Sunday, November 14, 2010

மார்க்கட்டு நிலவரம்

 (சித்திர புத்திரன் என்ற புனைபெயரில் பெரியார் எழுதியது)
தமிழ்நாட்டில் மார்க் கட்டு நிலவரம் தெரியப் படுத்தி வெகுநாள் ஆகிவிட்டதால் இது சமயம் இரண்டொரு சரக்கு களுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம்.
பெண்கள் ஓட்டுகள்
செட்டி நாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து வந்ததானது, இப்போது சவுத்துப் போய் ஒரு சைபருக்கே மோசமேற்பட்டு 4000, 5000 விலையில் அசல் செட்டி நாட்டுப் பெண்கள் தாராளமாய் கிடைக்கும் நிலைமை வந்துவிட்டது. காரணம் சுயமரியாதை தேசத்திலிருந்து ஏராளமான சரக்குகள் (பெண்கள்) வந்து இறங்கத் தலைப்பட்டு விட்டன. ஆதலால் வெளிநாட்டு சரக்குகளை (சுயமரியாதைப் பெண்களை) செட்டி நாட்டுக்குள் வராதபடி வெளி நாட்டுச் சரக்குகளுக்கு வரி போட வேண்டுமாய்ச் செட்டி மார்களும் சர்க்காருக்கு (சமுகத்தாருக்கு) விண்ணப்பம் போட்டிருக்கிறார்கள். அப்படி அரசாங்கத்தார் (சமுகத்தார்) வரி போடுவார்களானால் பெண்கள் இருக்கிற நாட்டுக்கே, குடிபோய்விடுவதாக பெண் வாங்குவோர்கள் கூடிப் பேசி முடிவு செய்து தீர்மானத்தை அரசாங்கத்துக்கு (தங்கள் சமுகத்தாருக்கு) தெரிவித்து இருப்பதாகத் தெரிகிறது.
முனிசிபல் ஓட்டர்களுக்கு இது சமயம் கிராக்கி அதிகம். பொப்பிலி ராஜாவின் ஒரு அறிக்கையின் பயனாய் முனிசிபல் ஓட்டுகளுக்கு கிராக்கியற்று சில இடங்களில் அவ்வளவையும் சமுத்திரத்தில் கொட்ட வேண்டி வருமோ என்று விவசாயிகள் (ஓட்டர்கள்) கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். நல்ல வேளையாய் அந்த உத்தரவு வரவில்லை. எல்லா முனிசிபாலிட்டிகளுக்கும் தேர்தல் இந்த வருஷத்திலேயே அதுவும் இந்த மாதத்திலேயே நடக்க வேண்டுமென்று கட்டளையிட்டு விட்டதால் ஓட்டர்கள் நிலவரம் வெகு கிராக்கியாகிவிட்டது.
ஈரோடு
குறிப்பாக ஈரோட்டில் சில வார்டுகளில் ஓட்டுச் செலவே இல்லாமல் போய்விட்டது. சில வார்டுகளில் மொத்தத்தில் எதிர் அபேட்சகருக்கு 250 முதல் 500 ரூபாய் வரை ஆகிவிட்டது.
சில வார்டுகளில் அதாவது குடியானவர்களே சம்பந்தப்பட்ட வார்டுகளில் ஓட்டு ஒன்றுக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை. சில வார்டுகளில் அதாவது வியாபாரிகள் சம்பந்தப்பட்ட வார்டில் ஓட்டு ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய், 20 ரூபாய் கூட ஆகிவிட்டது என தெரிகிறது.
சில வார்டுகளில் அதாவது காங்கிரசு சம்பந்தப்பட்ட வார்டு என்று சொல்லப்படுவதில் ஓட்டு ஒன்றுக்கு 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும், சில ஓட்டுகள் விஷயத்தில் 40, 50 ரூபாய் வரையில் கூட விலை ஏறிவிட்டது.
சுமார் 300 ஓட்டர்கள் உள்ள ஒரு வார்டுக்கு ஒரு அபேட்சகர் 3000ரூ எடுத்து வைத்திருப்பதாகத் தெரிகின்றது. மற்றொரு அபேட்சகர் 5000ரூ எடுத்து வைத்து எலக்ஷன் இன்னும் 10 நாள் இருக்கும் போதே 2000 ரூபாய்க்கு மேல் செலவழித்து விட்டதாகவும் தெரிகின்றது. அதிகப் பணம் செலவு செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது பார்வதிக்குப் பரமசிவன் சொன்ன உறுதி மொழியாகும்.
ஆகவே இந்த எலக்ஷன் முறை, ஏழை ஒட்டர்கள் பிழைக்க அரசாங்கத்தார் செய்த தர்மமாகும். ஆதலால் ஓட்டர்கள் பணம் கொடுப்பவர்களை வாழ்த்துவதை விட, இப்படிப்பட்ட தேர்தல் முறையைக் கற்பித்த அரசாங்கத்தார் நீடூழி காலம் சிரஞ்சீவியாய் - எப்படிப்பட்ட சிரஞ்சீவியாய்? மார்க்கண்டன், அனுமார், விபூஷணன் போன்ற சிரஞ்சீவியாய் அல்ல. சூரியன், சந்திரன் போன்ற சிரஞ்சீவியாயும் அல்ல. அவைகள் கூட ஒரு காலத்தில் இல்லாமல் போய்விடும். மற்றெப்படிப்பட்ட சிரஞ்சீவியாய் என்றால் - கல்லும், காவேரியைப் போல் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டுமென்று வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறார்கள்.
சில கடவுள்களும் இந்த அரசாங்கத்துக்கு சிரஞ்சீவி பட்டம் கொடுக்கக் கடமைப்பட்டிருக் கின்றனர்.
ஏனெனில் ஓட்டுக்கு விலையாக ஓட்டர்களுக்குப் பணம் கொடுப்பது மாத்திரமல்லாமல் கோவில்கட்ட, மசூதி கட்ட, சர்ச் சட்ட, என்று 100, 500, 1000 கணக்காய் ரூபாய் கொடுக்க வேண்டியிருப்பதால், அந்த மதக் கடவுள்கள் இப்படிப்பட்ட எலக்ஷனை உண்டாக்கிய அரசாங்கத்தை ஆசிர்வதிக்க கடமைப்பட்டிருக்கின்றன.
நல்ல வேலையாக ஈரோட்டைப் பொறுத்தவரை ஓட்டுகளுக்கு ஜாதிச் சண்டைகளை விலையாகக் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. அதன் பெருமை சேர்மனுக்கே சேர வேண்டியது.
- பகுத்தறிவு - கட்டுரை - 23.09.1934
ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
ஜஸ்டிஸ் பத்திரிகைக்காக இதுவரை சுமார் 4, 5 லட்ச ரூபாய் வரையில் பொது மக்களிடமிருந்து உதவித் தொகையாகவும் மந்திரிகள் சம்பளத்திலிருந்து பார்ட்டி உதவித்தொகையாகவும் பெற்றிருக்கலாம். இது தவிர இன்றும் பொப்பிலிராஜா அவர்களால் 2000, 3000 கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு இருந்தும் அப்பத்திரிகை ஒரு தடவை இன்சால்வெண்டு கொடுத்தாய் விட்டது. பலரது கடனுக்கு நாமம் சாத்தியுமாய் விட்டது. மறுபடியும் பொப்பிலி ராஜா சுமார் 50 ஆயிரம் ரூபாய் போல் செலவழித்துமாய் விட்டது. இந்த நிலையில் பத்திரிகை எவ்வளவு போகின்றது என்று சொல்ல நமக்கே வெட்கமாய் இருக்கிறது. இவ்வளவு யோக்கியதையில் அது பிரசுரிக்கிற முறையும் சிரிப்புக்கிடமானது என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.
தோழர் சர். சண்முகம் அவர்களுடைய பிரச்சாரங்களையும், நடவடிக்கைகளையும் கூட சரிவர பிரசுரிப்பதும் இல்லை. சுயமரியாதைக்காரரின் சமுக சம்பந்தமான வேலைகளைக் கூடச் சரிவர பிரசுரிப்பதும் இல்லை. இன்னும் அதன் யோக்கியதை சொல்வதென்றால் நமது பல்லைக் குத்தி நாமே முகர்ந்து பார்ப்பது போல் இருக்குமாதலால் விட்டு விடுகிறோம்.
மாதம் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஜஸ்டிஸ் பத்திரிகையின் பேரால் பாழாக்கும் பொப்பிலி ராஜா அவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமோ? தெரியாதோ? என்று சந்தேகிக்கின்றோம். இதைப் பற்றி பல தடவை ஞாபகப்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும் இதுவே முதல் தடவையாகவும் கடைசித் தடவையாகவும் இருக்க வேண்டும் என்கின்ற ஆசையின் பேரில் இதை எழுதுகிறோம்.
- பகுத்தறிவு - செய்தி விளக்கம் - 23.9.1934

No comments:

Post a Comment