Sunday, June 24, 2012

வாசக சாலைகளும், கல்வியின் நிலையும்


அன்புள்ள தோழர்களே!

பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்கு இம்மாதிரி வாசகசாலைகள் பெரிதும் அவசியமானதாகும்.  பள்ளிக்கூடங்கள் எழுத்து வாசனையையும் ஏதாவதொரு விஷயத்தில் விளக்கத்தையும் தான் உண்டாக்க உதவும்.  ஆனால், வாசக சாலை என்பது பொது அறிவு விளக்கத் தையும் சகல விஷயங்களிலும் ஞானத் தையும் உண்டாக்கும். நல்ல முறையில் அமைக்கப்படும் வாசகசாலையும், புத்தக சாலையும் மனிதர்களை சகல விஷயங் களிலும் ஞான பண்டிதர்களாகவும் அனுபவ ஞானமுடையவர்களாகவும் ஆக்கிவிடும்.  நம் நாட்டில் பொது உணர்ச் சியின் மீது ஏற்படுத்தப்படும் வாசகசாலை, புத்தகசாலை மிகக் குறைவென்றே சொல்லலாம்.
நம் நாட்டில் ஒரு புத்தகசாலை இயக்கம் இருப்பதாகவும், அதற்கு சர்க்கார் ஆதரவு கூட இருப்பதாகவும், 4, 5 வருடமாக அறிந்து வருகிறேன்.  ஆனால், அது யாரோ ஒரு குறிப்பிட்ட நபர்களின் சுய நலத்துக்கும், சில குறிப்பிட்ட பத்திரிகை, புத்தகம் ஆகியவை விற்பனையாவதற்கும், உள் எண்ணத்துக்கும் பயன்பட்டு வருவ தாக உணர்கிறேன்.  நம் நாட்டில் எப்படிப் பட்ட பொது நன்மையான காரியத்தையும், ஒரு சில நபர்களோ, ஒரு வகுப்போ சுவா தீனம் செய்து கொண்டு சுயநலத்திற்கே பயன்படுத்திக் கொண்டு வரப்படுகிறது.  இதற்குக் காரணம் பொது மக்களுக்குக் கல்வியறிவும், பொது ஞானமும் இல்லாத தேயாகும்.
மத விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பொது ஜனங்கள் பக்தி செலுத்தவும், பணம் கொடுக்கவும், அடிபணியவும் ஒரு வகுப்பார் அவற்றை கொள்ளையடிக்கவும், நலம் பெறவும்தான் பயன்படுத்தப்படு கிறதே ஒழிய, மற்றபடி மதத்தால் ஒழுக் கமோ, ஞானமோ பெற முடிகிறதா? என்று பாருங்கள்.  அது போலவே அரசியலை எடுத்துக் கொள்ளுங்கள்.  பொது ஜனங்கள் காசு பணம் கொடுக்கவும், ஓட்டுக் கொடுக்கவும், ஒரு வகுப்பார் அதனால் நலம் பெறவும், உயர் வாழ்வு நடத்தவும் மற்ற மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தவும் தான் பயன்பட்டு வருகிறது.  அதுபோலவேதான் கல்வியை எடுத்துக் கொண்டாலும் சரி, வேறு எதை எடுத்துக் கொண்டாலும் சரி அவற்றிற்காக பொது மக்கள் வரி கொடுக்க வேண்டும்.  கஷ்டப்பட வேண்டும். பலனை எல்லாம் ஒரு சிறு வகுப்பார் அடையவேண்டும் என்கிறதாகத்தான் இருந்து வருகிறது.
உழைப்பு நமக்கு, பலன் யாருக்கு?
கல்விக்காக செலவாகும் பணம், நேரம், உழைப்பு ஆகியவைகளை எடுத்துக் கொள்வோமேயானால் அதனால் கல்வி கற்றுக் கொடுப்பவர்கள் என்னும் கூட் டத்தார் அடையும் பலனில் 4இல் ஒன்று 8இல் ஒன்று கூடப் படிக்கும் மக்களுக்கோ, படிக்கச் செலவுக்கு பணம் கொடுக்கும் பெற்றோர்களுக்கோ பயன்கிடையாது.  நம் கல்வித் திட்டம் பெரிதும் கற்றுக் கொடுப்பவர்கள் நன்மைக்கு ஆகவே இருந்து வருகிறது.  இவற்றிற்கு எல்லாம் காரணம் பொது மக்களுக்குப் பொது ஞானம் இல்லாததேயாகும்.
புத்தக சாலை, வாசக சாலை ஆகியவைகளை வெளிநாடுகளில் நான் பார்த்து இருக்கின்றேன்.  ஒரு புத்தக சாலையில் 500 பேர் 600 பேர் வேலை யாட்கள் இருந்து வருவதைப் பார்த்தேன்.  3 லட்சம் 4 லட்சம் புத்தகங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.  தினம் ஒன்றுக்கு 5 ஆயிரம் 10 ஆயிரம் பேர்கள் வந்து படிப்பதும், எழுதிக்கொண்டு போவதும், புத்தகங்கள் எடுத்துக் கொண்டு போவது மான காரியங்களை ஒரு நாள் முழுதும் இருந்து பார்த்து இருக்கிறேன்.
கிராமங்களுக்கும் மற்ற சின்ன ஊர்களுக்கும் புத்தகங்கள் வாரா வாரம் அனுப்பப்படுவதையும் திரும்பி வந்து சேருவதையும் பார்த்தால் மிக மிக ஆச்சரியமாய் இருக்கும்.  ரயில்வே வாகன் புத்தகசாலையின் முன் வாசலில் வந்து நிற்கும்.  அந்த ரயில் தொடர்ச்சியாகப் போய்ச் சேரும் ஊர் வரையில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு கட்டு வீதம் பல புத்தகங்கள் கட்டப்பட்ட கட்டுகள் வாகன் நிறைய அடுக்கப்படும்.  தபால் கட்டுபோல் அது டேஷன் டேஷனுக்கு எடுத்துக் கொடுக்கப்படும்.  அதுபோலவே வரும் போது படித்து முடித்த புத்தகங்கள் கட்டுக்கட்டாய் வாங்கிவரப்படும்.  இந்தக் காரியம் ஒரு பெரிய இலக்காவாக நடைபெறுகிறது.
பத்திரிகை அபிமானம்
அது போலவே பத்திரிகை படிப்பதும் நடைபெறுகிறது. பத்திரிகை படிக்காத மனிதன் சமுகத்தில் கேவலப்படுத்தப் படத்தக்கவராவர். சகல கூலிக் காரர்களும், தொழிலாளிகளும் வீட்டு வேலைப் பெண்களும் தினம் 2 முறை யாவது பத்திரிகை படிப்பார்கள்.  வீடுமெழுகும் ஒரு வேலைக்காரப் பெண் ஒரு கையில் லோஷன் நனைத்த துணியில் நிலத்தை மெழுகிக் கொண்டே மற்றொரு கையால் பத்திரிகை படித்துக்கொண்டே இருப்பதை நான் பார்த்தேன்.  பத்திரிகை விநியோகிக்கப் பட்ட  2 மணி 4 மணி நேரத் திற்குள் பழைய பத்திரிகையை வாங்கும் வியாபாரி வந்துவாங்கிக் கொண்டுபோய் கடைகளுக்கு விற்றுவிடுவான்.  அன் றாடப் பத்திரிகையை அன்றாடமே கடையில் சாமான் மடித்துக் கொடுப்பதைப் பார்க்கலாம்.  அரசியல் ஞானமும், மற்றும் ஊர்ப் பொது விஷயமும் ஒவ்வொரு வருக்கும் தெரியும்.  ஒருவரை ஒருவர் ஏமாற்றமுடியாது.  இவற்றிற்கெல்லாம் காரணம் அந்த நாடுகளில் படித்த மக்கள் 100க்கு 100 பேர்களாக இருப்பதே ஆகும்.
நம் நாட்டில் 100க்கு 8 பேர் 10 பேரே படித்திருக்கிறார்கள்.  பெண்கள் 1000க்கு 8 பேர் 10 பேரே படித்திருக் கிறார்கள். இதனால் அதிக வாசக சாலை ஏற்படவோ அதிக புத்தகசாலை ஏற்படவோ இடமில்லாமல் போனதோடு, ஏற்பட்டாலும் பயன்படவோ, நிலை பெறவோ முடியாமல் போய்விடுகிறது.  நம்மில் கொஞ்சம் பேரே படித்திருந்தாலும் நமக்குப் படிக்க நல்ல புத்தகங்கள் கிடை யாது.  தமிழ்ப் புத்தகமெல்லாம் புராணங் களும், அவற்றிற்குப் புதுப்புது உரைகளும் கருப்பொருள்களும், நுண்பொருள்களு மாகத்தான் இருக்கிறதே ஒழிய, அறிவுக்கு ஏற்ற புத்தகங்கள் இல்லை.  கதைப் புத்தகம், இலக்கியப் புத்தகம் என்பதும் ஒரு ஊரில் ஒரு ராஜா, அவன் வேட்டைக்குப் போனான்.  அங்கொரு பெண்ணைப் பார்த் தான் காதல் கொண்டான் என்கின்ற துவக்கமும், காதலுக்கு உயிரை விட்டான்; கற்புக்காக உயிரை விட்டான் என்கிற முடிவுமல்லாமல் வேறு விஷயம் காண்பது அரிதாகவே இருக்கும்.  நம் புத்தக வியாபாரிகள், வித்வான்கள், கலைவாணர்கள் எல்லோருடைய யோக்கி யதையும் இப்படித்தான் இருக்கிறது.
இங்கிலீஷின் சிறப்பு
இங்கிலிஷ் பாஷைக்கும், கலைக்கும் மத சம்பந்தமோ, பைபிள் சம்பந்தமோ கிடையாது.  இங்கிலிஷ் பண்டிதர்களுக்கு மத சம்பந்தமான விஷயம் தெரியாது.  ஆனால், தமிழ் பண்டிதனுக்கு மதத்தைவிட வேறொன்றும் தெரியாது.  இதனால் தான் நம் பாஷைகள் உலகில் மதிக்கப்படுவதில்லை.  ஆதிபாஷையாக இருக்கலாம்.  கடவுள் பேசிய பாஷையாக இருக்கலாம்.  அநேக அருள் வாக்கு கொண்ட பாஷையாக இருக்கலாம்.  அது வேறு விஷயம்.  அறிவுக்கு பயன் உண்டா? என்பதற்குப் பதில் வேண்டும். நம் தமிழ் பண்டிதர்கள் 100க்கு 99 பேர்கள் மத பக்தர்களே ஒழிய, அறிவாளிகள் என்று சொல்லத்தக்கவர் கள் மிகச் சிலரேயாவார்கள்.
ஆனால், தமிழ் பாஷை நமக்கு நன்மை அளிக்கவில்லை.  நமக்கு இன்று இருக்கும் சிறிது வீரத்துக்கும், தன்மான உணர்ச் சிக்கும் தமிழ் எவ்வளவோ உதவி புரிந் திருக்கிறது.  அது இல்லாதவரை இவ்வ ளவு தமிழ் மக்களும் நிஜமாய் குரங்கு களாகவே (அனுமார்களாகவே) இருந் திருப்போம்.  ஆனாலும் தமிழைப் போற்ற வேண்டு மானால், பரப்ப வேண்டு மானால் மதத்திலிருந்து பிரிக்க வேண் டும்.  விஞ்ஞானம், பொது அறிவு தமிழில் ததும்ப வேண்டும்.  பத்திரிகை களும், வெறும் அரசியலும் மதமுமாகத் தான் இருக்கிறதே தவிர பொது அறிவுக்கு பத்திரிகை இல்லை.
பொது அறிவு பரப்பக்கூடிய பத்திரி கைகள் மலிந்திருக்குமானால் மதத்தி னால் அரசியலில் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள இழிவுகளும் கேடுகளும் ஏற்பட்டிருக்கவே மாட்டா.  ஆதலால் இந்த வாசக சாலை புத்தகசாலை நிர்வாகஸ் தர்கள் இவற்றை கவனிக்க வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன். இவ் வாசகசாலைக்குப் பனகல் வாசகசாலை என்று பெயர் வைத்திருப்பதில் நான் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறேன்.
பனகல் பெருமை
பனகல் என்று பெயர் வைப்பது பனகல் ராஜாராமராய நிங்காரின் தனிப்பட்ட பெயருக்கு ஆக அல்ல. அது ஒரு புரட்சியின் அறிகுறியைக் காட்டுவ தற்கு ஆகும்.  பனகால் ஒரு புரட்சி வீரர். தியாகராயரையும், மாதவநாயரை யும் லெனினுக்கு ஒப்பிட்டால் பனகால் டாலினுக்கு ஒப்பிடலாம்.  இவர்களு டைய புரட்சி வீரம் தான் தேவர்களாய் இருந்த இந்நாட்டு பார்ப்பனர்களை மனிதர்களாக ஆக்கிற்று. அவர்களது புரட்சித் தன்மைதான் இந்நாட்டு சூத் திரர்களை இழிமக்களை கீழ்ஜாதி யார்களை மனிதர்களாக ஆக்கிற்று.  இக்காரியம் மதங்களையும் கடவுள் களையும் ஒழிப்பதைவிட சொத்துக் களை சமமாக பிரித்துக் கொடுப்பதை விட முக்கியமானதும் பிரயாசையான தும் என்பதை உணருங்கள்.
ஓர் உதாரணம்
இன்றைய சூத்திரர்களுக்கும் பார்ப் பனரல்லாத மக்களுக்கும் சண்டாளர் களுக்கும் தீண்டப் படாத மக்கள் என்பவர்களுக்கும் இதன் அருமையும் பெருமையும் தெரியாது.  ஏனெனில் இப்படிப்பட்டவர்கள், மனிதத்தன்மை சமத்துவ உணர்ச்சி ஏற்பட்டதற்குப் பிறகு அறிவு பெற்றவர்களும் கருப்பந்தரித்த வர்களுமாவார்கள்.  ஆதலால் அவர்கள் பிறக்கும் முன்பு அறிவு பெறுமுன்பு அவர்கள் சமுகத்துக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் என்ன யோக்கியதை இருந்தது என்பது அவர்களுக்குத் தெரி யாது.  ஒரு சிறு உதாரணம் சொல்லு கிறேன்.  சுமார் 30, 35 வருஷங்களுக்கு முன் எனது தகப்பனார் ஈரோட்டில் முனிசிபல் கவுன்சிலர், பிரபல வியாபாரி, சுமார் 100, 150 ரூபாய் இன்கம்டாக்ஸ் கட்டி வந்தவர்.  அவரை அக்காலத்தில் 12ஙூ ரூ 15 ரூ சம்பளம் உள்ள ஒரு முனிசிபல் பில்கலெக்டர் பார்ப்பனன் வரி விதிப்பு விஷயமான ஒரு விண்ணப்பத்தை நேரில் பார்த்து பைசல் செய்ய மண்டிக் கடைக்கு வந்து கூப்பிடுவான்.  அப்படிக் கூப்பிட வந்தால் அவனைக் கண்டதும் என் தகப்பனார் எழுந்து ராவால ராவால தேவடா வரவேணும்  வரவேணும் வாமீ என்று இரு கை கூப்பி (தூக்கி) கும்பிட்டு உட்காரச் சொல்லிவிட்டு நின்று கொண்டே இருப்பார்.  அப்பார்ப்பன பில்கலெக்டர் தலை ஆட்டிவிட்டு உட்கார்ந்து கொண்டு ஏமிரா வெங்கிட்ட நாயுடு போத்தாமா ஆஇண்டினி சூசே தானிக்கு ஏண்டா வெங்கிட்ட நாயுடு, அந்த வீட்டை பார்க்க போகலாமா? என்று கூப்பிடுவான்.  என் தகப்பனார் ஆ! ஹா என்று சொல்லி வஸ்திரத்தைத் தலையில் கட்டிக் கொண்டு அவன் பின்னால் புறப்பட்டு விடுவார்.  சுற்றி விட்டு வந்தவுடன் மஞ்சள், மிளகாய், கருப்பட்டி வெல்லம், எல்லாம் ஒரு சாக்கில் கட்டி பையனிடம் கொடுத்து சுவாமிகள் வீட்டில் கொடுத்து விட்டுவா என்று சொல்லி வழியனுப்புவார் இதை நான் நேரில் பார்த்ததைச் சொல்லுகிறேன்.
பார்ப்பனத் திமிர்
இதே மாதிரி எவ்வளவு பெரிய மிராசு தாரரையும், ஒரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பனன் நாயிலும் கீழாக மதித்து அடாபுடா என்று பேசுவான்.  இதுவும் நான் கண்ணால் பார்த்ததேயாகும்.  இந்த நிலைமைக்கும், இன்றைய நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்.  ஆகவே எனக்கும் என் போன்றவர் களுக்கும் அல்லவா தெரியும் தியாக ராயருக்கும், நாயருக்கும், பனகாலுக் கும் எவ்வளவு மரியாதை செலுத்த வேண்டும், எவ்வளவு பெருமை அளிக்க வேண்டும் என்பது.
சுயமரியாதை இயக்கத்துக்கு முன்பு பார்ப்பனர்கள் நிலைமையும் மத உணர்ச்சியும் எப்படி இருந்தது?  இந்த 10, 15 வருஷத்தில் எவ்வளவு தூரம் மாற்ற மடைந்திருக்கிறது?  என்பவைகளை உணர்ந்தவர்களுக்குத்தான் அவ்வியாதியினால் ஏற்பட்ட பலனும் அதன் அவசியமும் விளங்கும்.  இம் மாதிரியான பெரிய புரட்சிகள் சமுதாய வாழ்வில் உண்டாக்கின  இயக்கங்களுக் கும், புரட்சிக்காரர்களுக்கும் மக்கள் நன்றி செலுத்துவதற்கும், அவற்றை ஞாபகப் படுத்தி மற்றவர்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதற்குமாகவே அவர்களின் பெயர்களை மக்களுக்கும் இம் மாதிரியான வாசகசாலை முதலியவைகளுக்கும் இடப்பட்டு வருகிறது.
ஒரு வேண்டுகோள்
இவ்வூர் பொதுஜனங்கள் இவ்வாசக சாலையை ஆதரிக்க வேண்டும்.  அங்கத் தினர் களாக வேண்டும்.  தாராளமாக பண உதவி செய்ய வேண்டும்.  பெண்களும், ஆண்களும் அங்கத்தினர்களாக வேண் டும்.  சீர்திருத்த உணர்ச்சியும், பகுத்தறிவு உணர்ச்சியும் பெற வேண்டும். அறிவுக்குப் புறம்பான எதையும் அலட்சியம் செய்ய வேண்டும்.
இந் நிலைமையை நம் மக்கள் அடைந்து விட்டால் சுதந்திரத்துக்கு என்றும், சுயமரியாதைக்கு என்றும் மக்கள் போர் தொடுக்க வேண்டிய அவசியமே ஏற் படாது.  ஏனெனில் இன்று நாம் அறிவில்லாத குறையில் அடிமையாய் சுயமரியாதை அற்றுக் கிடக்கின்றோமே ஒழிய, சுதந்திரமில்லாமல் அல்ல. மனிதனுக்குச் சுதந்திரம் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ள அறிவில்லை. எப்படி பயன்படுத்துவது?  எது சுதந்திரம்?  என்பது கூட நமக்கு இன்னும் சரியாய் தெரியவில்லை.  சிலர் வெள்ளைக்காரனை விரட்டுவது, சுதந்திரம் என்கிறார். சிலர் பொருள்கள் சமமாய் இருப்பதைச் சுதந்திரம் என்கிறார், சிலர் கட்டுப்பாடு ஒழுக்கம் இல்லாமல் இருப்பது சுதந்திரம் என்கிறார்.  சிலர் தனது முட்டாள்தனம், பேராசை, அயோக்கியத்தனம், நன்றி கெட்டத்தனம் ஆகியவைகளுக்கு ஏற்ப தன்னிச்சையாய் திரிவது சுதந்திரமென்கிறார். சிலர் பாடுபடாமல் ஊரார் உழைப்பால் வாழ்ந்து திரிவது சுதந்திரம் என்கிறார். எது சுதந்திரம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாய் இருக்கிறது.
ஆகவே, மக்கள் யாவரும் கல்விபெற்று உலக விவகாரமுணர்ந்து, தன்னைப் போல் அந்நியர் என்பதை உணர்ந்து அன்புடனும் பரோபகார உணர்ச்சியுடனும் இருந்து வாழ ஆசைப்பட வேண்டியது மனிதனுக்கு அவசியமாகும். அதற்கு இப்படிப்பட்ட வாசகசாலை அறிவு வளர்ச்சிப் புத்தகம் சமத்துவ உணர்ச்சி சம்பாஷணைக் கூடம் ஆகியவை அவசியம் என்று சொல்லு கிறேன். தோழர்களே!
(01.03.1938-இல் காஞ்சிபுரம் பனகல் அரசர் வாசக சாலை ஆண்டு விழாவில்  பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் உரை)
                                                                                                                                            குடிஅரசு - சொற்பொழிவு - 06.03.1938

No comments:

Post a Comment