல் சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களை பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்துவிட்டு இதை எடுத்துச் சொல்லுபவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லி விடுவ தாலேயே எந்தக் கடவுளையும் எந்தச் சமயத்தையும் காப்பாற்றிவிட முடியா தென்றே சொல்லுவோம் இனி அடுத்த முறை அடுத்தக் கடவுளைப் பற்றிக் கவனிப்போம்.
- குடிஅரசு - கட்டுரை - 26.08.1928

Sunday, September 1, 2013

ஆதி திராவிடர் சுயமரியாதை மகாநாடு

தந்தை பெரியார் சென்னை நேப்பியர் பார்க்கில் (தில்லைவனத்தில்) ஆதி திராவிட சுயமரியாதை மகாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானமாவது:
ஆறரைக் கோடி மக்கள் அடங்கிய எங்களுடைய பெரும் சமூகமானது, இந்து மதத்தில் சேர்க்கப்பட்டிருப்பதின் நிமித்தம் தீண்டப்படாதவர்களாயிருப்பதாலும், அம்மதத்தில் சமத்துவ உரிமை இல்லாதிருப்பதாலும், இனி அடுத்து வருகின்ற சென்சஸ் கணக்கில் எங்களை இந்துக்கள் என்று பதியா மலிருக்கும் படியும், சர்க்கார் தஸ்தா வேஜூகளிலும் எங்களை இந்துக்கள் என்ற பதவியிலிருந்து நீக்கி விடும் படிச் சர்க்காரையும், சட்டசபை அங்கத்தினர்களையும் இம்மகாநாடு வேண்டிக் கொள்ளுகின்றது என்ப தாகத் தீர்மானித்திருக்கின்றது.  திருவாங்கூர் ராஜ்ஜியத்திலும் சுமார் 3 வருடங்களுக்கு முன்பாக முது குளத்தூர் என்கின்ற இடத்தில் கூடிய ஒரு எஸ்.என்.டி.பி. யோகத் தில்  அதாவது ஈழவ சமுதாய மகா நாட்டில் இதை அனுசரித்த ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது, இந்து மதத்தில் மனித சுதந்திரம் இல்லாததால் இம் மதத்தை விட்டு வேறு மதத்திற்குப் போய் விடவேண்டும் என்பதாகும்.
இத்தீர்மானம் ஒன்று வரப் போவதாகத் தெரிந்து சில கிறிஸ்தவ பாதிரிகளும், ஆரிய சமாஜிகளும், புத்தமதப் பிரமுகர்களும் அக் கூட்டத்திற்கு வந்திருந்து தங்கள் தங்கள் மதத்தின் பெருமையை எடுத்துச் சொன்னார்கள்.
திரு ஈ.வெ. ராமசாமியும், அம்மகா நாட்டுக்குப் போயிருந்தார். தீர் மானத்தை ஆதரித்துப் பேசியபோது, இது சமயம் வேறு மதத்திற்குப் போக வேண்டியதில்லை. இனியும் சிறிது காலம் பார்க்கலாம் என்றும், அப்படி மதம் மாறுவதாயிருந்தால் மகமதிய மதத்திற்குப் போவது நல்லது என்றும், ஏனெனில், மதத்தின் பேரால் மக்கள் இப்போது மகம்மதிய மதத்தைக் கண்டால் தான் பயப் படுகிறார்கள் என்றும், அதில் பெண்கள் விஷயம் தவிர, மற்ற வழிகளில் உண்மையான சர்வ சுதந்திரமும் இருக்கிறது என்றும், நமது நாட்டில் உள்ள கிறிஸ்தவ மதம் வரவர பார்ப்பன மதம் மாதிரியாகி வருகின்ற தென்றும், அதிலும் ஜாதி உயர்வு பாராட்டப்படுகிறது என்றும், ஆரிய சமாஜம் என்பது பார்ப்பன மதத்தின் வேறு ஒரு ரூபமே ஒழிய வேறில்லை என்றும், பவுத்தக் கொள்கைகள் இப்போதுள்ள மற்ற எல்லா மதங்களின் கொள்கைகளை விட மேலானது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்றும், ஆனாலும் பார்ப்பன மதத்தை அடக்கி நமது நாட்டிற்கு உண்மையான விடுதலை தேடிக் கொடுக்க வேண்டுமானால் இது சமயம்  மகமதிய மதத்தினால் தான் முடியுமென்றும் பேசினார். பிறகு அவர் சொன்ன படியே இப் போது மதம் மாறவேண்டிய தில்லை என் தீர்மானிக்கப்பட்டது. இப்போது ஆதிதிராவிட மகாநாட்டிலும் சரி யாக அதே போல் இல்லா விட்டா லும், இந்து மதத்திலிருந்து விலகிக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட் டிருக்கின்றது. அப்படியானால் இனி அவர்கள் என்ன பெயரில் அழைக்கப் படுவது என்று சிலர் கேட்கலாம். ஒரு பெயராலும் அழைக்க வேண்டிய தில்லை என்றும், அவசியமானால் இந்தியன் என்று அழைக்கலாம் என்றும் சொல்லுவோம். மேலும் சர்க்காரில் குறிக்க ஏதாவது ஒரு பெயர் வேண்டாமா என்றால், அதற்காக இப்போது இந்தியாவில் உள்ள 20 கோடி இந்துக்கள் என்பவர் களை எப்படி அரசியல் முறையில் மகம்மதியரல்லா தவர்கள் என்று அழைக்கப்படுகின்றதோ, அது போல் 61/2 கோடி தீண்டப்படாத மக்கள் என்பவர்களை இந்துக்களல்லாத வர்கள் என்று அழைக்கலாம் என்று சொல்லுவோம்.
பார்ப்பனரல்லாதவர்களும், மகமதியரல்லாதவர்களும் இருக்கும் போது இந்துக்களல்லாதவர்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது என்றும், அதனால் எவ்வித இழிவும் ஏற்பட்டுவிடாது என்றும் சொல்லுவோம். அப்படி ஓர் இழிவு ஏற்படுவதாயிருந் தாலும் இந்துக்கள் என்ற பெயரை வைத்துக் கொண் டிருப்பதன் மூலம் ஏற்பட் டிருக்கும் இழிவை விட அதிகமான இழிவாய் விடாது என்பது நமது அபிப்பிராயம்.  இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லாத நிலையில்,  அதன் பேரில் மக்கள் அழைக்கப்படுவது மிகவும் அக்கிரமமான செய்கையா கும். அப்படியிருக்க, அதன் பேரால் மனிதனின் உரிமை களை மறுத்து கோயில், குளம், தெரு, பள்ளிக்கூடம் முதலியவற்றின் உரிமை களை மறுப்பது எல்லாவற்றை யும் விட அக்கிரமும் அயோக் கியத்தனமுமாகும். சாதாரணமாக, இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதைப் பற்றி நாமே தனித்து சொல்லுவதாகவும், அதைப் பற்றிய படிப்பு சிறிதும் இல்லை என்றும், அதுவும் பார்ப்பனர்கள் மீது துவேஷத்தால் சொல்லுவதாகவும் சிலர் சொல்லுகின்றார்கள்.
ஆனால், இப்போது நமது நாட் டில் ஆங்கிலத்திலும், தமிழிலும் வல் லவர் என்றும், சமய ஆராய்ச்சியில் தேர்ந்தவர் என்றும், மிக்க நுண் ணிய அறிவுடையவர் என்றும் பல் லோராலும் மதிக்கப்படும் உயர்திரு வாளர் திருநெல்வேலி கா. சுப்பிர மணியபிள்ளை எம்.ஏ., எம்.எல்., அவர்கள் சுமார் 7, 8 வருடங்களுக்கு முன் செந்தமிழ்ச் செல்வி என்னும் புத்தகத்தில் எழுதி இருப்பதை இங்கு அப்படியே எழுதுகின்றோம்.
முதல் முதல் மக்கள் உள்ளத்தே பதிய வேண்டியது யாதெனில், இந்து மதம் என்ற ஒரு சமயம் உண்மையில் கிடையாது என்பதும், இந்து மதம் என்பது இந்தியா நாட்டிலுள்ள மக்களின் சமயம் என்று கொள்ளப் படும் சிந்து நதிக் கரையில் உள்ளவர் களைக் குறிக்கும் ஹிந்து என்ற பாரசீகச் சொல்லை கிரேக்கர் இந்து என வழங்க, அவர் வழக் கத்தைப் பின்பற்றி மேலை தேசத்தார் யாவரும் இந்நாட்டிலுள்ளாரை இந் துக்கள் எனவும், இந்நாட்டை இந் தியா எனவும் வழங்கலாயினர். இந்து என்ற சொல் இப்பொருளில் ஆரியம், தமிழ் என பண்டைய இரு மொழி நூல்களிலும் கிடையாது.
இந்நாட்டிலே சமயங்களைப் பற்றிச் சிறிதும் அறியாதவர்கள் தங்கள் மதத்தை இந்து மதம் என்று கூறுவார்கள்.  அய்ரோப் பியம், அமெரிக்கம், ஆங்கிலம் என்ற சொற்கள் வாயிலாக அன்னாரது சொற்களும், நாகரிகங் களும் குறிக்கப்படுவதே யல்லாது சமயம் குறிக் கப்படாமை போல, இந்து என்ற சொல்லும் இமயம் முதல் குமரி வரையில் உள்ள மக்களின் நாகரி கத்தைக் குறிப்பதேயன்றி சமயத்தைக் குறிப்பதன்று. இக்கருத்தைச் சுவாமி விவேகானந்தரும் தமது சொற்பொழிவு பலவற்றி லும் சுட்டிக் காட்டி உள் ளார்.  . . ஒரு சமயத்திற்குப் பெயர் அதன் கடவுளை வைத்தாதல், தலைமை ஆசிரியரை வைத்தாதல், அருள் நூலை வைத்தாதல் எழுது வது முறை. . . கிறித்து மதமும், மகம் மதிய மதமும் தங்களது தலை வரின் பெயரைத் தமக்குப் பெயராகக் கொண்டுள் ளன. அவ்வாறே புத்த மதமும் ஆருகத முமாம். ஆனால் இந்து என்ற சொல்லோ சமயக் கருத்து யாதொன்றையும் குறித் தில்லை.
இக்குறிப்பில் திரு பிள்ளை அவர்கள் சுவாமி விவேகானந்தரும் இதே அபிப்பிராயம் கொண்டதாகக் கூறியிருக்கிறார். எனவே இப்படி ஓர் அர்த்தமே இல்லாத வார்த்தையின் பேரால் மதம் என்று ஒன்றைக் கற் பித்துக் கொண்டு, சமயத்திற் கேற்றபடியெல்லாம் கொள்கை களைச் சொல்லிக் கொண்டு, 20 கோடி மக்களையும், பல வளப்பமுள்ள ஒரு பெரிய தேசத்தையும் பாழாக்கி வருவதை இனியும் எத்தனை காலத்திற்கு மக்கள் பொறுத்துக் கொண்டு இருப்பது என்பது விளங்கவில்லை.
இதைப் பற்றி மற்றொரு சமயம் டாக்டர் எஸ். சுப்பிரமணிய அய்ய ரான ஒரு பார்ப்பனர் அவர்கள், காமன்வீல் என்ற பத்திரிகையில் எழுதி இருப்பதாவது:-
இந்துக்களின் தற்கால நிலை மையைக் கவனித்துப் பார்த்தால் தாறுமாறாகச் சீர்குலைந்து அலங் கோலப்பட்டு இடிந்து பாழாகிக் கிடக்கும் மதம் இந்து மதம் என்றும், பழைய கோட்டை அங்கே சிறிது இங்கே சிறிதாக எவ்வாறு ஒழுங்கு படுத்தி முட்டுக் கொடுத்துப் பழுது பார்த்தாலும் பயன்படாது. தயவு தாட்சண்யமின்றி நெட்டித் தள்ளி ஒதுக்கிவிட்டு ஆதி அடிப்படை களின் மீது நமது தற்கால அவசியத் திற்கும்,  உபயோகத்திற்கும் ஏற்ற தாகச் சாதாரணமான புதுக்கட்டடம் ஒன்று கட்டுவதே உத்தமம் என்று தோன்றுகின்றது என்று எழுதி இருக்கின்றார்.
இன்னும் அநேக பெரியோர் களும் ஆராய்ச்சியாளர்களும் இதே அபிப்பிராயம் கொண்டிருக்கின் றார்கள். இந்நிலையில் குழந்தை மணத்தைத் தடுக்கவும், மக்கள் தெருவில் நடக்கவும், சாமிகளின் பேரால் கோயில்களில் நடக்கும் விபச்சாரத்தனத் தைத் தடுக்கவும், சிறு குழந்தைகளைப் படுக்கை அறையில் தள்ளுவதை ஒழிக்கவும் செய்யப்படும் முயற்சிகளை இம் மாதிரி ஒரு பொய் மதம் தடுப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் எந்த விதத்தில் மானமும், வீரமும், யோக்கியமும் உடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும்.
எனவே, ஆதிதிராவிட மக்கள் தங்களை எப்படி இந்துக்கள் என் கின்ற பதிப்பில் பதியக்கூடாது என்கின்றார்களோ, அது போலவே நாமும் சொல்ல வேண்டியவர்களாய் இருக்கின்றோம். ஏனெனில் இந்துக்கள் என்கின்ற பதிப்பில் நம்மைப் பதிந்து கொள்ள நாம் சம்மதிப்பதனால், நமக்கு ஆதி திராவிடர்களை விடக் கீழான நிலையான சூத்திரன் என்கின்ற பதவிதான் கிடைக்கின்றது. அதை நீக்கிக் கொள்ள இதுவரை எந்தச் சீர்திருத்தக்காரரோ, சட்டசபைப் பிரதிநிதியோ, வேறு எந்தச் சமூகத் தவரோ  முயற்சித்ததாகத் தெரிய வில்லை. ஆஸ்திகம் போச்சு கடவுள் போச்சு மதம் போச்சு  சமயம் போச்சு புராணம் போச்சு கலை போச்சு என்று கூப்பாடு போட்டுக் கூலி பெற நம் நாட்டில் ஆட்கள் மலிந்து கிடக்கின்ற தேயல்லாமல், மானம் போச்சு, மனித உரிமை போச்சு, மிருகத்திலும் கீழாச்சு என்று சொல்லி மனிதத் தன்மை பெற யாரையும் காணோம். எனவே நாமும் ஆதி திராவிட சகோதரர்கள் போலவே நம்மையும் இந்து என்னும் தளையில் இருந்து பிரித்துவிடு என்று கேட்கும் நாள் சீக்கிரத்தில் வரும் என்றே கருது கிறோம்.
- தந்தை பெரியார் அவர்கள் கட்டுரை (`குடிஅரசு, 21.7.1929)