Saturday, November 27, 2010

சர்க்கார், காங்கிரஸை விட மோசமானதா?

பட்டேலின் ஸ்ரீ முகம்
தோழர் வல்லபாய் பட்டேல் அவர்கள் சென்னை மாகாண காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் முனைந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதாகவும், சென்னை மாகாணக்காரர்கள் காங்கிரஸ் காரருக்கே ஓட்டு செய்ய வேண்டும் என்றும் அதற்குக் காரணம் அடக்கு முறையைக் கண்டிக்க வேண்டியும், வெள்ளை அறிக்கையை நிராகரிக்க வேண்டியும் காங்கிரஸ்காரர்களே தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். மற்றும் காங்கிரஸ்வாதி அல்லாத மற்றவருக்குக் கொடுக்கும் ஓட்டு சர்க்காருக்குக் கொடுத்தது போல் ஆகுமென்றும் சொல்லுகிறார். முதல் விஷயத்தை ஒப்புக் கொண்டாலும் இரண்டாவது விஷயம் ஒப்புக் கொள்ளப்படாதது என்பதுடன், அதில் நாணயமும் நியாயமுமில்லை என்று சொல்ல வேண்டியிருப் பதற்கு வருந்துகிறோம்.
ஏனெனில் இந்த நாட்டிலுள்ள சுமார் 35 கோடி மக்களில் காங்கிரசில் அங்கத்தினர்களாய் இருக்கிற சுமார் ஒரு பத்தாயிரம் அல்லது இருபதாயிரம் மக்களைத்தவிர மற்றவர்கள் எல்லாம் சர்க்காரைச் சேர்ந்தவர்கள், தேசத்துரோகிகள் என்பது தோழர் பட்டேல் அவர்களின் ஸ்ரீமுகத்தின் கருத்தாகிறது.
தோழர் சண்முகம் அவர்கள் விருதுநகரில் தெரிவித்தது போல் தேசபக்தி என்பது தோழர்கள் பட்டேல், ஆச்சாரியார்கள் ஆகியவர்களின் பிதுரார்ஜித சொத்துப்போலவும் அந்தக் கூட்டத்தில் இவர்களுடைய சிஷ்யர்களும், அடிமைகளும் தவிர மற்றவர்களுக்கு இடம் கிடையாது என்பது போலவும் இவர்களுடைய ஆதிக்கம் இருந்து வருகிறது.
அந்த சிஷ்யர்களும், அடிமைகளும் கூட தங்கள் தேசபக்தியைக் காட்டவேண்டுமானால் ஒரு முறைக்கு நாலுமுறை சிறை சென்று இருந்தாலும் போதாது. பத்து ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொண்ட தங்கள் வரும்படிகளையும் துறந்து கை முதல்களையும் இழந்து ராஜபோகத்தையும் விடுத்து, சன்னியாசியாய், கடன்காரனாய் தெருவில் நின்று தவிப்பவனாய் இருந்தாலும் போதாது. மற்றபடி எவ்வளவு அயோக்கியனாய், குடிகாரனாய், ஜாதி ஆணவம் பிடித்தவனாய், தாசி லோலனாய், ஊரை ஏமாற்றி கொள்ளையடிப்பவனாய், சர்க்காருக்கு ஊ.ஐ.னு. யாய் ஒரு மணி நேர வேலைக்கு 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய், வீதம் மக்களிடம் இருந்து கறந்துபோக யோக்கியங்கள் அனுபவிப்பவனாய் இருந்து கொண்டு, கதர் துணியைக் கட்டுபவனாக வும், ராட்டினத்தில் நூற்பவனாகவும், காந்திக்கும் பட்டேலுக்கும், ஆச்சாரிக்கும் ஜே போட்டு மகாத்மா என்று கூப்பிடுபவனாகவும் இருந்தால், பெரிதும் அவன்தான் தேசபக்தன், சர்க்கார் மனிதனல்லா தவன், பாமர மக்கள் ஓட்டைப் பெற தகுதியுடையவன் என்றால் இது யோக்கியமா என்று கேட்கின்றோம்.
மத விஷயத்தில் பழி தொழிலும் இழிகுலமும் படைத்தாரேனும் அரவணையாய் என்பாராகில் அவர் கண்டீர் யாம் வணங்கும் அடிகள் (கடவுள்) ஆவார் என்றும், சாதியால் ஒழுக்கத்தால் தக்காரேனும் - பொன்னரங்கம் போற்றாதார் புலையர் ஆவார் என்றும் சொல்லப்படுவது போலவே, ஆச்சாரியா ரையும் பட்டேலையும் போற்றாதார் எவ்வளவு ஒழுக்கம் உள்ளவராய் இருந்தாலும் தேசத்துக்காக எவ்வளவு தியாகம் செய்தவர்களானாலும் தேசத்துரோகிகள் ஆவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதற்குக் காரணம் காங்கிரஸ் தேசபக்தி என்பவற்றின் பேரால் ஏராளமான ஜனங்களைப் பாமர மக்களிடமிருந்து கொள்ளை கொண்டு அதன் பயனாய் உடல் உழைப்பில் சோம்பேறித்தனம் கொண்ட மக்களைக் கூலிகளாய் அமர்த்தி அவர்களை விட்டுக் கூலிப் பிரச்சாரம் செய்து வருவதால் இவ்வளவு தைரியமாகப் பேச இவர்களுக்கு இடமேற்பட்டு விட்டது.
1917 முதல் 1922 வரையில் தோழர் வரதராஜுலு அவர்கள் இந்தப் பார்ப்பனர்களுக்குச் சங்கராச்சாரி போலவும் ஜீயர் போலவும் விளங்கியதை யாராவது மறுக்கமுடியுமா என்று கேட்கின்றோம். அதற்கு பிறகு எவ்வளவோ தரம் சிறை சென்றும் பத்தாயிரக் கணக்காகக் காசு பணம் செலவு செய்தும் தேசியம், தேசாபிமானம் என்று கோடிக்கணக்கான தடவை உருச்செபித்து குடும்பசகிதம் கதரே உடுத்தி வந்தும், இன்று அவர் தேச பக்தர்கள் கூட்டத்தில் சேர்க்கப்படாமல் தேசத் துரோகிகள் கூட்டத்தில் சேர்க்கப்பட்டதன் காரணம் என்ன என்பதை யோசித்தால் தோழர் ஆச்சாரியார் பேரிலும், பட்டேல் பேரிலும் தோத்திரம், தாண்டகம் முதலிய பிரபந்தம் பாடாதது தான் காரணம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லக்கூடும் என்பது நமக்கு விளங்க வில்லை.
தவிரவும் காங்கிரஸ்காரருக்குக் கொடுக்காத ஓட்டு சர்க்காருக்குக் கொடுத்ததாகப் பாவிக்கப் படும் என்று அடிக்கடி பல்லவி பாடுவதின் யோக்கியதையைச் சற்று விளக்கிப் பார்ப்போம்.
இன்றைய தினம் காங்கிரஸை விட சர்க்கார் எந்த விதத்தில் யோக்கியதைக் குறைவானது என்பது நமக்கு விளங்கவில்லை.
சர்க்காரில் அண்ணன் இருந்தால், காங்கிரசில் தம்பி இருக்கிறான். காங்கிரசில் மகன் இருந்தால், சர்க்காரில் தகப்பன் இருக்கிறான். காங்கிரசில் மாமனார் இருந்தால், சர்க்காரில் மருமகன் இருக்கிறான். காங்கிரசில் அண்ணன் மகன் இருந்தால், சர்க்காரில் சிற்றப்பன் இருக்கிறான். காங்கிரசையும் சர்க்காரையும் ஒரு ஜீவனோ பாயமாய்க் கொண்டவர்களே இந்த இரண்டு தாபனங்களிலும் மிகுந்து இருக்கிறார்கள். இரண்டு கூட்டமும் பெரிதும் பொது ஜனங்கள் பணத்திலேயே வாழுகின்றார்கள். சர்க்கார் அடக்கு முறைச் சட்டங்கள் போலவே காங்கிரசிலும் அடக்கு முறைச் சட்டங்கள் இருந்து கொண்டுதான் வருகின்றன. சர்க்கார் உத்தியோகஸ்தர்கள், அதிகாரிகள் ஆகியவர்களிடத்தில் இருக்கும் நாணயக் குறைவு, புரட்டு, பித்தலாட்டம், சமயத்துக்கு ஏற்ற வேஷம் வாக்குவாதம் தவறுதல் ஆகியவை காங்கிரசிலும் இருந்துதான் வருகின்றன. சர்க்கார் எதேச் சதிகாரத்தைப் போலவே காங்கிரசிலும் எதேச் சதிகாரம் இருந்துதான் வருகிறது.
சர்க்காரில் இருப்பது பொய் ஜனநாயகத் தத்துவமே! ஏன்? அதைவிட மோசமான ஜன நாயகத் தத்துவமே காங்கிரசிலும் இருந்து வரு கின்றது. சர்க்கார் தங்களுக்கு இஷ்டமில்லாத வர்களை, தங்கள் அடிமை அல்லாதவர்களை ராஜத் துரோகியென்று கூப்பிட்டால், காங்கிரஸ் தங் களுக்கு அடிமைகள் அல்லாதவர்களை தேசத்து ரோகிகள் என்று விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். எந்த விதத்தில் காங்கிரஸ், சர்க்காரை விட யோக்கியதை உடையது என்று கேட்கின்றோம்.
ஆகவே, பாமர மக்கள் இனியாவது இந்தப் பொய் மிரட்டலை உணர்ந்து, தங்களுடைய பகுத் தறிவுக்குச் சரியென்று தோன்றிய மார்க்கத்தில் நடந்து கொள்ள வேண்டுமாய் வேண்டிக் கொள்ளு கிறோம்.
- பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 30.9.1934
                                                                 தேர்தல் பிரச்சாரப் போக்கு
தோழர் சத்தியமூர்த்தி புகார்களுக்குப் பதில்,
தேர்தலில் போட்டி அபேட்சகர்கள் ஒருவரை யொருவர் இகழ்வதும், எதிர் அபேட்சகர் மீது வாக்காளர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும்படி செய்வதும் உலகம் முழுதும் சகஜமாகிவிட்டது. ஆனால் அவ்விதம் செய்வதற்கும் ஓர் எல்லையுண்டு. இப்போது சென்னை நகர் சம்பந்தப்பட்ட வரையில், காங்கிரஸ் பெயரைக் கூறிக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அபேட்சகராக நிற்கும் ஆளைக் கவனிக்காதீர்கள். மகாத்மா காந்திக்காக ஓட்டு போடுங்கள் எனக் கூறுகிறார்கள். இது நாமம் போட்ட சோம்பேறிகள் திருப்பதி வெங்கிடாசலபதிக்கு உண்டியல் பிச்சை கேட்பது போலாகும். ஆனால் நான் அவ்விதம் எதுவும் கூற விரும்பவில்லை. சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட வரையில் பார்ப்பனர் - அல்லாதார் ஜாதியை ஆதாரமாகக் கொண்டே தேர்தல் இயக்கம் நடந்து வருகிற நீங்களெல்லோரும் சென்னை நகரத்துக்கு அபேட்சகராக நிற்கும் தோழர் ராமசாமி முதலியாரின் அந்தஸ்தையும், யோக்கியதாம்சங்களையும் தோழர் சத்தியமூர்த்தி யோக்கியதாம்சத்தையுமே கவனிக்க வேண்டும். அபேட் சகர்களில் யார் செய்வது சரி, யார் செய்து தப்பு என்பதைப் பகுத்தறிந்து, உங்களிஷ்டம் போல் ஒருவருக்கு ஓட்டு போடும் உரிமை உங்களுக்குண்டு. எனவே, வீண் புரட்டு களைக் கேட்டு நீங்கள் ஏமாற மாட்டீர்களென்பது நிச்சயம்.
காங்கிரஸ் பெயரால் நடந்து வரும் பிரச்சாரத்தை நீங்கள் கவனிக்கக் கூடாது. காங்கிரஸ் அரசியலில் இன்னும் சிறிது காலத்தில் மிகுந்த மாறுதலேற்படலாம். ஏனெனில் காந்தியார் காங்கிரசிலிருந்து விலகிவிட உத்தேசித் துள்ளார். அப்படியிருந்தும் காங்கிரஸ்வாதிகள் தேர்தலுக்காக மகாத்மா பெயரை உபயோகித்து வருகிறார்கள். தோழர் சத்தியமூர்த்திக்கு 4000 பிராமணரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கிறதென்றும், அதற்கு மேல்தான் அவர் இப்போது கணக்கிட வேண்டுமென்றும் அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர். அப்படியாயின், தோழர் ராமசாமி முதலியாருக்கு 11,000 பிராமணரல்லாதாரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கின்றன வென்று நீங்கள் தைரியமாகக் கூற வேண்டும். இப்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் தோழர் சத்தியமூர்த்தி, தோழர் முதலியாருக்கு விரோதமாக பல பொய்யான விஷயங்களைக் கூறியிருக்கிறார். அவைகளால் பொதுஜன அபிப்பிராயம் மாறக்கூடு மோவென்றே, இப்போது தோழர் முதலியார் அவைகளுக்குப் பதில் கூற வேண்டியிருக்கிறது.
(20-10-1934) மாலை சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் தலைமை தாங்கி காங்கிரஸ் புரட்டுகளும், வஞ்சகங்களும் என்பது பற்றி தந்தை பெரியார் ஆற்றிய உரை.)
- - பகுத்தறிவு - சொற்பொழிவு - 28.10.1934

No comments:

Post a Comment